முன்னுரை
வரப்புயர
நீருயர,
நீருயர
நெல்லுயர,
நெல்லுயரக்
குடியுயர
என்று
ஒரு
நாட்டின்
மேன்மைக்கு
அச்சாணியாக
உள்ள
தொழில்
விவசாயமே
என்ற
குறிப்பைத்
தமிழ்
மூதாட்டி
அவ்வை
அழகாக
உணர்த்தியுள்ளார்.
விவசாயம்
என்ற
சொல்லே
பொதுவாகத்
'தொழில்'
என்றே
பொருள்படுவதாக
இருந்தாலும்,
தமிழுக்கு
அது
வரும்போது
உழவுசெய்து
பயிரிடும்
தலையாய
தொழிலையே
குறிப்பிடும்
முழுமையைப்
பெற்றிருக்கிறது. 'சுழன்று
மேர்ப்பின்ன
துலகம்'
என்றும்
'உழுதுண்டு
வாழ்வாரே
வாழ்வார்'
என்றும்
வள்ளுவர்
இத்தொழிலின்
புகழை
இசைக்கிறார். 'உழவுக்கும்
தொழிலுக்கும்
வந்தனை
செய்வோம்'
என்று
இந்நாள்
நூற்றாண்டு
விழாவுக்குரிய
புதுயுகக்
கவிஞன்
பாரதி
போற்றினான்.
'நாங்கள்
சேற்றிலே
கால்
வைத்தால்
தான்
நீங்கள்
சோற்றிலே
கை
வைக்க
முடியும்'
என்று
கவிஜோதி
அவர்களின்
புதுக்கவிதைத்
துணுக்கும்
முழக்குகிறது.
இவ்வாறெல்லாம்
கவிஞர்களால்
புகழப்பட்டிருக்கும்
உழவுத்
தொழிலைச்
செய்பவரை
நாயகர்களாக்க
வேண்டும்
என்ற
வெகுநாளைய
ஆவலே
இப்புதினம்
உருவாகக்
காரணமாக
இருந்தது.
பயிர்த்தொழில்
செய்யும்
மக்களைப்
பற்றியும்,
அவர்கள்
உதிரம்
தேய்த்து
உழைப்பைக்
கொடுக்கும்
களங்களையும்,
அவர்களையும்
ஒருங்கே
உடமையாக்கிக்
கொண்ட
மேற்குலத்தாரான
ஆண்டைகள்
குறித்தும்
எனது
சொந்த
வாழ்வில்
நேரிடையான
பரிச்சயங்களுக்கும்
தொடர்புகளுக்கும்
வாய்ப்புக்கள்
இல்லையெனினும்,
சின்னஞ்சிறு
பிராயத்திலேயே
இவர்களைப்
பற்றிக்
கேள்விப்பட்டுவிட்டேன்.
நந்தன்
சரித்திரத்தை
எங்கள்
சிற்றூரில்
பல
கதாகாலட்சேப
பாகவதர்கள்
விரித்துரைக்கும்
சந்தர்ப்பங்களில்
ஒன்றைக்கூட
நான்
நழுவவிட்டதில்லை.
முன்
வரிசைப்
பொட்டு
பொடிகளிடையே
நானும்
ஒருத்தியாய்
முழுசும்
தூங்காமல்
விழித்திருந்து,
பாகவதர்
பாடும்
பாடல்களில்
சொக்கி
இருந்ததுண்டு.
வேதியருக்கும்,
உழவு
செய்ய
வேண்டிய
சேரி
நந்தனுக்கும்
இடையே
ஏற்படும்
ரசமான
விவாதங்களை,
நொண்டிச்
சிந்தில்
அமைந்த
எளிய
பாடல்களைத்
திருப்பித்
திருப்பிச்
சொல்லிப்
பார்த்துக்
கொண்டதுண்டு.
நண்டைப்
புசித்துக்
கள்ளைக்
குடித்துக்
கொண்டே
காட்டேறி
வீரனுக்குப்
பூசைபோடும்
மக்களே
சேரியில்
வாழ்பவர்.
இவர்களே
சேற்றிலே
உழைப்பவர்கள்.
இவர்களில்
நந்தன்
மேற்குளச்
சாமியைப்
பூசிக்கிறான். 'ஒன்றே
குலம்.
ஒருவனே
தேவன்.
சுவாமி
ஒருவரே.
பல
பேரிட்டு
அழைக்கிறோம்'
என்ற
வாசகங்கள்
அந்நாளில்
என்
போன்ற
சிறுவர்களுக்கு
மனதில்
பதியும்
வண்ணம்
பாடமாய்
அமைந்திருந்தன. 'சாமிகளிலும்
மேற்குலம்
கீழ்க்குலம்
என்ற
பாகுபாடுகள்
உண்டு'
என்ற
மாதிரியிலான
முரண்பட்ட
உண்மைகள்
அப்போது
என்னைக்
கவர்ந்ததுண்டு.
அந்தப்
பருவத்தில்
அதற்கு
மேற்பட்ட
சிந்தனைகள்
வளர
வாய்ப்புகள்
ஏதுமில்லை.
கோபால
கிருஷ்ண
பாரதியாரின்
நந்தன்
சரித்திரம்,
இவ்வகையில்
மிகவும்
ஆற்றல்
வாய்ந்த
வகையில்
சமுதாய
உணர்வைப்
பளிச்சிட்டுக்
காட்டுகிறது
எனலாம்.
இந்துமத
சமுதாயம்
என்று
பொதுவாக
எடுத்துக்
கொண்டால்,
நான்கு
வருணப்
பாகுபாடு,
வாழ்க்கை
முறையில்
வேரூன்றிவிட்டதை
மறுப்பதற்கில்லை.
இந்த
நால்வருண
அமைப்புக்கு
அப்பாற்
பட்டவர்களையே
பஞ்சமர்
- ஐந்தாவது
படியில்
உள்ளவர்கள்
அல்லது
மிகத்
தாழ்ந்தவர்கள்
என்றும்,
அடிமைகளாகக்
கொள்ளப்படுபவர்கள்
என்றும்
தீர்ந்திருக்கிறது.
நான்கு
வருணங்களுக்குள்
வராமல்,
வெளிநாட்டிலிருந்து
வந்த
இனத்தாரைப்
பஞ்சமர்
என்று
ஐந்தாம்
வருணத்தவராக
மறந்தும்
குறிப்பிடுவதில்லை.
ஏன்?
அவர்களுடைய
வெள்ளைத்தோல்,
அவர்களை
ஆளும்
தகுதிக்குரியதாக
நம்மை
ஒப்புக்
கொள்ளச்
செய்திருக்கிறது!
எனவே
நால்வகை
வருணங்களுக்கு
அப்பாலும்
தாழ்த்தப்பட்டு,
மேற்குலத்தோரின்
அடிமைகளாய்,
சேற்றில்
உழன்று
தலையாய
தொழிலுக்குரிய
உழைப்பை
நல்குவதற்கே
பிறவி
எடுத்திருப்பதாகக்
கருதச்
செய்வது
நியாயமாக்கப்பட்டு
வந்திருக்கிறது.
கரும
பயன் -
அல்லது
முன்வினை
என்ற
தத்துவங்கள்,
இத்தகைய
அடிமை
ஆண்டான்
நியாயங்களுக்காகவே
நிலை
நிறுத்தப்பட்டிருக்கின்றன
என்றும்
கொள்ளலாம்.
அந்த
நியாயங்களால்
உறுதிபெற்ற
'சண்டாள
-
தருமங்களை'
எந்த
மனீஷா
பஞ்சகங்களும்
அசைத்து
விடவில்லை.
'அரிசனங்கள்'
என்ற
பெயர்
மாற்றமும்
சமுதாயப்
புரட்சியைச்
சாதித்து
விடவில்லை.
அவர்களை
உயர்
சாதிக்
கோயில்களில்
நுழையச்
செய்தும்,
பார்ப்பனர்
குடியிருப்புக்களில்
உரிமை
கோரச்
செய்து
சட்டங்கள்
இயற்றியும்
சலசலப்புக்களைத்
தோற்றுவித்திருக்கிறோம். 'ஏழை
என்றும்
அடிமை
என்றும்
இந்தியாவில்
இல்லையே'
என்று
சமத்துவம்
சட்ட
பூர்வமாக்கப்பட்டிருக்கிறது.
கல்விச்
சலுகை,
வேலைச்
சலுகைகளின்
ஒதுக்கீடுகள்,
சாதிப்
பிரிவற்ற
ஒரே
சமுதாயம்
என்ற
இலட்சியத்தைக்
குறிப்பாக்கியே
நிலைநிறுத்தப்
பெற்றிருக்கின்றன.
நந்தன்
காலத்திலிருந்து
பார்த்தால்,
இன்று
வரை,
அரசியல்,
சமுதாய,
அறிவியல்,
பொருளாதார
அரங்குகளில்
புதிய
புதிய
ஒளிகள்
பிறந்திருப்பது
தெரிய
வருகின்றது.
எனவே,
தலையாய
உழைப்பை
வழங்குபவர்கள்
இந்நாளில்
எப்படி
இருக்கின்றனர்
என்றறியும்
அவா
என்னுள்
குடைந்து
கொண்டே
இருந்தது.
சாதியற்ற
சமுதாயம்
என்ற
இலக்கைக்
குறியாக்கி
வழங்கப்பெறும்
சலுகைகள்,
ஒதுக்கீடுகள்,
பின்
தங்கிய
வகுப்பினரை
இந்த
முப்பத்து
நான்காண்டுகளில்
துடைத்தெறியாமல்,
பட்டியலாக
நீட்டிக்
கொண்டு
சென்றிருப்பதன்
உண்மையும்
உறுத்திக்
கொண்டே,
இருந்தது.
எனவே,
இந்த
முயற்சியை
மேற்கொள்ளத்
துணிந்தேன்.
முதலில்
உயிர்க்குலம்
வாழத்
தொழில்
செய்த
மனித
வரலாற்றிலிருந்து
சில
ஏடுகளைப்
பார்க்கலாம்.
காட்டுமிராண்டியாகப்
பச்சை
யூனைப்
புசித்து
உயிர்
வாழ்ந்த
மனிதன்,
பூமித்தாயின்
வன்மையைப்
பயிர்த்தொழிலால்
பெற்று
உயிர்
வாழலாம்
என்று
நாகரிகமடைந்த
பிறகு,
ஓரிடத்தில்
தங்கி
வாழலாம்
என்று
குழுக்களாக
இணைந்து
வாழத்
தொடங்கிய
பிறகு,
'நில
உடமை'
என்ற
நில
ஆதிக்கமே
ஆதி
மனிதர்களிடையே
உயர்ந்தோர்
தாழ்ந்தோர்
என்ற
வேற்றுமையைத்
தோற்றுவித்திருக்கிறது.
இதுவே
பெண்ணடிமைக்கும்
வழி
வகுத்திருக்கிறது.
இந்த
அடிப்படையிலேயே
இந்நாள்
மனித
சமுதாயத்தைக்
கூறுபோடும்
எல்லாப்
பிளவுகளுமே
வலுப்பெற்று
வந்திருக்கின்றன
என்பது
கண்கூடு.
நமது
அனைத்துச்
சீர்திருத்தங்களும்,
முற்போக்குச்
சட்டங்களும்,
இந்த
அடித்தள
உண்மையைத்
தீண்டியிராததால்,
மேற்போக்காகவே
பயனற்றுப்
போயிருக்கின்றன.
உடைமை
பாராட்டுபவர்
உழைப்பிலிருந்து
விடுபட்டு,
பிறர்
உழைப்பை
உரிமையாக்கிக்
கொள்ளும்
நியாயத்தைத்
தோற்றுவிக்கிறார்.
இந்த
வகையில்
எந்தக்
கட்டுப்பாடும்
செய்யாமல்
சீர்திருத்த
முயற்சிகள்
பயனளிக்காது
என்ற
உண்மையையே
அன்றாட
நடப்புக்கள்
நமக்குச்
சுட்டிக்
காட்டுகின்றன.
உடமைகளையும்
உரிமைகளையும்
ஒரு
சாராருக்கு
நியாயங்களாக்கும்
கலாசாரம்,
சமயம்,
அரசியல்
எல்லாம்
வலிமை
படைத்திருக்கும்
போது
சட்டங்களும்
ஒதுக்கீடுகளும்
மற்றும்
வளர்ச்சித்
திட்டங்களும்
பலனளிக்காத
கண்
துடைப்பாகவே
முடிந்து
விடுகின்றன.
எழுச்சிகளும்
போராட்டங்களும்
கூட
இந்தப்
பாதிக்கப்பட்ட
மக்களின்
நலனுக்குச்
சாதகமல்லாத
எதிர்வினைகளைத்
தோற்றுவிக்கின்றன
என்றால்
தவறில்லை.
இந்தப்
புதினத்தை
உருவாக்க,
நான்
கீழ்த்
தஞ்சைப்
பகுதிகளில்
பல
சிற்றூர்களில்
வாழும்
அடித்தள
மக்களின்
வாழ்வை
அருகிருந்து
உணர்ந்தேன்.
பாரதம்
அரசியல்
விடுதலை
பெறுமுன்பு,
இப்பகுதி
மக்களிடையே,
சமுதாய
விடுதலை,
ஏற்றத்தாழ்வில்லாத
சமத்துவம்,
பொருளாதார
மேன்மை
ஆகியவற்றைக்
குறிப்பாக்கிக்
கிளர்ச்சிக்கு
வித்திடப்பட்டது.
ஆனால்
வெறும்
அரசியல்
விடுதலை,
முன்பு
குறிப்பிட்ட
வகையில்
ஆழ்ந்த
குறிக்கோள்களைக்
கொண்டிராததனால்
இம்மக்களின்
உண்மையான
முன்னேற்றம்
மலர்ந்து
விடவில்லை.
உயிர்
வாழ
இன்றியமையாததான
நீருக்கும்
உணவுக்குமே
தட்டுப்பாடாகவும்
போராட்டமாகவும்
பிரச்னைகளாகவும்
தொடர்ந்து,
குடியரசு
உரிமையில்
எழுச்சிகளுக்கான
வாய்ப்புக்களைக்
காட்டிலும்
ஆதிக்கங்களுக்கான
உரிமைகளும்
வாய்ப்புக்களுமே
வலிமை
பெற்று
வந்திருக்கின்றன.
உழைப்பாற்றல்
மனித
வாழ்வில்
தலைசிறந்ததென்று
மதிக்கப்பெறாத
வரையில்,
கௌரவிக்கப்
பெறாத
வரையில்,
சமத்துவம்
ஏறக்குறையக்
கூடச்
சாத்தியமில்லை
என்ற
முடிவுக்கு
வரவேண்டியிருக்கிறது.
அதீதமான
உடமை
உரிமைகள்
சந்து
பொந்துகளுக்கு
இடமின்றித்
தவிர்க்கப்பட
வேண்டும்.
இந்தப்
புதினத்தை
நான்
உருவாக்கிய
காலத்தில்
'சமுதாய
மனச்சாட்சி'
என்ற
ஒன்றைத்
தேடிய
காலமாக
இருந்தது
என்று
கூடச்
சொல்லலாம்.
காவிரித்தாய்
தன்
கரங்களால்
மண்
அன்னையைத்
தழுவிப்
பிரியாவிடை
கொள்ளும்
இப்பிரதேசத்தில்
அவள்
வன்மையைக்
கொட்டிவிட்டுச்
செல்கிறாள்.
தனது
மக்கட்செல்வங்கள்
அனைவரும்
வளமையுடன்
வாழவேண்டும்
என்ற
அந்த
இயற்கைத்
தாயின்
நியாயங்களை
மனிதர்
மதித்திருக்கவில்லை.
தம்மினத்தவரையே
மனிதர்
அற்பங்களாக்கத்
தலைப்படும்
போது
பிரச்னைகள்
ஒவ்வொரு
நாளும்
அமைதி
குலைக்கின்றன.
சேற்றிலும்
வரப்பிலும்,
விரிந்த
நீர்க்கரைகளிலும்
வானுலகைச்
சிருஷ்டிக்கும்
மனிதர்கள்,
இன்னமும்
மிடிமைகளில்
அழுந்திக்
கொண்டிருக்கின்றனர்.
இந்த
மனிதர்களை
நான்
சந்தித்து,
அவர்களுடன்
மனமொன்றிப்
பழகும்
வாய்ப்பைத்
தர,
எனக்குப்
பல
நண்பர்கள்
ஆதரவளித்து
உதவி
புரிந்திருக்கின்றனர்.
அவர்கள்
இருவரை
மிக
முக்கியமாகக்
குறிப்பிடக்
கடமைப்பட்டுள்ளேன்.
எனக்குப்
பழக்கமில்லாத
சேற்றிலும்,
வயல்
வரப்புக்களிலும்,
இம்மக்கள்
குடியிருப்புக்களிலும்,
என்னுடன்
துணையாக
வந்தும்,
வேறு
வகைகளில்
ஆதரவளித்தும்
திருமதிகள்
மீனாட்சி
சுந்தரத்தம்மாளும்
ஏனங்குடி
இராஜலட்சுமியும்
எனக்குப்
பேருதவிகள்
புரிந்திருக்கின்றனர்.
ஒரு
வாழ்வை
நுணுகி
அறிவதற்கு
இத்தகைய
நேர்
அநுபவங்கள்
இன்றியமையாதவை
அன்றோ?
எனக்குப்
பல
செய்திகளை
ஆர்வத்துடன்
கூறி
உதவிய
பலதரப்பட்ட
சோதரர்களுக்கும்
சோதரிகளுக்கும்
எனது
நன்றியைப்
புலப்படுத்திக்
கொள்கிறேன்.
எனது
ஒவ்வொரு
புதிய
முயற்சிக்கும்
ஊக்கத்தையும்
ஆதரவையும்
அளித்து
வரும்
பாரி
புத்தகப்
பண்ணையாரே,
இந்த
நூலையும்
கொண்டு
வருகிறார்கள்.
நூல்
வடிவில்
கொண்டு
வரும்
போது
ஏற்படும்
சிரமங்களைப்
பொருட்படுத்தாமல்
முனைந்து
நிறைவேற்றித்
தரும்
பாரி
புத்தகப்
பண்ணை,
திரு.
கண.
முத்தையா
அவர்களுக்கும்,
இளவல்
கண்ணன்
அவர்களுக்கும்
எனது
இதயபூர்வமான
நன்றியைத்
தெரிவித்துக்
கொண்டு,
தமிழ்
வாசகரிடையே
இந்நூலை
வைக்கிறேன்.
-
ராஜம்
கிருஷ்ணன்.
-------
சேற்றில்
மனிதர்கள்
வரப்புயர.. ...குடியுயர
1
சொட்
சொட்டென்று
முற்றத்தில்
சாண
நீர்
விழும்
ஓசைதான்
சம்முகத்தைத்
துயிலெழுப்புகிறது.
திக்கென்ற
உணர்வுடன்
கண்
விழித்ததும்
தன்னையுமறியாமல்
கை
குதிகால்
புறத்தைத்
தடவுகிறது.
இரவெல்லாம்
விண்
விண்ணென்ற
குத்துவலி.
விடிந்தால்
நடக்க
முடியுமா
என்ற
கவலையிலேயே
தூக்கம்
பிடிக்கவில்லை.
இப்போது
அவ்வளவாக
வலி
தெரியவில்லை
போலிருக்கிறது.
"எந்திரிச்சிட்டீங்களா?
ராவெல்லாம்
தூங்கவேயில்ல,
இன்னிக்கு
எப்படி
ஐயா
உன்னைக்
கூட்டிட்டுப்
போவாரு.
நீ
வாணா
அண்ணனைக்
கூட்டிட்டுப்
போன்னு
இப்பதா
காந்திகிட்டச்
சொன்னேன்..."
"அவன்
வீட்டில
இருக்கிறானா?
ரா
எப்ப
வந்தான்?"
லட்சுமியின்
முகம்
சுருங்குகிறது. "எங்கே
போயிருப்பான்?
சினிமாக்குப்
போயிட்டு
டைலர்
கடயில
படுத்திருப்பான்.
கூட்டனுப்பிச்சா
வாரான்."
"அதெல்லாம்
யாரையும்
கூட்டனுப்ப
வாணாம்.
சுடு
தண்ணி
வையி.
கொஞ்சம்
ஒத்தடம்
போட்டுக்கிட்டு
மெள்ளமா
நடந்திடறேன்.
கடவீதில
ஏழு
மணிக்குத்தான்
பஸ்ஸு
வருது?"
லட்சுமி
கைச்சின்மியை
எடுத்துக்
கொண்டு
சமையலறைக்குள்
செல்கிறாள்.
பொழுது
இன்னும்
நன்றாக
வெளுக்கவில்லை.
காந்தி
அதற்குள்
எழுந்து
குளித்துவிட்டாள்
போலிருக்கிறது.
முகப்பவுடர்
வாசனை
வருகிறது.
சம்முகம்
எழுந்து
படுக்கையில்
உட்காருகிறார்.
"காந்தி?..."
"என்னப்பா!..."
விரிந்த
கூந்தலும்
சீப்பும்
கையுமாக
வெடவெட
என்று
உயரமாக
வரும்
அவளைப்
பெருமையுடன்
அந்த
மங்கிய
வெளிச்சத்தில்
பார்க்கிறார். "சர்ட்டிபிகேட்,
இண்டர்வ்யூ
கடிதாசி
எல்லாம்
பத்திரமா
எடுத்து
வச்சிருக்கியாம்மா?"
"ராத்திரியே
எடுத்து
வச்சிட்டேம்பா..."
"இன்டர்வ்யூ
பதினோரு
மணிக்குத்தானம்மா?"
"ஆமாம்பா..."
லட்சுமி
முட்சுள்ளியை
வைத்து
அடுப்பில்
எரியவிட்டு
ஒரு
பல்லாயில்
ஆவி
பறக்கும்
சுடு
நீரைக்
கொண்டு
வந்து
வைக்கிறாள்.
விளக்கொளியில்
காலை
நீட்டிப்
பார்க்கிறாள்.
சிவந்து
வீங்கி,
முகம்
முனைப்பு
இல்லாமல்
இருக்கிறது.
"முள்ளுகிள்ளு
குத்திச்சா?..."
"ஒண்ணுந்
தெரியல.
இன்னிக்கும்
நடவுக்கு
வாரதுக்கில்ல.
இந்தக்
காயிதம்
ஒரு
நாலு
நா
முன்ன
வந்திரிந்திச்சின்னா
எல்லாம்
ஒழுங்கு
பண்ணிக்கலாம்..."
"நாலு
நா
முன்னவே
வந்திருக்கணும்.
கடித
எண்
தேதி
மூணாந்தேதி.
இங்க
பதினொண்ணாந்தேதி
நமக்குக்
கிடச்சிருக்கு.
இது
இன்னிக்கித்
தபால்ல
வந்திருந்திச்சின்னாக்
கூட
ஒண்ணும்
புண்ணியமில்ல..."
"நேத்துதா
நா
புதுக்குடில
நம்ம
தங்கசாமிட்ட
சொல்லிட்டிருந்தேன்.
நம்ம
பொண்ணு
கூடத்தான்
தொழிற்கல்வி
வேணும்னு
புதுசா
அப்ளிகேசன்
போட்டிருக்கு.
அதும்
எஸ்.எஸ்.எல்.ஸி.
படிச்சிட்டு
மூணு
வருசமா
வேலை
கிடைக்காம
இருக்கு.
கணக்குல,
அறிவியல்ல,
எல்லாம்
நல்ல
மார்க்கு.
உடனே
மேல
படிக்க
வைக்கணும்னு,
குடும்பத்தில
பையனைப்
படிக்க
வச்சி
இவளையும்
அப்ப
முடியாம
நிறுத்தி
வச்சிட்டிருந்தேன்.
அப்ளிகேசன்
போட்டு
ஒரு
மாசமாகுது.
ஒரு
தகவலும்
தெரியலன்னு
சொல்லிட்டிருந்தேன்.
ராத்திரி
வந்தப்புறம்
தான்
தெரியுது,
இங்க
தபால்
வந்த
சங்கதி...
லட்சுமி
ஒரு
துணியைச்
சுடுநீரில்
நனைத்துக்
காலில்
ஒத்தடம்
கொடுக்கிறாள்.
"அடுப்பில
பானைய
வச்சி
இட்டிலி
மாவை
எடுத்து
ஊத்தி
வை.
பையில
கட்டி
எடுத்திட்டுப்
போனா,
புட்டுப்
போட்டுக்கலாம்.
நேத்து
இதுக்காகவே
விளக்கு
வச்சி
மாவாட்டினேன்."
"போம்மா
கட்டிட்டெல்லாம்
போக
வாணாம்!
இங்கியே
ரெண்டு
தின்னிட்டுப்
போகலாம்..."
"பெரி...
நாஜுக்கு.
தூக்குப்
பாத்திரத்தில
போட்டு
வயர்
பையில
வச்சிட்டுப்
போனா
என்னவாம்?
கிளப்பிலே
போனா
காசுதா
செலவழியும்
வீணா."
"நா
ஒண்ணும்
வயர்பையெல்லாம்
கொண்டிட்டுப்
போகப்
போறதில்ல!"
சம்முகம்
உள்ளூரப்
பூரிக்கிறார்.
தாழ்த்தப்பட்ட
குலம்
என்பதை
அவர்
தலைமுறையில்
எழுச்சியுள்ளதாக்க
முனைந்தார்கள்.
இப்போது
அவர்
மகள்
தொழிற்கல்வி
பயிலப்
போகிறாள்.
சேற்றில்
உழன்று
நாற்று
நடும்
பின்புலத்தில்
இவள்
ஒரு
தாமரையாக
மலரப்
போகிறாள்.
"இப்பல்லாம்
எலக்ட்ரானிக்ஸ்
தாம்ப்பா
எல்லாம்.
அதுக்குத்தான்
நல்ல
ஸ்கோப்.
நான்
அதையே
எடுக்கறதுதான்
நல்லதுன்னு,
என்
ஃப்ரண்ட்
சுந்தரி
அப்பா
கூடச்
சொன்னாரு"
என்று
முகம்
ஒளிர
நின்றாள்.
இவளுக்கு
இந்தப்
பள்ளர்
குடியில்
சிநேகிதர்களில்லை.
ரங்கநாதபுரத்திலும்,
அம்மங்
கோயிலிலும்
உயர்
வகுப்பாரிடையே
சிநேகிதிகள்.
அம்சு
வாசலுக்குச்
சாணம்
தெளித்துப்
பெருக்கிக்
கோலமிட்டுக்
கொல்லை
சுத்தம்
செய்யப்
போகிறாள்.
அவர்
மெல்ல
எழுந்து
பின்புறம்
ஆற்றுக்
கரையோரம்
சென்று
வருகிறார்.
பொழுது
மைகரைந்த
தெளிவாகப்
புலர்ந்து
விட்டது.
அம்சு
தண்ணீர்
கொண்டு
வந்து
தொட்டியை
நிரப்புகிறாள்.
இவள்
காந்தியை
விட
குட்டை.
ஆறாவதுக்கு
மேல்
படிக்கவில்லை.
சடங்கு
சுற்றி
நான்காண்டுகளானாலும்
குழந்தைத்தனம்
மாறாத
பேதமை
குடிகொண்ட
முகம்.
பின்
தாழ்வாரத்தில்
இருந்த
கோழிக்
கூண்டைத்
தூக்கி
வைத்து
பெட்டையையும்
ஆறு
நோஞ்சான்
குஞ்சுகளையும்
விடுதலை
செய்கிறாள்.
வெளி
முற்றத்தில்
மூங்கிற்
படலைத்
தடுப்புக்குள்
அவரை,
புடல்
விதைத்துக்
கொடி
வீச
எழும்பியிருக்கிறது.
முளைக்கீரைப்
பாத்தி
ஒருபுறம்
பசுமையாக
இருக்கிறது.
கோழியைப்
படலைக்கு
அப்பால்
விரட்டி
விட்டு
அவள்
இன்னொரு
புறம்
நிற்கும்
மரத்துப்
போன
பசுவை
அவிழ்த்து
வேறு
முனையில்
கட்டுகிறாள்.
அப்போது
ஆற்றின்
கரை
மேட்டோடு
கையில்
உணவுத்
தூக்குகளுடன்
பெண்கள்
நடவுக்குப்
போகிறார்கள்.
"அம்சு!..."
என்று
ஒருத்தி
கூவுகிறாள்.
"ஒங்க
பங்குல
நடவா
இன்னிக்கி?"
"தெரில...
சாம்பாரு
வந்திருப்பாரில்ல?"
"இல்லியே?
ஐயனார்
கொளத்துல
நேத்தே
துட்டிக்குப்
போயிருக்காவன்னு
செவத்தையஞ்
சொன்னா?"
பல்
துலக்கிக்
கொண்டிருந்த
சம்முகம்
திரும்பிப்
பார்க்கிறார்.
"ஆரு...?
சாலாச்சியா?
என்னம்மா?
ஐயனார்
கொளத்துல
ஆரு
போயிட்டா?"
"அதா,
குப்பன்
- சாம்பாரு
சம்பந்தி,
நேத்துக்
காலமே
போயிட்டாராம்.
சங்கத்
தலவரப்
பாக்கணும்னு
நேத்து
மத்தியானமே
வந்திருந்தாவ..."
சம்முகத்துக்கு
துணுக்கென்று
உணர்வு
முட்டுகிறது.
குப்பன்
தான்
இவருக்குப்
படைத்
தலைமைபோல்
நம்பகமான
தோழன்.
இவருக்குச்
சொந்தமான
எட்டு
மா
நிலம்,
ஐயர்
பண்ணையின்
ஆறு
ஏகரா
பந்தகமாக
வந்திருக்கும்
துண்டு
பூமி,
எல்லாவற்றுக்கும்
காவலிருந்து,
மடைகோலி,
மடை
அடைத்து,
கங்காணம்
செய்பவன்.
உழைப்பாளியான
குப்பனுக்கு
உழைப்பாளியான
மகனும்
தலையெடுத்து
விட்டான்.
பெண்கள்
மூவரையும்
கட்டிக்
கொடுத்தாயிற்று.
கடைசிக்காரி
பஞ்சமியைத்தான்
ஐயனார்
குளத்தில்
கட்டியிருந்தான்.
அங்கே
ஏதோ
தகராறு.
கையில்
ஒரு
குழந்தையுடன்
அவள்
தாய்
வீடு
வந்து
ஐந்தாறு
மாதமிருக்கும்.
புருசன்
விலக்கிவிட்டான்
என்று
தான்
சொன்னார்கள்.
அந்தப்
பெண்ணின்
மாமியார்க்காரிதான்
இறந்து
போனாளா?
பெண்ணை
விலக்கிய
பிறகு
சாவு
வாழ்வு
பாத்தியதை
இல்லை
என்ற
மட்டில்
விவகாரம்
கிளம்பி
அவரை
மத்தியஸ்தத்துக்கு
வந்து
தேடியிருப்பார்களோ?
"ஆரு
வந்தது?"
"தெரியாது.
எங்காம்பிள
தேடிகிட்டு
வந்து
கேட்டாங்கன்னு
சொன்னாவ."
சம்முகம்
பல்
துலக்கிக்
கொப்பளித்து
முகம்
கழுவிக்
கொள்கிறார்.
மெள்ளச்
சுவரைப்
பற்றிக்
கொண்டு
எழுந்து
உள்ளே
வருகிறார்.
நடுவில்
இருக்கும்
பகுதிதான்
புழங்கும்
இடம்.
ஓரத்தில்
மண்குதிர்
சாணி
மெழுகிப்
பளிச்சென்று
மஞ்சளும்
குங்குமமும்
அழியாமல்
இருப்பது
விவரமாகப்
புலனாகாது
போனாலும்
அந்த
மூலை
இவருக்கு
லட்சுமி
மூலை.
அதற்கு
அருகில்
ஓரமாகக்
கொடியில்
மடித்துப்
போட்டிருக்கும்
புடவை
வேட்டி,
துணிகள்
கூடை,
முறம்,
சுவரில்
மாட்டியிருக்கும்
கள்ளிப்பெட்டி
அலமாரியில்
புத்தகங்கள்
எல்லாம்
இரண்டு
தலைமுறைகளையும்
இணைக்கும்
சின்னங்கள்.
அந்த
ஓலைக்கூரை
வீட்டின்
பொக்கிஷமான
அறை
உள்ளே
சென்ற
பின்னரே
புலப்படுகிறது.
பகல்
வெளிச்சத்தில்
கூட
அந்த
அறையில்
இருட்டு
ஆட்சி
புரியும்.
உள்ளே
புளி
மற்றும்
உளுந்து
பயறு
சேமித்து
வைக்கக்
கூடிய
பானைகள்,
விதைக்
கோட்டைகள்,
துருப்பிடித்த
இரண்டொரு
தகர
டின்கள்
ஆகிய
சாமான்களுடன்
பழையதாகிப்
போன
நாகப்பட்டினம்
டிரங்குப்
பெட்டி
ஒன்றும்
இருக்கிறது.
சம்முகம்
கை
ஊன்றி
அமர்ந்து
கொண்டு,
அந்தப்
பெட்டியை
சாவி
கொண்டு
திறக்கிறார்.
அதற்குள்ளிருந்து
வெளுத்த
சர்ட்டு,
ஒரு
வெளுத்த
வேட்டி
ஆகியவற்றை
எடுத்து
வைக்கிறார்.
உள்ளே
ஓரமாக
வைத்த
ஞாபகத்துடன்
தேடி
சிறு
பிளாஸ்டிக்
பையை
எடுத்து
ரூபாய்
நோட்டுக்களை
எண்ணிக்
கொண்டிருக்கையில்
பையனின்
குரல்
கேட்கிறது.
"ஐயாவுக்கு
உடம்பு
நல்லால்ல,
நீ
கூட்டிட்டுப்
போனா
என்னடா?"
"அதெல்லாம்
முடியாதம்மா!
அவரே
போகட்டும்."
"ஏ,
காந்தி...
காந்தி?"
"என்னப்பா?"
அவள்
உள்ளே
எட்டிப்
பார்க்கிறாள்.
பத்து
ரூபாய்
நோட்டுக்களாகப்
பத்தை
அவளிடம்
எண்ணிக்
கொடுக்கிறார்.
"உன்
கைப்பையில்
வச்சுக்க,
பத்திரம்.
உங்கம்மாளக்
கூப்பிடு?"
லட்சுமி
இட்லியைத்
தட்டுகையில்
கொல்லைப்
புறத்துத்
தாழ்வாரத்தில்
தடுத்த
அறைக்கதவை
உள்ளிருந்து
நாகு
உடைக்கிறான்.
"அம்சு!
கதவைத்
திறந்து
நாகுவ
வெளியே
கூட்டிட்டுப்
போயிட்டு
வா!"
என்று
சொல்லிக்
கொண்டு
வந்து
எட்டிப்
பார்க்கிறாள்.
"இதபாரு,
நான்
நூறு
ரூபா
எடுத்திட்டுப்
போறேன்.
இன்னிக்கோட
மூங்கித்
தோப்புக்குப்
பக்கத்திலிருக்கிற
பங்குல
நடவ
முடிச்சிடணும்னு
சொன்னான்
குப்பன்.
இதோ
எம்பளது
ரூபா
வச்சிருக்கிறேன்.
கூலிக்கு
எடுத்துக்க.
நான்
இவ
இண்டர்வியூ
முடிஞ்சதும்
நேரா
புதுக்குடி
வந்து
காலை
டாக்டர்கிட்டக்
காட்டிட்டு
வரலாமின்னிருக்கிறேன்.
வெளயாட்டுப்
போல
இன்னிக்கு
மூணு
நாளாவுது.
நேத்தே
ரதவீதிக்குப்
போய்
ஐயரப்
பாக்கணும்னு
நினைச்சேன்.
எங்க
போக
முடியுது?...
பறிச்ச
நாத்துக்கட்ட
எல்லாம்
நேத்து
வச்சாச்சா,
இன்னுமிருக்கா?"
"கெடக்கு.
காவாயிலே
மாலகட்டில்ல
இளுத்திட்டுப்
போவணும்?"
"இன்னிக்கி
என்னவோ
சொல்லிக்கிறாவ,
வடிவு
வாரானோ
இல்லையோ?
சாம்பாரு
நேத்தே
துட்டிக்குப்
போயிட்டான்.
நேத்தே
முடிச்சிருக்கணும்.
மூணு
மணிக்கே
அல்லாம்
கரையேறிப்
போயிட்டாளுவ..."
"இந்தத்
தொர
இன்னிக்கு
ஊருக்குப்
போறாராமா?"
"அதொண்ணும்
நா
கேக்கல.
காந்தியக்
கூட்டிட்டுப்
போறியான்னேன்.
அவுரே
போகட்டுமின்னா..."
"அணிப்புள்ள,
தென்னம்புள்ளதா..."
முணுமுணுத்துக்
கொண்டு
பெட்டியைச்
சாத்துகிறார்.
பின்புறம்
நாகு
எதற்கோ
ரகளை
செய்கிறான்.
மனதில்
இருப்பதை
ஆழமாக
வெளியிடத்
தெரியாததால்
கொட்டும்
குழம்பைப்
போல்
குரல்
ஒலி
சிந்தி
ஓடும்
நாராசம்.
காலை
நேரத்தில்
இந்த
ஒலியைக்
கேட்டாலே
இவருக்கு
இப்போதெல்லாம்
பொறுமை
குலைந்து
போகிறது.
"ஏண்டி
அந்தப்
பயலக்
காலங்காத்தால
கெளப்பிவிடுறிங்க!"
"இல்லப்பா,
கால்
கழுவாம
உள்ளாற
ஓடியாறான்,
கசம்...
தண்ணிய
ஊத்தினேன்..."
லட்சுமி
சென்று
அவனை
இழுத்துக்
கொண்டு
வந்து
அடுப்பின்
பக்கம்
உட்கார்த்திக்
கொள்கிறாள்.
குரல்
ஓய்கிறது.
ஒழுங்காக
இருந்திருந்தால்,
ஏரோட்டுவதற்கு
ஆளைத்
தேட
வேண்டாமே?
படிப்பு
இல்லாத
போனாலும்,
ஒரு
ஆள்
என்ற
வலிமையேனும்
இருக்குமே?
எதற்கும்
பயனில்லை,
ஒரு
சுமை.
இந்தச்
சுமையை
அன்று
வயிற்றில்
மட்டும்
சுமக்கவில்லை.
கால்
நூற்றாண்டாய்
இன்னும்
சுமக்கிறாள்.
நடுவீட்டில்
பாயைப்
போட்டுக்
கொண்டு
படுத்துக்
கிடக்கும்
தலைமகனைப்
பார்த்து
முகத்தைச்
சுளித்துக்
கொண்டு
மாடத்திலிருக்கும்
சிறு
கண்ணாடி
பார்த்துத்
தலை
வாரிக்
கொள்கிறார்.
சாமி
கும்பிடுவது
வழக்கம்
விட்டுப்
போனாலும்,
மரவையிலிருந்து
துளி
திருநீற்றைப்
புருவங்களுக்கிடையில்
வைத்துக்
கொள்வது
விட்டுப்
போகவில்லை.
லட்சுமி
மிளகாயையும்
உப்பையும்
அம்மியில்
வைத்து
நசுக்கித்
துவையல்
அரைத்துக்
கொண்டிருக்கிறாள்.
நாகு
அடுப்படியில்
ஒரு
நீண்ட
குச்சியை
வைத்துக்
கொளுத்தி
வெளியே
எரிய
விடுகிறான்.
பளாரென்று
அவன்
முதுகில்
ஓர்
அறை
விழுகிறது.
அவனுடைய
அழுகைப்
பின்னணியில்
அவர்
கத்துகிறார்.
"இந்தப்
பய
ஒரு
நா
குச்சி
கொளுத்திக்
கூரையில
போட்டுடப்
போறான்.
அவன
அடுப்படிலே
குந்த
வச்சிட்டு
ஏன்
போறீங்க?"
"காந்தி
எங்க?
அவளப்
பாத்துக்கச்
சொல்லிட்டுப்
போனேன்?"
இரண்டு
இட்டிலியும்,
சுக்கும்
வெல்லமும்
போட்ட
தேநீரும்
அருந்திவிட்டு
வெளிக்கிளம்பும்
போது,
பாட்டி
வாயிலில்
குந்தியிருக்கிறாள்.
வலப்புறத்துத்
திண்ணைதான்
பாட்டி
பாட்டன்
இருவருக்கும்
இருப்பிடம்.
தேய்த்துப்
போட்ட
தேங்காய்
நாராகக்
கூந்தல்
பசையிழந்து
போயிருக்கிறது.
எண்ணற்ற
சுருக்கங்களுடைய
முகத்தில்
கண்கள்
இன்னமும்
கூர்மையாக
இருக்கிறது.
இந்தக்
குடியினரிடையே
அபூர்வமாகத்
தோன்றக்
கூடிய
சிவப்பு.
நெற்றிப்
பச்சைக்கோடு,
இந்த
வயசிலும்
தீர்க்கமாகத்
தெரிகிறது.
அவள்
திரும்பி
சுருண்டு
கிடக்கும்
கிழவனை
எழுப்புகிறாள்.
"த,
எந்திரி,
புள்ள
காலேசிக்குப்
போகுது...
எந்திரி...!"
காந்திக்குப்
பாட்டனின்
அருகில்
செல்வதற்கு
விருப்பமில்லை.
பாட்டியைப்
போல்
நறுவிசாகச்
சிக்கென்று
இருக்கமாட்டார்.
"தாத்தா,
நான்
போயிட்டு
வாரேன்..."
வாய்
பேசத்
தொடங்கும்
முன்
கிழவனுக்கு
இருமல்
பிடித்துக்
கொள்கிறது.
"யே
குட்டி
அம்சு!
நீராரம்
இத்தினி
கொண்டாடி...!"
"ஆமா,
நீராரம்!
கறட்டுக்
கறட்டுன்னு
இருமிட்டு!..."
"உனக்கென்னடீ
தே...
மவளே?
நா
இந்தூட்டு
எசமான்.
கொண்டாடீ!"
இருவருக்கும்
இடையே
பொழுது
விடிந்ததிலிருந்து
இவ்வாறு
சிறு
பூசல்கள்
தொடர்ந்து
கொண்டிருக்கும்.
கிழவனுக்கு
உடம்பு
ஒடுங்கினாலும்
இன்னும்
குரலும்
பிடிவாதமும்
ஒடுங்கிவிடவில்லை.
கண்
முக்காலும்
தெரியவில்லை.
முடி
உதிர்ந்து,
தலை
பனங்குடுக்கை
மாதிரி
ஒரு
தோற்றம்
தருகிறது.
நீராகாரம்
கேட்ட
உடன்
வராததால்
வசை
புழுக்கிறது.
"லட்சுமி,
அவரு
கேட்டதக்
குடுக்கிறதுக்கென்ன?
ஏம்போட்டு
இளுத்திட்டிருக்கிய?
அவுரு
வயசுக்கு
அவரு
கஷ்டம்
ஆரும்
பட்டிருக்கமாட்டா.
நீராரம்
தான
கேக்கிறாரு?"
"நேத்து
சோறொண்ணும்
மிஞ்சல.
இப்பதா
இட்லி
ஊத்தி
வச்சிருக்கு.
டீத்தூள்
போட்டு
சூடாக்
கொண்டு
வாரனே?
வாங்குவாரா?"
லட்சுமியின்
குரல்
கேட்க
வேண்டியதுதான்
தாமதம்.
மேலும்
வசைகள்
பொலபொலக்கின்றன.
அம்சு
குவளையை
எடுத்துக்
கொண்டு
ருக்குமணியின்
வீட்டுக்குச்
சென்றாள்.
காந்திக்குக்
கோபமாக
வருகிறது.
"போலாம்பா,
பஸ்
வந்திடும்...!"
"சரி,
வாரேன்,
லட்சுமி...
எல்லாம்
பத்திரமாப்
பாத்துக்க.
நா
சாங்கால
பஸ்ஸுக்காகக்
கூடக்
காத்திருக்க
மாட்டே
முடிஞ்சா
அக்கரக்கி
வந்து
முன்னதா
வந்திடுவேன்..."
வீட்டை
விட்டிறங்கி,
ஆற்றுக்கரை
மேட்டோடு,
ஒரு
பத்து
நிமிடம்
நடக்க
வேண்டும்.
இவர்கள்
தெருவைத்
தாண்டவில்லை
வடிவு,
அவன்
தம்பி
சுருளிப்பயல்,
செவத்தையன்,
அம்மாசி,
பழனி
எல்லோரும்
கும்பலாக
வருகின்றனர்.
சில
பெண்பிள்ளைகள்,
முடிபரக்க
சில
பொடிசுகள்.
"மொதலாளி!"
சம்முகத்துக்குக்
கால்
தடுக்குவது
போலிருக்கிறது.
அவருக்குச்
சகுனத்தில்
எல்லாம்
நம்பிக்கை
என்பதில்லை.
மூடநம்பிக்கைகளைப்
பிடித்துத்
தள்ளவேண்டும்
என்ற
முற்போக்குக்
கோட்டில்
நிற்பவர்
தாம்.
"நேத்தே
வந்தமுங்க.
முதலாளி
வந்து
சொல்லுங்க,
காரியக்காரன்
படலய
வச்சுத்
தோப்ப
வளச்சிருக்கிறா,
நடவு
நட்டாச்சு.
வயல்ல
எறங்கக்
கூடாதுங்கறா..."
இந்த
முறையீட்டைக்
கேட்ட
பின்னரே
சம்முகத்துக்கு
பளிச்சென்று
நிலைமை
புலனாகிறது.
ஐயனார்
குளத்துக்
குடியிருப்பில்
இருந்து
இறந்து
போனவரின்
சடலத்தை
ஆற்றுக்கரைக்
காட்டுக்குக்
கொண்டு
வர
வழியில்லை!
இந்தப்
பிரச்னைகளை
எடுத்துக்
கொண்டு
பல
தடவைகள்
கோரிக்கை
மனு
கொடுத்து
விட்டார்கள்.
ஐயனார்
குளம்
மட்டும்
இத்தகைய
பிரச்னைக்குரிய
இடம்
அல்ல.
பல
குடியிருப்புகளின்
நிலையும்
இதுவே.
"நேத்து
வந்தம்
முதலாளி.
நீங்க
இல்ல.
நாங்கல்லாமும்
தோப்புக்
குத்தவைக்காரங்ககிட்ட
பொணங்
கொண்டு
போக
வழி
வுடணும்னு
கேட்டோம்.
பண்ணக்காரரில்ல,
அவுரு
சொல்லாம
நான்
துறந்து
வுடறதுக்கில்லன்னு
மணிகாரன்
பிச்சமுத்து
ஒரு
புடியா
படலயப்
போட்டுக்
கெட்டி
வச்சிட்ட்டான்."
"ஏண்டா,
இதுக்குப்
போயி
அழுவுறீங்க?
படலயப்
பிச்செறிய
முடியாது
உங்களால?
பிச்செறிஞ்சிட்டுப்
பொணத்தத்
தூக்கிட்டுப்
போங்கடா?
நா
இப்ப
அவசரமாப்
போறே.
வந்ததும்
மத்ததப்
பேசிக்கலாம்!"
நெற்றியில்
வியர்வை
பூக்கிறது.
காலில்
ஊமை
வலி
முனகுகிறது.
அவர்கள்
கரையோடு
நடக்கின்றனர்.
------------
2
தஞ்சையிலிருந்து
புதுக்குடி
வழியாகக்
கிளியந்துறைக்கு
வரும்
பஸ்
அது
ஒன்று
தான்.
காலையில்
ஏழு
மணிக்கு
வந்து,
ஏழரை
மணிக்குத்
திரும்பி
விடும்.
பத்து
மணிக்குத்
தஞ்சை
செல்லும்.
கிளியந்துறைக்கு
மறுபடியும்
மாலை
ஐந்து
மணியளவில்
புதுக்குடியில்
இருந்து
ஒரு
பஸ்
வந்து
எட்டிப்
பார்க்கும்.
பல
நாட்களில்
அது
சோம்பலாக
வராமலும்
இருந்து
விடும்.
கிளியந்துறைக்
கடை
வீதிதான்
பஸ்
நிறுத்தம்.
பூமணியாற்றின்
கால்வாய்
மதகோரம்
வளைந்து
திரும்பி
'ரைஸ்மில்'லின்
வாசலில்
பஸ்
நின்றால்
பாதையில்
நடக்கும்
போதே
கண்களில்
படும்.
பஸ்
இன்னமும்
வரவில்லை.
ஆசுவாசமாக
இருக்கிறது.
ஆற்றுக்
கரையைச்
சார்ந்த
முத்தூரு
நாயக்கரின்
வயல்களில்
நீர்
தேங்கிக்
காவாளைச்
செடிகளுக்கு
அந்திம
காலம்
வந்துவிட்டதைத்
தெரிவிக்கின்றன.
பச்சைக்
கம்பளமாக
நாற்றங்கால்...
அப்பால்
வரப்பினூடே
வண்ணப்
புள்ளிகளாக
நடவுக்குச்
செல்லும்
பெண்கள்;
இரையுண்ட
நாகமென
நீர்
நிரம்பி
ஓடுவது
தெரியாமல்
செல்லும்
ஆறு;
பளிச்சென்று
அன்றையப்
பொழுதுக்குக்
கட்டியம்
கூறும்
நீலவானம்.
எல்லாம்
நம்பிக்கையளிக்கின்றன.
காந்தி,
அவர்கள்
குடியிலேயே
ஒரு
புதிய
பரம்பரையைத்
துவக்கி
வைக்க
முன்னோடியாக
நடக்கிறாள்.
விவசாயத்
தொழிலாளர்
சங்கத்
தலைவர்
என்று
மட்டுமின்றி,
சம்முகம்
பொதுவாகக்
கிராமத்தாரிடம்
மதிப்புப்
பெற்றிருப்பவர்.
சுற்றுவட்டமுள்ள
எல்லா
அரிசன
மக்களுக்குமே
பலவகைகளிலும்
மேலான
மதிப்புக்குரிய
சிறப்பைப்
பெற்றிருப்பவர்.
உழவுத்
தொழிலாளர்
வாழ்க்கைகளைப்
பாதிக்கும்
எந்தப்
பிரச்னைக்கும்,
சொந்தத்
தகராறுகளுக்கும்
கூட
அவரிடம்
வந்து
நியாயம்
கோருவார்கள்.
இவருக்குத்
தெரியாமல்
அந்தக்
குடிகளிலிருந்து
பெரிய
படிப்புப்
படிக்கச்
சென்றவர்,
உத்தியோகம்
பார்க்கச்
சென்றவர்,
மேற்குடி
சம்பந்தம்
வைத்துக்
கொண்டவர்
என்று
அதுகாறும்
இல்லை.
கிளியந்துறைக்
கடைவீதி
காலை
நேரச்
சுறுசுறுப்புடன்
விளங்குகிறது.
அருணாசலத்தின்
காபிக்
கடையில்
சூடான
இட்டிலியும்
சட்டினியுமாக
வியாபாரம்
நடக்கிறது.
சைக்கிள்
கடையில்
மாலை
நேரத்தில்
தான்
வியாபார
நெரிசல்
என்றாலும்
இப்போது
அங்கு
குந்தியிருக்கும்
ஆட்கள்
இருக்கின்றனர்.
ராமசாமி
இப்போதுதான்
கடை
திறந்து
முன்பக்கம்
கயிறு
வகைகள்,
வாளிகள்
எல்லாம்
எடுத்துத்
தொங்கவிடுகிறான்.
பஸ்ஸுக்காகச்
சுற்றுப்புறங்களில்
இருந்து
வரும்
மக்களில்
கோஷாப்
பெண்கள்
கூட்டம்
ஒன்று
இன்னமும்
திறக்கப்பட்டிராத
மிட்டாய்க்கடை
வாயிலில்
நிற்கிறது.
நீலச்சட்டையும்
அரும்பு
மீசையுமாக,
நாகரிக
மெருகும்
படிப்புக்குரிய
அடக்கமான
களையுமாக
ஓர்
இளைஞன்
சைக்கிள்
கடைப்பக்கம்
வந்து
நிற்கிறான்.
அவரையும்
காந்தியையும்
கண்டதும்
மரியாதையாக
'ஹலோ'
என்று
முகமன்
கூறுகையில்
சம்முகம்
உள்ளூறப்
பூரித்துப்
போகிறார்.
"தேவுதான,
தம்பி;
எப்ப
வந்தாப்பல?"
"இங்கதான
இருக்கிறேன்?
ரெண்டு
மாசமாச்சி!"
"அப்படியா?
படிப்பு
முடிஞ்சி
போச்சா?"
"லா
படிச்சுருக்கேன்...
இன்னும்
முடிக்கல...
பரீட்சை
எழுதணும்."
"அப்பிடியா?
ஒண்ணுந்
தெரியறதில்ல.
வீட்டுப்பக்கம்
வரக்கூடாதா?
ஆமாம்,
ஊரிலே
ஆரிருக்காங்க?"
அவன்
புன்னகை
செய்கிறான்.
"ஆரு,
நாந்தானிருக்கிறேன்.
இப்படி
வந்திட்டுப்
போவேன்..."
பஸ்
வந்ததும்
தங்களருகில்
அவன்
உட்கார்ந்து
பேசுவதை
விரும்புவான்
என்று
அவர்
எதிர்பார்த்தது
நடக்கவில்லை.
இவர்கள்
ஏறி
முன்பக்கம்
இறங்கத்
தோதாக
அமர்ந்து
கொண்டு
அவனுக்காக
ஓர்
இடத்தை
ஒதுக்கினாற்
போலும்
கூட
நினைத்து
அவனைத்
திரும்பிப்
பார்க்கின்றனர்.
ஆனால்
தேவு,
வேண்டாம்
என்பது
போல்
வேறு
பக்கம்
அமர்ந்து
கொள்கிறான்.
பஸ்ஸில்
இவர்
அமர்ந்திருப்பதை
நடவுக்குச்
செல்லும்
வேட்டுவனூர்
நாட்டாமை
பார்த்து
விடுகிறான்.
"டவுன்
போறீங்களா,
முதலாளி?
ஐயா
அம்மா
எல்லாம்
சொகந்தானா?"
"சொகந்தா,
எங்க
நடவு?"
"இங்கதா,
கெழக்கால
கரந்தக்குடி
பண்ண..."
"கூலி
எல்லாம்...
எப்படி?
சட்டபடிதான?"
"ஆமாம்.
ஏழு...
ஒம்பதுதா..."
"ஒண்ணுந்
தகராறில்லியே?"
"அதெல்லாமில்ல..."
சட்டென்று
ஓடிப்போய்,
வெற்றிலை
பாக்கு
வாங்கி
வந்து
எம்பிக்கொண்டு
நீட்டுகிறான்.
"என்னாத்துக்கு
இதெல்லாம்?
போ
போ..."
"வெத்தில
போடுங்க
முதலாளி?"
"நா
வெத்தில
போடுறத
வுட்டுப்புட்டே.
பல்லு
வலி
வந்திச்சி.
எடுத்திட்டுப்
போ."
"சும்மா
போடுங்க
முதலாளி!
நம்ம
புள்ளதாங்களே?"
"ஆமாம்.
அதும்
போடாது,
படிக்கிற
புள்ள..."
இதற்கு
மேல்
அவள்
புதிய
தொழிற்
கல்வியைக்
கற்று,
மேல்
வருக்கத்தினருக்கும்
மேலாகப்
படி
ஏறப்
போவதைப்
பற்றிச்
சொல்லிக்
கொண்டாலும்
அவர்களுக்குப்
புரியாது...
மேலும்
மேலும்
கோஷாப்
பெண்கள்.
கம்மென்று
அத்தர்,
சென்ட்
வாசனைகள்,
மேலே
போர்த்திருக்கும்
போர்வையிலேயே
எத்தனை
பூ
வேலைகள்!
ஒவ்வொருத்தியும்
முழங்கை
வரையிலும்
தங்க
வளையல்கள்
அணிந்திருக்கின்றனர்.
முன்பெல்லாம்
எங்கு
திரும்பினாலும்
இவர்கள்
செழிப்பு
இவ்வளவுக்குக்
கண்களில்
பட்டிருக்கவில்லை.
பஸ்
கடைவீதியை
விட்டுப்
புறப்பட்டு,
ஆற்றோரமாகவே
சென்று
பெருமாள்
கோயிலுக்கு
நேராக
நிற்கிறது.
மேல்
சாதி
அக்கிரகாரம்,
வேளாளர்
தெரு
மக்கள்
ஏறிக்கொள்ளும்
நிறுத்தம்
இது.
குருக்கள்
ஆற்றில்
நீராடிவிட்டுப்
பளபளவென்று
துலக்கிய
குடத்தில்
நீர்
முகர்ந்து
செல்கிறார்.
நந்தவனத்தில்
நடராசு
மலர்
கொய்கிறான்.
"என்ன,
சம்முகம்,
டவுனுக்கா?"
என்று
விசாரித்துக்
கொண்டு
வரதராஜன்
முதல்
பக்கத்து
ஆசனத்தில்
அமருகிறான்.
புதுக்குடியில்
பள்ளி
ஆசிரியர்.
இங்கே
நடவுக்கு
வந்து
செல்கிறான்
போலிருக்கிறது.
"ஆமாம்.
நடவாயிட்டுதா?"
"இல்ல,
ரெண்டொரு
பெரும்படிப்
பாத்திரம்
கல்யாணத்துக்கு
எடுத்திட்டுப்
போயிருந்தேன்.
உம்
பொண்ணுதான
இவ?...
படிச்சிண்டிருந்தா
இல்ல,
மிஷன்
ஸ்கூல்ல?"
"ஆமாம்,
மூணு
வருஷமாச்சி.
எஸ்.எஸ்.எல்.ஸி.
பண்ணி.
மேல
படிக்க
வைக்க
முடியல.
இப்பதா,
பாலிடெக்னிக்லேந்து
இன்டர்வியூ
வந்திருக்கு.
கூட்டிட்டுப்
போறேன்."
"அப்படியா?
படிக்க
வையி.
உங்களுக்கெல்லாந்தான்
அரசு
எல்லாம்
செய்யக்
காத்திண்டிருக்கே?
உம்
பையன்
கூட
பி.ஏ.
படிச்சான்
போல
இருக்கு?
வேலை
பண்றானா?"
தெரிந்து
கொண்டே
கேட்கும்
கேள்விதான்
என்று
படுகிறது.
"மெட்ராசில
இருக்கிறான்.
ஹான்ட்லூம்
போர்ட்
ஆபீசில..."
"கல்யாணம்
காட்சி
பண்ணிருக்கியா?"
"எல்லாம்
அவனே
பண்ணிக்கிட்டான்.
என்னத்தப்
பேசறதுங்க..."
"ஓ...
கேள்விப்பட்டேன்
போலிருக்கே...
எல்லாம்
ஒண்ணாப்
போச்சு
இப்ப.
இங்க
கூட்டிட்டு
வந்தானா?"
"இல்ல,
இப்ப
ஊருக்கு
வந்திருக்கிறான்.
எங்களுக்கு
ஒண்ணுமில்லன்னாலும்,
பட்டணத்தில்
பழக்கப்பட்டவங்க,
கிராமத்தில
எப்படி
வந்திருப்பா?"
"பட்டணத்துல
பழக்கப்பட்ட
பிறகு
யாரு
வரது.
இப்ப
உம்
பொண்ணே
நாளக்கிப்
படிச்சு
பெரிய
பதவில
வந்த
பெறகு
கிராமத்தில
வந்து
குடிசயில
இருப்பாளா?
உன்ன
அப்பன்னு
சொல்லிக்கவே
வெக்கப்படுவா!...
முன்னப்
போல
கிராமத்துல
யாரு
இருக்கப்
போறாங்க?
ஏழும்
ஒம்பதும்
கூலி
குடுத்து
ஆருக்குக்
கட்டுப்படியாவும்?"
இவருக்கு
முகம்
சிவக்கிறது.
"ஏழு
ஒன்பது
கூலிலதா
எல்லாம்
பாயுறாங்க.
சேத்தில
உழலுறவன்
இந்த
வெலவாசில
அரவயித்துக்
கஞ்சி
குடிக்க
வாணாமா?"
"யாரு
வாணாங்கறாங்க?
வரியையும்
உசத்திப்
போட்டான்.
உரவெல,
பூச்சி
மருந்துவெல,
ஆள்
கூலி
இதெல்லாம்
கணக்குப்
பாத்தா
யாருக்கு
விவசாயம்
பண்ணனும்னு
இருக்கு?
உழுதவன்
கணக்குப்
பாத்தா
உழக்கு
மிச்சமில்லங்கறது
அன்னிக்கு
இல்ல,
இன்னிக்குத்தா
மெய்யாயிருக்கு..."
இவர்
பேசவில்லை.
சட்டென்று
யாரும்
தொழிலாளியின்
கூலியில்தான்
பாய்கிறார்கள்.
ஒரு
அலுவலகக்
கடை
நிலை
ஊழியன்
வாங்கும்
சம்பளம்
கூட
இந்தத்
தொழிலாளிக்குக்
கிடைக்கவில்லை
என்பதை
யாரிடம்
சொல்வது?
புதுக்குடி
பஸ்
நிறுத்தத்தில்
அநேகமாகப்
பஸ்ஸே
காலியாகிவிடுகிறது.
தேவு
இறங்கிச்
செல்வதை
ஓரத்திலமர்ந்திருக்கும்
காந்தி
பார்த்துக்
கொண்டிருக்கையில்
சிவப்புக்
கட்டத்
துண்டுடன்
சின்னராசு
ஏறி
வருகிறான். "காம்ரேட்
எங்க?
தஞ்சாவூருக்கா?"
"ஆமாம்,
நேத்து
ஊருக்குப்
போன
பிறகுதான்
தெரியிது.
இதுக்கு
இண்டர்வியூக்கு
வந்திருக்கு.
நான்
சொன்னனில்ல
நேத்து?"
"அப்படியா
மகிழ்ச்சி.
மார்க்கெல்லாம்
நல்லா
இருக்கில்ல?"
"இருக்கு,
இருந்தாலும்
தேர்வு
செலக்ஷனாகி,
ஆஸ்டல்
பாத்து
சேத்துவர
வரய்க்கும்
கவலதான?"
"அதொண்ணும்
தொந்தரவு
இல்ல
காம்ரேட்.
நம்ம...
கிள்ளிவளவன்
இருக்காரு
அந்த
போர்டிலன்னு
சொல்லிக்கிட்டா.
உங்களுக்குத்தா
அந்த
நாளிலேந்து
தெரியுமே?..."
"அப்படியா?
கிள்ளிவளவனத்
தெரியுமாவது?
ஒண்ணா
எத்தினி
போராட்டத்தில்
போயிருக்கிறோம்?
நம்ம
சுந்தரமூர்த்தி
வீட்ல
அவர
முதல்ல
திராவிட
இயக்கம்
ஆரம்பிச்ச
நாள்ளந்து
பழக்கம்.
'அக்கிரகாரத்தில
மாட்ட
ஓட்டிட்டுப்
போடா'ம்பாரு...
வளவந்தா
மீட்டிங்கில
பேச
வருவாரு..."
"பின்னென்ன?
இடம்
கிடச்சாச்சின்னு
வச்சிக்க!"
மிகவும்
தெம்பாக,
உற்சாகமாக
இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட
இனத்தினருக்கான
கல்விச்சலுகை;
விடுதியிலிருந்து
படிக்கவும்
கூட
உதவி
பெறலாம்...
பிறகு...
வேலை...
இவர்கள்
கொள்கை
வழியிலே
நிற்கும்
முற்போக்கு
இளைஞனாகப்
பார்த்துத்
திருமணம்...
பையனைப்
போல்
இவளை
விட்டு
விடக்
கூடாது.
இவளைத்
தம்
ஆளுகையில்
இருத்திக்
கொள்ள,
ஒரே
கொள்கையாளாகப்
பார்த்துச்
சம்பந்தம்
செய்து
கொள்ள
வேண்டும்.
அது
அப்படி
அசாத்தியமல்ல.
பஸ்
நிறுத்தத்திலிறங்கி
நடக்கிறார்கள்.
கால்
வலி
கூடத்
தெரியவில்லை.
பழைய
நாளைய
அரண்மனைக்
கட்டிடம்
வெளியே
சைக்கிள்கள்
நிற்கின்றன.
பெஞ்சியில்
பெண்கள்,
தந்தையர்,
சகோதரர்கள்
என்று
கூட்டம்
குறையவில்லை.
இவர்களில்
யாரோ
தாழ்த்தப்பட்டவராகத்
தம்மினத்தை
சார்த்திருக்க
முடியும்
என்று
சம்முகம்
பார்க்கிறார்.
யாருமே
தம்மினம்
இல்லை
என்று
நினைக்கும்படியாக
இருக்கிறது.
ஒரு
வெள்ளைக்கார்,
அம்பாஸடர்
வந்து
நிற்கிறது.
அதிலிருந்து
ஒரு
முன்
வழுக்கைக்காரரும்
ஓர்
இளம்பெண்ணும்
இறங்கிச்
செல்கின்றனர்.
சம்முகம்
அவரை
நினைவு
கூறுகிறார்.
அவர்
ஒரு
ஆலை
அதிபர்.
கிள்ளிவளவனை
முன்னதாகக்
கண்டு
ஒரு
வார்த்தை
சொல்லியிருக்கலாம்.
அரசியல்
கட்சி
என்று
வேறு
ஒரு
பக்கம்
சார்ந்து
விட்ட
பிறகு
இவருக்குத்
தொடர்பே
விட்டு
விட்டது,
என்றாலும்
பழைய
தோழமையை
மறந்து
விடமாட்டான்.
இவள்
விண்ணப்பம்
பார்த்து
யாரோ
நினைவு
வைத்துக்
கொள்ள
முடியும்?
மனம்
உழம்புகிறது.
தாழ்த்தப்பட்ட
இனம்
என்ற
ஒரு
துரும்பையே
பற்றிக்
கொண்டு
சுழலுகிறது.
பொழுது
கிடுகிடென்று
ஏறிப்
பன்னிரண்டரையாகிறது.
பசி
உணர்வு
தலைதூக்குகிறது.
பிறகுதான்
அவள்
பெயரைக்
கூப்பிடுகிறார்கள்.
இவள்
தான்
கடைசி
என்று
தோன்றுகிறது.
உள்ளே
சென்று
முன்னறையில்
இவர்
தங்க,
காந்தி
தள்ளு
கதவைத்
தள்ளிக்
கொண்டு
உள்ளே
செல்கிறாள்.
அடியிலும்
மேலும்
வெளிச்சம்
இருந்தாலும்
கால்கள்
மட்டும்
தெரிந்தாலும்,
பேச்சுக்
குரல்களும்,
நலிந்த
காந்தியின்
மொழிகளும்
செவிகளில்
விழுந்தாலும்
ஒன்றும்
தெளிவாகத்
துலங்காமல்,
மிகப்பெரிய
மலை
ஏற்றத்தின்
முண்டு
முடிச்சுக்
கட்டத்தில்
நிற்பது
போல்
இலேசானதொரு
கலக்கம்
ஆட்கொள்கிறது.
அவருடைய
வாலிபப்
பருவம்,
வாழக்கூடிய
நாட்களெல்லாம்
போராட்டம்,
போலீசு,
கோர்ட்டு,
வயல்,
அடிதடி,
வழக்கு,
காத்திருப்பு
என்று
கண்ணாடிச்
சில்லுகளில்
குத்திக்
கொண்டு
நடப்பாகவே
மோதிக்
கொண்டு
கழிந்திருக்கிறது.
இதே
ஊரில்
வக்கீல்
ஐயங்கார்
வீட்டில்
எத்தனை
நாட்கள்
காத்துக்
கிடந்திருக்கிறார்?
பசி,
பட்டினிக்கு
எல்லையே
கிடையாது.
கால்
கால்
ரூபாயாகக்
காசு
சேர்க்கும்
தொல்லை,
கஞ்சுக்கில்லா
ஏழைகளிடம்
வக்கீலுக்குக்
கொடுக்கக்
காசு
பறிக்கும்
தொல்லையை
அளவிடுவதற்கில்லை.
ஆனால்
அப்போதெல்லாம்
கூட
இந்தத்
தொய்வும்
அவநம்பிக்கை
நிழல்
காட்டும்
தளர்ச்சியும்
இல்லை
போலிருக்கிறதே?
வாழ்க்கையில்
பற்றும்
பசுமையும்
பெருமிதமும்
இப்போதுதான்
தலைக்காட்டத்
தொடங்கியிருக்கின்றன.
காந்தி
மிகுந்த
சூடிகையுள்ள
பெண்.
என்றேனும்
அவளோடு
சங்க
அலுவலகத்தில்
தங்க
நேர்ந்தால்
கூட,
பத்திரிகை
புத்தகங்கள்
என்றுதான்
கண்கள்
நோட்டமிடும்.
மூன்று
வருட
காலம்
அவளை
முடக்க
வேண்டி
வந்து
விட்டது.
அவளுக்காக
நூலகத்திலிருந்து
புத்தகங்கள்
வாங்கி
வர
வேண்டும்.
இல்லையேல்
தானே
செல்வதாக
நிற்பாள்.
இவள்
தகுதி -
தாழ்த்தப்பட்ட
இனம்
-
அம்பேத்கார்
பேரைக்
கொண்ட
கல்விக்
கொடை
நிறுவனம்.
கிள்ளிவளவன்...
மூன்று
கால்களும்
உறுதியானவை.
இந்தக்
கால்களில்
மாடமாளிகை
எழுப்ப
முடியும்.
'எலக்ட்ரானிக்ஸ்'
அது
இது
என்றெல்லாம்
அவள்
சொல்லும்
சொற்கள்
இவருக்கு
அவ்வளவு
புரியவில்லைதான்.
இவர்
படித்ததெல்லாம்
ஐந்தாவது
வரையிலுமே.
பின்னர்
விசுவநாதனும்,
இராமச்சந்திரனும்
நெடுங்காடியும்
பாசறையில்
கற்பித்த
பாடங்களே
அவரை
ஒரு
சங்கத்
தலைவனாக்கியிருக்கின்றன.
உள்ளே
இறுக்கம்
தாங்கவில்லை.
துண்டால்
விசிறிக்
கொள்கிறார்.
காந்தி
வெளியே
வருகிறாள்.
அப்பாடா...!
"என்னம்மா?
எல்லாம்
நல்லபடியாச்
சொன்னியா?"
"இருங்கப்பா,
உங்களை
அவரு
பார்க்கச்
சொன்னாரு..."
"யாரு...?"
"அதா,
உயரமா
முடிய
இந்த
பக்கமா
வாரிட்டு
இருந்தாரு.
போறதுக்கு
முன்ன
அரைமணி
கழிச்சிப்
பார்க்கச்
சொல்லுன்னு
சொன்னாரு..."
"கிள்ளிவளவனா?
போர்டில
இருக்காருன்னாங்க.
உங்கிட்ட
ஞாபகமாக்
கேட்டாரா?"
ஆவல்
அடுக்கடுக்காக
விரிகிறது.
"அவுருதாம்போல
இருக்கு.
மூணு
பேரு
இருந்தாங்க. 'எந்த
ஸ்கூலில்
படிச்சே?
ஏ
மூணு
வருஷமா
சும்மா
இருந்தே'ன்னுதாங்
கேட்டா.
நான்
'வசதியில்ல.
ஊரை
விட்டு
வரமுடியல'ன்னேன்.
தாத்தா
பேரச்
சொன்னாரு
அவுரு.
'ராமசாமி
வாய்க்கார்
மகன்
சம்முகமா
உங்கப்பா'ன்னாரு..."
அரைமணி
காத்திருப்பதாகவே
இல்லை.
பொற்சிறகுகளுடன்
பறந்து
போகிறது.
அறையில்
கிள்ளிவளவன்
மட்டுமே
அமர்ந்திருக்கிறான்.
அதே
கறுப்புத்
துண்டுத்
தோழமை.
"வணக்கமுங்க,
நம்ம
பொண்ணுதா..."
உட்கார்ந்தவாறே
புன்னகை
செய்கிறான்.
'உட்காருங்க'
என்று
ஆசனம்
காட்டுகிறான்.
"எப்படி
சவுக்கியமெல்லாம்?
அப்பா
நல்லாயிருக்காரா?"
"இருக்காருங்க
நல்லபடியா..."
"இது
ஒரே
மகதானா?"
"இன்னொண்ணு
இருக்கு.
அது
படிக்கல
ரொம்ப.
குடும்பமா
வச்சிட்டேன்.
விவசாயக்
குடும்பத்தில
வீட்டுக்கும்
ஆளு
வேண்டியிருக்குங்களே!"
"இவ
மதிப்பெண்,
மற்ற
தகுதி
எல்லாம்
திருப்தியாகவே
இருக்கு.
உங்க
மகளுக்கு
நல்ல
எதிர்காலம்
காத்திருக்கிறது.
வாழ்த்துக்கள்"
என்று
காந்தியைப்
பார்த்துப்
புன்னகை
செய்கிறான்.
அவள்
தலையைக்
குனிந்து
கொள்கிறாள்.
"ரொம்ப
நன்றிங்க..."
என்று
சம்முகம்
உணர்ச்சி
வசப்பட்டுப்
போகிறார்.
"இந்த
நிறுவனமே
பின்
தங்கிய
இனத்தினருக்காக
தொழிற்கல்வி
என்று
தொடங்கப்பட்டிருக்கிறது..."
"சொன்னாங்க..."
"இது
ஒரு
புதிய
சகாப்தத்தை
நோக்கிச்
செல்லும்
நுழைவாயில்.
எலக்ட்ரானிக்ஸ்,
சிவில்
இன்ஜினியரிங்,
பிசினஸ்
மானேஜ்மென்ட்
என்ற
பல
துறைகளும்
தொடங்குகிறார்கள்.
இன்னும்
விரிவுபடுத்தப்
பல
திட்டங்களிருக்கின்றன..."
வளவன்
மேசையிலிருக்கும்
கண்ணாடிக்
குண்டைக்
கையில்
வைத்துக்
கொண்டு
திட்டங்களை
விவரிக்கிறான்.
அதெல்லாம்
புரியாது
போனாலும்
மகிழ்ச்சியுடன்
ஆமோதிக்கிறார்
சம்முகம்.
"அதனாலே,
சம்முகம்,
உங்க
மகள்
ஓர்
அதிர்ஷ்டப்
பாதையில்
கால்
வைக்க
அனுமதி
கிடைச்சாச்சு.
நீங்க
ஓர்
இரண்டாயிரம்
முதலில்
கட்டிடணும்..."
திக்கென்று
கண்ணாடிக்
குண்டைத்
தம்
மீது
எறிந்து
விட்டாற்
போல்
அவர்
அதிர்ச்சியுறுகிறார்.
"உங்க
மகன்னில்ல.
செலக்ஷன்
ஆகும்
மாணவியர்
யாராக
இருந்தாலும்
டொனேஷன்
கட்டணும்
என்று
விதி."
கண்ணாடிக்
குண்டு
சிதில்
சிதிலாக
வெடித்து
விழுந்தாற்
போலிருக்கிறது.
"இரண்டாயிரமா?
அவ்வளவு
தொகைக்கு
என்னப்
போல்
ஓர்
ஏழை
விவசாயி
எங்க
போக
முடியுமுங்க?"
வளவன்
புன்னகை
செய்கிறான்.
பல்
வரிசைகள்
ஒழுங்காக
அழகாகத்
தோன்றிய
தோற்றம்.
இப்போது
நரிப்பற்களின்
நினைப்பைக்
கொண்டு
வருகிறது.
"அதெல்லாம்
அந்தக்
காலம்.
இன்னைக்கி
உங்களால்
இரண்டாயிரம்
திரட்ட
முடியாதுன்னு
நான்
சொல்ல
மாட்டேன்.
இது
இந்தக்
கல்விக்
கூடத்தின்
வளர்ச்சிக்கு
மட்டுமே.
உங்க
மகளுக்குப்
பல்வேறு
சலுகைகள்
கிடைக்க
இருக்கின்றன.
தாழ்த்தப்பட்ட
வகுப்பிலிருந்து,
உங்க
மகள்
வந்து
கட்டாயம்
படிக்கணும்னு
நினைப்பதால்,
நான்
உங்ககிட்ட
வற்புறுத்த
வேண்டியிருக்கு.
ஒரு
இரண்டாயிரம்
புரட்டிக்
கட்டிடுங்க...
இது
மட்டும்
யாருக்கும்
விலக்கு
இல்லை..."
மலையாக
இருக்கிறது.
இரண்டாயிரம்!
பட்டாமனையில்
வீடு
கட்ட
இருநூற்றைம்பது
செலவு
செய்து
மூவாயிரம்
கடன்
வாங்கினார்.
அரை
வேக்காட்டுச்
செங்கல்லை
வைத்து,
மண்ணையும்,
சுண்ணாம்பையும்
குழைத்துக்
கட்டிய
அந்த
வீட்டுக்கு
மேலும்
'நான்கு'
செலவாயிருக்கிறது.
அந்தக்
கடனுக்கு
வட்டி
கொடுத்துக்
கொண்டிருக்கிறார்.
உரம்
வாங்க,
கூலி
கொடுக்க,
உழவு
மாடு
வாங்க
என்று
கடன்
கொடுக்கிறார்கள்.
ஆனால்
வீட்டுச்
செலவும்
பயிர்ச்
செலவும்
கடனும்
வட்டியும்
அடைக்க
முடியாமல்
துண்டாகத்
தங்கித்
தங்கி
பூதாகாரமாக
வளர்ந்து
வருவதை
எங்கே
போய்ச்
சொல்வது?
பையனைப்
படிக்க
வைத்தார்.
அவன்
பெற்ற
சலுகையைக்
காட்டிலும்
அவன்
ஆடம்பரச்
செலவுகளே
அதிகமாயிருந்தன.
எப்படியோ
ஏதோ
வேலை
என்று
பற்றிக்
கொண்டு
நம்மை
விட்டால்
போதும்
என்று
அவன்
வளர்ந்திருக்கிறான்.
உயர்
சாதிப்
பெண்ணைத்
திருமணம்
செய்து
கொண்ட
பிறகே
எழுதினான்.
இப்போது
அவன்
ஊருக்கு
வந்திருப்பது
லட்சுமிக்குத்தான்
பூரிப்பு.
ஆனால்
இவருக்கு
உள்ளூர
அவன்
பணம்
கேட்டு
வந்திருப்பானோ
என்ற
அச்சம்
தான்.
"இரண்டாயிரமெல்லாம்
நினைக்கக்
கூட
முடியாதுங்க..."
"கொஞ்சம்
குறைச்சிக்குங்க..."
என்று
சொல்ல
எழுந்த
நா
உடனே
சுய
மரியாதையில்
அடங்கிப்
போகிறது.
இவனிடம்
இதற்குப்
பேரமா?
"அதான்,
பிரத்தியேகமாக
உங்களுக்குச்
சொன்னேன்.
எப்படியானும்
முதல்ல
கட்டிடுங்க,
உங்க
பெண்ணுக்கு
மட்டுமல்ல,
சமுதாயத்துக்கே
பெருமை."
"சரிங்க,
பார்க்கிறேன்."
"வணக்கம்..."
காந்தியும்
கும்பிடுகிறாள்.
வெளியே
படி
கடந்து
வந்த
பின்னரும்
இருளடித்துப்
போனாற்
போலிருக்கிறது.
---------------
3
வயிற்றுப்
பசி
புதிய
எரிச்சலில்
தெரியவில்லை.
எங்கே
போகிறார்கள்
என்பது
உறைக்காமலேயே
பஸ்
நிறுத்தத்துக்கு
நடக்கின்றனர்.
“எனக்கு
மட்டுமில்லாம
எல்லாருக்குமே
நல்ல
எதிர்காலம்னு
நினைச்சேன்.
நடுவில்
மூணு
வருசம்
நிக்காம
மூச்சப்
புடிச்சிடிருந்தா...
இதுக்குள்ள
பி.காம்னாலும்
மூணாம்
வருசம்
வந்திருக்கலாம்.
அப்ப
பி.யூ.ஸி.
எனக்கு
ஈஸியா
ஸீட்
கிடைச்சிருக்கும்...”
“அதுதா
முடியலியே?
இப்ப
அதைச்
சொல்லி
என்ன
பிரயோசனம்?
ஏதோ
இருநூறு
முந்நூறுன்னா
ஒழிஞ்சி
போவுதுன்னு
சமாளிச்சுக்
குடுத்துடலாம்.
ஒரேமுட்டா
ரெண்டாயிரம்னா
எங்கே
போக?”
“அறுப்பானதும்
திருப்பிடறதாச்
சொல்லி
யாரிட்டன்னாலும்
புரட்ட
முடியாதாப்பா?”
அவளுக்கு
எப்படியேனும்
இடத்தைப்
பிடித்து
விட
வேண்டும்
என்ற
துடிப்பாக
இருக்கிறது.
விவசாயத்துக்கே
அறுப்பை
நம்பிக்
கடன்
வாங்கியிருக்கும்
நிலை.
அதுவும்
குறுவை
ஒரு
சூதாட்டம்
தான்.
வந்தால்
வந்தது;
வராவிட்டால்
போச்சு.
பச்சை
நெல்லைக்
களத்திலேயே
விற்றுத்
தொலைக்க
வேண்டும்.
அந்தக்
கெடுபிடியைத்
தெரிந்து
கொண்டு
வியாபாரி
கொள்ளா
விலைக்குப்
பேசுவான்.
எங்கே
போய்ச்
சொல்லி
அழ!
தந்தையின்
மௌனம்
அவளுக்குச்
சங்கடமாக
இருக்கிறது
போலும்?
“ஏம்பா,
நீங்க
உங்க
சங்கத்துக்கு
கட்சிக்கின்னு
எத்தினியோ
உழக்கிறீங்க.
எத்தினியோ
பேர்
உங்களுக்குத்
தெரிஞ்சவங்க
நல்லநிலையில்
இருப்பாங்க.
பதவியில்
இருக்கிறவங்க
கூடத்தான்
யாரானாலும்
இந்த
ஒத்தாசை
செய்ய
மாட்டாங்களா?
கேட்டுப்பாருங்கப்பா...”
“எங்கம்மா?
எஸ்.எம்.
இருக்காரு?
டெல்லில
போயிப்
பார்க்க
முடியுமா?”
“இயக்கத்தில்
சம்பந்தப்பட்டவங்க.
எத்தினியோ
பேர்
தா
அன்னிக்குத்
தெரிஞ்சவங்க.
ஆனா,
எவ்வளவோ
நல்லாத்
தெரிஞ்ச
வளவனே,
இதுல
சம்பந்தப்பட்டவரே,
கட்டாயமா
குடுக்கணும்னு
சொல்லிட்ட
பிறகு
யார
நம்பிம்மா
போறது?...”
“இந்த
வருசமும்
வீணாப்
போகக்
கூடாதுப்பா...”
“பார்ப்பம்.
ஷார்ட்
ஹான்ட்
டைப்ரைட்டிங்
படிக்கலாம்.
வேலை
வாய்ப்புப்
பத்தி
ரேடியோவில
கூடச்
சொன்னாங்க,
நாலு
நா
முன்ன.
எதுக்கும்
இப்ப
புதுக்குடில
விசுவநாதனப்
போயிப்
பார்ப்பம்.
அவருடைய
அண்ணன்
மகதான
பெரிய
டாக்டருக்குப்
படிச்சி
ஆஸ்பத்திரி
வச்சிருக்காங்க.
உனக்கு
ஏதானும்
நர்ஸ்
வேலை,
இல்லாட்டி
அம்மை
குத்துர
சுகாதார
இனிஸ்பெட்டரு
வேலை
முயற்சி
செய்யச்
சொல்ற...”
“போங்கப்பா,
எனக்கு
சீக்கு
அழுகைன்னாலே
புடிக்கல...”
புதுக்குடி
பஸ்
கிளம்பத்
தயாராக
இருக்கிறது.
மணி
இரண்டரையாகி
விட்டது.
அந்தக்
காலத்தில்
இந்த
விசுவநாதன்,
பெரிய
வீட்டுப்
பிள்ளையாக
அண்ணாமலைப்
பல்கலைக்
கழகத்தில்
எம்.ஏ.
படித்துக்
கொண்டிருந்தவர்.
இளம்
புரட்சியாளராக
இவர்களிடையே
கனல்
மூட்ட
வந்தார்.
ஒவ்வொரு
அமாவாசை
இரவிலும்
அவர்களைத்
தேடிக்
கூட்டம்
நடத்த
வருவார்.
கூட்டம்
முடிந்ததும்
அவரைப்
பத்திரமான
இடத்தில்
கூட்டிக்
கொண்டு
விடுவது
அந்நாள்
பதினான்கு
வயதுப்
பையனாக
இருந்த
சம்முகத்தின்
பொறுப்பு.
கிராமம்
கிராமமாகச்
செல்வதும்,
தலைமறைவுத்
தலைவர்களுக்கு
உணவு
கொண்டு
செல்வதும்,
இரகசியக்
கூட்டங்களுக்குச்
செய்தி
கொண்டு
செல்வதும்
அந்த
நாட்களில்
இவருடைய
முக்கியப்
பணிகள்.
உயர்
வகுப்பில்
பிறந்த
தலைவர்களுக்கு
அவருடைய
அம்மா
சோறு
சமைத்துக்
கொடுத்துக்
கொண்டு
போக
வேண்டிய
சந்தர்ப்பங்கள்
பல.
“எல,
நீ
கையால
தொடாம
தூக்கோட
குடுத்திடு,
நமக்குப்
பாவம்...”
என்பாள்.
வெயில்
ஊமைப்
புழுக்கத்தைத்
தோற்றுவிக்கிறது.
பஸ்
நிறுத்தம்
செல்லுமுன்,
சன்னிதித்
தெருவிலேயே
இறங்கி
விடுகிறார்கள்.
காந்திக்குப்
பஸ்
நிறுத்தத்தில்
இறங்கி
ஓட்டலில்
ஏதேனும்
சாப்பிட்ட
பின்னர்
ஐயரைப்
பார்க்கச்
செல்லலாம்
என்று
எண்ணம்.
ஆனால்
அப்போதைய
நிலையில்
தந்தையிடம்
எதையும்
சொல்ல
அச்சமாக
இருக்கிறது.
பழைய
தெருவானாலும்
வீடுகள்
புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.
இவர்
வீடு
மட்டும்
என்றோ
அடிக்கப்பட்ட
பச்சை
வண்ணம்
மங்க,
மெருகின்றித்
தனியாகத்
தெரிகிறது.
அடுத்த
வீடும்
இதே
போன்ற
மூன்று
கட்டு
வீடுதான்.
ஆனால்
அது
முற்றிலும்
புதுமையாக்கப்பட்டு,
வாசலில்
பெரிய
எழுத்தில்
‘ரங்க
மன்னார்
ஆஸ்பத்திரி’
என்று
எழுதப்
பெற்ற
பலகை
தொங்குகிறது.
டாக்டர்
கீதா
ரத்னம்
எம்.பி.பி.எஸ்.
டி.ஜி.ஓ.
டாக்டர்
ரத்னம்
எம்.எஸ்.
என்ற
பெயர்களும்
கண்களைக்
கவருகின்றன.
‘இவர்களெல்லாம்
உயர்சாதிக்காரர்கள்;
வசதியுடையவர்கள்.
இந்த
வசதி
எனக்கு
இருந்தால்
நானும்
இப்படி
காந்திமதி
எம்.பி.பி.எஸ்.
என்று
போட்டுக்கொள்ள
முடியாதா’
என்று
ஒருகணம்
நினைத்துக்
காந்தி
பெருமூச்செறிகிறாள்.
வாயில்
வழியை
ஒரு
சாக்குப்படுதா
மறைக்கிறது.
சாக்குப்படுதா
மறைப்பில்
சாய்வு
நாற்காலியில்
கைகளை
நீட்டிக்கொண்டு
சாய்ந்து
விசுவநாதன்
புகை
குடித்துக்
கொண்டிருக்கிறார்.
கருகருவென்ற
கிராப்பு
முடியும்,
அந்தச்
சிவப்பு
நிறமும்
ராஜ
கம்பீரமும்
எங்கே
போயின?
அந்த
விசுவநாதனா?
முடி
முழுதும்
நரைத்து,
முன்
மண்டை
வழுக்கையாகி
சருமம்
வறண்டு
கண்கள்
குழிவிழுந்து,
ஒற்றைப்
பல்
மட்டும்
முன்பக்கம்
தெரிய,
அவரை
அடையாளம்
கண்டுகொள்வதே
சிரமமாக
இருக்கிறது.
“வணக்கம்
ஐயா...”
கையிலிருந்த
பீடித்துண்டைப்
பக்கத்துப்
பீங்கான்
கிண்ணத்தில்
போட்டுவிட்டு
விழிகளை
நிமிர்த்துகிறார்.
“ஆரு?
அட...
அட?
கிளியந்துற
சம்முகமா?”
குரலில்
உற்காசம்
பீறிடுகிறது. “உக்காரு,
உக்காரப்பா.”
பெஞ்சியில்
உட்காருகிறார். “உட்காரம்மா...
நம்ப
மக
காந்திமதி.”
“தெரியுமே?
இங்க
படிச்சிட்டிருந்தாளே?
இப்ப
என்ன
கோர்ஸ்
படிக்கிறா?”
“எஸ்.எஸ்.எல்.சி.யோட
நிறுத்திட்டமே?
அதுக்குதா
இன்னிக்கு
வந்தது.
உடம்பு
ரொம்ப
மெலிஞ்சி
போயிட்டீங்களேய்யா?”
ஒற்றைப்
பல்
தெரியச்
சிரிப்பு.
“அறுபதுக்கப்புறம்
உடம்பு
மெலியணும்.
கூடவே
ஏழெட்டு
ஆயிருக்குமே!”
“ஆமா!
உன்
மூத்த
பையன்
என்ன
பண்ணறான்?
முன்ன
ஒருகா
அவன்
வேலை
சம்பந்தமா
வந்த.
நான்
கூட
இங்க
சுப்புசாமி
வந்தான்,
சொன்னேன்...!”
இவர்
முகம்
சுருங்குகிறது.
“வேலையாயிருக்கிறான்,
மட்றாசில,
கைத்தறி
போர்டில..?”
“பணம்
ஒழுங்கா
அனுப்புறானா?”
“ஏதுங்க?
கலியாணம்
கட்டிக்கிட்டானே?”
“அப்பிடியா?
அதென்ன,
கட்டிக்கிட்டானேங்கற?
நீங்க
பார்த்துப்
பண்ணலியா?”
“கண்காட்சி
வேலை
செய்ய
ஒரு
பிராமணப்
பொண்ணு
வந்து
பழகிருக்கு.
கட்டிக்கிட்டேன்னு
கம்முனு
எழுதிட்டான்.
எனக்கு
அந்தப்
பய
பேரில
எப்பவோ
நம்பிக்கை
விட்டுப்
போச்சு.
ஆனா,
அம்மாகாரிக்குத்தா
மனசில
ரொம்ப
வருத்தம்.
ஒரு
கவுரதியா
படிச்ச
பையனுக்குக்
கலியாணம்
காட்சி
செய்ய
முடியாமப்
போச்சேன்னு...”
“அப்படியா
சமாசாரம்...?
பிராமணப்
பொண்ணுகதா
பெரும்பாலும்
அரிசனங்களைக்
கட்டுகிறதெல்லாம்.”
சிரித்துக்
கொள்கிறார்.
“ராமசாமி
எப்பிடி
இருக்கிறான்?
உங்கப்பாவுக்கு
எழுபத்தஞ்சு
வயசுக்கு
மேல
இருக்குமேடா?”
“ஆமாங்க,
கண்ணு
சுத்தமாத்
தெரியல...”
“கள்ளுக்கடதா
தொறந்தாச்சி.
பொஞ்சாதிய
இப்பவும்
அடிக்கிறானா?”
“அடிக்க
மாட்டாரு.
ஆனா
எதானும்
பே
சிட்டே
இருப்பாரு.”
“அந்தக்
காலத்தில்
உங்கம்மா
நல்ல
உசரமா
செவேல்னு
எப்படி
இருப்பா?
இவன்
சொல்லுவான்.
ஐயரே,
இவ
மட்டும்
ஏனிப்படி
நெறமா
இருக்கா
தெரியுமா?
இவொ
இந்த
சேத்தில
உழலுற
அடிமப்
பய
ரெத்தத்தில
வந்தவ
இல்ல.
கோட்டியூருபண்ண,
தேவதானம்,
நூறுவேலி,
பசுமடம்,
சத்திரம்
கோயில்லாம்
ஒரு
ஐயிரு
பாத்திட்டிருந்தாரு
செவேல்னு
ரோசாகணக்க...
கடுக்கன்
ரெத்தமாட்டுச்
செவப்பு.
கருகருன்னு
பெரிய
முடி
இவாயி
தொடுப்பாயிடிச்சி.
புள்ள
பொறந்ததும்
இவப்பன்
வூட்டம்மா
கிட்டப்
போயி
நின்னானாம்.
துணி,
கஞ்சிக்கு
நொய்யரிசி,
வெளக்கெண்ண,
எல்லாம்
குடுத்திட்டு, ‘ஏண்டா
சங்கிலி
பொட்டப்
புள்ளன்னியே,
கறுப்பா
இருக்குதா,
சேப்பா’ன்னு
கேட்டாங்களாம்.
இது
இங்க
வெள்ளிக்
குஞ்சாட்டம்
இருக்குதுன்னு
எப்படிச்
சொல்லன்னு
நின்னாராம்...”
சம்முகம்
இப்போது
சிரித்துக்
கொள்கிறார்.
ஆனால்
காந்தி
இதே
கதையைத்
தாத்தா
சொல்லிச்
சீண்டக்
கேட்டிருக்கிறாள்.
பாட்டிக்குக்
கோபம்
வரும்.
“ஆமா,
ஒங்கிட்டத்தா
வந்து
சொன்னாரு
சும்மா
பச்ச
புள்ள
கள
வச்சிட்டு
என்னா
பினாத்தற...”
என்பாள்.
“ஆனா
சம்முகம்,
உங்கம்மா
அந்தக்
காலத்தில்
கம்பீரமாத்தான்
இருப்பா.
மிராசு
ஆளெல்லாம்
திமுதிமுன்னு
அரிவாளும்
தடியும்
கம்பும்
எடுத்திட்டு
வர
போலீசு
ஒருபக்கம்
வளைச்சிக்க,
மடியில
கல்லக்
கட்டிக்கிட்டு
ஆம்பிளகளுக்குக்
கவண்
எறியக்
குடுத்தவல்ல
உங்கம்மா?...
அவ
சாயல
உம்
பொண்ணுக்கு
இருக்கு!”
சம்முகத்துக்குப்
பெருமையாக
இருக்கிறது.
“அதொரு
காலம்.
சாட்டையடி
வாங்கிட்டு
சாணிப்பால்
குடிச்சிட்டு
ஏன்னு
கேக்கத்
தெரியாம
இருந்தவங்கள
மனிசங்கன்னு
சொல்லித்
தட்டி
எளுப்பவே
ரத்தம்
குடுக்க
வேண்டி
இருந்திச்சு.
இப்ப
அதெல்லாம்
சொன்னாப்
புரியாது.
ரமேசு
எங்க
இருக்கு
இப்ப?
வேலையாயிட்டுதா?”
“அவன்
துபாய்க்குப்
போயிட்டான்.
அவன்
பணம்
அனுப்பித்தான்
இப்ப
குடும்பம்
நடக்குது
சம்முகம்...?”
“அடாடா?
ரமேசு
துபாய்க்கா
போயிருக்கு?
எப்ப?...”
“ஆச்சே,
ஒருவருசமாகப்
போவுது.
அவம்மா
ஆன
மட்டும்
போகக்கூடாதுன்னு
தடுத்துப்
பார்த்தா.
அதுக்காகவே
ஒரு
கலியாணத்தையும்
கட்டிவச்சா.
நான்
வேண்டான்டின்னேன்.
பெண்சாதி
முகத்தப்
பாத்திட்டு
இருந்திடுவான்னு
அவ
கணக்குப்
போட்டா.
அது
தப்புக்கணக்காப்
போச்சி.
அவளே
இவனப்
போங்க,
திரைக்கடலோடியும்
திரவியம்
தேடணும்னிட்டா.
இளமையில்
விரகம்ங்கறது
தொடர்ந்து
வருது.
நீங்க
அந்தக்
காலத்திலே
குடும்பம்
பொஞ்சாதின்னு
பாராம,
குண்டக்
கையில
வச்சிட்டு
விளையாடி
எதிர்க்கட்சி
கட்டினிங்க.
பின்னால
அதும்
போதாதுன்னு
புடுங்கி
எடுத்திட்டிருக்கா.
கலியாணம்
பண்ணி
மூணாம்
மாசமே
போயிருக்கிறான்.
அவளுக்குப்
பணம்
வரும்.
இங்கயும்
எதோ
பிச்சை
போடுறான்.”
சம்முகத்துக்கு
நா
எழவில்லை.
“பொண்
குழந்தைங்க...!”
“சாவித்திரியக்
கேக்குறியா?
டாக்டருக்கு
ஸீட்
கிடைக்கல.
ஃபார்வர்ட்
கம்யூனிட்டின்னு
ஒரு
பிசுக்கு
இருக்கே!
ஸீட்
கிடைச்சா
வீட்டை
வித்தாலும்
படிக்க
வச்சிடலான்னு
பார்த்தேன்.
ஊஹும்...
பி.எஸ்.ஸி.
ஜூவாலஜி
படிச்சிட்டு
கிண்டர்கார்டனில்
எழுபது
ரூபா
கொண்டாரா.
கல்யாணம்
பண்ணணும்.
காலங்கழிச்சுப்
பெத்த
ஒரு
பொண்ணும்,
ஆணும்
இதுக்கே
ஒண்ணும்
செய்ய
முடியலேன்னு
வயிசு
காலத்தில
தாபப்பட்டுப்
புடுங்கி
எடுக்கறா.
இந்தக்
கத
கிடக்கட்டும்.
நீ
எங்க,
பொண்ணக்
கூட்டிட்டு
வந்தே!”
“அத
ஏங்
கேக்கிறீங்கையா!
நீங்க
என்னமோ
ஃபார்வர்ட்
கம்யூனிட்டி.
எடம்
கிடைக்கலன்னிங்க.
தாழ்த்தப்பட்ட
இனம்,
இங்கயும்
ரெண்டாயிரம்
குடுத்தாதா
ஸீட்னு
பச்சையாக்
கேட்டுட்டானுவ.
எங்க
போயிச்
சொல்லி
அழ?”
“எம்.பி.பி.எஸ்.ஸுக்கு
செலக்ஷனுக்கா
போயிட்டு
வர?”
“டாக்டருக்கில்லீங்க!
பாலிடெக்னிக்,
மூணு
வருஷம்
எலெக்ட்ரானிக்ஸ்.
வளவனைத்
தெரியாதுங்களா?
அவனே
தான்
கூசாம
ரெண்டாயிரம்
கொண்டாந்து
டொனேசன்
குடுத்திடுங்கன்னா
கண்டிசனா!
இது
நல்ல
மார்க்
எல்லா
தகுதியும்
இருக்கு.
ஆனா
உள்ள
பாருங்க,
இப்பிடி...”
“ரெண்டாயிரம்
புரட்டிக்
குடுத்திட்டா,
படிச்சி
முடிச்சிடுவ.
பிறகு
வேலைக்குச்
சில
ஆயிரங்கள்.
மூணு
வருசத்தில்
இன்ஃப்ளேஷன்
கணக்குப்
போடணும்.
பிறகு
புரோபேசன்
அப்படி
இப்படின்னு
ஆயிரங்களைக்
குடுத்து
ஆயிரங்களை
வாங்கிச்
சேர்க்கணும்.
இதுக்குப்
போயி
ஏன்
அழுவுற?
இப்ப
புருசன்
பொஞ்சாதி
வெவகாரத்திலேந்து
எல்லாம்
வியாபாரம்
தான்.
லாபத்தை
முன்னிட்டு
அடிபிடிப்
போட்டிதான்...”
“மனசுக்கு
ரொம்பக்
கஷ்டமாயிருக்கு.
இப்ப
என்ன
பண்ணுவம்னு
தெரியல.
உங்ககிட்ட
எதானும்
கேட்டுட்டுப்
போகலான்னுதா
வந்தது.
யோசனைதா.
நாம
ஒரு
கொள்கை,
சித்தாந்த
வழி
நிக்கறவங்க,
பகிரங்கமா
கேக்கறதுக்கு
உடன்பட்டுடறது
சரியில்லன்னு
தோணுது...”
“போடா,
உன்
சித்தாந்தத்தையும்,
கொள்கையையும்
கொண்டு
உடப்பில
போடு...”
அவர்
உள்ளே
எழுந்து
செல்கிறார்.
காந்தி
முகத்தைச்
சுளித்துக்கொண்டு
நெளிகிறாள்.
சம்முகமோ
சுவரில்
வரிசையாக
மாட்டியிருக்கும்
பழைய
நாளையப்
படங்களைப்
பார்வையிடுகிறார்.
இளமை
பொங்கும்
நேரு
விஜயலக்ஷ்மி,
கமலா
நேரு,
சுபாஷ்
போஸ்;
காந்தி...
“அந்தக்
காலத்துல
இவரு
எப்படி
இருப்பார்
தெரியுமா?
இவுரு
பாடினா
அப்படியே
மந்திரத்தால
கட்டுப்போட்டாப்பல
அதிலியே
நிலச்சிப்
போவோம்.
அரிகேன்
விளக்கொளியில்
எத்தனை
அமாவாசைக்
கூட்டங்கள்!
இவருக்கு...
இந்த
கதின்னா...
இவங்கப்பா
அந்தக்
காலத்துல
வக்கீல்
படிச்சிட்டு
காங்கிரசில்
சேந்தாரு,
பின்னாலே
விட்டுட்டாரு.
அப்பாக்கும்
மகனுக்குமே
எதிர்க்கட்சி,
சண்டை.
நாப்பது
வேலி
குடித்தனம்...”
‘இதெல்லாம்
எதற்கு
சொல்லுறீங்க?’
என்று
கேட்க
முடியாமல்
காந்தி
தலையைப்
பிடித்துக்
கொண்டிருக்கையில்
அவர்
முகக்
கடுப்புடன்
திரும்பி
வருகிறார்.
பிறகு
வாசற்படியில்
நின்று
அடுத்த
சுவர்
ஆஸ்பத்திரி
பக்கம்
எட்டிப்
பார்த்து,
“சிங்காரம்?...
டே
சிங்காரம்...?”
என்று
குரல்
கொடுக்கிறார்.
“என்ன
வேணுங்கையா,
நான்
செய்யிறேனே?”
“ஒண்ணுமில்ல.
நீ
உக்காந்துக்க."
சிங்காரம்
ஆஸ்பத்திரிக்குரிய
வெள்ளை
உடுப்புடன்
வருகிறான்.
“அங்க
யாரிருக்கா?
பழனி,
இல்லாட்ட.
ஆருமில்ல?”
அவர்
முணுமுணுவென்று
பேசுவது
யார்
காதிலும்
விழவில்லை.
ஆனால்
ஒட்டலிலிருந்து
சாப்பாடோ
எதுவோ
வாங்கிவரச்
சொல்கிறார்
என்று
சம்முகத்துக்குப்
புரிந்துவிட்டது.
பிறகு
வந்து
உட்காருகிறார். “என்ன
சொல்லிட்டிருந்தேன்...”
“ஆமாப்பா,
எல்லாரும்
மதம்
மாறுறாங்களாமே?
என்ன
கேலிக்
கூத்து
பாரு?
அஞ்சு
நா
முன்ன,
சீனுவாசன்
வந்திருந்தான்.
பூதலூரு,
அவன்
தாம்பா,
சட்டப்படி
35-65க்கு
ஒத்துக்காம
சண்டியன்
கோனாரு
இழுக்கடிச்சி
இவனும்
விட்டேனா
பாருன்னு
கேசு
நடத்தி
ஜயிச்சான்.
உனக்குத்
தெரியும்...”
“ம்,
சொல்லுங்க?”
“அவன்
சொல்லிட்டிருந்தான்.
என்னங்க
போராட்டம்
போராடுகிறது?
இன்னும்
எங்க
சேரில
கோடை
வந்தா
குடி
தண்ணி
இல்ல.
மனிதன்
செத்தா
புதைக்கச்
சுடுகாடு
இல்ல.
ஒட்டுமொத்தமா
மதம்
மாறுறோம்னு
அறிக்கை
வுடலாம்னு
பார்க்கிறேன்னு...!”
சொல்லிவிட்டு
ஆஹாஹா
என்று
சிரிக்கிறார்.
சம்முகத்துக்குச்
சுருக்கென்று
ஊசி
குத்துகிறது.
படலையைத்
தூக்கி
எறிஞ்சிட்டுத்
தோப்பு
வழி
பொணத்தைக்
கொண்டு
போங்கடா
என்றாரே,
என்ன
செய்தார்களோ?
இந்த
நெருக்கடிகளில்
கூட
விட்டுக்
கொடுக்காத
சண்டியர்கள்
இருக்கிறார்கள்.
“நீங்க
சிரிக்கறீங்க.
அன்னிக்குப்
போராடித்
தலைதூக்கியது
உண்மைதான்.
ஆனா,
இன்னும்
போராடுற
நிலையிலேயே
இருக்கிறோம்ங்கிறத
நினைச்சா
எதுவும்
தோணல.
முன்ன
வெளியாளுக்கு
இருந்த
அநுதாபம்
ஆதரவுகூட
இன்னிக்கி
இல்ல.
உண்மை
இதுன்னா
நம்பக்கூட
மாட்டாங்க.”
உள்ளிருந்து
அம்மாள்
தலை
நீட்டுகிறாள்.
“எல
போட்டிருக்கு.
வரச்சொல்லுங்க!”
“எல
இருக்கா?
நா
ஆளனுப்பிச்சேனே!”
“வாப்பா,
சம்முகம்,
கால்
கை
கழுவிவிட்டு
வா!
போம்மா
உள்ள!”
கொல்லைக்
கிணற்றடியில்
சென்று
கை
கால்
கழுவிக்கொண்டு
வருகையில்
கூடத்தில்
இரண்டு
தையல்
இலைகளைப்
போட்டு
சோறும்
குழம்பும்
பரிமாறி
இருக்கிறாள்
அம்மாள்.
காந்திக்குப்
பசிதானென்றாலும்
இப்படிச்
சாப்பிட
உட்காரப்
பிடிக்கவில்லை.
“வெறும்
சோறும்
குழம்பும்தானோ?
ஏண்டி?
ஒரு
அப்பளம்
பொரிக்கக்கூடாது?”
“எண்ணெயில்ல!”
என்று
மறுமொழி
வருகிறது.
“என்னடி
எதைக்
கேட்டாலும்
இல்ல
இல்லன்னிண்டு!
சம்முகம்
எனக்கு
எத்தனை
நாளைச்
சாப்பாட்டைக்
கையில்
தொடாமல்
கயிற்றைக்
கட்டி
எடுத்துண்டு
ஓடி
வந்திருக்கிறான்?
என்
உசிரைக்
காப்பாத்தியிருக்காண்டி!
துப்பாக்கியால
போகாத
உசிர்,
பசில
போயிடாதபடி
காப்பாத்தினவண்டி!”
“இப்ப
நா
என்ன
வச்சிண்டா
மாட்டெங்கறேன்,
அஞ்சும்
பத்தும்
பாத்து
சாமான்
வாங்கிப்
போடறது
தட்டுகெட்டுப்
போறது.”
சம்முகத்துக்கு
உண்மையிலேயே
வந்து
அகப்பட்டுக்
கொண்டோமே
என்று
இருக்கிறது.
சாப்பிட்டு
முடித்து
இலையைச்
சுருட்டிக்கொண்டு
எழுந்திருக்கிறார்.
அவருக்கு
முன்பே
காந்தி
முடித்துவிட்டாள்.
“ஏண்டா,
மோர்
ஊத்திக்காம
அதக்குள்ள?”
“வாணாங்க,
இதுவே
வயிறு
நிரம்பிடுச்சி...”
அவருக்குக்
குரல்
கம்மிப்
போகிறது.
“சம்முகம்,
புருசன்
சம்பாதிக்கல,
அவனால
ஒரு
ஆதாயமுமில்லன்னா,
கட்டின
பெண்சாதி
கூட
மதிக்கிறதில்ல...”
அந்த
வீடு
பெண்கள்
குடும்பம்
குடித்தனம்
என்றில்லாமல்
வருபவர்களும்
போகிறவர்களும்
தங்குபவர்களுமாக
இருந்திருக்
கிறது.
பல
முறை
போலீசார்
சோதனை
போட்டதுண்டு.
இவரைக்
குடும்பத்திலிருந்து
விலக்கியே
வைத்திருந்தார்கள்.
வக்கீலைப்
பார்க்க
வந்தாலும்,
ஓடி
ஒளிய
வந்தாலும்
இந்த
இடம்
சொந்தம்.
டிபன்
காரியரில்
விறைத்துக்
கிடக்கும்
மிச்சச்
சோற்றை
உண்டு,
அக்கிணற்றில்
நீரிறைத்துத்
தேய்த்து
வைத்துவிட்டு
நடையாகவே
கிராமத்துக்கு
ஓடிய
நாட்கள்
எத்தனை!
இப்போது
கிணற்றைத்
தொடலாமோ
என்ற
கூச்சம்
ஏன்
வருகிறது?
தாம்
இங்கே
வந்திருக்க
வேண்டாம்.
அநாவசியமான
உளைச்சல்கள்.
மீண்டும்
வாயிலுக்கு
வருகையில்
வாசலில்
ஒரு
சிவப்பு,
கறுப்பு
வண்ணம்
இசைந்த
கார்
நிற்கிறது.
வெளியே
வரவே
பிடிக்காமல்
அட்டையாக
மனம்
சுருங்கிக்
கொள்கிறது.
காந்தி
பெஞ்சியோரம்
நிற்கிறாள்.
தொப்பி
போட்டாற்
போன்று
தலைமுடியும்
பெரிய
நிழற்
கண்ணாடியுமாகச்
சவடாலாக
நிற்பவன்
ஆறுமுகத்தின்
மகன்
என்று
உடனே
புரிந்து
கொள்கிறார்.
“என்ன
மாமா?
ரமேஷ்கிட்டேந்து
லெட்டர்
வருதா?
நம்ம
ப்ரஃண்ட்
ஒருத்தரு
சில
விவரம்
கேட்டிருந்தாரு
போயி
எழுதறேன்னு
சொன்னான்.
நிதம்
இந்தப்
பக்கம்
வரதுதான்
விசாரிக்க
மறந்திடுவேன்...”
“ஒண்ணும்
வரலியே?
உனக்கே
போடுவான்.
ஏம்பா
நா
உங்கப்பாவப்
பாக்கணுமின்னேன்.
ஆளைக்
காணவேயில்லை.
பெரிய
மனுசங்களாயிட்டீங்க...!”
“ஓ,
அதெல்லாம்
இல்ல
மாமா.
அப்பா
சிங்கப்பூர்
மலேயால்லாம்
போயிட்டு
போன
வாரந்தா
வந்தாரு.
அதோட,
ரைஸ்மில்ல
மார்டனைஸ்
பண்ணுறது
சம்பந்தமா
அலஞ்சிட்டி
ருக்காரு.
ஒருதரம்
முன்ன
அட்டாக்
வந்ததிலேருந்து
எச்சரிக்கையா
வேற
இருக்கணும்னு
டாக்டர்
சொல்லியிருக்காரு...”
“சொல்ற
மாமா,
நா
வரட்டுமா?
விசாரிச்சிட்டுப்
போலான்னு
வந்தேன்.”
திரும்பும்
போது
காந்தியின்
பக்கம்
அவன்
பார்வை
நிலைக்கிறது.
“பை
த
பை...
நீங்க,
கோபாலு
ஸிஸ்டர்ல்ல?”
அவள்
கண்கள்
அகலுகின்றன.
“ஆமாம்,
அண்ணனத்
தெரியுமா?”
“தெரியாம?
காலேஜில
ஒண்ணாப்
படிச்சமில்ல?”
கறுப்புக்
கண்ணாடியைக்
கழற்றிக்
கைகளில்
தட்டிக்
கொண்டே
அவளைப்
பார்த்து
முறுவலித்து “வரேன்”
என்று
விடை
பெறுகிறான்.
அடுத்த
நிமிடம்
கார்
கிளம்பிச்
செல்கிறது.
“சம்முகம்!
ஏன்
அங்கியே
நின்னிட்ட?”
“நிக்காம
என்ன
செய்யிறது.”
“பயலத்
தெரியிதல்ல?
ப...லே...
எமகாதகன்.
அப்பனின்
சாமர்த்தியத்தில்
மூணு
பங்குகூட
இருக்கும்.
இவம்
பேரு
தெரியுமா?
நினைப்பு
இருக்கா?”
“ஏன்
இல்ல,
இவந்தா
புல்கானின்...”
“அடுத்த
பையன்
ஜவஹர்,
பிறகு
காமராஜு,
கடசிப்
பையனுக்கு
என்ன
பேரு
தெரியுமா
சம்முகம்?”
அவர்
சிரிக்கிறார்.
இவருக்கு
சிரிப்பு
வரவில்லை.
“வுடுங்கையா
அந்தப்
பேச்சை.
நன்றி
கொன்ற
ஆளுங்களப்
பத்தி
என்ன
பேச்சு?
நாயவுடக்
கேவலம்.
இது
மாதிரி
ஆளுங்களாலதா
இந்த
நாடே
கெட்டுப்
போச்சு.
தலைன்னு
ஒண்னு
ஒழுங்கால்லாம...”
“தலை
நிறைய
ஆயிட்டது.
அதான்
ஆபத்து.
இந்த
பிரும்மா,
நாலு
முகத்தை
திக்குக்கொண்ணா
வச்சிட்டு
படச்சிப்
போடுறாரு
அதான்
ஒருத்தன்
போற
வழி
ஒருத்தன்
போறதில்ல...”
“உங்களப்
பாக்கணும்னு
நினைச்சேன்.
பார்த்தாச்சி,
நா
வரேன்
ஐயா...”
“இரு,
போகலாம்,
நா
ஒண்ணு
சொல்ற,
உனக்கு
இரண்டாயிரம்
இந்தப்
பயகிட்ட
ஒரு
வார்த்த
வுட்டாப்
போதும்.
பேசாம
வாங்கி,
பெண்ணைச்
சேரு.
இப்ப
இவனுகளுக்கு
ஒரு
பொருட்டில்ல
அது.”
சம்முகத்துக்குக்
கோபம்
கொள்ளவில்லை.
“என்னையா!
நீங்க
ஒண்ணு,
வெளயாடுறீங்க...
காந்தி
வாம்மா,
போவலாம்!”
“என்னடா,
கோபிச்சிட்டுப்
போற?
இப்படி
எல்லாம்
பாத்திட்டு
உக்காந்திருக்கிறேன்.
பிடுங்கல்
மென்மையான
உணர்ச்சிகள்,
தன்மானம்,
இல்லே
நேராகப்
பார்க்கும்
வீரம்
எதுவுமே
இப்ப
செல்லுபடியாகப்
போறதில்ல...
அதென்ன,
கால்ல,
நானும்
அப்பவே
புடிச்சிப்
பார்க்கிறேன்.
வீங்கிருக்கிதா
என்ன?”
“தெரியலய்யா,
ஒரே
வலி,
வரணுமேங்ற
ஒரு
நிர்ப்பந்தம்,
வந்தேன்...”
அருகில்
அழைத்துக்
குதிகாலைத்
தொட்டுப்
பார்க்கிறார்.
“...கீதா
ஆறு
மணிக்கு
மேலதா
வருவா.
இரேன்
போகலாம்?”
“டாக்டர்
இங்க
இல்லையாய்யா?
என்னால
இருக்கிறதுக்கில்ல.
நடவு
வேற.”
“அவுங்க
தஞ்சாவூர்லல்ல
இருக்காங்க.
இங்க
வந்து
போவாங்க.
இங்கேயே
சிங்காரம்தான்
குட்டி
டாக்டர்.
பிரசவ
கேசெல்லாம்
துரையம்மா
பாத்திடுவா.
சிங்காரத்துக்கிட்ட
போயிக்காட்டி
மருந்து
வாங்கிட்டுப்போ.
சிறங்கா
வருமோ
என்னமோ?
எனக்குன்னா,
சித்தப்பா,
நீங்க
அது
சாப்பிடக்
கூடாது.
இது
சாப்பிடக்கூடாது,
ஸ்மோக்
கூடாதுன்னு
ஒரே
தடையுத்தரவு.
சக்கரை
உனக்கொண்ணும்
இருக்காது.
உப்பெண்ணெய்
காச்சி
ஒத்தடம்
கொடு.”
சம்முகம்
கடைசியில்
சிங்காரத்தையும்
பார்க்கவில்லை.
-----------
4
அன்றைய
பொழுதின்
ஆறுதலாக,
மாலை
நேர
பஸ்
கிடைக்கிறது.
வழி
நெடுகிலும்
மண்
அன்னை
நீர்
முழுகக்
குளிர்ந்து
நிற்கும்
காட்சிகள்.
வரிவரியாக
வண்ணப்
புள்ளிகளாகப்
பெண்கள்
குனிந்து
நாற்றுநடும்
கோலங்கள்,
சமுத்திர
ராசனிடம்
புகுமுன்
அன்னையிடம்
பிரியா
விடை
கொள்ளும்
காவிரித்தாய்
இரண்டு
கை
விரல்களையும்
அகலவிரித்து
மண்
அன்னையைத்
தழுவிக்கொண்டிருக்கும்
வளமை.
இந்தப்
பூமியில்
மனிதர்
பசி
தீர்க்கும்
அமுத
சுரபிகளாய்
ஆறு
குளங்கள்
நிரம்பித்
துளும்பு
கின்றன.
அந்நாளில்
வங்கத்துக்காரரான
ஒரு
தலைவர்
ஒருமுறை
கிராமக்
கூட்டத்திற்கு
வந்தார்.
பாரதம்
முழுவதும்
சுற்றியவர்.
இந்த
அழகைக்
கண்டு
பரவசப்பட்டுப்
போனார்.
எல்லாம்
நீர்,
எல்லாம்
மண்
என்றாலும்,
ஒவ்வொரு
நதியின்
வன்மையிலும்,
தனித்தன்மை
துலங்குகிறது.
இந்த
பூமியின்
மண்
தறிகளில்
எத்தனை
வகை
மக்கள்.
இந்த
மக்கள்
யாரும்
எதுவும்
கொண்டு
வருவதில்லை,
இறக்கும்போது
கொண்டு
செல்லுவதுமில்லை.
ஆனால்
இந்த
அழகுகளைச்
சுதந்தரமாக
அதுபவிக்க
முடியாமல்,
மனிதனுக்கு
மனிதன்
ஆக்கிரமித்து
அடித்துக்
கொள்ள,
இவற்றையே
சாதனங்களாக்கிக்
கொள்கிறானே
என்றார்.
இந்தப்
பேச்சை
விசுவநாதன்
தான்
மொழி
பெயர்த்தார்.
சாமி
இல்லை
என்று
சொல்பவனும்
இங்கே
இயற்கையின்
சூழலில்
நெடி
துயர்ந்து
நிற்கும்
கோபுரங்களைக்
கண்டு
மனம்
சிலிர்க்கமுடியும்.
ஆனால்
இந்த
மண்ணிலே
ஊன்றி
இந்த
அழகிலே
வளர்ந்தவன்,
மனிதனுக்கு
மனிதனாக
இல்லை.
வீடு
திரும்புகையில்
கால்
அதிகமாக
வலிக்கிறது.
பொழுது
இறங்கி
விட்டது.
நடவுக்கும்
உழவுக்கும்
சென்றவர்கள்
கரையேறிக்
கொண்டிருக்கிறார்கள்.
கடைத்தெருவில்
வியாபாரமும்
கூச்சலும்
உச்சக்கட்டத்தில்
மோதிக்கொள்ளும்
நேரம்.
கள்ளுக்
கடையில்
கலகலவென்று
ஆட்களின்
குரல்கள்
உயர்ந்து
ஒலிக்கின்றன.
அக்கரையிலிருந்து
மூங்கிற்பாலம்
கடந்து,
மூலை
ரங்கனும்
விருத்தாசலம்
பிள்ளையும்
வருகின்றனர்.
இவர்
பாதையில்
எதிர்ப்படுவதால்,
சற்றே
ஒதுங்கி
வழிவிட
நிற்கிறார்.
“ஏம்ப்பா
சம்முகம்?
நான்
சொல்லி
ஆறு
மாசமாவுது,
காதிலேயே
போட்டுக்காம
இருக்கியே?
டவுனுக்கா
போயிட்டு
வார?
மத்தியானம்
நேத்தும்
வீட்டுப்பக்கம்
ஆளனுப்பிச்சேன்,
இன்னிக்கும்
விசாரிச்சேன்.”
கிளியந்துறைப்
பிரமுகர்களில்
ஒருவராகச்
செல்வாக்குப்
பெற்றிருக்கும்
குரல்
அதட்டுவதுபோல்
ஒலிக்கிறது.
“என்னாங்க
விசயம்?...”
“பாத்தியா?
மறந்தே
போன?
கோயில்
பக்கம்
குடிசயப்
போட்டுட்டு
எல்லாம்
அசிங்கம்
பண்ணிட்டிருக்கானுவ!
பத்து
வருசத்துக்கு
முன்ன,
அப்ப
பள்ளிக்கூடத்துக்கு
இடம்
வோனுன்னு
இவனுவள
குடிசயத்
தள்ளிக்கொண்டு
போடனும்னு
சொன்னாங்கதா,
அப்பதா
எல்லாம்
போதாத
காலம்,
கோயிலுக்கு
பூசை,
விழா
ஒண்ணும்
இல்லன்னு
இருந்திச்சி!
பத்து
வருசமா
ஏதேதோ
ஊரிலும்
கஷ்டம்.
இப்ப
இந்த
வருசம்
கோயிலைச்
செப்பம்
பண்ணி
விழா
நடத்துறதுன்னு
தீர்மானம்
பண்ணிருக்கு.
வீராசாமிப்
பிள்ளை,
வரதராஜன்
எல்லோரும்தான்
முடிவு
செஞ்சி
அப்பவே
சொன்னேன்,
உனக்கு
விசயமே
மறந்துபோச்சி.”
“...இல்லிங்க.
நீங்க
ஆறு
மாசத்துக்கு
முன்ன
சொன்னதா
நினைப்பில்ல.
வேற
எடம்
தோதாக்கிட்டில்ல
கிளப்பச்
சொல்லணும்?
இப்ப
நடவு,
உழவுன்னு
நெருக்கடியாயிருப்பாங்க...”
“அது
வருசம்
பூராத்தா
இருக்கு.
இப்ப
ஆத்துக்கு
அப்பால
அரிசனங்களுக்குக்
குடிசை
போட்டுக்கலான்னு
சொல்லி
மாரிமுத்து,
வீரபுத்திரன்லாம்
போட்டுக்கலியா?
அந்தப்பக்கம்
போட்டுக்கட்டுமே?”
“சொல்றேங்க,
ஒரு
ரெண்டு
மூணு
மாசம்
பொறுத்துக்குங்க...”
“அதான்
முன்னமே
சொன்னது,
நீங்க
இப்படித்
தவண
கேட்பீங்கன்னு.
உன்
பண்ணக்காரன்
குப்பன்தான்
அடாவடிக்காரன்.
அதும்,
அவன்
பய
வடிவு
இருக்கிறானே,
என்ன
எகிறு
எகிறறாங்கற?
அம்மன்
கோயில்
பக்கம்
பரம்பரையா
புத்து
இருக்கும்.
அதுபாட்டில
நல்லதுங்க
குடியிருக்கும்.
எப்பவானும்
கண்ணுல
படும்.
எங்க
வீட்ல
கூட
பொண்டுவ
பால்
வய்க்கிறது
வழக்கம்.
இப்ப
ஒண்ணு
இல்ல.
இந்தப்பய
அல்லாத்தையும்
கொன்னு
தோலக்
கொண்டு
வித்துப்போட்டான்.”
“அப்படிங்களா?”
“ஆமாம்.
இப்ப
ஆள
வரச்சொல்லி
சுத்து
வட்டம்
சுத்தம்
பண்ணி
முன்னால
மண்டபம்
எடுத்து,
புனருத்தாரனம்
பண்ணப்போறம்.
குடிசைகளை
அப்புறப்படுத்தச்சொல்லு
நல்லபடியாவே,
என்ன
குடிசை?
ஓலைக்குடிசைங்க?
ஆளுக்கு
அம்பது
ருவா
வேணாலும்
தந்திடறம்,
வீணா
ரசாபாசம்
வச்சுக்காதிங்க?”
விருத்தாசலம்
பிள்ளை
மேல்
வேட்டியை
வேகமாகச்
சரியாக்கிக்கொண்டு
போகிறார்.
மண்டையில்
அடித்த
மாதிரி
இருக்கிறது.
வாசலில்
அப்பாவைக்
காணவில்லை.
ஏதேனும்
பொட்டு
பொடிசு
கையைப்
பிடித்துக்
கொண்டு
கள்ளுக்கடைக்குப்
போயிருப்பார்.
திண்ணையில்
நாகு
உட்கார்ந்து
ஏதோ
புத்தகத்தைக்
கிழித்துக்
கொண்டிருக்கிறான்.
ஆத்திரம்
பற்றிக்கொண்டு
வருகிறது.
பளாரென்று
முதுகில்
அறைந்துவிட்டு
அதைப்
பிடுங்கிப்
பார்க்கிறார்.
விவசாயத்
தொழிலாளர்
சங்கச்
செயலாளருக்கு
சென்னையிலிருந்து
அனுப்பப்
பெற்றிருக்கும்
துண்டுப்பிரசுரம்.
“இந்தப்
பய
கையில்
எட்டும்படி
ஒரெளவையும்
வைக்காதீங்கன்னு
சொன்னா
கேட்டாத்தான?
பன்னிப்பயல்!
நாய்ப்பயல்!
போடா!
இவன
ரூம்பில
போட்டுப்
பூட்டாம
ஏ
வுட்டு
வக்கிறிய?”
எல்லா
ஆத்திரமும்
அவன்
மீது
வடிகிறது.
அவனைக்
காந்தி
கத்தக்கத்த
இழுத்துச்
செல்கிறாள்.
காந்தியிடம்
மீறமாட்டான்.
அம்சுவானால்
திமிறுவான்.
அவளுக்கும்
ஆத்திரம்.
பின்புறத்து
அறையில்
தள்ளிக்
கதவைச்
சாத்துகிறாள்.
பாட்டி,
கோழிக்குஞ்சு
ஒன்றைக்
காணாமல்
தேடிவிட்டு
வருகிறாள்.
“அல்லாம்
வூட்டத்
தொறந்து
போட்டு,
இவனையும்
உக்கார
வச்சிட்டு
எங்க
போயிட்டீங்க?”
“ஏங்கண்ணு?
இன்ஜினிருக்குச்
சேந்தாச்சா...”
பாட்டி
அருமையாக
அவள்
கூந்தலைத்
தடவிக்
கொண்டு
விசாரிக்கிறாள்.
“ஆமா
இந்தத்
தரித்திரம்
புடிச்ச
குடில
பெறந்திட்டு
கனாக்
கண்டா
மட்டும்
பத்துமா?”
என்று
சீறி
விழுகிறாள்.
“கோவப்படுற...
நீ
நல்லா
இருக்கணும்.
பொறந்த
குடில
உசத்தனும்னுதான்
ஆச...”
“ஆசப்படுங்க,
அங்க
சீட்டுமில்ல
ஒண்ணுமில்ல.
ரெண்டாயிர
ரூபா
கட்டணுமாம்.”
மூலையில்
சோர்ந்துபோய்
உட்காருகிறாள்
காந்தி.
பாட்டியும்
திகைத்துப்
போய்த்தான்
நிற்கிறாள்.
“ஏ,
காந்தி
இந்தா,
பணத்தைப்
பத்திரமாக்
கொண்டு
வையி...”
சட்டையைக்
கழற்றி
அவளிடம்
கொடுக்கிறார்.
“எங்க
லட்சுமி,
அம்சு
எல்லாம்?
நடவுக்குப்
போயிருக்காளுவளா?”
“ஆமா,
குப்பம்
பயலும்
இல்ல,
வடிவு
வந்தா,
நேத்துப்
புடுங்கின
நாத்த
மட்டும்
நட்டுடலான்னு
உம்
புள்ள
போயி
தவராறு
பண்ணிருக்கா...”
“கோபுவா?”
“ஆமா,
என்னாத்துக்கு
ஏழு-ஒம்பது
குடுக்கிறது?
அஞ்சு
ரூபா
ஆணுக்கு,
பொம்பிளக்கி
மூணுன்னா,
அப்பாரு
வெதக்
கோட்டயில
எலி
மாருதி
இன்னா
தம்பி,
நீயே
பேசுறன்னா,
இவ
அடிக்கப்
போயிட்டா.
நேத்து
நீங்கல்லாம்
பண்ண
மிராசுன்னு
அவனவங்கால
நக்கிட்டுக்
கிடந்தப்ப,
ஆருரா
குண்டடிப்பட்டு
இந்த
நெலமக்கிக்
கொண்டு
வந்தது?
ஏழு-ஒன்பது
வெளில
பேசு,
இங்க
அந்த
ரூல்
செல்லுபடியாவாது?
என்றான்
போல.”
“அப்படியப்படியே
கரையேறிட்டாங்க
போல.
இவ
ஒரு
மூணு
மணியிருக்கும்,
கிளம்பிப்போனா...”
“இவன்
யாரு
இங்க
நாட்டாமை
பண்ண
வந்தது?
எல்லா
இவளாலதா,
பயல
அன்னைக்கே,
அடிச்சி
வெரட்டுன்னேன்!
துரை,
இங்க
வந்து
அதிகாரம்
பண்றானா?
செருப்பாலடிக்க.”
“காந்தி,
கொஞ்சம்
சுடுதண்ணி
வச்சிக்
கொண்டா!
காலுல
ஊத்திட்டுச்
செத்தப்
படுக்கிறேன்.”
காந்திக்கு
முசுமுசென்று
கோபம்
வருகிறது.
உள்ளே
சன்னக்குரலில்
நாகு
ஊளையிடுகிறான்.
பானையில்
தண்ணிர்
இல்லை.
குடியிருப்புக்கு
ஓர்
அடி
பம்பு
உண்டு.
அதை
இந்தக்
குட்டிப்படைகள்
அடித்து
அடித்து
ஒடித்துவிட்டன.
அதற்கு
விமோசனம்
இப்போது
வராது.
ஆறு
குளங்களில்
தண்ணிர்
வற்றியபிறகு
அவள்
தந்தைதான்
செப்பனிட
ஆள்
கூட்டி
வருவார்.
எரிச்சலாக
வருகிறது.
ஆற்றிலிருந்து
தண்ணிர்
முகர்ந்துவந்து
முட்சுள்ளியை
ஒடித்து
எறியவிட்டு
வெந்நீர்
காய்ச்சி
வருகிறாள்.
லட்சுமி
ஆற்றில்
குளித்து
ஈரச்
சேலையுடன்
வீட்டுக்கு
வருகையில்
இருள்
நன்றாகப்
பரவியிருக்கிறது.
“வந்தாச்சா?
ஏண்டி?
விளக்கேத்தி
வைக்கிறதில்ல?
ஐயா
ஏன்
படுத்திருக்காரு?...”
காந்தி
இருளோடு
இருளாக
அசையாமலிருக்கிறாள்.
“என்னாங்க...?
போன
காரியம்
நல்லபடியாச்சா?”
“ஒண்ணும்
ஆவல.
அந்தத்
தொர
எங்க?”
“அவன்
எங்க
போனான்னு
எனக்கென்ன
தெரியும்?
இந்த
வடிவுப்பய
அவன
இன்னிக்கு
அடிக்கப்
போயிட்டான்.”
“வடிவு
சும்மா
அடிக்கப்போனானா?”
“ஆமா,
இவன்
வாய்
குடுத்தா
அவனும்
வாயாடுறா,
கூலி
குடுக்கப்
போறவ
நா.
நடவப்
பாத்துக்கன்னு
சொல்லிட்டு
நா
இங்கல்லா
ஒட்டடி
பண்ணிட்டுப்
போறதுக்கு
முன்ன
மசுருபுடி
சண்டை.
இவந்தா
வம்புக்குப்
போகாம
இருக்கக்
கூடாதா?...
அவனும்தா
ரொம்ப
எகிறறா.
மரியாதியில்லாம
போயிட்டுது.
என்னியே
நீங்க
சும்மாருங்கன்னு
அடக்கிட்டான்.
நேத்துப்
பறிச்ச
நாத்த
மட்டும்
அந்தத்
தெக்கோரப்
பங்குல
நட்டுட்டுக்
கரையேறிட்டாளுவ...”
“கூலி
என்ன
குடுத்த?”
“ஏழு
விகிதந்தா.
அஞ்சாளுக்கு
பத்துப்
பேரு
வந்தாளுவ...”
“ஆமா
பொணம்
கொண்டிட்டுப்
போகலன்னு
வந்தாங்களே?
அது
யாராச்சும்
வந்தாவளா?”
“நீங்க
என்ன
ஊரக்கப்போர
எல்லாம்
சாரிச்சிட்டு!
இவனுவளும்
கேக்கிறபடி
கேட்டிருக்கமாட்டானுவ
பொட்ட
யதிகாரம்
பண்ணிருப்பா.
தோப்புல
தேங்காயெல்லாம்
பூடுதுன்னு
படலயப்
போட்டு
மூடி
வச்சிட்டானுவளாம்.
ரோடு
சுத்திப்
போய்க்கிங்கன்னானுவளாம்.
எங்கேந்து
ரோடு
சுத்த?
அங்கியே
குழிச்சி
மூடிருப்பா...”
உலர்ந்த
சேலையை
உடுத்துக்
கொண்டு
ஈரத்தைத்
தாழ்வாரச்
சுவரில்
கட்டுகிறாள்.
காந்தி
இன்னும்
எழுந்திருக்கவில்லை.
“ஏண்டி
மோட்டுவளயப்
பாத்திட்டு
உட்கார்ந்திருக்கிற?
எந்திரிச்சி
விளக்கப்
பொருத்தி
ஒலயப்போடு.
நாங்கடக்கிப்
போயிட்டு
விருவிருன்னு
செலவு
சாமானம்
வாங்கியாரேன்.
புளி
தீந்துபோச்சி.”
“போம்மா,
முள்ளு
கையக்
குத்துது...”
லட்சுமி
அவள்
கன்னத்தில்
இடிக்கிறாள்.
“என்னாடி?
எப்பிடியிருக்கு?
பெரி
மவரானின்னு
நினப்பா?
சீ,
கழுத,
குந்தவச்சி
சோறுபோட
இது
பெரும்
பண்ண
சமீனில்ல?
அந்தப்
பொண்ணு,
இங்க
கரையேறி
முடிஞ்சி,
வேற
பக்கம்
நடவுக்குப்
போட
நாலு
ரூபா
சம்பாரிச்சிக்
குடுத்திட்டு
நாயக்கர்
வீட்டுக்கு
ஓடிருக்கு.
அம்புட்டுத்
தண்ணியும்
தூக்கி,
பெருக்கி
மொழுவி,
கழுவி,
எத்தினி
வேல
செய்யறா?
காலம
எந்திரிச்சி
சீவி
சிங்காரிச்சிட்டு
போயிட்டு
ஒடம்பு
நலுங்காம
வந்து
குந்திக்க!”
“ஆமா,
பின்ன
ஏன்
படிக்கப்
போட்டிய?
படிக்க
வச்சா
ஒழுங்கா
வக்கணும்.
பாதி
ஆத்துல
இறக்கி
வச்சிட்டு
கைவுட்டுடக்
கூடாது?”
“என்னாது?
பாத்தீங்களா
இவ
பேச்ச?
மூஞ்சி
முகர
பேந்து
போயிடும்.
எந்திரிடி
சொல்ற?...
பொட்டக்
கழுதய
என்னிக்
கின்னாலும்
கட்டிக்
குடுக்கணும்,
நம்ம
விரலுக்கு
மிஞ்சி
எடுப்பு
வானாம்னேன்,
உங்கையா
கேக்கல.”
சுவரொட்டி
சிம்னி
விளக்கை
ஏற்றிச்
சமையலறையில்
வைக்கிறாள்.
இந்த
வீடு
கட்டி
ஒன்றரை
வருசமாகப்
போகிறது.
இன்னமும்
விளக்கு
இழுக்க
நேரம்
வரவில்லை.
குறுவை
அறுப்பு
முடிஞ்சி
இந்த
வருசம்
வூட்டுக்குக்
கரன்ட்
இழுத்திடணும்...
அடுப்பில்
சுள்ளியைப்
பார்த்து
எரியவிட்டு
எருமுட்டையை
வைத்துவிட்டு
உலையை
ஏற்றி
வைக்கிறாள்.
புகை
நடு
வீட்டுக்குள்
பரவுகிறது.
“அரிசியக்
கழுவிப்போடு,
நா
வாரேன்.”
வெளியே
ருக்குமணியும்
பாக்கியமும்
வீச்சு
வீச்சென்று
விறகுச்
சண்டை
போடுகிறார்கள்.
ஒருவர்
சொத்தை
மற்றவர்
அபகரித்ததாக
வாயால்
அடித்துக்
கொள்வது
வழக்கமான
சமாசாரம்.
கோதண்டமும்
அம்மாசியும்
பொழுதுடன்
குடித்துவிட்டுத்
திரும்புகிறார்கள்.
கள்வாடை
கப்பென்று
மூக்கைப்
பிடிக்கிறது.
ஆற்றங்கரை
மேட்டோடு
கூடடையும்
பறவையினங்கள்
போல்
சேரி
மக்கள்
விரைந்து
திரும்பிக்
கொண்டிருக்கிறார்கள்.
புளியமரமும்,
உடைமரமும்,
இருளோடு
இருளாக
மைக்கொத்தாக
அப்பியிருக்கின்றன.
மதகடி
வரும்வரையிலும்
வெளிச்சம்
கிடையாது.
சைக்கிள்
கடையில்
இளவட்டங்களின்
கும்மாளம்.
காலரைத்
துரக்கிவிட்டுக்
கொண்டும்,
முடியை
ஸ்டைலாக
வைத்துக்கொண்டும்
கவலையற்ற
கேலியிலும்
கிண்டலிலும்
சிரிப்பிலும்
காலம்கழிக்கும்
இளசுகள்.
விருத்தாசலம்
பிள்ளையின்
மகன்
துரை,
தையல்
கடை
பக்கிரியின்
தம்பி,
வஸ்தாது,
மூலை
ரங்கனின்
இரண்டு
வாரிசுகள்
ஆகிய
முக்கியமான
இளவட்டங்கள்
கண்களில்
படுகின்றனர்.
இங்கே
கோபு
இல்லை.
வீரமங்கலம்
சினிமாக்
கொட்டகையில்
புதிதாக
வந்திருக்கும்
சினிமா
விளம்பரத்
தட்டி
பெரிதாகக்
கடையின்
இருபுறங்களிலும்
அணிசெய்கின்றன.
அதில்
பிறந்த
குழந்தைக்குப்
போடக்கூடிய
அரைக்கச்சுடன்
ஒரு
பெண்
காலைத்
துக்கிக்
கொண்டிருப்பதும்,
இந்தப்
பிள்ளைகளைப்
போல
ஒரு
இளசு
குனிந்து
அவளைப்
பார்ப்பதுமாக
இருக்கின்றனர். ‘துரத்தேறி’
என்று
துப்பத்
தோன்றுகிறது.
மறுநாளைய
நடவு,
உழவு
பற்றிய
விவரங்களுடன்
நாட்டாமைகள்
சூழ்ந்த
விவசாயத்
தொழிலாளர்கள்
அவர்களுடைய
சங்கக்
கொடியுடன்
இருக்கும்
கீற்றுக்
கொட்டகையில்
மொய்த்திருக்கிறார்கள்.
குப்பன்,
ஐயனார்
குளத்துச்
சங்கதிகளைப்
பேசிக்கொண்டு
இருக்கிறான்
என்று
தோன்றுகிறது.
கிட்டம்மாளும்
அங்கே
நிற்கிறாள்.
கிட்டம்மாள்
கிளியந்துறைக்
கடை
வீதிக்கு
அருகிலேயே
ஆற்றுக்கப்பாலுள்ள
விவசாயத்
தொழிலாளர்
குடியிருப்பில்
இருப்பவள்.
இந்த
வட்டகை
மாதர்
அணியின்
தலைவி.
எட்டாவது
படித்திருக்
கிறாள்.
துணிச்சலாகப்
பேசி
நடப்பவள்.
“லட்சுமியக்கா!
வாங்க,
தலைவருக்கு
உடம்புக்கென்ன?
டவுனுக்குப்
போனாங்களாம்?”
“ஒடம்புக்கொண்ணில்ல,
காலுல
எதோ
முள்ளு
குத்தியோ
கல்லு
குத்தியோ
வீங்கிருக்கு.
நடக்கக்
கஷ்டப்படுறாரு...”
“செத்த
மின்னதா
பஞ்சாமி
சொல்லிச்சி,
ஐயனார்
கொளத்துல
பொனங்கொண்டு
போவ
எடங்குடுக்க
மாட்டேன்னிட்டாராமே
பிச்சமுத்து
மணியாரர்?
நேத்தென்னமோ
தலைவர்
வந்ததும்
போராட்டம்ன்னாவ,
அப்புறம்
அங்கியே
குழிச்சி
மூடிட்டாவளாம்...”
“பத்துப்
பேரா
படலயப்
பிச்செறிஞ்சிட்டுப்
போங்கடான்னாரே?”
“அதெப்படி?
அவனுவ
ஆளுவ
சும்மா
விட்டுடுவாங்களா?
வெட்டுகுத்தல்ல
வரும்!...”
“மின்ன
அந்த
வழியா
நடந்திட்டுத்தா
இருந்தாங்க.
இப்ப
அந்தச்
செட்டியாரு
வித்திட்டுப்போக,
இவங்க
வாங்கின
பெறகுதா
படலயப்
போட்டு
மறச்சிட்டா.”
“இல்லக்கா,
அப்ப
தரிசா
இருந்திச்சாமே?
இப்பதானே
அல்லாம்
உழுது
நாத்து
நட்டுவச்சிருக்கா?
மின்னியே
சங்கத்தில
சொல்லி
பிடிசன்
குடுத்ததுதா?
இப்ப
போராடணும்னு
சாம்பாரு
முனப்பா
பேசிட்டிருக்காரு.”
“போராட்டம்தா.
பொழுதுக்கும்
எந்திரிச்சிப்
படுக்கற
வரய்க்கும்
பொழப்பு
மிச்சூடும்...”
“பின்ன
என்ன
செய்யிறது?
அங்காடில
குடும்பக்கார்டுக்கு
ஒண்ணுவிட்டொரு
நாளு
ஒண்றக்கிலோ
ரேஷன்
அரிசி
போடுறான்.
எட்டு
வவுறு
சாப்பிடப்
பத்துமா?
தாசில்தாராபிசுக்கு
முன்ன
ஆர்ப்பாட்டம்
பண்ணுங்கங்கறாங்க.
அல்லா
ஆம்பிளையும்
இத
குடிச்சிட்டு
வந்து
சோத்துக்குக்
குந்திக்குவான்.
கொஞ்சுண்டு
வச்சாப்
பத்துமா?...”
லட்சுமிக்கு
நிற்க
நேரமில்லை.
கந்தசாமியின்
கடையில்
கூட்டத்தில்
நின்று
சோம்பு,
பூண்டு,
புளி,
குப்பியில்
எண்ணெய்
என்று
வாங்கிக்கொண்டு
திரும்புகையில்
ஒரு
போர்
அங்கே
நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.
காடா
விளக்கடியில்
திருக்கை
மீன்
கண்டமிட்டுக்
கொண்டு
உட்கார்ந்திருந்த
புண்யகோடிக்
கிழவன்
மண்ணில்
விழுந்துவிட்ட
கண்டங்களைப்
பொறுக்கிக்
கொண்டு
வசை
பொழிகிறான்.
சண்டை
கைகலப்பு
வடிவுக்கும்
அருணாசலத்தின்
தம்பி
முருகையனுக்கும்தான்.
அவன்
அழுக்குத்
தண்ணீரை,
வடிவு
நிற்கையில்
இவன்
மீதே
கொட்டினானாம். ‘எல,
ஏண்டா
கண்ணு
தெரியல’
என்றானாம்
இவன்.
‘கடமுன்னால
நின்னா
அப்படித்தா
வுழுகும்’
என்றானாம்
அவன்.
பேச்சு
தடிக்கையில்
பறப்பயல்
என்று
சாதியைக்
குறிப்பிட்டான்.
அவ்வளவே,
கள்ளுக்கடையிலோ,
கடை
வீதியிலோ
இப்படித்
தகராறு
ஏற்படாத
நாளே
இல்லை
என்ற
மட்டில்
பழகிப்போன
விவகாரங்கள்.
லட்சுமி
விரைவாக
நடக்கிறாள்.
பின்னால்
கள்ளின்
வேகத்தில்,
ஆவேசமாகப்
புரட்சிப்
பிரசங்கம்
செய்து
கொண்டு
மாமனார்
வருகிறார்.
“உழவுத்
தொழில்
ஜீவாதாரமான
தொழில்.
சேத்தில
காலவச்சாத்தா
சோத்தில
கைய
வைக்கலாம்.
சோத்தில
கைய
வைக்காம
மனுசன்
உசிர்
வாழ
முடியுமா?
சொவர
வச்சித்தா
சித்திரம்
அறிவு,
படிப்பு,
பட்டம்,
பதவி,
ராச்சியம்
எல்லாத்துக்கும்
அடிப்படை
இது.
அடிப்படை
தொழில்
இது.
சேத்தில
இருக்குன்னு
குழிதோண்டிப்
புதைக்காம
மேலே
ஏத்தி
வைக்கணும்.
இதுமேல,
மத்ததெல்லாம்
கீள.
இதுதாம்
புரட்சி.
விவசாயம்
முதத்தொழில்
இதச்
செய்யிறவனுக்கு
அந்தசு,
கவுரவம்
வேணும்.
அத்தக்
கொண்டு
வருவது
புரட்சி.
இப்ப
உழைக்காதவன்
மேல;
உழைப்பவன்
கீள.
இது
மாறிய
புரட்சி.”
லட்சுமிக்கு
நடை
விரைவு
கூடப்
பிடிக்கவில்லை.
நெஞ்சம்
கனிந்து
கண்கள்
பசைக்கின்றன.
“கள்ளுக்
குடிச்சா
எவ்வளவு
தெளிவாப்,
பேசுறாரு!...”
“அம்மா!...”
இருட்டில்
எட்டி
ஒடிப்
பின்
தொடருபவள்
அம்சுதான்.
“ஏண்டி
இந்நேரமா
நாயக்கர்வூட்டில
இருந்த?”
“மீனு
வாங்கிக்
கழுவி
மொளவா
அரச்சிக்
குடுத்தேன்.
நாகப்பட்டணத்திலேந்து
சின்னய்யா
வந்திருக்காரு.
கோபு
கூட
இருக்காம்பா!”
“சரி
சரி,
உங்கய்யாகிட்ட
ஒண்ணுஞ்
சொல்லாதே,
ஏற்கெனவே
கோவிச்சிட்டிருக்காரு.”
சோற்றைச்
சரித்து
வைத்து
விட்டுக்
காந்தி
படுத்துக்
கிடக்கிறாள்.
லட்சுமி
மசாலைப்
பொருள்களை
எடுத்து
வைத்துச்
சிம்னி
விளக்குடன்
வெளியே
கிடக்கும்
அம்மியில்
அரைக்க
உட்காருகிறாள்.
அம்சு
குடத்தை
எடுத்துக்கொண்டு
கிளம்புகிறாள்.
“எங்கடி?
தண்ணி
இருக்கே?”
“போம்மா,
மேலெல்லாம்
மண்ணு,
குளிக்கணும்.”
“எந்நேரண்டி
நீ
குளிக்கிறது,
இருட்டில
ஆத்துக்குப்
போயி?”
“கொளத்துல
வெளக்கு
வெளிச்சம்
இருக்கும்மா!”
“குளிக்க
வானாம்,
இப்ப
நீ
உள்ளற
போ!
ஈரமா
இருந்தா
சீலய
அவுத்து
மாத்திக்க
புளியக்
கரைச்சி
வையி.
இப்ப
தாத்தா
சத்தம்
போடும்.”
அம்சு
தனது
விருப்பத்தை
நிலைநாட்டிக்கொள்ள
அடம்
பிடிக்க
மாட்டாள்.
செல்லுபடியாகாது
என்றால்
மறந்து
விடுவாள்.
உடனே
குடத்தை
வைத்துவிட்டுப்
போகிறாள்.
“ஏம்மா,
வெறும்
காரக்
குளம்பா?
மீனு
வாங்கியாரலியா?”
“கைக்காசு
இதுக்கே
சரியாப்
போச்சி.
எட்டணா
புளி
ஒரு
நாத்தா
வருது.”
வாசலில்
யாரோ
திமுதிமுவென்று
வரும்
ஒசைகள்.
“கூப்பிடுடா
உங்க
தலவர!...”
கபீரென்கிறது.
இரட்டைக்
குரல்,
அந்த
மூலை
ரங்கனின்
பயல்
மாதிரி
கேட்கிறது.
கூடவே
சாம்பாரின்
அபய
ஒலி. “வாய்க்காரே!...
வடிவ
டேசனுக்கு
இட்டுப்
போயிட்டானுவ,
வாய்க்காரே..!”
அரைத்த
குழவி
நிற்கிறது.
அம்சு
திகைத்து
விழிக்கிறாள்.
சம்முகம்
எழுந்திருக்க
முடியாமல்
எழுந்திருக்கிறார்.
காந்திக்கு
ஒரே
வெறுப்பாக
இருக்கிறது.
“அந்தப்பய
ரோட்டிலே
நின்னவ
மேல
அழுக்குத்
தண்ணிய
ஊத்திச்
சண்டக்கி
இழுத்தா
வாய்க்காரே...!”
“எல,
பொய்
சொன்னா
பல்லு
பேந்து
போகும்.
கடவாசல்ல
நின்னிட்டு
இந்தக்
கம்னாட்டிப்பய
மவ
திட்டக்
குடியான
ஒத
அடின்னு
பேசுனானா
இல்லியான்னு
கேளு.
கிழட்டுப்
பய...”
சம்முகத்துக்குச்
சுரீலென்று
உறைக்கிறது.
அந்தத்
தோப்புக்காரனும்
அருணாசலமும்
ஒரு
பக்கம்.
உடம்பிலே
ஓரிடத்தில்
கேடு
வந்தால்
எல்லா
இயக்கமும்
கோளாறாவது
போல்
தான்.
புறக்
காவல்
நிலையம்
என்ற
அவுட்
போஸ்ட்
அக்கிரகாரத்துக்
கோடி
வீட்டில்
புதிதாக
ஏற்பட்டிருக்கிறது.
சம்முகம்
சட்டையைப்
போட்டுக்கொண்டு
நடக்கமுடியாமல்
நடந்து
செல்கிறார்.
------------
5
லட்சுமிக்கு
உடல்
களைப்பு
அதிகமானாலும்
உறக்கம்
வருவதில்லை.
இன்று
உழைப்பின்
களைப்போடு
மன
வலியும்
கவலையும்
சுமையாக
அழுத்துகின்றன.
உறக்கம்
கொள்ளவில்லை.
கிழவர்
வாயிலில்
கறட்டுக்
கறட்டென்ற
ஒலி
எழும்ப
மூச்சு
விட்டுக்கொண்டு
திண்ணையில்
தூங்குகிறார்.
மாமியார்க்காரி,
குந்தி
இருந்தபடியே
தூங்குவாள்.
காலை
நீட்டிப்படுப்பதே
அபூர்வம்.
அம்சு...
கபடம்
எதுவும்
பற்றியிராத
உழைப்பாளிப்
பெண்.
பசி
தாங்க
மாட்டாள்.
ஒரு
தட்டுக்கு
இரண்டு
தட்டுச்
சோறு
உள்ளே
செல்லுமுன்
உறக்கம்
வந்துவிடும்...
இந்தக்
காந்திமதி...
பையனைப்
போல்
இவளும்
குடும்பத்தை
விட்டுப்
போய்
விடுவாளோ
என்ற
அச்சம்
மேலிடுகிறது.
இவளை
எப்படியேனும்
இந்தத்
தை
பிறந்ததும்
கட்டிக்
கொடுத்து
விட
வேண்டும்
என்ற
தீவிரத்தில்
தான்
சீட்டு,
நாட்டுப்
போட்டு
ஏழெட்டு
எவர்சில்வர்
உருப்படி
வாங்கி
வைத்திருக்கிறாள்.
நாயக்கர்
வீட்டில்
இருக்கின்றன.
தலைவர்
வீட்டில்
முதல்
கல்யாணம்
என்று
மகனின்
திருமணம்
நடக்கவில்லை.
எத்தனை
திருமணங்களுக்கோ
சென்று
தலைமைப்
பதவியின்
கௌரவம்
பெற்றுக்
கொண்டு
மொய்
எழுதி
விட்டு
வந்திருக்கிறார்கள்.
திருமணம்
என்றால்
ஐந்துக்குக்
குறையாமல்
செலவாகும்.
மேல்
சாதிக்காரரெல்லாம்
வருவார்கள்.
நல்லபடியாக
விருந்து
வைக்கவேண்டும்.
மாப்பிள்ளைக்குக்
கடியாரம்,
மோதிரம்,
சட்டைத்துணி
எடுக்க
வேண்டும்.
குப்பன்
சாம்பார்
மகள்
கல்யாணத்துக்கு
பிரியாணி
விருந்து
வைத்து,
இருபது
ஏனம்
எடுத்துக்
காட்சிவைத்தான்.
அதைவிடக்
குறைவாக
இவர்கள்
செய்யலாமா?
இத்தனை
ஆண்டில்
உழைப்பின்
பயனாக
எதுவும்
சேரவில்லை
என்றும்
சொல்ல
முடியாது.
என்றாலும்,
இன்னமும்
எதிர்பார்ப்பிலும்,
தடங்கல்களிலும்,
அச்சுறுத்தல்களிலும்
தான்
போராடிக்
கொண்டிருக்கிறார்கள்.
தலைவர்
என்ற
கெளரவத்
துண்டைக்
கழற்றாமல்
பண
வசூல்
செய்பவராக
மட்டுமே
எத்தனையோ
பேர்
இருக்கிறார்களாம்.
ஆனால்
இன்னமும்
புருசன்
வயலில்
இறங்குபவன்தான்.
போன
வாரம்
உழவோட்டும்
போதுதான்
காலில்
முள்
குத்தியிருக்கிறது.
அவளும்
சேற்றில்
இறங்குபவள்
தான்.
உச்ச
வரம்புக்கு
மேல்
என்று
ஐயர்
நிலம்
ஐந்து
ஏகரா
சாகுபடிச்
செய்யக்
கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டு
வருசங்களே
ஆகின்றன.
அதுவரையிலும்
வெளியே
நடவு,
களை
பறித்தல்
எல்லாவற்றுக்கும்
அவளும்
மாமியாரும்
போய்க்
கொண்டிருந்திருக்கிறார்கள்.
கிழவரும்
கூட
உழைக்காமல்
சோறு
தின்றவரில்லை.
அண்டைக்
கட்டுவதும்,
வெட்டுவதும்,
சுமப்பதும்
விட்டுச்
சில
நாட்களே
ஆகின்றன.
பையன்
படிக்கிறான்,
பெண்
படிக்கிறாள்
என்று
அந்தக்
குடிக்கே
எவ்வளவு
பெருமையாக
இருந்தது?
காந்தி
எட்டாவது
வரையிலும்
ரங்கநாதபுரம்
பள்ளிக்குச்
சென்று
படித்தாள்.
இப்போது
கிளியந்துறையிலேயே
பள்ளிக்கூடம்
வந்திருக்கிறது,
அப்போது
இல்லை.
பிறகு
மூன்றாண்டுகள்
புதுக்குடி
மிஷன்
பள்ளியில்
விடுதியில்
இருந்து
படித்திருக்கிறாள்.
இங்கிலீசில்
கடிதாசி
வந்தால்
படித்துச்
சொல்லும்
அளவுக்குச்
சூட்டிகையான
பெண்
என்று
மிகப்
பெருமையாகத்தானிருக்கிறது.
ஆனால்
சடங்கு
சுற்றி
எட்டு
வருசமாகிறது.
விடலைப்
பிள்ளைகள்,
கண்ட
கண்ட
பாட்டுக்கள்,
சினிமாக்கள்
இதெல்லாம்
சுற்றிப்
பார்க்கும்
போது,
அச்சம்
நெருப்புப்
பொறியாய்
உறுத்துகிறது.
வாசலில்
நாய்
குரைக்கிறது.
அடிச்
சத்தங்கள்
கேட்கின்றன.
லட்சுமி
விளக்கைப்
பெரிதாக்கிக்
கொண்டு
வாசலுக்கு
வருகிறாள்.
காளி,
சிவத்தையன்,
மாமுண்டி...
“எல்லாம்
போங்க,
காலம
பாத்துக்கலாம்.”
உள்ளே
வந்து
உட்காருகிறான்... “குளுருது
அந்தப்
போர்வய
எடுத்திட்டு
வா...”
வெளியே
போக
வர,
சற்றுப்
புதிதாகப்
பெட்டியில்
வைத்திருக்கும்
போர்வையை
எடுத்து
வந்து
போர்த்துகிறாள்
லட்சுமி.
“காச்சல்
அடிக்குதா
என்ன?”
கன்னத்தில்,
நெற்றியில்
கை
வைக்கிறாள்.
நல்ல
குடு
இருக்கிறது.
“இவனுக
அடிச்சிப்
புரண்டா
போலீசுகாரனுக்கு
வாக்கரிசி,
நம்ம
பொழப்பு
எப்படியாயிட்டது
பாரு?”
“சோறு
சாப்பிடுறீங்களா?
அடுப்புல
சூடாயிருக்கு.
குழம்பும்
நல்லாயிருக்கு?”
“சோறு
குழம்பு
எதும்
நாக்குக்கு
ருசிக்கிறாப்பல
இல்ல.
சூடா
கொஞ்சம்
காபி
வச்சுத்
தந்தா
நல்லாயிருக்கும்.
இன்னி
முச்சூடும்
வீணலச்சல்.”
காபித்
தூளில்லை,
தேயிலைத்
தூள்தானிருக்கிறது.
சீனியும்
கிடையாது.
துருப்பிடித்த
தகரம்
ஒன்றில்
நாலைந்து
வெல்லச்சுகள்
இருக்கின்றன.
அம்சுதான்
வயிற்றுப்பட்டி,
வெல்லச்சு
வாங்கி
வைத்தால்
அவள்
தான்
தின்றுவிடுவாள்.
நாகு
வெல்லம்
வைத்தால்தான்
பிடிசோறு
தின்பான்.
இப்போதெல்லாம்
அவனை
அப்படிக்
கவனித்துச்
சோறே
போடுவதில்லை.
நினைக்கும்போதே
வயிற்றில்
சொரேலென்று
சங்கடமேற்படுகிறது.
பகலில்
பிடிவாதமாக
அவள்
தான்
நான்கு
பிடி
ஊட்டுவாள்.
கிழவி
சோறு
போட்டிருப்பாள்.
ஆனால்,
சாப்பிட்டிருக்க
மாட்டான்.
அதுதான்
சோர்ந்து
உறங்கிக்
கிடக்கிறான்.
“சக்கர
போட்டியா?”
“ஏதுங்க
சக்கர!
வெல்லந்தா...
ஒரச்சுத்
தட்டிப்
போட்டே
வாய்க்கு
நல்லாயிருக்கா?”
“என்னாத்துக்குப்
போட்ட?
எனக்கென்னமோ
ரத்தத்துல
சக்கர
இருக்குமோன்னு
பயமாயிருக்கு...”
“ரத்தத்தில்
சக்கரயா?
அதெல்லா
ஒண்ணுமில்லிங்க.
சக்கரயா
நெதம்
தின்னிட்டிருக்கிறீங்க,
ரத்தத்தில
அது
வந்து
குந்தியிருக்க?”
“இல்ல
லட்சுமி,
எனக்குத்
தெரிஞ்சி,
நம்ம
பெரிய
பண்ண
நாயக்கரு
மகன்,
ரத்தத்துல
சக்கரன்னு
மட்ராசிக்குத்
தூக்கிட்டுப்
போயி
வருசமா
வைத்தியம்
பண்ணாங்க.
அவனுக்கு
இப்பிடிக்
காலுலதா
வந்து,
பிறகு
செத்தே
போனான்.”
“அட
போங்க,
அதயும்
இதயும்
ஏன்
நினச்சிட்டு!
அலட்டிக்காம
படுத்துக்குங்க,
நமக்கு
அதெல்லா
ஏன்
வருது?”
படுக்கச்
சொல்லிவிட்டுப்
போர்த்துகிறாள்.
கொசுக்கள்
பாடுகின்றன.
முன்பெல்லாம்
சீமை
எண்ணெயை
எடுத்துப்
பூசிக்கொள்வாள்.
இப்போது
அதற்கும்
பஞ்சம்,
சாம்பலையேனும்
பூசிக்கொள்ளலாம்
என்றால்
அடுப்புச்
சாம்பலில்
கூடக்
கைவைக்க
முடியாது.
திருநீற்றை
எடுத்துத்
தடவுகிறாள்.
நள்ளிரவு
கடந்து
வெகுநேரம்
ஆகிவிட்டது.
பின்
தாழ்வாரத்து
அறையில்
விளக்கெடுத்துக்
கொண்டு
போய்ப்
பார்க்கிறாள்.
அமாவாசை
நெருங்கும்
நாட்களில்
கொஞ்சம்
ஒடிச்சாடுவான்.
மற்றபடி
எந்த
உபயோகமும்
இல்லாமல்
இப்படி
ஒரு
கடன்
இருபத்தைந்து
வயசு
கடந்த
பையன்.
இவன்
எதற்குப்
பிறப்பு
எடுத்திருக்கிறான்!
பல
சமயங்களிலும்
அவள்
புருசன்
இந்த
அறியாப்
பயலை
அடிக்கும்
போதும்,
கடுகடுக்கும்
போதும்
இவளுக்கு
அவனை
ஆற்றில்
கொண்டு
சென்று
அமிழ்த்தி
விடலாமா
என்று
தோன்றும்.
அந்த
உள்மனதின்
கரவை
உணர்ந்து
கொண்டிருப்பானோ
என்னவோ?
ஆற்றுப்
பக்கமே
வர
மாட்டான்.
குளம்,
ஆறு
என்றால்
ஒரே
பயம்.
நாய்க்குட்டி
போல்
தண்ணிரைக்
கண்டாலே
பதுங்குவான்.
இவனை
ஆற்றிலோ
குளத்திலோ
எட்டு
நாட்களுக்கொருமுறை
முழுக்காட்டுவ
தென்றால்
குடியிருப்பே
கிடுகிடுக்கக்
கூச்சல்
போடுவான்.
இரண்டு
மூன்று
வயசு
வரையிலும்
ஒன்றுமே
தெரியவில்லை.
இவள்
வயலில்
வேலை
செய்யப்
போகும்
போது
புளிய
மரத்தடியிலோ,
புங்க
மரத்தடியிலோ
மற்ற
பிள்ளைகளோடு
விட்டுப்
போவாள்.
கோபால்
பிறந்து
ஒன்னரை
வயசில்
பேசத்
தொடங்கி
விட்டான்.
இது
எச்சிலை
ஒழுக
விட்டுக்
கொண்டு
கிடந்தது.
இது
எத்தனையோ
நாட்களில்
பூச்சியோ
எதோ
தீண்டிப்
போயிருக்கக்
கூடாதா
என்று
கூட
உள்ளூற
வேண்டியிருக்கிறாள்.
ஆனால்.
பசிக்கிறது
என்று
சொல்லத்
தெரியாத,
நோகிறது
என்று
காட்டத்
தெரியாத
இது
நீண்ட
ஆயுளோடு
இந்த
விட்டில்
பற்றிக்
கொண்டிருக்கிறது.
நினைப்பிலேயே
கண்கள்
கசிந்து
எரிச்சலாகக்
கனிகின்றன.
தாழ்வாரத்திலேயே
வெகுநேரம்
உறக்கம்
பிடிக்காமல்
படுத்துக்
கிடந்து
விடியற்காலையின்
குளிர்ச்சியிலேயே
சற்றே
கண்ணயருகிறாள்.
அம்சு
சாணம்
தெளிக்கும்
ஓசையில்தான்
விழிப்பு
வருகிறது.
கோழிக்கூண்டைத்
திறந்தி
விட்டுவிட்டுக்
கிழவி,
“ஏண்டி
இங்கு
படுத்திட்ட?
புள்ளக்கிக்
காவலா?”
என்று
கேட்டுவிட்டுப்
போகிறாள்.
கிழவி
எப்போதும்
பேசமாட்டாள்,
எப்போதேனும்
அறியாததுபோல்
ஒரு
சொல்லை
உதிர்ப்பாள்.
அது
திராவகச்
சொட்டாக
இருக்கும்.
“லட்சுமி.
சுடுதண்ணி
வச்சிக்
குடேன்?
வாயெல்லாம்
கசக்குது...”
“காச்சலடிச்சிருக்குது.
இன்னிக்கு
எங்கும்
போகாம
படுத்திருங்க...
காலுக்கு
மஞ்சள்
அரச்சிப்
பத்துப்
போடுறன்...”
எழுந்து
இயற்கைக்
கடன்
கழிக்கச்
செல்வது
கூடச்
சிரமமாக
இருக்கிறது.
பின்
தாழ்வரையில்
நாகு
குந்திக்
கொண்டிருக்கிறான்.
சம்முகம்
படியில்
அமர்ந்து
அம்சு
கொண்டு
வந்து
கொடுத்த
சுடுநீரால்
முகம்
கழுவுகிறார்.
ஆற்றுக்கரை
மேட்டிலிருந்து
பையன்
சைக்கிளில்
இறங்சி
வருகிறான்.
அவன்
மட்டுமல்ல,
தொப்பி
முடியும்,
பெரிய
மூக்குக்
கண்ணாடியும்
பாம்புத்
தோல்
மினுமினுப்பாகச்
சட்டையுமாக...
ஆறுமுகத்தின்
பயல்,
முதல்
நாள்
விசுவநாதன்
வீட்டுக்கு
வந்தானே,
ஸ்டாலினோ,
புல்கானினோ
அந்தப்
பயல்தான்.
சைக்கிளைப்
பின்புறமே
நிறுத்துகின்றனர்.
படலையைத்
தள்ளிக்கொண்டு
பையன்
நண்பனை
அறிமுகப்
படுத்துவது
போல்
நிற்கிறான்.
“வணக்கம்...”
என்று
நண்பன்
புன்னகை
செய்து
கை
குவிக்கிறான்.
சம்முகம்
நிமிர்ந்து
பார்த்துவிட்டு
வாய்
நீரை
உமிழ்கிறார்
வேகமாக.
“கொல்லையில
ஏண்டா
வந்து
நிக்கிறிங்க?”
எரிச்சலில்
மேலும்
மேலும்
நீரை
ஊற்றிக்
கொப்புளிக்கிறார்.
“உள்ள
வாங்க,
சாலி...”
சுற்றி
வந்து
திண்ணையில்
நண்பனை
உட்காரச்
சொல்கிறான்
கோபு.
காந்தி
திடுக்கிட்டாற்
போல்
எழுந்து
கதவண்டை
எட்டிப்
பார்த்துவிட்டு
உடனே
உள்ளே
மறைகிறாள்.
எதிர்த்
திண்ணையில்
உட்கார்ந்திருக்கிறான்
பாட்டன்.
“யார்ரால
அது?”
“...உங்க
சிநேகிதர்
மகன்தா
தாத்தா,
வெட்டுகுடி
ஆறுமுகம்”
“ஆருமவன்?...
ஆருமுகமா?...
அவந்
துரோகிப்
பயல்ல?
உண்ட
வூட்டுக்குத்
துரோகம்
பண்ண
பன்னிப்பய...”
கிழவன்
இந்த
வரிசையை
உதிர்த்த
கையோடு
சிரிக்கிறான்.
கசப்பின்
இறுதியில்
அசட்டுத்
தித்திப்பும்
அருவருப்பாகிறது.
“டோன்ட்
மைன்ட்
பிரதர்.
எங்க
தாத்தா
எப்பவும்
யாரையும்
துரோகிப்பயன்னுதா
சொல்வாரு.
அப்பதா
அவருக்கு
திங்கிற
சோறு
செமிக்கும்.”
அவன்
உள்ளே
செல்கையில்
காந்தி
முகம்
கழுவி
புருவங்களுக்கிடையில்
கவனமாகப்
பொட்டு
வைத்துக்
கொண்டிருக்கிறாள்.
லட்சுமி
கிழவருக்கு
நீராகாரம்
கலக்குகிறாள்.
“யம்மா,
கொஞ்சம்
காபி
வச்சிக்
கொண்டா!”
“காபி...!
ஏண்டா,
இதென்ன
கவுனர்
வீடுன்னு
நினைப்பா?
ஐயா
கெடந்து
அல்லாடிட்டிருக்காரு.
சைக்கிள்
வச்சிருக்கேல்ல?
கடைப்பக்கம்
போயி
ரெண்டு
பன்னு
வாங்கிட்டுவா.
ராத்திரியே
அவுரு
வவுத்துக்கொண்ணும்
திங்கல...”
“என்னம்மா
நீ,
நேரம்
காலம்
தெரியாம!
வந்திருக்கிறவங்க
யாருன்னு
தெரியுமில்ல!
நம்மூட்டுக்கு
வரக்கூடிய
ஆளில்ல;
கொஞ்சம்
கவுரதியா
நடக்கவானாமா?
ஏ,
காந்தி,
நீதா
கொஞ்சம்
காபி
வச்சுக்கொண்டா!”
“பாலில்லாமயா?
அம்சு
கொடியான்
வீட்டில
போயி
கொஞ்சம்
பாலு
வாங்கிட்டு
வா!”
காந்தி
கவனித்துக்கொள்வாள்
என்ற
திருப்தியுடன்
கோபு
வாசலில்
வந்து
உட்கார்ந்து
கொள்கிறான்.
“இந்தத்
திண்ணய
எக்ஸ்டென்ட்
பண்ணி
சிமின்ட்
போடணும்னு.
எங்க
தாத்தாதா
முட்டுக்கட்டை.
இவருக்கு
அந்தக்
காலத்துல
எப்பிடி
இருந்தாங்களோ
அப்படியே
இருக்கணும்.
இதப்பாருங்க
இப்பவும்
நீராரம்
தான்
குடிப்பாரு.”
“காபி
வச்சிட்டா
ஒரே
ரகள...
நேத்து
காபிதானிருந்திச்சி.
சண்டபோட்டு
ஆரு
வீட்டேந்தேனும்
வாங்கிட்டு
வரச்சொல்லி
அடம்புடுச்சாரு.
எப்படி
இந்த
மனுசங்கள
வச்சிட்டு
முன்னுக்கு
வரது?”
“ஓல்ட்
பீப்பிளே
இப்படித்தான்.
நீ
இதுக்காக
பாதர்
பண்ணிக்காத
பிரதர்.”
காந்தி
அப்போது
நிலைப்படியில்
வந்து
நிற்கிறாள்.
“வணக்கம்...”
“இதாம்
பிரதர்
ஸிஸ்டர்,
நா
சொல்லியிருந்தேனே?”
“ஓ,
இவங்கள
நான்
பார்த்தேனே?...
உக்காருங்க..”
என்று
சாலி
மரியாதையாக
அவளை
உபசரிக்கிறான்.
“நீங்க
ஒருத்தர்
இங்க
படிச்சி
முன்னுக்கு
வர
ஆர்வமாயிருக்கிறது
ரொம்பப்
பாராட்டத்தக்கது.
வாய்ப்பைப்
பயன்படுத்திட்டு
முன்னேறத்
துடிக்கிறவங்க
உங்களைப்
போல
ஒருசில
பேருதான்.”
“ரொம்ப
தாங்க்ஸ்,
உங்க
பாராட்டுக்கு.
ஆனா...
சொல்லவே
கஷ்டமாயிருக்கு.
இப்பகூட,
டெக்னிகல்
கோர்ஸ்
படிக்கலான்னு
இன்டர்வியூ
போனேன்.
ரெண்டாயிரம்
டொனேஷன்
கேக்கிறாங்க...”
“ஆமா,
அவங்களுக்கும்
புது
இன்ஸ்டிட்யூஷன்;
எக்ஸ்பான்ட்
பண்ணணுமில்ல?
டொனேஷன்
வாங்கியாக
வேண்டியிருக்கு.
ஆனா,
இப்ப
அதெல்லாம்
கஷ்டமில்ல...
பணம்
வங்கிலகூடக்
கிடைக்கும்.
என்
ஃபிரன்ட்
ஒருத்தனுக்கு
ஃபாரின்
போகவே
நா
பத்தாயிரம்
ஏற்பாடு
செஞ்சி
குடுத்தேன்.”
சட்டைக்காலரைத்
தூக்கி
விட்டுக்
கொண்டு
பாட்டனையும்,
பாட்டியையும்,
பிறகு
தெருவில்
நடவுக்குச்
செல்லும்
பெண்களையும்
பார்த்துக்
கொள்கிறான்
சாலி.
காந்திக்கு
முகமெல்லாம்
ஆவலாகப்
பளபளக்கிறது.
“பாங்க்ல
இதுக்கு
லோன்
கிடைக்குமாங்க?”
“உங்களுக்குப்
பணம்
கிடைக்கும்.
ஆனா
எனக்கு.
ஒரு
சின்ன
யோசன.
உங்களப்போல
லேடீஸ்ங்க,
பி.ஏ.,
எம்.ஏ.,ன்னு
படிச்சி
ஸ்கூல்
காலேஜில
வேலை
பார்க்கலாம்.
இல்லாட்டி
எதானும்
ஆபீசிலே
பூந்திட்டா
ரிஸர்வேஷன்
இருக்கு,
மளமளன்னு
முன்னுக்கு
வரலாம்.
இந்த
டெக்னிக்கெல்லாம்
உங்களப்போல
இருக்கிற
மென்மையான
பொண்ணுகளுக்குச்
சரிவருமா?
பிற்கால
வாழ்க்கைக்கு
ஒத்துவரணும்
பாருங்க?”
“அப்ப.
பி.ஏ.,
பி.எஸ்.சி.,
சேர்றதுதான்
நல்லதுங்களா?”
“சந்தேகமில்லாம
இல்லாட்டி
மெடிஸின்,
நர்சிங்
கோர்ஸ்
படிக்கலாம்.
அதுதான்
நமக்கு
வேணும்.”
“ஐயோ
இதுக்கே
ரொம்ப
சிரமமாயிருக்கு.
அதெல்லாம்
கனவுகூடக்
காணுறதுக்கில்ல.”
“அட,
நீங்க
என்ன
அவநம்பிக்கப்படுறீங்க?...
இப்பிடித்தா,
நம்ம
பண்ணைக்காரு
ஒருத்தர்,
மகனப்
படிக்கவச்சி
எஸ்எஸ்எல்சி
முடிச்சிட்டான்.
அப்பா
அப்ப
அவனப்
பஞ்சாயத்து
ஆபீசில
நுழைச்சி
விட்டாரு
மளமளன்னு
எதோ
யுனிவர்சிடில
பியுசி,
பிஏ
எல்லாம்
படிச்சி
மட்றாஸ்
செகரிடேரியட்டுக்குப்
போயிட்டான்.
போன
வருஷம்
டிபுடி
கலெக்டர்
செலக்ஷனுக்கு
வந்திச்சி.
அப்பாட்ட
வந்து
அல்லாம்
பணம்
செலவாகும்னு
சொல்றாங்களேன்னு
வருத்தமா
நின்னான்.
ஒரு
பைசா
செலவில்லை.
இப்ப
எங்கியோ
வடாற்காட்டில்
வேலையாயிருக்
கான்னா
பார்த்துக்குங்க...”
“ஏன்
கிடைக்காது?
நீங்கதா
மாத்துக்கட்சி,
அரசியல்
விரோதம்னெல்லாம்
பாக்குறீங்க.
கட்சியெல்லாம்
யாருக்கு?
நம்ம
சொந்த
வாழ்க்கைன்னு
வரப்ப
கட்சி
பாக்கிறதப்போல
மடத்தனம்
கிடையாது.
அது
பாலிசி
வேற
சொந்த
வாழ்க்கை
வேற...”
கால்களை
ஆட்டிக்கொண்டு
ஆழ்ந்த
பார்வையால்
அவளை
ஊடுருவுகிறான்
சாலி.
“கட்சி
அது
இதெல்லாம்
எனக்கு
ஒரு
சுக்கும்
கிடையாதுங்க.
சொல்லப்போனா
இந்த
வீட்டில
நானும்
விவசாயத்
தொழிலாளி
இல்ல,
எங்கண்ணனும்
இல்ல.
எனக்கு
எங்கேனும்
வேலை
கிடைக்கும்னா,
நான்
இப்பவே
அதுக்கு
என்ன
செய்யனுமோ
செய்யத்
தயார்.
மூணு
வருசமா
ஸ்கூல்
முடிச்சிட்டுக்
கஷ்டப்படுறேன்.
மேல
படிக்கவும்
இத்தன
நாளா
பொருளாதார
நிலைமை
இடம்கொடுக்கல.
எங்கப்பாரும்
எங்கும்
போயிக்
கேக்க
மாட்டாங்க...”
“அடாடா...
இந்த
கோபு
ஒரு
வார்த்த
முன்னமே
சொல்லிருந்தா
கூட
அப்பாட்ட
சொல்லி
நான்
எதானும்
ஏற்பாடு
செஞ்சிருப்பேன்.
நேத்து,
உங்களப்
பாத்த
பிறகு,
இவனத்
தற்செயலா
ராத்திரி
பாத்ததுமே
விசாரிச்சேன்.
அதா
இப்பிடியே
வந்தேன்.
வேணுங்கறவங்க
எதுக்குக்
கஷ்டப்படணும்?”
முன்முடி
இரண்டு
நெற்றியில்
விழுந்து
அவனிடம்
சரசம்
பேசுகிறது.
மோதிரம்
போட்ட
விரல்,
மினுமினுவென்ற
பட்டைக்காலர்
சட்டை
அவன்
மரியாதையான
பேச்சு...
காந்தியின்
மனம்
சிறகடித்துப்
பறக்கிறது.
“எதுக்கும்
நீங்க
அப்பாவ
வந்து
ஒரு
நடை
பாத்துடுங்க.
அப்பா
நிச்சயம்
செய்வாரு.
இப்ப
கூட
அப்பா
சொல்வாரு
யூ.ஜி.
காலத்துல
சம்முகம்
தோசைப்
பொட்டலத்தக்
குச்சில
துக்கிட்டு
ஓடியாருவா...
மேச்சாதிக்குக்
குடுக்கிற
சாப்பாட்டத்
தொட்டாப்
பாவம்னு
அவருக்கு
வருத்தம்.
அப்படி
ஒரு
காலத்துல
ஒதவினவங்களுக்கு
ஒத்தாச
பண்ணணும்னா
கண்டிப்பா
மறுக்கமாட்டாரு...”
“காந்தி...!”
கக்கல்
கரைசலுடன்
பீரிட்டடிக்கும்
சினக்குரல்
உள்ளிருந்து
வந்து
தாக்குகிறது.
அவள்
திடுக்கிட்டாற்
போல்
திரும்பி
உள்ளே
பார்க்கிறாள்.
“நான்
உயிரோடு
இல்லன்னு
நினைச்சிட்டியாடீ?...”
“என்னப்பா
சொல்றீங்க...”
“சொல்றேன்.
சுரக்காக்கி
உப்பில்லன்னு.
நான்
செத்துட்டனா?
இல்ல,
நான்
செத்துட்டனான்னு
கேக்குறேன்?”
இந்தச்
சாட்டை
வீறலை
எதிர்பார்த்திருந்தாலும்
அவள்
விக்கித்துப்
போகிறாள்.
கோபு
எழுந்து
உள்ளே
சென்று
மெதுவான
குரலில்
கண்டனம்
செய்கிறான்.
“இது
உங்களுக்கே
நல்லாருக்குதாப்பா?
வாசல்ல
அவன
வச்சிட்டு
ஏம்ப்பா
மரியாதியில்லாம
கத்தறிங்க?”
“என்னடால
என்ன
மெரட்டுற?
இது
ஏ
வூடு.
நா
கத்துவேன்,
கூப்பிடுவேன்.
மரியாத
இல்லன்னா
போச்சொல்லுடா!
என்னமோ
பாலிசியாம்,
மயிராம்;
வர்றானுவ
சொந்தத்துக்கு
ஒரு
கட்சி.
மேலுக்கு
ஒரு
பேச்சி.
ஏண்டா,
வீட்டக்
கூறுபோட்டுப்
போகவா
இப்ப
வந்த?”
“ஏம்ப்பா
வீணா
ஆத்திரப்படுறீங்க?”
“நீ
என்னடா
மயிரா
எனக்குப்
புத்தி
சொல்ல
வந்திட்ட?
பல
நூறு
பேரு
உசிரக்
குடுத்துக்
கட்டி
வளர்த்த
கோட்டடா
இது!
இதுல
குச்சி
கொளுத்தி
திரி
சொருவி
வெளையாடவாடா
வந்திருக்கிய?
போங்கடா
இங்கேந்து!”
சம்முகத்தின்
அடித்தொண்டையின்
உக்கிரங்களாகச்
சொற்கள்
விழுகின்றன.
அவன்
முகம்
கனலுகிறது.
குரல்
கேட்டுப்
பானை
கழுவும்
லட்சுமி
ஓடிவருகிறாள்.
“டே
கோபு,
அப்பா
கோவத்தக்
காலங்காத்தால
ஏன்
கிளறுறிய?
அவருக்கு
எத்தினி
தொல்ல?
வூட்டுக்கு
மூத்த
பய்யன்
புரிஞ்சிக்காம
நடக்குற?”
“சேச்சே!
இந்த
வூட்டில
நல்லது
எதுவொண்ணும்
சொல்லவும்
முடியாது;
செய்யவும்
முடியாது.
நீங்களா
முன்னுக்கு
வரவும்
மாட்டிய,
பிறத்தியார்
சொன்னாலும்
கேக்க
மாட்டிய!
நீசத்தண்ணியைக்
குடிச்சிட்டு
அழுக்கில
குந்திக்
கிடப்பிங்க!
இந்த
நாட்டுக்கு
உங்களால
ஒரு
விமோசனமும்
இல்ல!”
என்று
தீர்த்துவிட்டு
வெளியே
வருகிறான்.
“வந்த
விருந்தாளிய
விரட்டி
அடிக்கிறீங்க.
பண்பாடு
தெரியாதவங்க,
துத்தேறி!”
“வாங்க
பிரதர்
போகலாம்!”
“காபி
கூடச்
சாப்பிடாம
போறீங்க...”
வாசல்படி
இறங்கி
மெதுவான
குரலில்
காந்தி
மன்னிப்புக்
கேட்கும்
பார்வையை
இறக்குகிறாள்.
“பரவாயில்ல.
நா
இதெல்லாம்
மனசில
வச்சிக்க
மாட்டேன்.
சந்தர்ப்பம்
இப்ப
சரியில்ல.
பின்ன
பார்ப்பம்.
வரட்டுமா?”
அந்தப்
பார்வையும்
குரலும்
நெஞ்சின்
உள்ளே
வந்து
மென்மையாகத்
தொடுகின்றன.
சைக்கிளுடன்
அவர்கள்
நடக்கையில்
அவளும்
வீடு
சுற்றி
மேட்டில்
ஏறும்வரை
சென்று
வழியனுப்பி
விட்டுப்
பின்புறமாகப்
படலைப்
பக்கம்
நின்று
பார்க்கிறாள்.
-------------
6
வான்
முகட்டில்
வெள்ளைத்
துணிகளைக்
காயப்
போட்டாற்
போன்று
மேகங்கள்
பரவி
இருக்கின்றன.
இடைஇடையே
எட்டிப்
பார்க்கும்
நீலங்கள்.
ஆற்றிலிருந்து
கால்வாய்க்கு
நீர்
பாயும்
மதகுச்
சுவரில்தான்
பாட்டி
தங்கம்மா
எரிமுட்டை
தட்டுவாள்.
அந்த
இடம்
அவளுக்குக்
குத்தகை.
அங்கிருந்தபடியே
வீட்டையும்
ஒரு
கண்
பார்த்துக்
கொள்ளலாம்.
வெயில்
உறைக்காததால்
முதல்
நாளைய
வறட்டிகளைப்
பெயர்த்துக்
காய
வைத்துக்
கொண்டு
அங்கேயே
உட்கார்ந்திருக்கையில்
காந்தி
சோப்புப்
பெட்டியுடன்
ஆற்றில்
குளிக்க
இறங்குகிறாள்.
“ஐயா
என்ன
செய்யிறார்டி?”
“படுத்திருக்காரு.”
“சோறு
வடிச்சி
வச்சிட்டே?”
“வச்சாச்சு
கொளம்பொண்ணும்
இப்ப
வக்கவானான்னு
அம்மா
சொல்லிட்டுத்தாம்
போச்சி.”
“அந்தப்
பய
எங்க?...”
“அதோ
கோடில
புள்ளங்ககூட
ஆடிட்டிருக்கிறான்...”
கிழவி
ஏதோ
நினைவாகச்
சூனியத்தை
வெறிக்கிறாள்.
என்ன
சோப்போ,
அது
நுரையே
வரவில்லை.
இவளுக்கு
இருக்கும்
சேலைகள்
நைலக்ஸ்
இரண்டுதான்.
ஒன்று
பொங்கல்
சமயத்தில்
வாங்கியது.
ஆற்று
வண்டல்
கலங்கிவரும்
கலர்.
அவளுக்குப்
பிடிக்கவேயில்லை.
ஆனால்
மூட்டைக்காரன்
இதைக்
கொண்டுவந்து
நன்றாக
இருக்கும்
என்று
சொல்லித்
தலையில்
கட்டிவிட்டான்.
ஆற்றுக்
கலங்கல்
நிறத்தில்
சிறுசிறு
நீலப்பூக்கள்
போட்டிருந்தன.
ஆனால்
அந்த
நீலம்
கூர்மை
இழந்து
தேக்கத்தில்
பாசி
பூத்தாற்
போல்அசிங்கமாகி
விட்டது.
இந்தச்
சேலையைத்
தான்
அன்று
உடுத்திச்
சென்றாள்.
சனியன்,
இதற்கு
அதிர்ஷ்டமே
இல்லை.
அந்த
இன்னொரு
பச்சைச்
சேலையை
உடுத்திச்
சென்றிருந்தால்,
அவள்
வாழ்க்கை
ஒருகால்
நம்பிக்கை
மிகுந்ததாயிருக்கும்.
வீட்டுக்கு
வந்த
ஆளை
இப்படி
விரட்டலாமா?
ஆத்திரத்தைத்
துணியில்
காட்டுகிறாள்.
நைலக்ஸ்
புஸ்
புஸ்ஸென்று
காற்றை
அடக்கிக்
கொண்டு
அடங்காமல்
சண்டித்தனம்
செய்கிறது.
அம்சு
வெள்ளித்
தூக்கை
எடுத்துக்
கொண்டு
காலையில்
நடவென்று
கிளம்பி
விடுகிறாள்.
அம்மாவும்
சென்றுவிடுவாள்.
அம்சுவுக்குக்
கையில்
காசும்
சேருகிறது.
ஆனால்
இவள்
வீட்டுக்குத்
தண்ணீர்
சுமந்து,
பைத்தியப்
பையனைப்
பாலித்து,
அழுக்குத்
துவைத்து,
பெருக்கி,
துலக்கி...
சீ!
அண்ணனுடன்
பட்டணம்
போவதைப்
பற்றி
ஒரு
கனவும்
அவளுக்கு
உண்டு.
ஆனால்
அவன்
வந்திருந்த
நான்கு
நாட்களில்
நான்கு
மணிநேரம்
கூடத்
தங்கியிருக்கவில்லை.
நேற்றுச்
சண்டை
போட்டுக்
கொண்டு
போனவன்,
ஊருக்கே
போய்விட்டான்.
“என்ன
பாட்டி!
வெயில்
காயிறீங்களா?”
அவள்
திடுக்கிட்டுத்
தலை
நிமிருகிறாள்.
பொன்னடியான்,
வெள்ளை
வேட்டி
சட்டைக்கு
மேல்
சிவப்புத்
துவாலை
கண்களைப்
பறிக்கிறது.
நிறைய
எண்ணெய்
தடவிக்
கிராப்
வாரியிருக்கிறான்.
“தோழருக்கு
உடம்பு
நல்லாயில்லையாமே?
முந்தா
நா
புதுக்குடிக்கு
வந்திருந்தாராம்.
ஆனா
ஆபீசுக்கு
வரலன்னாங்க...”
அவன்
படித்துறையில்
இருக்கும்
காந்தியிடம்
தான்
இதைக்
கேட்கிறான்.
ஆனால்
அவளுக்கு
ஒரே
வெறுப்பாக
இருக்கிறது.
அவளைவிட
இரண்டாண்டுகள்
முன்
வகுப்பில்
ரங்கநாதபுரம்
பள்ளியில்
படித்தான்.
உச்சவரம்பைச்
சரியாக
அமுல்படுத்த
வேண்டும்
என்று
போராட்டம்
நடந்தபோது,
அவனுடைய
அப்பன்
அதில்
மூண்ட
கலவரத்தில்
வெட்டுப்பட்டுச்
செத்துப்
போனான்.
பிறகு
அவர்கள்
குடும்பம்
அங்கிருந்து
பெயர்ந்து
போயிற்று.
திருவாரூரில்
படித்துப்
புகுமுக
வகுப்பை
முடித்திருக்கிறான்.
பின்னர்
முழுநேரமாக
இவர்கள்
சங்க
வேலைக்கு
வந்துவிட்டான்.
எங்கே
கூலித்
தகராறென்றாலும்
மக்களை
அணி
திரட்டிக்
கொடிபிடிக்க
இவன்
முன்னே
செல்வான்.
அணி
திரட்டி
நிர்வகிப்பதில்
மிகவல்லவன்
என்று
அவளுடைய
தந்தைக்கு
இவனிடம்
மிகவும்
மதிப்பு.
நடவு
நடும்
பெண்கள்,
அம்சுவைப்போல்,
சாலாட்சியைப்
போல்
இளவயசுக்காரிகள்,
இளைஞர்களான
சக
தொழில்காரர்களுடன்
சிரித்துப்
பரிகாசம்
செய்து
மகிழ்வார்கள்.
அதே
பெண்கள்,
இவனைக்
கண்டால்
சட்டாம்
பிள்ளையாக
மதித்து
அடங்கி
நிற்பார்கள்.
“ஏம்மா?
நாள
அமாசிக்குக்
கூட்டம்
இருக்கும்.
தெரியுமில்ல?
மாதர்
கூட்டம்.
அல்லாம்
வந்திடுங்க”
என்று
இவன்
சொல்லும்
குரலில்
மன்னனின்
ஆணைக்குரிய
மிதப்பு
பளிச்சிடும்.
“ஏ,
என்ன
கொளுக்கட்டயா
வாயில?
கோசம்
நல்லா
குடுக்கணும்!”
என்பான்.
கூட்டம்
இவர்கள்
வீட்டு
முன்
தெருவிலேயே
நடப்பது
உண்டு.
அவளுக்கு
இதெல்லாம்
தனக்குச்
சம்பந்தமில்லை
என்ற
வெறுப்புத்தான்
மேலிடும்.
உள்ளே
வந்து,
“காந்தி,
கொஞ்சம்
தண்ணிகொண்டா”
என்று
கேட்பான்.
அந்தச்
சாக்கில்,
“எம்
பேச்சு
நல்லா
இருந்ததா
காந்தி?”
என்று
சிரிப்பான்.
புதுக்குடியில்
இருந்து
வரும்
போதெல்லாம்
அவன்தான்
அவளுக்குப்
புத்தகம்
பத்திரிகை
கொண்டு
வருவான்.
ஆனால்
பிரபலமான
வார
மாத
ஏடுகளாக
அவை
இருக்காது.
அடித்தள
மக்கள்,
புரட்சி,
குமுறல்,
சுரண்டல்,
வர்க்கப்
பார்வை
என்ற
சொற்களையே
புரட்டி
எடுக்கும்
கவிதைகள்,
கட்டுரைகள்
இருக்கும்.
அந்தச்
சுவாரசிய
வார
மாத
ஏடுகளைப்
படிக்க
அவள்
வீரமங்கலம்
உடையார்
வீட்டுக்குத்தான்
போக
வேண்டும்.
சரோஜா
இவளுக்குத்
தோழி.
உடையார்
பழங்காலத்தில்
நிலப்போராட்டத்தில்
தீவிரமாக
ஈடுபட்டிருந்தவர்.
இப்போது
பெருங்காயம்
வைத்த
பாண்டம்போல்
அந்த
மனம்தான்
இருக்கிறது.
சரோஜா
அவருடைய
இளைய
மருமகள்.
அங்கே
செல்லத்
தடை
கிடையாது.
சேலையைக்
காயப்போட்டு
விட்டு,
வீரமங்கலம்
செல்லவேண்டும்
என்ற
நினைப்புடன்
அவள்
வீட்டுக்கு
வருகையில்,
நடுவீட்டில்
பொன்னடியான்
ஐயாவுடன்
பேசிக்கொண்டிருக்கிறான்.
“நீங்க
எதுக்கும்
அவனக்
கொஞ்சம்
வார்ன்
பண்ணி
வையுங்க
காம்ரேட்.
போலீசுக்காரனுக்குச்
சந்தேகம்னு
புகுந்தா
அடில
இருக்கிறவனத்தா
டவுட்
கேசுன்னு
புடிச்சுப்
போட்டுச்
சாத்துவான்.
இந்த
சுடுகாட்டு
வழிப்பிரச்சினைக்கு
ஒடனே
போராட்டம்
நடத்தியிருக்கணும்.
பாடியத்
தூக்கிட்டுப்
போயிருக்கணும்.
பொண்டுவ
வாணான்னிட்டாங்களாம்.
அட
நமக்கு
எத்தினியோ
பிரச்சன
இருக்கு.
இப்ப
உரவில,
பூச்சி
மருந்து
வில
கொறக்கணும்னு
உண்ணாவிரதம்
இருக்கிறது
தீர்மானமாயிருக்கு.
பிரச்சினயாயில்ல?”
“காந்தி?
சோறாக்கியாச்சில்ல?...
பசியாயிருக்கு...”
அவள்
பின்புறம்
சேலையைத்
தொங்க
விட்டுவிட்டு
நடுவீட்டில்
நிற்காமல்
சமையலறைக்குள்
செல்கிறாள்.
தடியை
ஊன்றிக்கொண்டு
பாட்டன்
படியேறுகிறான்.
கைத்துணியில்
ஈரமாக
மீன்
தெரிகிறது.
நேராகச்
சமையலறைக்குள்
வந்து
“ஏ
செவப்பி,
இந்தாட்டீ,
தேச்சுக்
களுவி,
உப்பு,
மொளவா
தடவி,
சட்டில
போட்டு...”
பதம்
சொல்லி
அவளிடம்
கொடுக்கிறார்.
கண்களைச்
சரித்துக்கொண்டு
பார்க்கிறார் “யார்ராது?
பக்கிரிமவன்
பொன்னுவா?
ஏண்டால,
ஆளயே
காணம்?
உன்னண்ட
நாஞ்
சொன்னது
என்னாச்சி?”
“என்ன
சொன்னிய
தாத்தா?”
“ஏண்டா,
எத்தினி
தபா
நாகப்பட்டணம்,
காரக்கால்
போறிய?
இங்க
இந்தப்
பயலுவ,
இன்னாமோ
பொடியப்
போட்டுத்
தண்ணிய
ஊத்திக்
கலக்குறான்.
புஸ்ஸுனு
நுர
வருது.
அத்த
அஞ்சு
லிட்டருக்கு
அஞ்சு
லிட்டர்னு
கலந்து
விக்கிறானுவ.
குடிச்சா
ஒடம்புக்குத்
தெம்பால்ல
சூர்
புடிக்கணும்?
இதெளவு
சாஞ்சாடிட்டுத்
தூக்கம்
மயக்குது.
சேய்!
நாகபட்ணம்
காரக்கால்
போனா
சீமப்பிராந்தி
வாங்கிட்டு
வாடான்னு
நீ
வார
போதெல்லாம்
சொல்றேன்.
வெத்துக்கையா
வார.
ஏதோ
கெளவன்,
கேக்குறானேன்னு
கூட
இல்ல!”
“தாத்தா,
போலீசுக்காரன்
வெலங்கு
போட்டுக்
கூட்டிட்டுப்
போயிருவான்!”
“அட.
சி,
போடா,
சால்ஜாப்புச்
சொல்ற?
இப்பதா
அல்லாம்
பப்ளிக்கா
எடுத்து
எங்க
பார்த்தாலும்
கட
துறந்திருக்காங்க?
இதா
வீரமங்கலம்,
அஸ்த
மங்கலம்,
குமட்டூரு
எங்க
பாத்தாலும்
கீத்துக்
கொட்டா
போட்டுத்
துறந்து
வச்சிருக்கானுவளே?
நீ
எனக்குப்
போலீசு
மயிருன்னு
காதுகுத்துற?”
“அதில்ல
தாத்தா.
உள்நாட்டுச்
சரக்குக்
குடிச்சா
விலக்கில்ல.
நீங்க
சொல்ற
சரக்கெல்லாம்
வாங்கியாரக்
கூடாது.”
“மயிரு
எல்லா
நாள்ளயும்
நாங்
குடிச்சிட்டுத்தா
வாரனா.
எத்தினியோ
கண்டம்
பொழச்சி
உசிர
வச்சிட்டிருக்கிற.
என்னிக்கின்னாலும்
கொஞ்சம்
ஊத்தி
நல்லதாக்
குடிச்சிக்கலாமேன்னு.”
“அப்ப,
இதுக்குத்தா
உசிரோட
இருக்கீங்களா
தாத்தா?”
“பின்னென்னல?
இதபாரு,
மண்ணு,
பாசி
எப்பிடிச்
சதயத்
திண்ணிருக்கின்னு!”
கிழவனார்
தேய்ந்து
சுக்காகிப்
பாளமாக
வெடித்துப்
போன
தன்
குதிகாலைக்
காட்டுகிறார்.
குதிகாலுக்கு
மேலாக
வெண்மை
வரிகளாகத்
தழும்புகள்.
பொன்னடியானின்
கேலி
நிறைந்த
ஒளி
தீவிரமாகக்
குவிகிறது.
“தாத்தா
அதென்ன?...
அடிப்பட்ட
தழும்பா?”
“ஆமா...
திருக்கை
மீன்
தெரியுமில்ல?
அந்த
வால்சாட்ட
நுனில
குஞ்சமாட்டுத்
தொங்கும்...
அதால
அடிப்பாங்க
பண்ணல.
ஒரு
காரியக்காரன்
இருந்தான்.
அவனுக்கு
ஒடம்பெல்லாம்
கண்ணு.
களவடில
எங்க,
இந்தப்
பய
இங்க
ரெண்டு
அங்க
ரெண்டுண்ணு
கருக்காயோடு
தள்ளிடறானோன்னு
பாத்திட்டே
நிப்பான்.
நா
அதுக்கு
மேல.
இல்லாட்டிக்
காவயித்துக்
கஞ்சி
கூடக்
கிடக்காது.
கருக்காயில
நாலு
மரக்கா
தேறும்படி
பாத்துக்
கிடுவேன்.
இத
சம்முவத்துக்கு
மின்ன
ஒரு
பய
இருந்தான்.
நல்லா
வெரப்பா
அவாத்தா
மாதிரி
இருப்பான்,
சரவணன்னு
பேரு
வச்சிருந்தே,
நல்ல
துடியா
இருப்பான்;
அறுப்புக்கு
வரப்ப,
எங்க
எந்தல
இருக்குன்னு
ரொம்ப
தொலவிலியே
கரீட்டா
கண்டுப்பான்.
அரிகாவாயில
போயி
விழும்;
வூட்டுக்குப்
போய்ச்
சேந்திடும்.
அதுக்குத்தன
கட்டி
வச்சி
அடிப்பானுவ.
மிராசு
உக்காந்திட்டு
காரியகாரன
வுட்டு
அடிக்கச்
சொல்லுவாரு.
பொறவு
ஒரனா
குடுத்து,
கள்ளு
வாங்கிக்
குடில...ம்பாங்க.
ஒருக்க.
மேட்டுப்பங்குல
தண்ணி
நிக்கல.
தாழ
தண்ணி
நிக்கிது.
இந்தப்
பய
சரவண
போசி
மாதிரி
ஒண்ண
வச்சிட்டு
எறச்சி
வுட்டிட்டிருக்கிறா.
வரப்போரமா,
கருணக்கிழங்கும்
சேம்பும்
நட்டு
வந்திருக்கு.
காரியக்காரன்
ஒரு
சுத்துப்
போயிட்டு
வாரான்
அல்லாம்
தோண்டிப்
போட்டிருக்கு,
பய
போசில
எடுத்திட்டுப்
போறதப்
பார்த்திட்டான்.
தொறத்திட்டு
ஒடியாரான்.
சரேல்னு
எங்க
பூந்தான்னு
தெரியல.
ஆளக்காணம்.
வாக்கா
மதகடில
ஒளிஞ்சுக்குவான்.
இது
வழக்கந்தா,
என்னப்
பாத்து
திட்டிப்
புட்டுக்
காரியக்காரன்
போயிட்டான்.
பய
கெட்டிக்காரன்,
வூட்டுக்குப்
போயிருப்பான்னு
நினைச்சிட்டு
நானும்
பொழுது
சாஞ்சி
வூட்டுக்குப்
போனா,
அங்க
பய
வரல.
ஒருவேளை
பண்ண
வூட்டில
புடிச்சிக்
கட்டிப்போட்டிருக்களானுவாக்கும்னு
ராவிக்கு
அங்க
ஓடினா
காணம்.
மக்யாநா
காலம,
மதகடில
கெடக்கிறான்.
பாம்பு
கொத்தி,
நீலமா
கெடக்கிறான்.
சேம்பும்
கருணயும்
போசியோட.”
பாட்டனாரின்
சுருங்கிய
கண்களிலிருந்து
கண்ணீர்
கரகரவென்று
வழிகிறது.
அவர்
குரல்
ஒடுங்கி
விட்டாலும்,
சோக
அலைகளின்
தொட்டுணர்வில்
அங்கிருக்கும்
எல்லா
இதயங்களும்
ஒன்றிப்
போகின்றன.
சிறிது
நேரம்
ஒர்
அமைதித்
திரை
படிகிறது.
“நாளெல்லாம்
நெத்தமும்
சதயும்
தேச்சு,
பச்சை
சிரிக்கப்
பாப்பம்.
ஆனா,
அந்த
மணி,
நம்ம
வயித்துப்
பசிய
அவிக்கல.
அந்த
உழப்பு
நம்ம
குடிய
உசத்தல.
இது
நமக்கு
உரிமைன்னு
தெரியாது.
மாறா,
நாம
இப்பிடி
நண்டு
நத்தயப்
புடிச்சித்
தின்னிட்டு,
திருட்டு
மணியள்ளிட்டு,
திருக்கைச்
சாட்டை
அடிவாங்கிட்டு
இருக்கத்தாம்
பெறந்தோம்னு
நெனைச்சிருந்தம்.
இப்ப,
இதெல்லாம்
உங்களுக்குச்
சொன்னாக்
கூடப்
புரியாதுல.
சம்முகத்துக்குக்
கூடத்
தெரியாது.”
கண்ணில்
வழியும்
நீரைத்
துடைத்துக்
கொண்டு
கிழவன்
சிரிக்கிறான்.
“பொண்டுவ,
நடவு
நட்டிட்டே
பின்னாடி
போவணும்.
கொஞ்சம்
நிமிர்ந்து
வெத்திலே
போடமுடியாது.
காரியக்காரன்
சீலயத்
தூக்கிக்கச்
சொல்லி
வெத்துக்காலில
அடிப்பான்.
நாங்க
உழவுவோட்டுறப்ப,
வெத்துல
போட
முடியாது.
நா
என்ன
செய்யிவேன்?
நாலு
முடிப்பா
வெத்தில
பொயிலயக்கட்டி
மாட்டுக்
கழுத்தில
செருவிருப்ப
அங்க
இங்க
அவம்பாத்திருக்கிற
சமயம்
பாத்து,
எடுத்துப்
போட்டுப்பேன்.”
சம்முகத்துக்குக்
கண்கள்
பனிக்கிறது.
ஆனால்
காந்திக்கோ
இதெல்லாம்
கேட்டுப்
புளித்த
கதைகள்.
அலுப்பாக
இருக்கிறது.
என்றோ
இருந்த
அவல
நிலையை
இன்னும்
சொல்லிக்
கொண்டே
இருப்பதில்
என்ன
புண்ணியம்?...
மீனைக்
கழுவிச்
சட்டியில்
போட்டுவிட்டு,
மிளகாய்
அரைக்கக்
குந்துகிறாள்.
இந்தக்
கதை
ஓயாது.
“நாம
நாயம்
வேணும்னு
கொடி
பிடிச்சிட்டு
நின்னம்.
அப்ப,
வெளியேந்து
தெக்குத்தியாளுகளக்
கொண்டாந்தாங்களா?
அவங்க
இத்தவுடக்
கொறச்ச
கூலிக்கு
வந்தாங்க.
நாங்
கேட்டேன்.
ஏண்டா
எங்க
வயித்தில
மண்ணள்ளிப்
போடுறிய?
ஒங்களப்
போல
ஒழச்சிப்
பிழச்சிருக்கம்
நாங்க.
இப்படித்
துரோகம்
செய்யலா
மான்னு.
அதுக்கு
அந்தாளு
சொன்னான்
: “நாங்க
என்ன
செய்யிவம்.
மண்ணும்
தண்ணியும்
சேறா.
பச்சுனு
இருக்கிற
பூமி,
நீங்க
பேசுவீங்க,
போராடுவீங்க,
மானம்பாத்த
மண்ணுன்னா,
அப்பத்
தெரியும்
பசிக்கொடும”யின்னான்.
நாம
இன்னம்
கரையேறாம
தான்
நிக்கிறோம்.
பெத்தவங்கன்னு
ஆயியப்பனைச்
சொல்லுகிறோம்.
மண்ணும்
மானமும்தா
மனுசனுக்கு
பாக்கப்
போனா
ஆயியப்பன்.
அதுங்களே
பராரியா
வுட்டுப்
போடவும்
மனுசன்
என்ன
பண்ணுவான்?
பஞ்சான
குஞ்சும்
குடும்பமுமா
எடுபட்டு
வந்தாங்க.
அடியாளுங்க
முச்சூடும்
அங்கேந்துதா
வந்திருந்தானுவ
மூலையான்னு
இங்கே
இருக்கிறானே,
அவ
யாரு?”
“ஆரு?”
“இங்கதா
கிளியந்தொறயோட
வெள்ளாழத்
தெருவில
வீடு
வாங்கிக்கிட்டிருக்கிறான்.
அவெ
எங்க
மிராசு
கிட்ட,
அடியாளாத்தா
வந்தா.
இவனும்
சந்தனசாமின்னு
ஒராளு,
நின்னான்னா
சொடலமாடன்
கணக்க
இருப்பா.
ரெண்டு
வைப்பு,
அவளுவளும்
வந்து
இருந்தாளுவ...”
“எங்க?”
“இங்கியேதா,
பண்ண
வீட்டில
வச்சிருந்தானுவ,
அப்பல்லாம்
இந்த
அம்மங்கொளம்
மாமுண்டி,
தின்னா
முளுக்கோளியும்
படி
அரிசிச்சோறும்
திம்பா.
சாராயங்
குடிக்கமாட்டான்,
கள்ளுதாங்
குடிப்பா.
ஆளு
இப்பிடித்
திம்முனு
இருப்பான்.
நம்ம
பொம்பிள
சாணி
தட்டுறாளே
அந்த
மதகுக்கு
இந்தண்ட
மிராசு
அடியாளுவ,
நாங்க
அந்தப்
பக்கம்
அரிவா,
மம்முட்டி,
கம்புன்னு
கெடச்சதெல்லாம்
வச்சிட்டு
வந்தது
வருதுன்னு
நிக்கிறம்.
சந்தனச்சாமி
இந்தாண்ட
பூந்து
வார,
தடி
சும்மா
சுழலுறது.
மாமுண்டி
பாஞ்சா,
ஒரே
வெட்டு.
இந்தப்பய
முலையான்,
அப்ப
எடுத்த
ஓட்டம்,
பெருமா
கோயில்
மூலையில
போயி
ஒட்டிக்கிட்டாம்
பாரு..
அவனுக்குப்
பேரே
தெரியாம
மூலையான்னே
பேரு
வந்திச்சி...”
கிழவர்
சிரிக்கிறார்.
“நேத்து
முந்தாநா
கூட
வந்திட்டுப்
போனாரு...”
“நீங்க
எந்த
மாமுண்டியச்
சொல்றீங்க
தாத்தா?...
இப்ப
எலக்ஷனுக்கு
மின்ன...
கொலையாகிப்
போனாரே,
அவரா?”
“ஆமா...
அப்ப
போலீசில
புடிச்சி
கேஸ்
நடந்து
ஏழு
வருசம்
உள்ள
இருந்துட்டு
வந்தா.
அவனத்தான்
குத்திப்
போட்டானுவ...
எங்கியோ
ஆரம்பிச்சு
எங்கியோ
போற.
அது
பாரத
யுத்தம்டான்னு
நம்ம
ஐயுரு
சொல்லுவாரு...
சந்தன
சாமி
செத்ததும்
மிராசுதாரு,
அந்தப்
பொம்பிளகளுக்கு
தலா
ஆயிர
ரூபா
குடுத்தாராம்.
ஆனா?
அவளுவ
சொன்னாளுவளாம்,
நாயத்துக்குப்
போராடுறவங்க
அவுங்க.
இவங்க
இப்ப
அடியாளா
போறப்பவே
நாங்க
வாக்கரிசி
போட்டுத்தா
அனுப்பிச்சம்னு
போயிட்டாவளாம்.
காசக்கூட
வாங்கிக்கலியாம்.
அப்புடி
அது
உணுமயில
நாயத்துக்கான
யுத்தம்தா.
ஆனா
எதிராளிய
தருமமா
நடக்கல.
போலீசு
தருமமா
பாக்கல.
சரளக்கல்லப்
போட்டு
முட்டிக்கால்
போட்டு
வரச்சொல்லி
அடிப்பானுவ...
பொம்பிளகள.
எப்பிடிச்
சொல்றது?
தலைப்பய!
மண்ணையும்
தண்ணிரையும்
குழச்சி
அப்பப்ப
வித்தூணி
உசிர்ப்பச்சை
கண்டு
வளத்து
மணியாக்கி
வயித்துப்
பசி
தீர்க்கிற
தொழிலச்
செய்யிறவன்
சேத்துலதான்
உழண்டிட்டிருக்கிறான்.
ஆனா
மனசொப்பி
அந்தப்
பயிரயே
அழிக்கமாட்டான்.
சுமையா
இருக்குதுன்னு
மனுச
உயிர
அழிப்பானா?
செம...
அநியாயக்கார
வச்ச
செமயக்
கூடச்
செமக்கிறம்...”
சம்முகத்துக்கு
உடல்
சிலிர்க்கிறது.
பொன்னடியான்
உள்ளிருந்து
வரும்
மீன்
வறுக்கும்
மனத்தில்
மூழ்கி
உள்ளேயே
பார்வையைச்
செலுத்துகிறான்.
“காந்தியக்கா?
காந்தியக்கா?...”
காத்தானின்
மகள்
பொன்னி
இடுப்புக்
குழந்தையுடன்
கூவுகிறது.
“த
பாரு,
நாவு
எங்கமேலல்லாம்
மண்ணெடுத்துப்
போடுறான்.”
“காந்தி,
போயி
அந்தப்
பயலக்
கூட்டிட்டுவா...
போ,
போ...”
சம்முகம்
அந்தப்
பையனால்
மற்றவருக்கு
எந்தத்
துன்பமும்
வரக்கூடாது
என்ற
உணர்வுடன்
கண்டிப்பாக
இருப்பார்.
“ஏன்
காம்ரேட்
இவனுக்கு
வயித்தியம்
ஏதும்
பண்ணல...”
“...எங்கப்பா?...
அப்பல்லாம்
நான்தான்
ஓடிட்டே
இருந்தேன்.
பொம்பிள,
பிள்ளயப்
புளிய
மரத்தடில
கிடத்திட்டு
வேலை
செய்யிவா.
நாலு
வருசம்
வரயிலும்
கவனிக்கல.
பிறகும்கூட,
மரத்தடிலே
அந்த
தோசம்
இந்தக்
காத்துன்னு
ஏதோ
சொல்லிட்டிருந்தாங்க.
ராவில
அப்பல்லாம்
ஊளயிடு
வான்.
அப்புறம்
புதுக்குடி
டாக்டர்ட்ட
கேட்டம்.
ஒண்ணும்
பண்ண
முடியாதுன்னுதா
சொல்லிட்டாரு,
என்ன
செய்யிறது?”
“அதில்ல
காம்ரேட்,
இப்ப
ஊனமுற்றோர்
ஆண்டில்
எதனாலும்...
பாக்கலாமுல்ல...”
“என்னத்தப்
பாக்கிறது?
ஊனமில்லாதவங்க
வசதிக்கே
பாக்க
முடியல...”
காந்தி
ஆத்திரத்துடன்
அழுக்கும்
மண்ணுமான
நாகுவை
இழுத்துக்
கொண்டு
வந்து
திண்ணையில்
அதட்டி
உட்கார
வைக்கிறாள்.
பிறகு
அவர்களுக்குச்
சோறு
போடச்
செல்கிறாள்.
தட்டுக்களில்
சோறு
முதல்
நாளின்
குழம்பும்
போட்டு
மீன்
கறியும்
வைத்து
மூவரிடமும்
கொண்டு
வருமுன்
பொன்னடியான்
எழுந்து
தானே
வாங்கி
வைக்கிறான்.
“உனக்குத்
தொந்தரவு...”
காந்தி
இந்த
உபசாரத்துக்கு
எந்த
எதிரொலியும்
காட்டவில்லை.
“காம்ரேட்,
இன்டர்வியூக்குப்
போனதாச்
சொன்னாங்க,
பணங்கட்டியாச்சா?”
“அந்த
வயித்தெரிச்சல
ஏங்கேக்கிற?
ரெண்டாயிரம்
ரூபாக்கி
எங்கே
போக...?”
“அதா,
ரெண்டொரு
எடத்தில்
இப்பிடி
டொனேசன்
வாங்குறாங்கன்னு
கேள்விப்பட்டேன்.
சும்மா
கண்
துடைப்பு.
தாழ்த்தப்பட்டவர்ங்கறதெல்லான்னு...
நமக்குத்
தெரிஞ்ச
ஓராள்
இருக்காரு
நம்ம
எஸ்.என்.
இருக்காரில்ல,
அவர்
மாமா.
நெல்லு
வியாபாரம்.
இப்பிடின்னா,
ரொம்பக்
கொறஞ்ச
வட்டிக்குக்
குடுக்கிறாரு.
இப்ப,
இந்த
மாதிரி
டொனேசன்
வாங்குறாங்கறத
அம்பலப்படுத்தி
உடக்கணுமின்னாக்கூடக்
குடுத்திட்டுத்தா
அத்தாட்சி
காட்டணும்.
நா
சொல்லி
வைக்கிறேன்.
இன்னிக்குத்
தேதி
எட்டில்ல.
பன்னண்டாந்தேதி
போல
நீங்க
சங்கத்து
ஆபீசுக்கு
வந்தீங்கன்னா
வந்து
கூட்டிட்டுப்
போறேன்.”
“கடன்
வாங்கிட்டா
அடய்க்கணுமில்ல.
இப்பத்
தோணுது.
பிறகு
இவ
வேலைக்கி
இதுமாதிரி
பணம்
குடுக்கணும்னா
எங்க
போக?
பெரிய
பையன்
உதவாம
போயிட்டான்.
மூணு
வருசம்
படிக்கணும்,
அதுவரய்க்கும்
சின்னவளையும்
கட்டிக்குடுக்காம
வச்சிருக்கிறதா?
உங்கிட்ட
சொல்றதில
என்னப்பா?
பிரச்சனை
ஒண்ணோட
போறதில்லை.”
“நீங்க
அவநம்பிக்கையே
பட்டிருந்தா
எப்பிடிப்பா?
நான்
படிக்கிறதுக்கும்
அம்சு
கலியாணத்துக்கும்
என்ன
ஒட்டு?
அவள
கட்டிக்குடுங்க?...”
“கட்டிக்
குடுக்கிறதுன்னா
லேசாயிருக்கா?
உங்கம்மா
இப்பவே
மாப்பிளக்கி
வாட்ச்,
மோதிரம்
போடணும்,
இருபத்தொரு
ஏனம்
குடுக்கணும்,
அப்பிடி
இப்பிடின்னு
பிளான்
போடுறா.
ஒரு
அஞ்சு
ஆயிப்பூடும்
இதுவே,
சவரன்
என்ன
விலை
விக்கிறாங்க?
தாலித்
தங்கமே
ஆயிப்பூடும்.
கடன்
வாங்கிக்
கலியாணம்
கட்டிப்
பிடறேன்.
பிறகு
உன்
புருசன்
முனஞ்சி
படிக்க
வச்சோ
வேலை
வாங்கியோ
குடுக்கட்டும்...”
என்று
பொன்னடியானைப்
பார்த்துக்
கொண்டு
கேலியாகக்
கண்களைச்
சிமிட்டுகிறார்.
“ஆமாண்டால
பொன்னு,
நீ
கட்டிக்கிட்டுப்
பொஞ்சாதியப்
படிக்க
வச்சிக்க
மேச்சாதிலல்லாம்
அப்படித்தான்
செய்யிறா.
கட்டிக்கிட்ட
பொம்பிளய,
வூடு
கூட்டுற
துடப்பக்
கட்டன்னு
நினைக்காம,
அதுக்கு
ஒரு
அந்தசுக்
குடு...”
என்று
கிழவர்
வெளிப்படையாகப்
பொன்னடியான்தான்
அவர்கள்
தேர்ந்திருக்கும்
மருமகன்
என்று
உடைத்து
விடுகிறார்.
காந்திக்குக்
கோபம்
வருகிறது.
“எனக்கொண்ணும்
இப்ப
கலியாணம்
வேணாம்”
என்று
வெடிக்கிறாள்.
ஆசை
நிழலாடும்
கீழ்ப்
பார்வையுடன்
அமர்ந்திருக்கும்
பொன்னடியான்
திடுக்கிட்டாலும்
சமாளித்துக்
கொள்கிறான்.
எதுவும்
பேசவில்லை.
--------------
7
வயிரச்
சுடராகச்
சூரியனின்
கதிர்கள்
நாற்றுக்கட்டைச்
சுமந்து
வரும்
வடிவேலுவின்
மேனியில்
விழுகின்றன.
கருங்காலி
போன்று
முறுக்கேறிய
கறுத்த
உடலில்
அரைக்கச்சு
தவிர
உடையில்லை.
மார்பிலும்
முகத்திலும்
வாலிப
வீச்சின்
ரோமங்கள்
நாற்றுக்கட்டிலிருந்து
வடியும்
நீரில்
நனைந்திருக்கின்றன.
கரையில்
நின்று
முடிகளை
வீசுகிறான்.
சளக்சளக்கென்று
நடவு
நட்டுக்
கொண்டிருக்கும்
பெண்களிடையே
அந்தப்
பச்சை
முடிக்கட்டு
வீழ்ந்த
சேற்றைச்
சந்தனமாகத்
தெளிக்கிறது.
அம்சுவின்
பக்கம்
அது
வந்ததும்
அவள்
வேண்டுமென்று
லபக்கென்று
பிடித்துக்
கொள்கிறாள்.
ஒரு
கவடற்ற
சிரிப்பொலி
அங்கே
வெட்ட
வெளியெங்கும்
ஓர்
இரகசியச்
சேதியை
அலைகளாக்கிக்
கொண்டு
செல்கிறது.
“பாத்துக்கடி...!
என்ன
தயிரியம்?...”
“தயிரியம்
என்ன!
நாத்துக்கட்ட
இன்னக்கி
வாங்கினா
நாளக்கிப்
புள்ளய
வாங்கிக்கறா...”
மறுபடியும்
ஒரு
குபீர்ச்
சிரிப்பொலி.
சேற்றுக்
குழம்பில்
வண்ண
மலர்க்
கைகள்
பச்சைப்
புள்ளிகளை
வைத்துப்
பூமியன்னைக்குப்
பசும்
பட்டாடை
உடுத்துகிறார்கள்.
இதற்குப்
பிரதிபலனாக
அம்மை
பொன்மணிகளாய்
நெல்
மணிகளைக்
கொண்டு
வந்து
குவிப்பாள்.
குடிசை
இருட்டுக்குள்
இல்லாமை,
இருப்பு,
புருசனிடம்
சிறுமை,
பெண்ணாய்ப்
பிறந்துவிட்டதன்
பொறுப்பினால்
விழும்
சுமைகள்,
வெளிக்குக்
காட்டமுடியாத
வேதனைகள்
எல்லாம்
குமைந்தாலும்,
இந்த
வெட்டவெளியில்
விரிந்த
பசுமையில்,
அந்தத்
தளைகள்
கட்டறுத்துக்
கொண்டு
போகின்றன.
லட்சுமி
ஓரமாக
நாற்றுப்
பதிய
வைத்துக்
கொண்டு
போகிறாள்.
இது
அவர்கள்
சொந்த
மண்.
ஐயர்
பூமியில்
தாளடி
நட
வேண்டும்
என்று
முன்னதாகவே
தண்ணிர்
வருவதற்கு
முன்
பம்ப்
வைத்து
நீர்
இறைத்து
நடவு
முடித்திருக்கிறார்கள்.
இதுவும்
குறுவைப்
பயிர்தான்.
மழை
வந்து
கெடுக்காமல்
நல்ல
படியாக
விளைவெடுத்தால்
உடனே
அடுத்த
பயிரையும்
வைக்கலாம்.
“ஒ...”
என்று
சாம்பாரின்
பெண்சாதி
மாரியம்மா
பாடக்
குரலெடுக்கிறாள்.
வாழ்க்கையின்
மேடு
பள்ளங்களில்
அடிபட்டு,
கண்
குழிந்து
கன்னங்கள்
தேய்ந்து,
முடிகொழிந்து
அவளை
உருமாற்றி
விட்டாலும்,
குரலின்
வளமை
அப்படியே
இருக்கிறது.
தேம்பாகு
விழுவதுபோல்
தொய்யாமல்
துவளாமல்
அந்த
வெட்டவெளியைத்
தனக்கென்று
சொந்தமாக்கிக்
கொள்ளும்
குரல்.
“ஓ...
ஓ...
தங்கத்தால்
வீடு
கட்டி...”
இவள்
முறை
வைத்ததும்
அத்தனை
குரல்களும்
சேர்ந்து
தங்கத்தால்
வீடு
கட்டுகின்றன.
“தங்கத்தால்
தொட்டி
கட்டீ...
அங்கே
தங்கக்கிளி
பாடுதய்யா...”
குரல்
வானவெளியிலே
தங்கக்
கிளிகளைப்
பறக்கச்
செய்கின்றன.
“வெள்ளியால
வீடு
கட்டி...
வெள்ளியால
தொட்டி
கட்டீ...
அங்கே
வெள்ளிக்கிளி
களிக்குதையா...”
இந்தக்
குரலின்
அலைகள்
நெளிந்து
மின்னி
நீண்டு
ஓயும்போது
சோகம்
இழையும்
தனிமையைக்
கோடாக்கு
கையில்
வண்ண
வண்ணமாய்ப்
பூவாய்ப்
பசுமையாய்
பாவாடையும்
தாவணியும்
பின்னல்களும்
கூந்தல்
நெளி
பூசிகளும்
பொட்டும்
வளையல்களுமாக
அந்தச்
சேற்றில்
பசுமை
நாற்றுக்களுடன்
பூப்பூவாய்க்
கொஞ்சும்
விரல்களில்,
அது
இசையவில்லை.
குபீரென்று
மடலவிழ்ந்த
தாழை
மணமாகச்
சிரிப்பொலி
பரவுகிறது.
சளக்
சளக்
கென்று
சேற்றில்
கால்கள்
உறவாட,
டப்டிப்பென்று
சேற்றுத்துளிகள்
மேல்
தெளிக்க,
நாற்றுக்
கட்டுக்கள்
வந்துவிழ,
பரிகாசங்கள்
கலக்க...
அந்த
இன்பலயத்தில்
குத்தலும்
கூடப்
பாயாது
“என்னாடி
சிரிப்பு,
நெளிப்பு?”
என்று
லட்சுமியின்
அதட்டலுக்கு
ஒரு
பவிசும்
இல்லை.
“தங்கத்தால
தொட்டிகட்டி,
வெள்ளித்
தொட்டிகட்டி,
பகளத்தாலே
தொட்டி
கட்டின்னு
இந்தாயா
இழுத்துக்கிட்டே
இருக்காங்க.
அல்லாம்
கட்டி,
கிளியும்
குஞ்சமும்
தொங்கவுடனும்
பேரப்புள்ளய
எப்பப்போட்டு
ஆட்டுறது?”
என்று
சொல்லிக்
கேட்டுவிட்டு
அம்சுவைப்
பார்த்துக்
கண்ணடிக்கிறாள். “அதுக்கு
மொதலாளி
அம்மா
தயவு
வைக்கணுமில்லே...?”
வடிவு
மீசையைப்
பல்லில்
இழுத்துக்
கொண்டு
மெதுவாக
உதிர்க்கும்
பூக்கள்,
வானத்து
இறுக்கம்
தளர்ந்து
பன்னிர்
விசிறும்
காற்று
மெல்ல
நீர்பரப்பைச்
சிலிர்க்கச்
செய்கிறது.
அம்சுவின்
மொழுமொழுத்த
கையில்
பச்சையும்
சிவப்புமாக
வளையல்கள்.
லட்சுமியின்
கண்கள்
அங்கேயே
நிலைக்கின்றன.
பதியப்பதிய
வளையல்கள்.
இவளுக்கு
எத்தனை
நாட்களானாலும்
என்ன
வேலை
செய்தாலும்
வளையல்கள்
உடையா.
பழைய
வளையல்களைக்
கழற்றித்தான்
புதியவை
அணியவேண்டும்.
ஆனால்
காந்திக்கோ,
முண்டுக்கை,
இரண்டு
வளை
ஏற்ற
நான்கு
வளைகள்
உடைக்கவேண்டும்.
துணி
துவைத்தால்
உடையும்,
மாவாட்டினால்
உடையும்,
அடுக்கி
நான்கு
நாட்கள்
தங்காத
கை.
அம்சுவின்
நாற்றுகள்
பதியவில்லை.
“யாரடிவ?
மேத்
தண்ணில
மெதக்குது?
அம்மாடி
பொண்டுவளா?
ஒளுங்கா
ஊனிவையுங்கடீ!
சினிமால்ல!”
லட்சுமியின்
குரலில்
அம்சு
புரிந்து
கொள்கிறாள்.
“யக்கோ.
வார
மாசம்
மாரியம்மனுக்கு
விழா
எடுக்கப்
போறாங்களாம்.
மூலையா
வந்து
குடிசய
எடுக்கணுமுன்னு
மெரட்டிட்டுப்
போறா..."
லட்சுமி
தலை
நிமிரவில்லை.
விரைந்து
நட்டுக்
கொண்டு
செல்கிறாள்.
“பத்து
வருசமா
எடுக்கல
ஒரு
வரிசயும்,
அப்பல்லா
சாமியில்ல
ஒண்ணில்லன்னு
மெரட்டினானுவ...”
“ஆமா,
பச்சு
பச்சுனு
வெளுஞ்சாலும்
பக்கு
பக்குனு
கும்பி
எரிஞ்சிட்டுத்தா
இருக்கு.
எங்க
பாத்தாலும்
அடிதடி
சண்டை,
சும்மனாலும்
டேசனுக்கு
வாடான்னு
கூட்டிப்
போறானுவ...”
மாரியம்மாவின்
சுருங்கிய
விழிகளில்
இருந்து
ஒரு
பொட்டுக்
கண்ணிர்
அந்தச்
சேற்றில்
விழுகிறது.
“இளவட்டம்
பேசிப்
பிடுறானுவ
அதுக்கு
அநுபவிக்கிறோம்.
மின்ன
போலீசு
அடிச்சாவ,
பிடிச்சாவ
மனிசன
மனிசனா
நடத்தணும்,
கூலி
வேணும்னு
போராடினோம்.
ஆனா
அப்ப
இப்பிடி
வெலவாசியா
வித்திச்சி!
அன்னிக்கு
அரமரக்காலும்
காமரக்காலும்
கூலி
வந்தப்பவும்
ஒரே
கணக்காவும்
இப்பவும்
ஒரே
கணக்காவுமில்ல
போவுது?...”
“இவனுவ
சாமி
கும்பிட்டுட்டா
அல்லாம்
நல்லாப்
போயிடுமாக்கும்!”
வடிவு
முணமுணத்துக்
கொண்டு
வரப்பில்
ஓடிப்போகிறான்.
லட்சுமிக்கு
எதுவும்
சொல்ல
நா
எழவில்லை.
விருத்தாசலம்
பிள்ளையின்
அப்பா
அந்தக்
காலத்தில்
மிகச்
சாமானியமாகத்
தான்
இருந்தார்.
பெரிய
உடையார்
பண்ணையில்
ஒரு
காரியக்காரர்.
அப்போது
கோவில்
சாமியில்லை
என்று
தீவிரமாக
எதிர்த்து
இவர்களிடையே
எந்தச்
சாமி
கும்பிடுதலிலும்
சேரக்கூடாது
என்று
கட்டுப்பாடு
செய்த
வாலிபப்
பிள்ளைகளில்
விருத்தாசலம்
பிள்ளையும்
இருந்தான்.
சம்முகத்துக்கு
அந்த
நாட்களில்
தோழன்
தான்.
ஆனால்
சாமி
கும்பிடுதலுக்கு
அப்பால்
இவர்கள்
நிலவுடமைக்காரர்களையும்
அடக்குமுறைகளையும்
எதிர்த்துப்
போராட்டங்கள்
நிகழ்த்தியபோது,
அவர்கள்
உயர்சாதிக்காரர்களாக,
தனியாகவே
நின்றுவிட்டார்கள்.
இப்போது,
அந்தப்
பண்ணைக்
கட்டுமானமெல்லாம்
ஆட்டம்
கண்ட
பிறகு,
புதிய
குத்தகைதாரராகவும்
வியாபாரியாகவும்
தலையெடுத்துச்
செழித்து
வரும்
வருக்கத்தில்
விருத்தாசலம்
பிள்ளை,
மளிகைக்கடை,
ரைஸ்மில்,
வியாபாரம்
என்று
ஊரில்
பெரிய
அந்தஸ்தைப்
பெற்றிருக்கிறார்.
முதல்
மனைவிக்கு
இரண்டு
பிள்ளைகள்.
இரண்டாவது
மனைவிக்கு
மூன்று
பெண்கள்,
ஒரு
பையன்.
முதல்
மனைவி
இருக்கும்போதே
மறுமணம்
செய்துகொண்டாலும்,
அவள்
இப்போது
இல்லை.
மூன்று
பெண்களையும்
கட்டிக்கொடுத்திருக்கிறார்.
வீரமங்கலத்தில்
ஒரு
பையன்
மளிகைக்
கடையைப்
பார்த்துக்
கொள்கிறான்.
இரண்டாவது
பையன்
டிராக்டர்
ஓட்டுகிறான்.
இளையதாரத்தின்
பையன்
மைனராகத்
திரிந்து
கொண்டிருக்கிறான்.
இப்போது,
இவர்
அம்மன்
கோயிலில்
விழா
எடுக்க
வேண்டும்
என்று
திடீர்
சாமி
பக்தியைக்
காட்டுகிறார்.
தை
அறுவடைக்கு
முன்
இவர்கள்
ஐந்து
குடும்பத்தாரும்
கோயில்
எல்லையை
விட்டுப்
பெயர்ந்து
போகவேண்டும்
என்று
திட்டமிட்டு
நெருக்கடி
செய்வது
எதற்காக?
இரண்டொரு
விதையூன்றி
அவை
கொடியேறத்
தொடங்கியிருக்கையில்,
ஆடு
கோழிகளைப்போல்
அவற்றைப்
பெயர்த்துப்
போகமுடியுமா?
அந்த
அறுவடைக்குப்
பிறகு
கோயில்
விழாவை
வைத்துக்கொள்ளக்
கூடாதா?
இப்போது
மழைநெருக்கம்
என்று
சொல்லமுடியாது.
இப்போது
ஊன்றும்
பயிர்
பூச்சி
பிடிக்காமல்,
புகையான்
அண்டாமல்
கதிர்
பிடித்து,
வெயில்
புழுக்க
மணிபழுத்து
மழைக்கு
முன்
அரிந்தெடுக்கவேண்டும்.
எல்லாம்
கண்டங்கள்.
பிறகு
உடனே
மறுநடவு,
மூச்சுப்
பிடிக்கும்
நெருக்கடியில்
உழைக்க
வேண்டும்.
எல்லாம்
நிறைவேறி
வயிறும்
மனமும்
குளிர்ந்தால்
தானே
சாமிக்கும்
சந்தோஷமாகப்
படைக்க
முடியும்?
அன்று
வீடுவீடாக
வந்து
சாமி
கும்பிடக்கூடாது
என்று
சட்டமிட்டவன்,
இன்று
நெருக்கடியில்
கும்பிட
வேண்டும்
என்று
குடிசையைப்
பெயர்க்கச்
சொல்வது
எப்படி
நியாயமாகும்
என்று
உணரவில்லையே?
லட்சுமி
கால்
வரப்பில்
தட்டத்
திடுக்கிட்டாற்
போல்
நிமிர்ந்து
பார்க்கிறாள்.
எல்லோரும்
கையில்
கடிகாரம்
கட்டிக்
கொண்டாற்போல்
கரையேறி
விட்டார்கள்.
அம்சு
தான்
முதல்.
அவளுக்குக்
கணக்காக
வயிற்றில்
மணி
அடித்துவிடும்.
அவள்
கரையேறினால்
மற்றவர்கள்
ஒரு
விநாடி
தாமதிக்கமாட்டார்கள்.
வடிவையும்
காணவில்லை.
தொலைவில்
கருவேல
மரத்தடியில்
அவர்கள்
செல்வது
தெரிகிறது.
கால்வாயில்
சேற்றைக்
கழுவிக்
கொள்கிறாள்.
கைப்பிள்ளைக்காரிகள்
ருக்மணியும்
செல்வியும்
விடுவிடென்று
வீட்டுக்கே
சென்றிருப்பார்கள்.
மாரியம்மா
ஒடுங்கிச்
சுருங்கிய
உருவமாக
வரப்பில்
இவளுக்குப்
பின்னே
நடக்கிறாள்.
“ரெண்டு
வெத்தில
இருந்தாக்
குடேன்
லட்சுமி.
சோறொண்ணும்
எடுத்தார
இல்ல.
மேலிக்குப்
போயிதா
எதுனாலும்
வாங்கியாந்து
ஒல
வைக்கணும்.”
லட்சுமி
இடுப்புச்
சுருக்குப்
பையைத்
தளர்த்தி
உள்ளிருந்து
இரண்டு
வாடிய
வெற்றிலையையும்
பாக்கையும்
எடுத்துக்
கொடுக்கிறாள்.
நடை
விரைவாக
மறுக்கிறது.
வடிவுக்குச்
சாப்பாடு
ஒன்றும்
இன்று
இருந்திருக்காது.
கையில்
காசிருந்தால்
டிக்கடைக்குப்
போயிருப்பான்.
கருவேல
மரத்தடியில்
அம்சு
காலையில்
கொண்டுவந்த
நீர்ச்சோறும்
காரத்துவையலும்
மண்டுகிறான்
என்பது
புரிகிறது.
அம்மை
இரண்டு
வெற்றிலையும்
பாக்கும்
துண்டுப்
புகையிலையும்
கொண்டு
பசியை
அடக்கி
விடுவாள்.
அம்சு
தங்கள்
சோற்றில்
அவனுக்கு
ஒரு
பங்கைக்
கொடுப்பதில்
தாயான
அவளுக்கு
வாட்டமில்லை.
அவளும்
தலையாரியின்
தலைமகளாக,
அந்தப்
பருவத்தில்
வாழ்வின்
இனிமைகளையே
எண்ணிக்
கனவு
கண்டிருந்த
காலத்தில்
பசி
பட்டினி
தெரியாமல்
தொண்ட
ருக்குத்
தொண்டனாய்
இருட்டிலும்
வயக்காட்டிலும்
வழித்
துணைவனாகச்
செல்லும்
ஓர்
ஆண்
மகனின்
நினைவிலேயே
உருகியிருக்கிறாள்.
இந்த
நீர்ச்சகதியில்
கீறினாலும்
பசுமை
பூரித்துச்
சிரிக்கும்.
வான்கொடையில்
மனிதச்
சிறுமைகள்
ஒருபுறம்
அழுத்தினாலும்
இயற்கையின்
மலர்ச்சியின்
சுவடே
படிவதில்லை.
உழைப்புக்கும்
இயற்கையின்
அரவணைப்புக்கும்
எப்போதும்
நெருக்கம்.
சிரித்து
சிரித்து
விகசிக்கும்
பெண்மையின்
கவர்ச்சியில்,
கருகருவென்று
மின்னிக்கொண்டு
பசிய
நாற்றுக்
கட்டைத்
தூக்கி
வரும்
எந்த
ஆண்மகனும்
கிறங்காமல்
இருக்க
மாட்டான்.
மடைதிறந்து
வரும்
பெருக்கில்
எந்த
அரணுக்கும்
காவல்
இல்லையெனில்
அடித்துக்கொண்டு
போய்விடும்.
இவள்
கால்வாய்
கடக்குமுன்
அவளே
சோற்றுத்
தூக்கை
மூடிவைத்து
விட்டு
கை
கழுவ
வருகிறாள்.
வடிவு
சற்று
எட்ட
நின்று
பீடி
புகைக்கிறான்.
அம்சுவின்
முகம்
எப்போதும்போல்
பூரிப்பாக
இல்லை.
“ஏண்டி
சோறு
தின்னாச்சா?”
“அது
வீட்ல
சோறொண்ணும்
ஆக்கலியா
நேத்து.
நா
நம்மூட்டுச்
சோறு
கொஞ்சம்
வச்சுக்
குடுத்தே.”
லட்சுமி
எதுவும்
பேசவில்லை.
மீதியிருந்த
சோற்றைக்
கரைத்துக்
குடித்துவிட்டு
கால்வாயில்
தூக்கைக்
கழுவுகிறாள்.
மாலை
நான்கு
மணிக்குள்
அந்தப்
பங்கின்
நடவு
முடிந்து
விடுகிறது.
வீட்டுப்பக்கம்
வந்த
பின்னரே
கூலியைக்
கணக்கிட்டுக்
கொடுப்பாள்.
அம்சுவுக்குப்
பசியாறவில்லை.
சாதாரணமாக
வயிறு
நிரம்பவில்லையானால்
முன்னதாகவே
வீட்டுக்குச்
சென்று
ஏதேனும்
இருக்கிறதாவென்று
குடைவாள்.
ஒன்றுமில்லையெனில்
பொழுதோடு
உலையேற்றிவிடுவாள்.
இன்று
தன்
பங்குக்குக்
காசை
வாங்கிக்கொள்ள
ஓடிவரவில்லை.
கூடையில்
வழியில்
கிடைக்கும்
கள்ளி,
மட்டை
என்று
பொறுக்கிப்
போட்டுக்
கொண்டு
நாயக்கர்
வீட்டுக்குப்
போகிறாள்.
தாழம்
புதர்கள்
செறிந்த
காவாய்க்கரை.
இனி
நோன்புக்காலத்தில்
குப்பென்று
மணம்
கமழும்
குலைகளை
வடிவு
பறித்தெடுப்பான்.
பாம்பைப்பற்றி
அவனுக்கு
அச்சமில்லை.
வாலைப்பற்றி
லாவகமாகக்
கரகரவென்று
சுழற்றி
அடிப்பான்.
அம்சுவுக்கு
அவனை
அப்போது
காண்கையில்
உடல்
சிலிர்க்கும்.
வயற்காட்டில்
அவளுக்கு
நினைவு
தெரிந்த
நாளிலிருந்து
வடிவு
இணைந்த
தோழன்.
அவன்
பள்ளியில்
படித்த
நாட்கள்
அவளுக்கு
நினைவில்லை.
ஏர்கட்டி
உழுவான்.
மடைச்சீர்நோக்கி,
நாற்றுப்
பறித்து,
அரிகொய்து,
அடித்து,
வைக்கோல்
பிரித்து,
எல்லாப்
பணிகளிலும்
அவன்
இருக்கிறான்.
சட்டை
போட்டுக்கொண்டு
அவன்
டவுனுக்குச்
செல்லும்
கோலம்
மனதில்
நிலைப்பதில்லை.
வானை
நோக்கி
யாரோ
பூவிதழ்களை
வீசினாற்போன்று
உடை
மரத்திலிருந்து
கும்பலாகக்
குருவிகள்
பறந்துசெல்கின்றன.
தெற்குத்
தெருவின்
பெரிய
பெரிய
பாழடைந்த
கொட்டில்களும்
குட்டிச்சுவர்களும்
ஒருகாலத்தில்
பண்ணைவீடுகளின்
சீர்குலைவை
விள்ளும்
கொல்லைகளாக
மாறியிருக்கின்றன.
கண்காணிப்பில்லாமல்
ஆங்காங்கு
நிற்கும்
தென்னை
மரங்களும்
கூடப்
புதிய
சீரழிவைக்
காட்டக்
கள்வடியும்
பானைகளைக்
கவிழ்த்துக்
கொண்டிருக்கின்றன.
எதிர்ச்சாரியில்
புதிய
தெரு
வாகச்
சீராக
வைக்கோற்
போர்வை
போர்த்த
கூரைக்
குடிசைகள்
துப்புரவாகக்
கிளி
கொஞ்சுகின்றன.
சிறிய
விவசாயிகளான
மேல்
சாதிக்காரர்களின்
வீடுகள்
அவை.
குஞ்சிதம்
குளத்தில்
பட்டுச்
சேலை
ஒன்றை
அலசிக்
கொண்டிருக்கிறாள்.
குளத்தில்
குளிக்கவரும்
வேலம்மா,
“ஏண்டி,
ஆரு
வந்திருக்காவ
ஐயரு
வீட்டில?”
என்று
விசாரிக்கிறாள். “பெரியம்மா
வந்திருக்கு...”
“பத்து
நா
இருக்குமா?”
“இருப்பாவ
போலதா
இருக்கு.
ஐயரு
சொன்னாவ.
குஞ்சிதம்
அம்மாளுக்கு
மின்னிப்போல
முடியல,
நீ
வந்து
தண்ணி
இளுத்துக்குடு,
கூடமாட
ஒத்தாச
பண்ணுன்னாவ.”
அம்சு
இதற்கு
மேல்
பேச்சைக்
காதில்
வாங்கிக்
கொள்ளவில்லை.
நாயக்கர்
வீட்டுக்
கொட்டில்
சாணியை
வாரிப்போட்டு
விட்டு,
கிணற்று
நீரிறைத்துத்
தொட்டியை
நிரப்புகிறாள்.
சத்தம்
கேட்டுப்
பெரியம்மா
வருகிறாள்.
“என்னடி
அம்சு?
நேத்து
கடவீதில
கலாட்டாவாமே?”
அம்சு
தலை
நிமிர
மாட்டாள்.
“எனக்குத்
தெரியாதுங்கம்மா!”
“என்னடி
தெரியாது?
வடிவப்
போலீசுக்காரன்
கூட்டிப்
போயி
நாலு
தட்டு
தட்டி
அனுப்புனானாமே?”
“ஆரு
சொன்னது
பெரியம்மா?”
“ஆரு
சொல்றது?
ஊரேதாஞ்
சொல்லுது!
அருணாசலம்
கடைக்குப்
போனேன்.”
நாயக்கர்
வீட்டம்மாவுக்கு
வம்பு
பிடிக்கும்.
இந்தம்மாவின்
புருசர்
உயிரோடு
இருந்த
காலத்தில்,
அவர்களுக்காகக்
கொடி
பிடிக்கும்
தலைவர்களில்
ஒருவராக
இருந்தார்.
அவர்
மறைந்த
பிறகு
தலைமுறைகளில்
எவரும்
ஊர்
மண்ணில்
ஒட்டவில்லை.
நிலங்களை
எல்லாம்
விற்று
விட்டார்கள்.
பெரிய
பங்களாவில்
வெளவால்கள்
குடியிருக்கின்றன.
பளபளக்கும்
கல்பாவிய
கூடங்களும்,
முற்றங்களும்,
முகப்புக்
கட்டிய
மாடியும்
பாழடைந்து
கிடக்கின்றன.
பெரியம்மா
மட்டும்
வெள்ளைச்
சீலையை
உடுத்துக்
கொண்டு
பின்கட்டு
வீட்டில்
புழங்கிக்
கொண்டிருக்கிறாள்.
இவள்
வாழ்க்கைக்கு
மகன்கள்
எதுவும்
பணம்
கொடுப்பதாகத்
தெரியவில்லை.
கள்
குத்தகைப்
பணம்,
அற்பமான
நிலத்தின்
விளைவு
என்று
காலம்
தள்ளுகிறாள்.
கடைசி
மகன்
கண்ணனும்
இவள்
அண்ணனும்
சம
வயசுத்
தோழர்கள்.
கண்ணனுக்குக்
கல்யாணமாகி
ஒரு
குழந்தையும்
இருக்கிறதாம்.
ஆனால்
அவன்
மனைவி
இங்கு
வந்து
அம்சு
பார்த்ததில்லை.
பெரியம்மா
மட்டும்
அடிக்கடி
அவலிடித்துக்
கொண்டும்,
மாவிடித்துப்
பணியாரம்
சுட்டுக்கொண்டும்
பேரப்
பிள்ளையைப்
பார்க்கப்போவாள்.
அம்மாளுக்கு
வம்பு
என்றால்
சீனி
லட்டுதான்.
“கோயில்
சுத்துல
குடிசயப்
போட்டுட்டு
அங்கியே
கூச்ச
நாச்சமில்லாம
கன்னுக்குட்டியத்
தோலுரிச்சிக்
கண்டம்
போடுறானுவன்னு
விருத்தாசலம்
கத்தினானாம்.
எங்கிட்டக்கூட
முன்ன
வக்கீலையரு
சம்சாரம்
வந்தப்ப
சொன்னா.
எங்க
பார்த்தாலும்
சண்டையும்
கறுப்புமாயிருக்கு.
பத்து
வருசமா
முடக்கிப்போட்ட
கோயிலைப்
பார்க்கணும்.
அவ
ஊர்த்
தேவதை.
நான்
கூட்டு
வுருத்தாலத்துக்கிட்டச்
சொன்னேன்னாங்க.
இந்த
அம்மனுக்கு
அந்த
நாள்ள,
எங்க
மாமனார்
நாள்ள
திருவிழா
எடுப்பாங்க.
காசுமாலை,
சரப்பளி
ஒட்டியாணம்,
பதக்கம்,
ஜடை
மொக்கு,
முத்துப்
பதிச்ச
தலைசாமான்,
எல்லா
நகையும்
போட்டு,
பத்து
நா
விதவிதமா
அலங்காரம்
பண்ணுவாரு,
குருக்கள்.
இப்ப
இருக்கிறாரே,
இவருக்கு
மாமா.
அதெல்லாம்
ஒழுங்கு
பண்ணணும்னுதா
வந்தேன்னா.
அதா,
உங்க
தலையாரி
தானே
சம்முகம்,
கூப்பிட்டுச்
சொல்லுங்கன்னா.
உங்கப்பன்
எங்க
ஆளயே
காணம்டீ?”
“ஐயாவுக்கு
உடம்பு
நல்லால்ல
பெரியம்மா...”
“என்னாடி
ஒடம்புக்கு?
அன்னிக்குக்
கோபாலு
சொன்னா,
அப்பா
டவுனுக்குப்
போயிருக்காருன்னு?”
“அன்னிக்கும்
உடம்பு
சரியில்லதா,
அக்காள்
காலேஜில
சேக்கணும்னு
லட்டர்
வந்திச்சி,
போனா...”
“அடி
சக்கை,
என்னாடி
காலேஜி,
இனியும்?
அதாம்
பத்து
பதினொண்ணுன்னு
படிச்சாச்சே?
பொட்டப்
புள்ளங்களக்
காலத்துல
கட்டிக்குடுக்காம
என்னாடி
படிப்பு?
உங்கப்பனுக்கே
தன்
நிலை
தெரியாமப்பூடும்
சில
சமயம்...”
அம்சு
தலை
நிமிரவில்லை. "ஏற்கனவே
உங்கக்கா
ஆளமதிக்கமாட்டா,
உடயார்
வீட்டுல
மக
பெத்து
தொட்டில்ல
போட்டாங்க,
கூப்பிட்டனுப்பினாங்கன்னு
போனே,
இவ
வந்திருந்தா.
திரும்பி
எங்கூடத்தா
வண்டில
வந்தா.
அடுப்பு
இடிஞ்சி
கெடக்கு.
குளத்துமண்ணு
கெடக்கு
ஒரு
கூட
அள்ளிட்டு
வாடி
மம்முட்டிய
எடுத்திட்டுப்
போயின்னேன்.
நாளக்கி
வந்து
தாரேன்.
இப்ப
நேரமாச்சின்னு
போனா,
போனவதா.
ஒங்கிட்ட
சொல்லலான்னா
நீ
காலில
கஞ்சிய
வடிச்சிட்டு
வருவ.
மக்யா
நா
உங்கம்மா
வந்து
மண்ணுரெண்டுகூட
போட்டிட்டுப்போனா.
அவ்வளவு
கருவம்,
கவுரெத
இப்பவே
காலேஜிலப்
படிக்கப்
போட்டுட்டு
எங்கேந்து
புருசன்
தேடறது?
ஏரோட்டுற
பயலே
மோதிரம்,
வாட்சுன்னு
கேக்கறான்.
சாமான்லாம்
உச்சிக்குப்
போயிருக்கு.
இதில
என்ன
எடுப்பு
காலேசி,
கையேசின்னு?”
தொட்டி
நிரம்பியாயிற்று. “போய்
வரட்டுமா”
என்ற
பாவனையில்
நிற்கிறாள்.
“உன்
தாத்தா
மாமன்
லாம்
இந்த
வீட்டு
உப்பைத்
தின்னவங்கதா.
இப்ப
சங்கம்
அது
இதுன்னு
பவராயிட்டான்
உங்கப்பன்.
கள்ளுக்குக்
காசில்லன்னு
உங்க
தாத்தா
தலயச்
சொறிஞ்சிட்டு
நிப்பான்.
ஒருத்தன்
எட்டிப்
பார்க்கிறதில்ல.
நானும்
ஒரு
முருங்கப்போத்துக்
கொண்டாந்து
இப்பிடி
நட்டுவைக்கச்
சொல்லுன்னு
எத்தினி
நாளா
சொல்லிருக்கிறேன்.
தேஞ்சா
பூடுவானுவ?
விசுவாசமே
இல்லாம
பூட்டுது?
எங்கையால்லாம்
இல்லாம
நீங்க
இன்னிக்கி
இப்பிடித்
தலையெடுத்திருப்பீங்களா?”
இது
ஒரு
பெரிய
தொணதொணப்பு.
கத்திரித்துக்
கொண்டுவர
முடியாமல்
தேனிக்குளவி
போல்
கொட்டும்.
அம்சுவுக்கு
நேரமாகி
இருட்டிவிட்டால்
குளிக்கமுடியாது.
சேலை
நனைந்துவிட்டது.
ஒரு
வழியாகக்
கத்திரித்துக்கொண்டு
குளத்துக்கு
வருகிறாள்.
கூடையைக்
கரையில்
வைத்துவிட்டுச்
சேலையை
ஒரு
பகுதியை
மாராப்பாகச்
சுற்றிக்கொண்டு
மற்ற
ஆடைகளைக்
கசக்குகிறாள்.
மேற்கே
வானில்
செம்மை
பரவி,
கீழ்த்திசையில்
செறிந்த
கருமையுடன்
முத்தமிடுகிறது.
குளத்தில்
அமிழ்ந்து
அந்த
நீர்ச்சுகத்தில்
ஆழ்ந்து
போகிறாள்.
சற்று
எட்ட
திடுதிடுவென்று
குளத்தின்
அமைதியையே
கலக்கும்
வண்ணம்
கோவணத்துடன்
ஒருவன்
பாய்ந்து
முழுகுகிறான்.
இவள்
சட்டென்று
கரையேறிச்
சேலையை
இழுக்கையில்
அவன்
குரல்
இனிமையாய்ப்
பாய்கிறது.
“ஏ
அதுக்குள்ளாற
ஏறிட்ட?
நா
வந்திட்டேன்னா?”
“பின்ன,
பொம்பிள
குளிக்கையில
வந்து
எருமகணக்கா
வுழுந்தா?”
குளத்தில்
நெளியும்
ஈரச்சேலையைப்
பற்றி
உதடுகளில்
அழுத்திக்கொள்ளும்
குறும்பில்
இன்னும்
கோபம்
ஏறுகிறது
அவளுக்கு.
“சீ...”
சேலையைப்
பிடுங்கும்
கோபத்தில்
இனிமை
கொப்புளிக்கிறது.
ஏறி
நெருங்கி
வந்து
அவள்
எதிரே
விழிகளைக்
கூர்மையாக்கி,
பார்த்துக்கொண்டே
நிற்கிறான்.
வானின்
செம்மையைக்
கருமை
முழுதுமாகத்
துடைத்துவிடுகிறது.
ஒற்றை
நட்சத்திரம்
கீழ்வானில்
தோன்றுகிறது.
“அம்சு...”
ஈரச்சேலை
மீது
வளையும்
கையை
அகற்றுகிறாள்.
“உங்கம்மா
என்னமே
நினைச்சிட்டாங்களா
அம்சு?”
“என்னாத்துக்கு?”
“நீ...
நீ
எனக்கும்
சோறுவச்சியே
அதுக்கு!”
“இனிமே
வீட்டுக்குப்
போனாதா
தெரியும்.
கோச்சிட்டா,
அதுக்கு
நீ
என்ன
செய்யப்போற?”
“நா...
நாளக்கி
எங்கூட்டந்து
சோறு
கொண்டாந்து
குடுப்பே...!”
இடுப்பைப்
பற்றி
வளைத்து
நீருள்
இழுக்கிறான்.
இனிமைச்
சிலிர்ப்புக்கள்
உடலெங்கும்
மின்
துகளாய்ப்
பரவுகின்றன.
புதிய
கன்றுக்குட்டியைத்
தொட்டால்
அது
சிலிர்ப்பது
போல்
அவள்
நெளிகிறாள்.
“அம்சு,
நாம்
போயி,
உங்கையாகிட்ட,
முதலாளி,
அம்சுவ
நாங்
கட்டிக்கிறேன்.
நா
வேற
பொண்ண
நினைச்சிப்
பாக்கமாட்டேன்னு
சொல்லப்போறேன்.”
“ஐயோ,
அவுசரப்பட்டா,
எப்பிடி?
எங்கக்கா
கல்யாணம்
ஆகாம
என்ன
பத்திப்
பேசுறதா...?”
“உங்கக்கா
கலியாணம்
எப்ப
ஆவும்...?”
“அதெப்படி
எனக்குத்
தெரியும்?”
“அதுவரைக்கும்
நாம்
பொறுக்கமுடியாது
அம்சு...”
“...எங்கையா,
ஒருமான்னாலும்
சொந்தமா
நிலம்
வச்சிருக்கிற
ஆளா
பாத்துதா
கட்டிக்
குடுக்கிறதாச்
சொல்லிட்டிருக்காரு.
ஏன்னா
ஒரு
நா
சோறில்லாம
மக
இருக்கமாட்டான்னு
அவருக்குத்
தெரியும்.”
“பொஞ்சாதியவச்சிச்
சோறுபோட்டுக்
காப்பாத்தாத
பயன்னு
நினைச்சிருக்கிறாரா
அவுரு?...
எனக்குக்
காலும்
கையும்
இருக்கு
ஒரு
மான்ன,
வேலி
வேலியா
நெலம்
இருந்திச்சி
எங்களுக்கு
மின்ன.
ஒனக்குத்
தெரியுமா?”
“எங்க?”
“அதா,
நாகப்பட்ணத்துக்குக்
கெளக்க.
அம்புட்டும்
எங்க
நெலந்தா...”
“நாகப்பட்ணத்துக்குக்
கெளக்க...
அப்பிடீன்னா
கடலில்ல?”
“ஆமா.
அதெல்லா
நம்ம
நெலந்தா.
தண்ணியாப்
போச்சு.”
ஒரே
சிரிப்பு.
“நாம
ஒருக்க
நாகபட்ணம்
போவணும்.
கப்பல்
பார்க்கணும்.”
“என்னா
பெரி...ய
கப்பல்?
நாம
மானத்தில
போற
ஏரோபிளேனில
பறக்கணும்னு
சொல்லு
அம்சு...”
நீருக்குள்
அவளை
இறுக
அணைத்துக்
கொள்கிறான்.
காதோடு
கேட்கிறான்.
“இப்ப
மானத்தில்
போறாப்பில,
பறக்கிறாப்பல
இல்லை?”
----------------
8
விளையாட்டுப்
போல
ஒருவாரத்துக்கு
மேலாகிவிட்டது.
சம்முகத்தால்
நடக்க
முடியவில்லை.
வீக்கம்
இருக்கிறது;
மஞ்சளாகிப்
பழுக்கவுமில்லை.
காலையும்
மாலையும்
வரப்பிலும்
வாய்க்காலிலும்
நடக்கவேண்டிய
ஒருவருக்கு
முடங்கிக்
கிடப்பதும்
மிகக்
கடினமாக
இருக்கிறது.
ஒருநடை
டவுனுக்குப்
போகலாம்
என்றால்கூட,
பஸ்
நிற்குமிடம்
வரையிலும்
நடக்கமுடியாது.
யாரிடமேனும்
வண்டி
கேட்க
வேண்டும்.
யார்
கொடுப்பார்கள்!
பழைய
வேம்பு
ஒன்று
ஐயர்
நிலத்தில்
இருக்கிறது.
அதை
வெட்டி
ஒரு
வண்டி
செய்து
வைத்துக்கொண்டால்
மிக
உதவியாக
இருக்கும்.
ஆனால்
எத்தனையோ
எண்ணங்களைப்
போன்று
அதுவும்
முதிர்ந்து
பலன்கொடுக்கும்
என்ற
நம்பிக்கை
இல்லாமல்
மங்குகிறது.
அன்றுமாலை
விளக்குவைக்கும்
நேரம்,
லட்சுமி
சாமான்
வாங்கக்
கடைக்குச்
சென்றிருக்கிறாள்.
காந்தி
திண்ணையில்
முழங்கால்களைக்
கட்டிக்கொண்டு
அமர்ந்திருக்கிறாள்.
வெள்ளையாக
இருட்டில்
தெரிகிறது.
அந்த
நேரத்தில்
குடித்துவிட்டு
வரும்
ஆண்களில்
யாரும்
அத்தனை
வெள்ளைத்
துணிக்குரியவராக
இருக்க
மாட்டார்கள்.
ஏதோ
ஓர்
ஆர்வத்தில்
உந்தப்பட்டவளாகக்
காந்தி
எழுந்து
வாயிலில்
வந்து
நிற்கிறாள்.
“ஏம்மா,
காந்தி?
சம்முகம்
இருக்கிறானா?”
“இருக்காரு!...
அப்பா!”
என்று
உள்ளே
நோக்கிக்
காந்தி
மெதுவாகக்
குரல்
கொடுக்கிறாள்.
“விருத்தாசலம்
பிள்ளையும்
மூலையாரும்
வாராங்க...”
சம்முகம்
மெள்ள
எழுந்திருக்கிறார். “வெளக்க
ஏத்தி
வாசல்ல
வை”
என்று
கூறிவிட்டு
வாயிலில்
வந்து
நின்று
கை
கூப்புகிறார்.
“வாங்க
வாங்க...”
திண்ணையில்
வந்து
உட்காருகின்றனர்.
“என்னப்பா?
ஒடம்புக்கென்ன?”
காந்தி
சுவரொட்டி
விளக்கொன்றை
ஏற்றிக்கொண்டு
வந்து
ஓரமாக
வைக்கிறாள்.
“கால்ல
முள்
குத்தினாப்பல
இருந்திச்சு.
இப்ப
என்னன்னே
புரியல.
குத்துவலி
ஒரு
வாரமா
மஞ்சக்
குழச்சிப்
போட்டு,
அந்தி
மந்தாரை
இலை,
ஊமத்தை
இலை
கொண்டாந்து
வாட்டிப்
போட்டு,
புளி
குழச்சிக்
காச்சிச்
சூடா
தேச்சி
வச்சு
எல்லாம்
பாத்தாச்சி.
பளுக்கவுமில்ல,
உடையவுமில்ல.”
“அட?
டாக்டரிட்ட
யார்ட்டன்னாலும்
காட்டக்கூடாது?”
“அதான்
வீரமங்கலம்
போறதுன்னாலும்
வண்டிவேணும்,
இங்கதா
டாக்டர்
யாருமில்ல.
டவுனுக்குப்
போயிக்
காட்டலான்னாலும்
வண்டியில்ல.”
“இது
பாத்தா
வாதக்
கோளாறாட்டும்லா
தோணுது?
சுக்கு
வேலிப்பருத்திய
அரச்சிப்
போட்டுப்
பாரு.
கப்புனு
அமுங்கிடும்.”
மூலையாரின்
வைத்தியம்
இது.
“நடவு,
உழவு,
பூச்சிமருந்து
வாங்கிட்டு
வந்து
அடிக்கணும்.
நான்
நின்ன
எடத்தில்
நிக்காம
சுத்தினாத்தா
முடியும்.
வீட்டில
பொம்பிளயே
முழுசும்
அங்க
இங்கே
போயிப்பாக்கணும்னா
எப்பிடி?
ரொம்பச்
சங்கட்டமாயிருக்கு.”
“அதெல்லாம்
சரியாப்பூடும்.
இதெல்லாம்
ஒரு
நேரம்
பத்தாத
கோளாறுதான்.
பத்து
வருசமா
அம்மனுக்கு
ஒண்ணும்
செய்யாம
போட்டுட்டம்.
இப்ப
விட்டிடக்கூடாது.
போன
வருசம்
பாரு,
மழவந்து
குறுவபூரா
பாழாப்
போச்சி,
கோடயில
மாடு
கன்னெல்லாம்
சீக்கு
வந்து
அதும்
கோளாறாப்
போச்சி.
இதுக்கெல்லாம்
என்ன
காரணம்?...
நாம
இன்னிக்கு
ஊருல
ஒரு
மதிப்பா
தலையெடுத்த
பிறகு
நாமதா
முன்ன
நின்னு
நடத்தணும்.
வக்கீலையரு
சம்சாரம்
வந்து
‘அப்பவே
எல்லாம்
செய்யிங்க,
வீட்டு
இரும்புப்
பொட்டில
நவ
நட்டெல்லாம்
இப்பவும்
பூதம்
காக்குற
மாதிரி
எதுக்கு
வச்சிருக்கிறது.
சாமிக்கின்னு
இருக்கிறத
சாமிக்குச்
செய்யணும்’னு
சொன்னாங்க
அந்தக்
காலத்தில
ஊரில
எல்லாம்
சேந்து
அம்மனுக்குன்னு
ஒதுக்கி
வச்ச
சொத்து...
அதனால,
விழா
எடுக்கிறதுன்னு
தீருமானமாயிட்டது.”
“அதா
மின்னயே
சொல்லிட்டீங்களே?”
“சொன்னேன்,
ஆனா
நீ
ஒரு
ஆக்ஷனும்
எடுக்கலியே?
கோயில்
வளவில
இந்த
அஞ்சு
பேருதா
குடிசய
வச்சிட்டு,
கோளி
ஆடுன்னு
குடியேறி
ஸ்திரமாயிட்டாங்க!
போன
தை
அறுப்பும்
போதே
இப்படி
ஒரு
உத்தேசம்
இருக்குன்னேன்.
சாடையா
வேற
எடம்
போகட்டும்னு.
போனானுவளா?
உன்ன
ஆளயே
காணுறதுக்கில்ல.
நீ
வெவசாய
சங்கம்,
மாநாடு,
பேரணின்னு
எப்ப
பார்த்தாலும்
அங்க
இங்க
போயிட்டிருக்கிற,
விழா
எடுக்கிறதுன்னா
முதல்ல
வளவு
முச்சூடும்
துப்புரவாக்கி,
கோயிலப்
புதுப்பிக்கணும்.
முன்னாடி
ஒரு
மண்டபம்
மாதிரி
போடலான்னு
மணிகாரரு,
சொன்னாரு...”
“அதுக்கெல்லாம்
நாங்க
ஒண்ணும்
இப்ப
தடை
சொல்லலீங்க.
ஆனா,
ஆளுவ
எல்லோரும்
இப்ப
உழவு
நடவுன்னு
இருக்கயில,
எப்பிடி
இதச்
சொல்லுறது.
நீங்க
யோசிச்சிப்
பாருங்க...”
“அதா
தலக்கி
அம்பது
ரூபா
குடுத்துடறேன்னு
சொன்னனே?”
“அது
சரிதாங்க,
இப்ப
வேலை
இருக்கறப்ப
அவங்க
நாலு
காசு
சம்பாதிச்சாதா
உண்டு.
அவனுவங்க
குடிசயப்
பேத்திட்டுப்
போவணுமின்னா
அஞ்சாறு
நா
தவக்கமாகும்.
ஏதோ
புடல்
பாகல்னு
போட்டிருக்காங்க.
அதனால
நீங்க
ஒரு
ரெண்டு
மாசம்
பொறுங்க.
புரட்டாசி
அப்பிசில...”
“அப்ப
மட்டும்
நெருக்கடி
இல்லையா?
அப்பதா
குறுவ
அறுப்பு,
தாளடின்னு
பறப்பீங்க.”
“அது
சரிதா,
தை
அறுப்பு
ஆன
பிறகு
விழா
வச்சிக்குங்க.”
“அப்ப
மட்டும்
சால்ஜாப்பு
சொல்ல
மாட்டானுவளா?
வருஷம்
பூராத்தா
இப்பல்லா
வேலையிருக்கு.
ஒண்ணு
தீர்மானம்
செஞ்சா
பிறகு
மாறக்கூடாது.
இது
அம்மன்
காரியம்.
அதுனால
ஒரு
ரசாபாசமில்லாம
இந்த
வெவகாரம்
முடியணும்.
இவங்க
குடிசையைக்
கூட,
அங்கொண்ணு
இங்கொண்ணா
இஷ்டத்துக்குப்
போட்டிருக்கானுவ.
சுத்தமா
எடுத்தாத்தா,
பொண்டுவ
வந்து
பொங்கல்
வைக்க,
அடுப்புக்
கோடு
இழுக்க,
ஒரு
நாடகம்
அது
இதுன்னு
வச்சா
அல்லாம்
உக்காந்து
பாக்க
பந்தல்
போட
முடியும்.
ஒந்தலயாரிமெவ
அந்த
வடிவு
பய...”
குரல்
இறங்கி,
தீவிரத்துள்
நுழைகிறது.
“அந்த
தேவேந்திரன்
பய
இருக்கானில்ல?...
அதாம்பா?
உங்க
ஆளுதா,
இத
வேட்டுவனூரு
வண்ணார்குளம்
சேரிலேந்து
லா
படிச்சிட்டு
வந்திருக்கான்ல?”
“ஆமா?...”
“அவ
நடப்பொண்ணும்
சரியில்ல
சம்முகம்,
உம்
மனசில
கெடக்கட்டும்.
பயனுக்கு
அப்பன்
வெட்டுப்பழி
குத்துப்பழி
வாங்கி
செயிலுக்குப்
போனான்.
பின்னால
எலக்சன்
சமயத்தில
எதிராளுவளே
இவன
வெட்டிப்
பழி
வாங்கிட்டானுவ.
அம்மாக்காரி
ஆந்தக்குடியா
நாடகக்காரனோடு
ஒடிப்போனா.”
“அதெல்லாம்
தெரிஞ்சதுதா.
இவன்
படிச்சதெல்லாம்
தெரியுமே?
கெட்டிக்காரப்பய.
இப்பக்கூட
பத்துநா
மின்ன
பாத்தேன்,
அவனுக்கென்ன?”
அடி
மனதில்
ஒரு
சமயம்
காந்தி
படித்து
முடித்து,
கட்டுவதற்கு
ஏற்ற
இளைஞன்
என்ற
எண்ணம்
முளை
விட்டிருந்தது.
அவனைக்
கூப்பிட்டுப்
பேசவேண்டும்
என்று
ஆவல்
கொண்டிருந்தார்.
ஆனால்...
“அதா...
இப்பதா
தீவிரவாதிங்க
நிறையத்
தலையெடுத்திருக்காங்களே?
அஞ்சாறு
மாசத்துக்கு
முன்ன,
ஆம்பூர்
பக்கத்திலேந்து
ரெண்டாளுவ
இவன்
வூட்டிலதா
தலமறவாத்
தங்கியிருந்தானுவன்னு
எனக்குச்
சேதி
கெடச்சிச்சி.
அவனுவ
வெடிகுண்டை
வச்சிட்டு
வெளயாடுறானுவ.
அந்த
காலத்தில
இதெல்லாம்
இருந்ததுதா.
நம்ம
கீழ்த்தஞ்சைப்
போராட்டம்
நாடறிஞ்சது.
இன்னிக்கு
ஆண்டான்
அடிமையில்ல,
அரிசன
மக்களுக்கு
எல்லா
அந்தசும்
வந்தாச்சு.
அடிமைப்பட்டிருந்ததும்
அடிபட்டதும்,
பழய
கதை.
இப்ப,
இவங்க
நடமுறைய
உடக்கிறாங்களாம்.
அப்ப
நம்ம
குமரேசன்
வந்து
சொன்னா,
கிட
வுட்டிருந்த
நிலத்தில,
காவலுக்குப்
போயிட்டிருக்கயில
பாத்தானாம்.
கோவில்
வளவில
உன்னோட
ஆளுவள
வச்சித்
தூண்டிக்குடுக்கிறான்னு...”
சம்முகம்
அதிர்ச்சியுற்றாற்போல்
பார்க்கிறார்.
“இல்லாட்டி
இந்த
வடிவுப்பயல்
இவ்வளவு
எகிற
மாட்டான்.
ஏங்கிட்ட
இங்க
ஏட்டய்யா
சொன்னாரு
சரகம்
சபின்ஸ்பெட்டரு
கூடச்
சொன்னாரு.
இந்தப்
பக்கத்துல
கூட
அவனுவ
புரயோடிட்டு
வாரானுவ.
அத்தப்
பாத்துக்கிட்டே
இருக்கிறம்.
தேவேந்திரன்
பயதா
இங்க
சந்தேகப்படுற
பேர்வழி.
ஆனா,
ஒண்ணும்
சட்டுனு
பண்ணறதுக்கில்ல.
எதானும்
கேட்டா,
ஜனநாயகம்,
அநுமதிச்சி
இருக்கிற
பார்ட்டி,
காட்
வச்சிருக்கேம்பா.
ஆனா
வாட்ச்
பண்ணுறம்னு.”
“அப்பிடியா?
அந்தமாதிரி
எனக்குத்
தெரியாம
எதும்
நடக்கிறதுக்கில்லியே?”
“அட
ஒனக்குத்
தெரிஞ்சா
நடத்துவானுவ?
இப்ப
ஐயனார்
கொளத்துக்காரங்ககிட்ட
தூண்டிவுடுறான்.
வயலுக்கு
நடுவ
குடிசயப்
போட்டுக்கிடறா.
தரிசாக்
கெடந்திச்சி,
அப்ப
சரி.
இப்ப
செட்டியாரு
கைமாறினதும்
இவன்
தீவிர
வெவசாயம்னு
பண்ணிட்டா.
வயல்ல
நடவாயிட்ட
பிற்பாடு
மிதிச்சிட்டுப்
போறதுக்கென்னன்னு
கேட்டானாம்.
வடிவுப்பய
ராவில
போறான்.
தலவன்னு
பேரு
வச்சிட்டவன்
இன்னிக்கு
ஏண்டா
போராட்டத்துக்கு
எறங்காம
பொண்ணு
படிப்புன்னு
போறான்?
இவன்
இன்னிக்கு
மேலே
போனான்,
பூர்ஷ்வா
வாறான்,
அப்பிடி
இப்பிடின்னு
பேசுறாப்பல.
நீ
ஒழச்சி
நாலுகாசு
சேத்திருக்கிற.
இவனுவளுக்காக
எத்தினியோ
தியாகம்
பண்ணி
மின்னுக்கு
வந்த
உன்
பையன்
இன்னிக்குக்
கவுரவமா
படிச்சான்,
மேல்
சாதிப்
பொண்ணக்
கட்டிட்டான்.
எதோ
வூடு
கட்டிருக்கே...”
“எங்கங்க?
வீட்டுக்
கடன்
அப்பிடியே
நிக்கிது.
வாரதும்
சாப்பிடறதும்
சரியாப்
போவுது...”
“அது
சரி,
உழுதவங்க
கணக்குப்
பாத்தால்ல
அது
தெரியும்?
இவனுவளுக்கென்ன?
பயிரு
தீஞ்சாலும்
அழுவினாலும்
மழபெஞ்சாலும்
பெய்யாட்டியும்
கூலி
வாங்கிட்டுப்
போறானுவ.
பொறுப்பா
இருந்து
என்ன
செய்றானுவ?
அன்னன்னிக்குக்
கிடக்கிறத
அன்னன்னிக்கே
கள்ளுக்கட,
சாராயக்
கட,
சினிமான்னு
தொலச்சிடறான்.
பண்ணையாள்
பாதுகாப்பு
சட்டம்னு
எப்பவே
ராஜாஜி
கொண்டாந்து,
அடிமை
ஆண்டானில்லன்னு
ஆக்கி,
கூலிய
ஒசத்தியாச்சு.
ஆனா,
இப்பவும்
இவனுவ
கலியாணம்,
கரு
மாந்திரம்
எல்லாத்துக்கும்
முதலாளின்னு
தானே
குழயிறானுவ?...”
சம்முகத்துக்குக்
குறுக்கிட
நா
எழவில்லை.
“அரசு
பாலர்
பள்ளி
வச்சிருக்கா,
உணவுத்
திட்டம்
இருக்கு
எத்தினி
பேரு
தொடச்சியா
பள்ளிக்கு
அனுப்புறானுவ?
கணக்கெடுத்துப்பாரு?
மதகடில
நண்டு
பிடிச்சிட்டும்,
தெருப்
பொறுக்கிட்டும்
திரியுதுங்க.
கேட்டா
அதில்ல,
இதில்ல,
எப்பிடிப்
பள்ளிக்கொடத்துக்கு
அனுப்புறதுன்னு
பேசுறானுவ.
நாம
முன்ன
போவணும்னு
ஒரு
எழுச்சி
வாணாம்?
சும்மா
வாழுறவனப்
பாத்துப்
பொறாமை
பட்டாப்
போதுமா?”
நாயம்,
நாயம்
என்று
சம்முகத்துக்குத்
தோன்றுகிறது.
“அதா,
உம்
பொண்ணு
சின்னக்குட்டி
இருக்கிறால்ல?
அத்த
இவன்
வளச்சிட்டிருக்கிறான்.
இது
நாயக்கர்
வூட்டுக்கு
வந்து
எதோ
கழுவி
மெழுவி
சீலகீல
தோச்சிக்
குடுக்கறாப்பல.
இந்தப்
பய
போறப்ப
வரப்ப,
அத்த
வளச்சிட்டுப்
போறான்.”
“ஆரு...
வடிவையா
சொல்றீங்க?”
“ஆமா.
நீ
கவுரவமா
இருக்கிறவன்.
என்ன
ஒண்ணுன்னாலும்
நீ
பள்ளர்குடி
வாய்க்காரு,
அவன்
மாடு
திங்கிற
பறப்பயதானே?
நாளக்கி
எதுனாலும்,
ஆச்சின்னா
ஆ
ஊன்னு
அப்ப
கத்தி
பிரயோசனமில்ல.
இப்ப
உம்
பய்யன்
கவுரவமா
வேலை
செஞ்சான்.
மேச்
சாதியக்
கட்டியிருக்கிறான்.
அதுமேல
போற
வழி.
ஆனா,
இது...
சரியில்ல
பாரு?
அட
நடவுக்குப்
போறாங்க,
பொண்டுவ.
இப்ப
காலம்
ரொம்பக்
கருப்பா
இருக்கு.
மேச்சாதிப்
பொண்டுவ
அல்லாருமே
நடவுக்குப்
போறாங்க.
ஆனா
இங்க
ஒளுக்கம்
கொறயக்
கூடாது
பாரு?”
இவர்
நிறுத்தும்
நேரத்தில்
லட்சுமி
கூடையில்
சாமான்களுடன்
கொல்லை
வழியாக
உள்ளே
நுழைந்திருக்கிறாள்.
சம்முகம்
எச்சிலைக்
கூட்டி
விழுங்கிக்
கொள்கிறார்.
“என்ன
லட்சுமி!
நடவா?”
அவள்
தோளைப்
போர்த்துக்கொண்டு
வாயிற்படியில்
சார்ந்து
“ஆமாம்,
வாங்க,
அம்மால்லாம்
சொகமா?”
என்று
கேட்கிறாள்.
“எல்லாம்
சொகம்.
எங்க
சின்னக்குட்டி?
அதும்
நடவுக்குப்
போயிருக்கா?”
“ஆமாங்க.
நாயக்கர்
வூட்டுக்குப்
போயிட்டு
வருவா...”
“கொஞ்சம்
எச்சரிச்சி
வையி.
இப்ப,
கோயில்
விசயமா
வந்தோம்.
எல்லாம்
புதுப்பிச்சி,
விழாவ
நல்லபடியா
எடுக்கணும்னு
ஏற்பாடு.
சம்முகத்துக்கிட்டச்
சொல்லியிருக்கிறேன்.
என்ன
சாமியில்லன்னு
பேசுனப்ப
கூட,
பொண்டுவ
வுட
மாட்டீங்க.
நீங்க
போயி
கும்பிட்டு
வந்து
ஆம்புளகளுக்குத்
திருநீறு
குங்குமம்
கொண்டாந்து
கொடுப்பீங்க.
இப்ப
இத்தினி
வருசத்துக்குப்
பெறகு
விழா
விமரிசயா
எடுக்கணும்னிருக்கு.
பொண்டுவ
எல்லாரிட்டையும்
சொல்லிடு.
மகிலெடுத்திட்டு
விமரிசயா
குலவ
இட்டுட்டு
வந்து
பொங்கல்
வய்க்கணும்.
பொண்டுவ
இல்லாம
அம்மன்
விழா
சிறப்பு
இல்ல.”
“வச்சிட்டாப்
போச்சி...”
உள்ளே
சென்று
தட்டில்
வெற்றிலை
பாக்கு
வைத்துக்
கொண்டு
வருகிறாள்.
“வெத்தில
போடுங்க...!”
விருத்தாசலம்
பிள்ளை
மகிழ்ந்து
வெற்றிலை
போடுகிறார்;
மூலையானுக்கு
நகர்த்துகிறார்.
“இவருக்கு,
காலுதா
இப்பிடி
வீங்கிக்கெடக்கு.
வண்டி
எதுனாலும்
கிடச்சா,
ஆசுபத்திரிக்கின்னாலும்
கூட்டிட்டுப்
போயி
பாக்கலாம்.
காச்சலும்
இருக்கு.
கெடந்து
அவதிப்படுறாங்க...”
“அதா...”
புளிச்சென்று
வாயிலில்
வெற்றிலைச்
சாற்றை
உமிழ்ந்து
வருகிறார்.
“வண்டி
இருக்கு,
ஆனா
மாடெல்லாம்
ஒழவுக்குப்
போயிருக்கு.
இல்லாட்டி
ஒரு
வில்லங்கமும்
இல்ல,
தாரதுக்கு.
இவனுக்கு
ஒண்ணில்ல.
மூலையாரு
சொன்னாப்பல
வாதக்
கோளாறு,
இது
இப்பிடித்தா
இழுத்தடிக்கும்.
இஞ்சிக்குடி
வைத்தியரு
ஒரு
எண்ண
வடிச்சிக்
குடுப்பாரு.
நான்
சொல்லி
அனுப்புறேன்.
அம்மனுக்கு
வேண்டிக்க
ஒரு
கொறயும்
வராது.”
“இவங்க
படுத்திட்டதே
ஒண்ணும்
ஓடலிங்க...”
“ஒண்ணும்
வராது.
நான்
சொல்றம்
பாரு
உங்கை
ராசியான
கை
சம்முகம்.
முதல்ல
உங்கையால
பத்து
ரூபா
அம்மன்
விழாவுக்குன்னு
எளுதிக்
குடு...”
மூலையான்
இத்தனை
நேரமும்
தயாராக
வைத்திருக்கும்
நோட்டுப்
புத்தகத்தை
நீட்டுகிறார்.
“பத்து
ரூபாயிங்களா?...
என்னங்க
அவ்வளவு
போட்டுட்டீங்க?”
சம்முகம்
குழப்பத்தையும்
எரிச்சலையும்
காட்டாமல்
சிரிக்கிறார்.
“பின்னென்னப்பா?
சொந்தமா
அஞ்சு
மா
வாங்கிட்ட,
வீடு
கட்டிட்டே,
விவசாய
சங்கத்
தலைவன்.
புள்ள,
பொண்ணு
படிச்சு
கவுரமாயிட்டிங்க.
இதெல்லாம்
அம்மன்
குடுத்தது
தான?
பத்து
வருசத்துக்கு,
வருசத்துக்கு
ஒரொரு
ரூபாவச்சாக்
கூட
பத்து
ரூபாதான்?
நாயமா
உன்
அந்தசுக்கு
நூறுருபா
போடலாம்.
நா.
கஷ்ட
நஷ்டம்
ஒனந்தவன்.
அதான்
பத்தோட
நிறுத்திட்டேன்...”
சம்முகம்
நோட்டுப்
புத்தகத்தை
வாங்கிக்கொண்டு
அவர்
கொடுத்த
பேனாவாலேயே
பத்து
ரூபாய்
என்று
எழுதியதற்கு
நேராகக்
கையெழுத்துப்
போடுகிறார்.
“முதல்ல
கடஞ்சொல்ல
மாட்டே
குடுத்திடுவேன்னுதா
இங்க
வந்தோம்.”
சமூக
மதிப்பைக்
குறிப்பாக்கி
உயர்த்தி
வைக்கும்போது
மனம்
மயங்காமலே
இருப்பதில்லை.
லட்சுமி
அவனைக்
கேட்காமலே
உள்ளிருந்து
பத்து
ரூபாய்
கொண்டுவந்து
கொடுக்கிறாள்.
அவர்களிருவரும்
படியிறங்கிச்
செல்கின்றனர்.
“காந்தி,
நாகு
எங்கடீ;
அவம்பாட்டுல
எங்கனாலும்
போயிடப்
போறான்!”
லட்சுமிக்கு
அவனைப்
பற்றிய
உணர்வு
ஒரு
நொடியில்
கூடச்
சாவதில்லை.
“ல்லாம்
பாட்டியோடதா
உக்காந்திருப்பா,
புள்ளங்க
ஆடுறதப்
பாத்திட்டு!”
தாத்தா
குடித்துவிட்டு
வருகிறார்.
பின்னால்
அம்சு
ஈரச்சேலையுடன்
வீடு
சுற்றிக்
கொல்லை
வழி
நுழைகிறாள்.
சம்முகம்
உள்ளே
நடுவிட்டில்
வந்து
அமரும்போது
அவள்
உலர்ந்த
துணி
எடுக்க
வருகிறாள்.
“இங்க
வாடி!
இந்நேரம்
என்னடீ
உனக்கு?
வெளக்கு
வச்சி
எந்நேரம்
ஆவுது?
இனிமே
நாயக்கர்
வீட்டுக்கு
நீ
போக
வானாம்.
காந்தி
இருக்கிறா.
பொழுதோட
போயி
தொழுவத்தக்
கூட்டிட்டு
வரட்டும்...
தே...வடியா!...”
அம்சு
நடுங்கிப்
போகிறாள்.
“அந்த
வடிவுப்
பயகூட
இளிக்கிறதும்
பேசுறதும்
நாலுபேரு
பாத்து
பேசும்படியா...
சீச்சீ!
வெக்கங்கெட்ட
தனம்...!
எனக்கு
அவுரு
கேக்கறப்ப
தல
நிமித்த
முடியல.
நம்ம
நடத்தயப்
பாத்து
ஒரு
சொல்லு
கெளம்பிச்சின்னா,
அது
உனக்கோ
எனக்கோ
இந்த
வீட்டுக்கோ
மட்டும்
கெட்ட
பேரில்ல.
நாம
ஒரு
பெரிய
அமைப்பைச்
சாந்திருக்கிறோம்.
நமக்குன்னு
ஒரு
நாயம்
கேக்குற
ஒழுங்கும்
சுத்தமும்
இருக்கணும்.
அதுக்கு
ஒரு
கெட்டபேரு
வந்திடிச்சின்னா
நாம
சார்ந்திருக்கிற
ஒரு
அமைப்பே
சரிஞ்சி
போயிடும்.
இன்னாடா
இவன்
பெரிய
சங்கத்
தலைவன்.
இவம்
பொண்ணு
புள்ளங்களே
ஒழுங்கு
நடத்தயில்லாம
இருக்குன்னு
ஒரு
பேச்சு
வந்திச்சின்னா
எல்லாக்
கட்டுக்கோப்பும்
போயிடும்.
இன்னிக்கு
நாம
ஒரு
மனிசன்னு
நிமிர்ந்து
நிக்கிற
தயிரியம்
வந்திருக்குன்னா
அது
அந்தக்
கட்டுக்கோப்பினாலதா.
பெரியவங்க
இருக்காங்க,
உனக்கு
எது
எப்படிச்
செய்யணும்னு
அவங்களுக்குத்
தெரியும்.
அதுக்குள்ள
அசிங்கம்
பண்ணிடக்
கூடாது.
ஏண்டி?”
அம்சுவின்
முகம்
தொங்கிப்
போகிறது.
குற்றவாளியாகக்
கால்
நிலத்தைச்
சீண்டுகிறது.
“அந்தக்
காலத்தில்
பொம்பிள
நடவு
செய்யிறப்ப
குனிஞ்சதல
நிமுந்தா
மணிகாரன்
கூப்பிட்டு
அடிப்பான்.
இப்பவும்
அது
மாதிரி
ஒரு
ஒழுங்கு
இருக்கணும்
போ...!”
காந்தி
இது
தனக்கில்லை
என்பதுபோல்
வாயிற்படியில்
போய்
நிற்கிறாள்.
“இந்தப்
பொட்டங்களக்
கட்டிக்
குடுக்கிற
வரய்க்கும்
வயித்துல
நெருப்புத்தா,
வூட்டுக்குள்ள
குந்த
வச்சிச்
சோறுபோட
முடியல..."
என்று
கிழவி
முணுமுணுக்கிறாள்.
---------------
9
காலையில்
கோழி
கூவும்
குரல்
எதுவும்
கேட்குமுன்பே
விழித்தெழுந்து
விட்டாள்.
வழக்கமாக
அம்சு
சாணம்
தெளிப்பாள்.
இன்று
அவளுக்காகக்
காத்திராமல்
காந்தி
அவளே
சாணம்
தெளித்துப்
பெருக்கிவிட்டு,
முகத்தைக்
கழுவிக்
கொள்கிறாள்.
தாத்தாவுக்கு
நீராகாரம்
எடுத்து
வைத்துவிட்டு,
இவளும்
சிறிது
சோறும்
நீரும்
அருந்துகிறாள்.
பின்னர்
கூந்தலை
வாரிக்கொள்ள
அவிழ்க்கிறாள்.
செவிகளிலே
அகலமான
தங்கத்தோடு,
போன
மூன்றாம்
வருசம்
நாயக்கரம்மா
மூலமாக
அம்மா
வாங்கியிருக்கிறாள்.
அப்போதே
இது
நானுற்று
சொச்சம்
ஆயிற்று.
மாசாமாசம்
பத்தும்
இருபதுமாகக்
கொடுத்து
கடனடைத்தார்கள்.
இவளுக்கு
நீண்ட
மென்மையான
கூந்தல்.
அதை
நீண்ட
விரல்களால்
கோதி
ஒரு
இழை
மற்ற
இழையோடு
ஒட்டாமல்
குளுகுளுவென்று
சரியவிட்டுக்
கொள்வதில்தான்
பாதிப்
பொழுதையும்
இப்போதெல்லாம்
கழித்துக்
கொண்டிருக்கிறாள்.
எண்ணெய்
நிறைய
வைக்காமல்,
மென்மையாகச்
சீவி,
காதுகள்
மூடும்
வகையில்
தளர்த்திப்
பின்னல்
போட்டபிறகு
இரண்டு
கிளிப்
ஊசிகள்
கொண்டு
காதுகளில்
தோடுகள்
தெரியச்
சற்றே
தூக்கி
இறுக்கமாகப்
பின்னலுக்கடியில்
செருகிச்
சிங்காரித்துக்
கொள்கிறாள்.
“ஏண்டி?
எங்க
போப்போற
காலங்காத்தால?”
“எங்க
போக?
வீரமங்கலந்தா.
உடயாரு
சொன்னாங்க
அங்க
பால்வாடி
ஸ்கூல்
ஒண்ணு
வரப்போவுதாம்.
வேலை
விசயமா
விசாரிச்சு
வைக்கிறேன்னாரு.
காலம
எதுக்கும்
வா,
இருபத்தாறாந்தேதி.
இங்க
அந்தம்மா
ஆபீசர்
வாரான்னு
சொன்னாரு.
போலான்னு
கெளம்பினேன்...”
அப்பாவுக்கும்
கேட்கவேண்டும்
என்றுதான்
பேசுகிறாள்.
“இன்னிக்குத்தான்
சொல்ற?...”
“இன்னிக்குக்
கூடச்
சொல்ல
வாணான்னு
பாத்தேன்.
எல்லாம்
கிட்ட
வாரமாதிரி
வந்துதான
தட்டிப்போவுது?
நடக்கட்டும்
பாப்போம்னு
நினைச்சிருந்தேன்.
அதுக்குள்ளாற
எங்க
போறன்னு
கேக்குறிங்க...”
“பாபு
ஊரிலதா
இருக்கா?”
“பாபு
இங்கெங்க
இருக்கு?
அதுக்கு
பி.எச்.இ.எல்ல
வேல
கெடச்சி
எப்பவோ
போயிட்டுது.
வடக்க
எங்கியோ
இருக்கிறதாச்
சொன்னா.
சரோஜா
கூட
வீடு
இருக்கு,
போயிருக்கும்.
குழந்தை
ரொம்பச்
சின்னது.
ஆறுமாசம்
கழிச்சி
அங்கேந்து
மாத்தல்
வாங்கிடலாம்னு
சொல்லிட்டிருக்காங்க...”
“நீ
ஒரு
காரியம்
செய்யிறியா?”
“சொல்லுங்கப்பா...!”
“ஆசுபத்திரில
டாக்டர்
இருப்பாரில்ல?
அப்பாக்கு
இப்படி
வீங்கியிருக்குன்னு
சொல்லி,
உள்ளுக்கு
ஏதானும்
மருந்தோ,
மேலுக்குத்
தடவிக்க
ஏதானும்
தயிலமோ
வாங்கிட்டு
வாரியா?”
“வாரேம்பா.
டாக்டர்
பாதி
நாளும்
மாங்கொல்லை
போயிடுறார்ன்னு
அன்னிக்குச்
சொல்லிச்சி
சரோஜா.
நா,
இருந்தாருன்னா
பாத்து
வாங்கிட்டு
வரேன்.”
வீட்டை
விட்டுக்
கிளம்புவது
உறைத்தபின்
உற்சாகமும்
பரபரப்பும்
ஒன்றை
ஒன்று
விஞ்சுகின்றன.
வீரமங்கலத்தில்
யார்
நிற்கப்
போகிறார்கள்?
அது
வெறும்
சாக்கு.
இவள்
வீரமங்கலம்
எல்லையைக்
கூட
மிதிக்காமல்
மருள்
நீக்கி
ஊரைப்
பார்க்க
விரைந்து
பஸ்ஸைப்
பிடிப்பாள்.
சாலியின்
அப்பா
ஆறுமுகம்
இருக்கும்
கிராமம்
அவளுக்கு
நன்றாகத்
தெரியும்.
பஸ்ஸில்
போகும்போது
பல
முறைகள்
நெல்
புழுக்கி
அரைக்கும்
ஆலையின்
சிம்னியும்,
டிராக்டர்
மற்றும்
டெலிபோன்
கம்பிகள்
செல்லும்
வரிசையும்
மாவூரின்
புதிய
மதிப்பை
எடுத்துக்
கூறும்.
ஆறுமுகம்
இரண்டு
முறைகள்
தேர்தலில்
வென்று,
அதிகாரமும்
செல்வாக்கும்
பெருக்கிக்
கொண்டவர்.
அண்மையில்
சென்ற
தேர்தலில்
அவர்
நிற்கவில்லை.
அதற்குப்
பல
காரணங்கள்
கூறிக்கொண்டார்கள்.
ஆனால்
அதெல்லாம்
இப்போது
அவளுக்குத்
தேவையில்லை.
அவருக்கு
இப்போது
செல்வாக்கு
இருக்கிறது.
அவர்
மகனே
வந்து
அழைத்திருக்கிறார்.
ஒருமுறை
பார்த்துவிட்டால்
எப்படியும்
வேலையோ
அல்லது
மேற்படிப்பு
உதவியோ
நிச்சயம்
கிடைக்கும்
என்று
நம்புகிறாள்.
ஒரு
நல்ல
முயற்சியில்
நம்பிக்கை
வைத்துச்
செல்கையில்
பொய்
சொல்வது
குற்றமில்லை.
அந்தச்
சேலையைத்
தவிர்த்து
நீல
உடலில்
பெரிய
பச்சைக்கொடிகள்
ஒடும்
இன்னொரு
சேலையை
அணிந்து
கொள்கிறாள்.
லட்சுமி
குதிரிலிருந்து
நெல்
எடுத்துக்
கொண்டிருக்கிறாள்.
“போனா
போன
எடம்னு
உக்காந்திடாதே.
பொழுதோட
வந்திடு!”
“சரிம்மா!”
தாத்தா
பாட்டி
எவரையும்
பாராமல்
அவள்
செருப்பை
மாட்டிக்கொண்டு
விரைந்து
கிழக்கே
செல்கிறாள்.
இக்கரையுடன்
சென்றால்
தெரிந்தவர்
அறிந்தவர்
கடைத்தெருவில்
கூடுபவர்
எல்லோருக்கும்
வெளிச்சமாய்த்
தெரியும்.
கிழக்கே
சிறிது
தொலைவு
சென்று
ஆலமரத்தடியில்
கள்ளுக்கடைக்காரன்
போட்டிருக்கும்
மூங்கிற்
பாலத்தின்
வழியாகச்
சென்று
இரண்டு
கிலோ
மீட்டருக்கு
மேலுள்ள
தொலைவைக்
கடக்கிறாள்.
மகிழ்ச்சியுடன்
அச்சமுமான
பரபரப்பு
ஓர்
இனிய
கிளர்ச்சியின்
கலவையாக
இருக்கிறது.
காலைப்
பொழுதின்
கவர்ச்சிகளனைத்தும்
வாழ்வின்
முயற்சிக்குக்
கட்டியம்
கூறுவதாகத்
தோன்றுகின்றன.
நெடிய
வயல்கள்,
உழுது
போட்டிருப்பவை,
உழவுக்காக
ஊறிக்
கொண்டிருப்பவை;
நடவு
முடிந்த
வயல்கள்;
பச்சை
வெல்வெட்டுப்
பாய்
விரித்த
நாற்றங்கால்கள்,
எல்லைக்
கோயில்கள்,
குளங்கள்...
பவழ
மல்லிகையோ,
மர
மல்லிகையோ
தம்
கடைசிச்
சுவாசங்களைக்
காற்றில்
கலக்கும்
மண
இழைகள்.
குளித்துவிட்டு
மடியாக
நீர்
சுமந்து
செல்லும்
மேற்குல
ஆடவர்,
பெண்டிர்,
உழவுக்கும்
நடவுக்கும்
செல்லும்
பெண்கள்...
ஒன்றிரண்டு
போக்குவண்டிகள்...
இவளை
இனம்
கண்டு
கொள்பவர்
யாருமில்லை
என்று
நடக்கிறாள்.
மருள்
நீக்கி
கிராமத்தில்
பளிச்சென்று
வெயில்
அடிக்கிறது.
டீக்கடையில்
நாலைந்து
பேரிருக்கின்றனர்.
பஸ்
நிறுத்தம்
இங்கு
பாதுகாப்பாக
மழை
வெயில்
பாராமல்
கட்டப்பட்டிருக்கிறது.
ஆண்கள்
பகுதியில்
யாரோ
ஒரு
நகரத்துக்காரர்
மூக்குக்
கண்ணாடி
தோல்
பையுடன்
நிற்கிறார்.
பெண்கள்
பகுதியில்
ஒரு
கிராமத்துப்
பெண்.
அவள்
தாயைவிட
மூத்தவளாக
இருப்பவள்
நிற்கிறாள்.
“டவுன்
பஸ்
போயிடிச்சா?”
“எட்டா
நெம்பர்தான?
இன்னும்
வரஇல்ல...”
அவள்
நெஞ்சு
படபடக்க
நிற்கிறாள்.
எவரேனும்
பார்த்துவிட்டால்,
மருள்
நீக்கி
அப்படி
எட்டாத
இடமில்லை.
வீரமங்கலம்
செல்வதாகச்
சொல்லிவிட்டு,
வேறெங்கோ
வந்து
நிற்பது
அப்பாவுக்குத்
தெரிந்துவிட்டால்,
என்ன
நடக்கும்
என்று
சொல்ல
முடியாது.
நல்லவேளையாக
டவுன்
பஸ்
வந்துவிடுகிறது.
அதிக
நேரம்
நிற்க
வேண்டியில்லை.
இந்த
பஸ்ஸில்
வேறு
எவரேனும்
தெரிந்தவர்கள்
இருந்து,
எங்கே
போறம்மா
என்று
கேட்டுத்
தொலைக்கக்
கூடாதே?
விடுவிடென்று
ஏறி
முன்னேறிச்
செல்கிறாள்.
உட்கார
இடமில்லாத
கூட்டம்.
பெண்கள்
பக்கத்தில்
ஒரு
கிழவியின்
மீது
சாய்ந்தாற்போல
நின்றுகொள்கிறாள்.
கிழவி
ஆசனத்துக்
கடியில்
ஒரு
சாக்கு
மூட்டை
வைத்திருக்கிறாள்.
அதிலிருந்து
கறிவாட்டு
வீச்சம்
எல்லோருடைய
சுவாசங்களைப்
பற்றியும்
நலம்
விசாரிக்கிறது.
கண்டக்டர்
அவளிடம்
சீட்டு
வாங்க
வருமுன்
கிழவியிடம்
வருகிறான்.
“என்ன
ஆயா?...
மூட்டையிலே
என்ன?”
“அட
ஒண்ணுமில்ல.
முருங்கைக்கீரயும்
சுக்காக்கீரயும்
கொண்டிட்டுப்
போற...?”
அவன்
குறும்புச்
சிரிப்புடன்
மூட்டையை
உலுக்குகிறான்.
“ஏம்மா,
எங்க,
புதுக்குடியா?”
காந்திக்குக்
குரல்
தடுமாறுகிறது.
“இல்ல
மாவூரு...”
“அறுபது
பைசா
குடு...!”
ஒற்றை
ரூபாய்த்
தாள்
ஐந்து
அவள்
மறைத்து
எடுத்து
வந்திருக்கிறாள்.
கைப்பையிலிருந்து
ஒரு
ரூபாய்
நோட்டைக்
கொடுக்கிறாள்.
நாற்பது
பைசாவைக்
கொடுத்துவிட்டு
அவன்
கிழவியின்
மூட்டையை
மீண்டும்
பற்றி
இழுக்கிறான். “ஏனாயா?
முருங்கக்
கீரையா
வச்சிருக்க?”
எல்லாருக்குமே
சிரிப்பு
வருகிறது.
கிழவியும்
சிரிப்பை
அடக்க
முடியாமலே
பொய்யை
உறுதி
செய்யப்
பார்க்கிறாள். “முரங்கக்
கீரதா
ஆட்டுக்கு...”
“ஆட்டுக்கு
முருங்கக்கீரயா?
அதுக்கு
மூட்ட
என்னாத்துக்கு?
இந்த
வீச்ச
சமாசாரமெல்லாம்
பஸ்ல
தூக்கிட்டுப்
போகக்கூடாது
தெரியுமில்ல?”
“பஸ்ஸில
தூக்கிட்டுப்
போகக்கூடாதுன்னா
முதுவிலியா
தூக்கிட்டுப்
போக?”
“போ...!
வாசம்
உன்னோடயே
வரும்!...
இங்க
பாரு...
எடு
மூட்டய
கெளவீ!...”
“அட
போய்யா!
சும்மா
ஆட்டுக்குத்
தழ
கொண்டிட்டுப்
போற...
வாசம்
வருதா?”
“தழவாசனயா
இது?...
சரி
சரி
ஒரு
ரூபா
எடு!”
“எதுக்கு?”
“வாசம்
வருதில்ல?
அதுக்கு!”
“ஒரு
ரூவா
குடுத்தா
வாசம்
போயிடுமா...?”
“ஏ
கெளவீ!
என்னா
எதிர்த்துப்
பேசுற!
இல்லாட்டி
உம்
மூட்டையோட
எறக்கி
விட்டிருவேன்!
கறிவாட்டு
மூட்டய
வச்சிட்டு...
மூக்கத்
துளக்கிது!”
கிழவி
மடியில்
சுருக்குப்
பையிலிருந்து
எண்ணி
இரண்டுகால்
ரூபாய்களை
எடுத்துக்
கொடுக்கிறாள்.
“என்னா?
இன்னும்
அம்பது
பைசா
குடு!”
“இல்ல
ராசா,
இதா
இருக்கு.”
“அட
அவுராதம்
ஒரு
ரூவாய்க்கிக்
குறஞ்சி
இல்ல
கெளவி.
இதென்ன
வம்மாப்
போச்சி!”
இந்த
விவகாரத்தில்
மாவூர்
நிறுத்தத்தில்
பஸ்
வந்து
நின்றதே
தெரியவில்லை.
மாவூர்
என்ற
பெயர்ப்
பலகையைப்
பார்த்துவிட்டு
காந்தி
பரபரப்புடன்
இறங்குகிறாள்.
கிருஷ்ண
விலாஸ்
காபி
ஹோட்டல்
பெரியதாகவே
இருக்கிறது.
அருகில்
ஒரு
மிட்டாய்க்
கடை.
ஆப்பிள்
சரம்
குத்தித்
தொங்க
விட்டிருக்கும்
வெற்றிலைப்
பாக்குக்கடை.
இடப்பக்கம்
முத்தாறு
ஓடிக்
கொண்டிருக்கிறது.
ஆற்றுக்கப்பால்
வயல்களில்
பயிர்
நன்கு
வளர்ந்து
கதிர்
பிடிக்கும்
செழிப்பு.
எல்லா
இடங்களிலும்
நடவாகவே
இருக்கையில்
இங்கு
அதற்கு
முன்
பயிர்
கதிர்காணத்
தொடங்கிவிட்டதே!
பசுமையினிடையே
ஆங்காங்கு
காணும்
அறிவிப்புப்
பலகைகள்
மாவூர்
கிராமத்தின்
மாதிரி
விவசாயப்
பண்ணை
அது
என்பதைத்
தெரிவிக்கிறது.
வயல்களிடையே
செல்லும்
கப்பிச்
சாலையில்
சென்றுதான்
ஊருக்குள்
வீட்டைக்
கண்டுபிடிக்க
வேண்டும்.
ஆறுமுகம்
என்றால்
அங்கு
தெரியாதவர்கள்
இருக்கமாட்டார்கள்.
அவள்
பள்ளியில்
ஒன்பதாவது
படித்துக்
கொண்டிருக்கையில்
அவர்
ஆண்டு
விழாவுக்குத்
தலைமை
தாங்கினார்.
பாதையில்
நடந்து
சென்றதும்
புராதனமான
கோயிலும்,
குளமும்
வருகின்றன.
செம்மண்
சுண்ணாம்புப்
பட்டை
அடிக்கப்பட்ட
மதில்
சுவர்கள்.
மேற்குலத்தார்
வசிக்கும்
வீடுகள்.
யாரிடமேனும்
கேட்டால்
சொல்வார்களாக
இருக்கும்.
யாரிடமும்
கேட்கவும்
தயக்கமாக
இருக்கிறது.
மூட்டைகளை
அடுக்கிக்கொண்டு
சல்சல்லென்று
ஒரு
மாட்டுவண்டி
வருகிறது.
நின்று
அவனைக்
கேட்கலாம்
என்று
சற்று
ஒதுங்குகிறாள்.
அவனிடம்
கேட்கவே
அவசியம்
இல்லாதபடி,
பின்னால்
ஒரு
மோட்டார்
சைக்கிள்
வருகிறது.
நெஞ்சு
துடிக்க
மறந்து
போகிறது;
அந்தக்
காலையின்
ஏறும்
வெயிலில்,
தொப்பி
போன்ற
முடியும்,
கறுப்புக்
கண்ணாடியுமாக
சாலிதான்.
மோட்டார்
சைக்கிள்
அவளைக்
கண்டதும்
நிற்கிறது.
“அட
நிசந்தானா?
பொய்யில்லையே?”
கவர்ச்சியாக
ஒரு
சிரிப்பு.
அவளுக்கு
என்ன
பேசுவதென்று
புரியவில்லை. “வந்து
அப்பாவப்
பாத்திட்டுப்
போலான்னு...”
“என்னால
நம்ப
முடியவில்லை.
உங்கப்பா
- எப்படிச்
சம்மதிச்சாரு?”
“அவுரு
சம்மதிச்சு
வந்ததாச்
சொல்லலியே
நான்?”
இளநகை
அவள்
இதழ்களில்
எட்டிப்
பார்க்கிறது.
“சபாஷ்...
நா
நீ
தயிரியசாலின்னு
நினைச்சேன்.
அது
கணக்கு
சரிதான்னு
நிரூபிச்சிட்ட...”
“அப்பா
வீட்ல
இருக்காரில்ல?”
ஒரு
கணம்
சூரியனின்
வெளிச்சம்
குன்றுகிறது.
“இல்லியே?
நாகபட்ணம்
போயிருக்காரு.”
“அடடா.
அப்ப.
இப்ப
பாக்க
முடியாதா?”
“முடியாதுன்னு
ஆரு
சொன்னது?
நாகபட்ணம்
போயி
அவரப்
பாக்குறது?”
“எப்படிங்க?
இப்ப
பஸ்ஸிருக்குதா?”
“ம்...?
பஸ்ஸாலதாம்
போவணுமா
காந்தி?”
“பின்ன
எப்படிங்க
போறது?”
“பின்னாடி
உக்காந்தேன்னா
அரமணில
போயிடலாம்.
அப்பாவப்
பாத்ததும்
திரும்பிடலாம்.
பஸ்ஸுன்னா
இங்கேந்து
புதுக்குடி
போயி
வேற
பஸ்
புடிச்சிப்
போவணும்.
சொல்லப்
போனா,
நானே
அவரப்
பாக்கத்தா
இப்ப
கிளம்பிட்டிருந்தேன்.”
‘பின்னாடி
உட்காருதா.
யாருனாச்சியும்
பாத்துட்டா’
என்ற
அச்சத்தில்
அடி
வயிறு
இலைபோல்
ஒட்டிக்கொள்கிறது.
“நா...
நா...
எங்கப்பா,
அம்மாட்டப்
பொய்
சொல்லிட்டு
வந்திருக்கிறேன்.
அதுனால...”
“என்ன
பொய்
சொன்ன?...”
இதழ்களில்
குறும்பு
கொப்பளிக்க
அவளைக்
கவ்வி
விடுபவன்போல்
பார்க்கிறான்.
குறுகுறுப்பு
நாடி
நரம்பெல்லாம்
பாய்கிறது.
“வீரமங்கலம்
போயி
சிநேகிதியப்
பாக்கிறதா
ச்
சொன்னேன்.”
“அவ்வளவுதானே?
சும்மா
பின்னாடி
உக்காந்துக்க?”
“எனக்கு
அப்படியெல்லாம்
உக்காந்து
பழக்கமில்லிங்க
பயமாயிருக்கு...”
“பழக்கம்
எப்பிடி
வரும்?
உக்காந்தாத்தான
வரும்?
சும்மா
உக்காந்துக்க?”
அவளுக்குச்
சொல்லொணாப்
பிரபரப்பு.
இருந்தாலும்
தயக்கமும்
தடைபோடுகிறது.
தெருவில்
யாரோ
ஒரு
ஆள்
பார்த்துக்
கொண்டே
போகிறான்.
நின்று
பேசுவது
சரியல்ல
சட்டென்று
பின்புறத்து
ஆசனத்தில்
தாவி
அமர்ந்து
கொள்கிறாள்.
ஒரு
பக்கமாகவே
இரு
கால்களையும்
தொங்கவிட்டுக்கொண்டு
கைகளால்
ஆசனத்தைப்
பற்றிக்கொள்கிறாள்.
நெஞ்சுத்
துடிப்பு
மிக
விரைவாகிறது.
“கெட்டிமாப்
புடிச்சிக்க...”
“புடிச்சிட்டிருக்கிறேன்.”
“எங்க?”
“சீட்டப்
புடிச்சிட்டிருக்கிறேன்.”
“அவன்
சிரிக்கிறான்,
திரும்பி.
சட்டை
தோளில்
உராய்கிறது.
மிக
நெருக்கத்தில்
மென்மையான
(பவுடர்
மணம்
என்று
நினைக்கிறாள்)
வாசனை
இழைகிறது.
முகத்தில்
சிலிர்ப்போடுகிறது.
வண்டியை
அவன்
கிளப்புகையில்
தூக்கிப்
போடுவது
போல்
அதிர்ச்சி
குலுக்குகிறது.
சட்டென்று
அவன்
தோளைப்
பற்றிக்கொள்கிறாள்.
அந்த
நிலையிலேயே
வண்டி
தடதடவென்று
செல்கிறது.
பாலத்தில்
ஏறி
ஆற்றைக்
கடக்கிறது.
‘தும்
தும்’
என்று
உடலுக்குள்
ஒரு
குலுக்கம்
புதுமையான
உணர்வுகளை
வாரி
இறைக்கிறது.
அவன்
தோளை
அழுத்தமாகப்
பற்றிக்
கொள்கிறாள்.
ஆற்றோரமான
சாலைப்
புளிய
மரங்களில்
பட்டுத்
துளிர்கள்
வெயிலில்
பளபளக்கின்றன.
புதுக்குடிப்
பெரிய
கோயில்
உற்சவத்தின்
போது
சுவாமிக்குக்
குடை
பிடிப்பார்கள்.
அந்தப்
பட்டுக்குடையின்
தங்கத்
தொங்கட்டான்கள்
இப்படித்தான்
பளபளக்கும்.
வாழ்க்கையின்
இருண்ட
ஏடுகள்
போய்,
ஓர்
ஒளிமயமான
திருப்பத்துக்கு
அவள்
போய்க்கொண்டிருக்கிறாளோ?
அவள்
ஆறுமுகத்தைச்
சென்று
பார்ப்பதைக்
குறித்து
எத்தனை
விதமாகவோ
கற்பனை
செய்திருக்கிறாள்.
ஆனால்
இந்த
உண்மை
நடப்பின்
கனவாகக்கூட
அவள்
எண்ணங்கள்
படியவில்லை.
காலைச்
சூரியன்
மேலுக்கு
விரைந்து
அவளை
நோக்கி
நம்பிக்கையூட்டுகிறான்.
அவள்
கண்களை
மூடிக்கொள்கிறாள்.
வண்டி
சட்டென்று
நிற்கிறது.
எதிரே
பத்ம
விலாஸ்
என்ற
பெரிய
ஓட்டல்.
“எறங்கு.
எதுனாலும்
சாப்பிடலாம்...”
“நாகபட்ணம்
வந்திட்டமா?”
“எதானும்
சாப்பிட்டுப்
போகலாம்.
பதினஞ்சி
நிமிசத்தில
நாகபட்ணந்தா...”
“...வாணாங்க...”
“என்ன
வாணாம்.
காலம
என்ன
சாப்பிட்ட?”
“...இட்லி...”
“பொய்யி,
உம்முகத்தப்
பாத்தா
நீ
ஒண்ணுமே
சாப்பிடாம
வந்திருக்கிறேன்னு
தெரியிது.
எறங்கிடு
கண்ணு
வந்து
எதுனாலும்
சாப்பிடலாம்...”
தள்ளவும்
முடியவில்லை;
கொள்ளவும்
பயமாக
இருக்கிறது.
“இந்த
ஒட்டல்ல
எல்லாம்
ஏ
ஒண்ணா
இருக்கும்.
நா
இங்கதா
சாப்பிடுவேன்,
எப்பவும்.
சும்மா
வா...”
“எனக்குப்
பயமா
இருக்குங்க...”
“என்ன
பயம்?
இங்க
ஒங்கப்
பாரு
இப்ப
வந்து
குதிக்கமாட்டாரு
நம்
ஆளுங்கதா
எல்லாம்.
சும்மா
வந்து
சாப்பிடு,
பாப்பாக்
கண்ணு...”
கல்லாவில்
உட்கார்ந்திருக்கும்
ஐயரிடம்
இவனுக்கு
விஷேச
மரியாதை
கிடைக்கிறது.
ஒரு
சிரிப்பு,
கை
உயர்ந்த
வணக்கம்.
தடுக்கப்பட்ட
அறைக்குள்
சென்று
மேசை
முன்
அமருகின்றனர்.
இட்லி,
பொங்கல்
என்று
ஆணை
கொடுக்கிறான்.
தேங்காய்ச்
சட்டினி,
சாம்பாருடன்
எல்லாம்
இசைந்து
வயிற்றை
நிரப்புகின்றன.
காபி
கள்ளிச்
சொட்டாக
நாவைவிட்டுப்
பிரியவில்லை.
ஒரு
சிகரெட்டைப்
பற்றவைத்துக்
கொள்கிறான்.
பில்லைக்
கொடுத்த
பிறகு
வெளியே
வருகின்றனர்.
“...நாகப்பட்ணம்
போயிட்டுச்
சாயங்கால
மாத்
திரும்பிடலாங்களா?”
அவன்
அவளைத்
தாழ்ந்த
பார்வையால்
ஊடுருவுகிறான்.
“ஊஹூம்.
உன்னைத்
திருப்பி
அங்க
அனுப்புற
எண்ணங்
கிடையாது.”
குளிர்
சிலிர்ப்பில்
குலுங்குகிறான்.
“ஐயோ?
அப்ப...”
“ஐயோ
ஆட்டுக்குட்டி
உங்கப்பாவுக்கு
தெரிஞ்சி
போகாம
இருக்குமா?
அசட்டுத்தனமா
திரும்பிப்
போகலாங்கிறியே?...
எங்கூட
வந்து
அப்பாவப்
பாரு.
பத்திரமா
உங்கண்ணங்கிட்ட
அனுப்பி
வைக்கிறேன்.”
அவளுக்குக்
கண்கள்
துளிர்த்து
விடும்போல்
நெகிழ்ச்சி
உண்டாகிறது.
“ரொம்ப
நன்றிங்க..
ஆனா.
ஆனா,
நா
மாத்துச்
சேலை
கூட
இல்லாம
வந்திருக்கிறேனே?
சர்ட்டிபிகேட்
மட்டுந்தா
பையில
வைச்சிருக்கிறேன்...”
“சரியான
பாப்பாக்கண்ணுதா
நீ
அவ்வளவு
பெரிய
வீட்டில்
நீ
வந்துட்டா,
அப்பிடியேவா
அனுப்புவாங்க?
சும்மா
உக்காரு...”
அவள்
இப்போது
அவன்
பின்
அமருகையில்
அவன்
அவள்
கையைத்
தோளில்
இருந்து
எடுத்து
இடுப்பைச்
சுற்றி
வைத்துக்
கொள்ளச்
செய்கிறான்.
காந்தி
சேற்றில்
கால்பட
இறங்கியதேயில்லை.
ஒரு
தடவை
அப்பாவுக்குச்
சோறு
கொண்டு
போனாள்.
வரப்பெல்லாம்
சகதி
காலைப்
புதையச்
செய்தது.
கூடையை
இடுப்பில்
வைத்துக்
கொண்டு
பாவாடையை
முழங்காலுக்குத்
தூக்கியவளாய்
அவள்
வாய்க்காலில்
இறங்கிய
போது,
கால்
நழுவிக்
கூடையோடு
வாய்க்காலில்
விழுந்துவிட்டாள்.
அருகில்
களை
பறித்துக்
கொண்டிருந்த
பாட்டி
விரைந்து
வந்து
கூடையை
மீட்டு,
அவளையும்
கைபிடித்துக்
கரையேற்றினாள்.
“கால
ஊனி
வச்சி
எடுக்கறதில்ல,
களுத?
பள்ளக்குடில
பெறந்திட்டு,
வயக்காட்டுல
நடக்கத்
தெரியல...?”
என்றாள்.
அதற்குப்
பிறகு
அவள்
சோறுகொண்டு
செல்லவே
மாட்டாள்.
வாய்க்காலுக்கு
இக்கரையிலேயே
நின்று
யாரையேனும்
பிள்ளைகளை
விட்டுச்
செய்தி
கூறி
வரச்
சொல்வாள்.
அவள்
படிப்பும்
பழக்கமும்
மறுமலர்ச்சியும்
அரிசனக்குடியில்
இருந்து
வந்தவள்
என்று
நம்ப
முடியாதபடி
மாற்றியிருக்கின்றன.
அவள்
விடுதியில்
இருந்தபோது,
பரிமளா
என்ற
ஐயங்கார்
வகுப்பில்
பிறந்த
தோழி
ஒருநாள், “ஏன்
காந்தி?
உங்கூட்டில்
நண்டு,
நத்தை
எல்லாம்
குழம்பு
வைப்பாங்களாமே?”
என்று
கேட்டாள்.
“சீ
நாங்க
சாப்பிட
மாட்டோம்
அதெல்லாம்;
எங்க
வீடுங்கள்ள,
மீனு,
ஆட்டுக்கறி
இது
தவிர
எதுவும்
செய்ய
மாட்டாங்க!
அது
கூட
எனக்குப்
பிடிக்காது.
எனக்குப்
பருப்புக்
குழம்பு,
சாம்பாரு
இதெல்லாந்தான்
இஷ்டம்”
என்றாள்.
தாழ்த்தப்பட்டவர்கள்
என்றே
ஊருக்கு
வெளியே
குடியேறி
வாழும்
மக்கள்
சூழலில்,
எண்ணெய்
வடியும்
தலையும்
கருகருமேனியில்
அழுக்குக்
கச்சையும்
வெற்றிலையால்
சிவந்த
வாயுமாக
இருக்கும்
இளைஞர்கள்
யாரும்
தன்னை
நினைத்துப்
பார்க்கக்
கூடத்
தகுதியில்லாதவர்கள்
என்று
அவள்
இறுமாந்திருக்கிறாள்.
இப்போது
சாலியின்
இடுப்பைச்
சுற்றிக்
கையை
வளைத்துக்
கொண்டு,
சூழலைப்
பார்க்கத்
துணிவில்லாத
சுய
சிந்தனைகளுடன்
குலுங்கிக்
குலுங்கிச்
செல்கிறாள்.
வண்டி
தென்னையும்
மாவும்
கிளி
கொஞ்சும்
சோலை
களுக்கு
நடுவே
பெரிய
கோயில்
கோபுரம்
தெரியும்
ஒர்
ஊரில்
செல்கிறது.
கிளைவழியில்
திரும்பி
ஒரு
தெருவில்
நாயகமாக
விளங்கும்
பெரிய
மாடி
வீட்டின்
முன்
நிற்கிறது.
வாயிலில்
சிமிட்டித்
திண்ணைக்குக்
கீழ்
ஒரு
வில்
வண்டி
கூண்டு
சரிந்த
நிலையில்
காட்சி
தருகிறது.
அருகில்
மாடுகள்
செல்லும்
சிமிட்டித்
தளமிட்ட
சந்து.
திண்ணையின்
முகப்பில்
புதிய
காவி
வண்ண
பெயிண்ட்
துலங்க,
சிமிட்டியின்
சிவப்பும்
பச்சை
வரம்பும்
பளிச்சென்றிருக்கின்றன.
தூண்களின்
பித்தளைப்
பட்டங்களும்,
வாயிற்படி
மரவேலைப்பாடுகளும்,
வீட்டின்
செல்வச்
செழிப்பை
விள்ளுகின்றன.
மோட்டார்
சைக்கிள்
சத்தம்
கேட்டுச்
சந்திலிருந்து
முண்டாசும்
அரைக்
கச்சையுமாக
ஒரு
ஆள்
வருகிறான்.
பார்த்துவிட்டு, “வாங்க
சின்ன
முதலாளி”
என்று
கூறிவிட்டு
நிற்கிறான்.
அவன்
வண்டியை
நகர்த்தி
ஓர்
ஓரத்தில்
இறங்குகிறான்.
“வா
காந்தி.”
அவளுக்கு
ஒரே
குழப்பமாக
இருக்கிறது.
இயல்பாக
இருக்க
முயன்றவளாக
அவனைத்
தொடர்ந்து
முன்பட்டக
சாலைக்கு
வருகிறாள்.
உடையார்
வீட்டுக்
கூடத்தைப்போல்
அத்தனை
பெரிதில்லை.
எனினும்
நாகரிகமாக
முற்றத்தைச்
சுற்றி
இரும்பு
வலை
அழிபோட்டு
பச்சை
வண்ணம்
அடித்திருக்கிறார்கள்.
கீழே
சிவப்பு
சிமிட்டி
பளபளவென்று
துலங்குகிறது.
முற்றத்தில்
வழவழவென்று
மின்னும்
தேக்கு
மர
ஊஞ்சலில்,
சங்கிலியின்
நடுவே
கைபிடிக்க
பளபளவென்று
பித்தளைக்
குழல்கள்
அணி
செய்கின்றன.
கூடத்தின்
ஒரு
மூலையில்
பெரிய
பத்தாயம்
தேக்குமரம்தான்
அதுவும்.
“இப்படி
வா,
காந்தி!”
என்று
அழைத்துவிட்டு
அவன்
விடுவிடென்று
கூடத்தின்
அறைக்குள்
நுழைந்து
செல்கிறான்
அவள்
சுவரில்
இருக்கும்
பெரிய
வண்ணப்படங்களைப்
பார்க்கிறாள்.
ஒன்றில்
சரிகை
வேட்டியும்
கழுத்தில்
ஒன்றை
உருத்திராக்கமும்
விளங்க,
ஒரு
பெரியவர்
விரல்களில்
மோதிரங்களுடன்
நாதசுரத்தைப்
பற்றிக்
கொண்டிருக்கிறார்.
இன்னொன்றில்
பரத
நாட்டியக்
கோலத்தில்
ஒரு
பெண்மணி
புன்னகை
செய்கிறாள்.
இடையே
சில
சிறிய
புகைப்படங்கள்
மாட்டப்
பெற்றிருக்கின்றன.
நேருவின்
அருகில்
அதே
நாட்டியப்
பெண்
சதங்கையுடன்
நிற்கிறாள்.
இன்னொன்றில்
அந்த
நாதசுரக்
கலைஞருக்கு
யாரோ
மாலையிடுகிறார்கள்.
காந்திக்கு
மருட்சியாக
இருக்கிறது.
நாதசுரம்,
நாட்டியம்,
சின்ன
மேளம்,
நாகப்பட்டினத்துப்
பொதுமகளிரைக்
குறிக்கும்
சில
ஈனச்சொற்கள்
எல்லாம்
சிந்தையில்
மோதுகின்றன.
நாற்று
நடவு,
மருந்துத்
தெளிப்பு,
உரமிடுதல்,
களைபிடுங்குதல்
என்று
வெயில்
மழையில்
அலைந்து
பாடுபடாது
போனாலும்,
மேல்சாதிக்கார
ஆண்கள்
வண்டி
கட்டிக்கொண்டு,
திருவாரூர்,
நாகப்பட்டினம்
என்று
பொதுமகளிரை
நாடிச்
சென்றால்தான்
கெளரவம்
என்று
சொல்லிக்
கேட்டிருக்கிறாள்.
இதை
எல்லாம்
பற்றிக்
கொச்சையாக
அவள்
அப்பா
கூட
பேசியதுண்டு.
இந்த
இவன்
யார்
வீட்டுக்கு
அவளைக்
கூட்டி
வந்திருக்கிறான்?
அந்த
அப்பா
இங்கே
யார்
வீட்டில்
இருக்கிறார்?
அவளுக்கு
பொருந்தவேயில்லை.
இனந்தெரியாத
பயம்
ஆட்கொள்ளுகிறது.
உள்ளிருந்து
சற்றே
பருமனாக,
சிவந்த
மேனியில்
ஊட்டத்தின்
மினுமினுப்பு
இளமைக்கட்டும்
மேவியிருக்க
ஓரம்மாள்
- நாற்பது
வயசுக்கு
மதிக்கக்கூடிய
பெண்மணி
வருகிறாள்.
நேர்வகிடுடன்
கருகருவென்ற
கூந்தலைக்
கோடாலி
முடிச்சாக
முடிந்திருக்கிறாள்.
அந்த
முடிச்சு
சிறிய
தேங்காயளவுக்கு
இறுகியிருக்கிறது.
வளைந்த
புருவங்களுக்கிடையே
நீண்ட
குங்குமத்திலகம்.
இரண்டு
மூக்கிலும்,
சுடர்
விடும்
வயிரப்
பொட்டுக்கள்.
செவிகளில்
சிவப்புப்
பிரபை
சூடிய
வயிரத்
தோடுகள்.
அரக்கும்
மஞ்சளுமானதொரு
சின்னாளப்பட்டுப்
புடவையில்
மிக
எடுப்பாக
இருக்கிறாள்.
புன்னகை
செய்கையில்
கன்னங்கள்
குழிகின்றன.
அந்தப்
படத்தில்
இருக்கும்
பெண்மணி
தான்
அவள்.
“வாம்மா?
உக்காந்துக்கோ...”
“இவுங்க
சின்னம்மா,
காந்தி.
அப்பா
செத்தமின்னதா
கார்ல
திருச்சிக்குப்
போனாராம்.
நைட்டுக்குத்
திரும்பிடுவாராம்.”
“ஆமா.
அங்க
என்னமோ
மீட்டிங்னு
சொன்னாரு.
நாங்கூட,
ரெண்டுநாளா
உடம்பு
சரியில்லாம
இருந்திருக்கு
ரெஸ்ட்
எடுத்துக்குங்களேன்னேன்,
ஆனா
வந்த
வங்க
கேக்கிறாங்களா?.
உட்காரம்மா?
உம்
பேரென்ன?”
“காந்திமதி...”
“நல்ல
பேரு.”
புன்னகையும்
கண்களும்
சொக்கவைக்கும்
கவர்ச்சி.
“என்ன
சாப்பிடறே?.
ரோஸ்
மில்க்
சாப்பிடுறியா
பாபு?...”
கேட்ட
குரலுடன்
“அடி
பூவாயி!
பூவாயி!”
என்று
விளிக்கிறாள்.
கட்டுக்குட்டென்று
ஒரு
பாவாடை
தாவணிப்
பெண்
வருகிறாள்.
அசப்பில்
அம்சுவைப்
போல்
இருக்கிறாள்.
பித்தளை
ஜிமிக்கியும்,
வளையலும்
அவள்
வேலைக்காரப்
பெண்
என்று
பறைசாற்றுகின்றன.
“தக்காளி
போட்டு,
வெங்காயம்
நெறய
அரிஞ்சு
போட்டு
முருங்கக்கா
சாம்பார்
வச்சிடு,
புளிய
ரொம்பக்
கரச்சி
ஊத்தாத,
பக்குவமாயிருக்கட்டும்.
தாத்தா
எங்கே?”
“அது
குளிக்கச்
போயிருக்கும்.”
“மரத்திலேந்து
நீட்டக்காயா
நாலு
முருங்கக்கா
அறுத்துக்
குடுக்கச்
சொல்லு,
மருதுகிட்ட.”
“சரிம்மா!”
அவள்
சென்றபின்
சின்னம்மா
எதிர்புறமுள்ள
அறைக்குச்
சென்று
குளிரலமாரியைத்
திறக்கிறாள்.
சற்றைக்கெல்லாம்
இரண்டு
கண்ணாடித்
தம்ளர்களில்
குளிர்ந்த
‘ரோஸ்மில்க்’
ஊற்றிக்கொண்டு
வருகிறாள்.
சாலி
கூடத்தில்
இருந்த
அலமாரியைத்
திறந்து
பத்திரிகைக்
கட்டுகளை
ஆராய்ந்து
கொண்டிருக்கிறான்.
“இந்தா
பாபு.”
அவன்
ஒன்றை
வாங்கிக்
காந்தியிடம்
நீட்டுகிறான்.
“...வாணாங்க.
இப்பத்தான்
காபி
எல்லாம்
குடிச்சிட்டு
வரோம்.”
“அட
கூச்சப்படாதே
காந்தி,
இது
உங்கூடுன்னு
நினைச்சிக்க...”
“...இல்லிங்க...
இப்ப.”
“சும்மா
அதும்
இதும்
சொல்லாத,
சின்னம்மா
ரோஸ்
மில்க்தா
குடுப்பாங்க.
அப்பதா
அவங்களுக்குத்
திருப்தி
சாப்பிடு...”
உதட்டில்
வைத்தால்
அந்தச்
சில்லிப்பு
பற்களைக்
கொட்டுகிறது.
காந்தி
எல்லாக்
குழந்தைகளும்
வாங்கும்
இனிப்பு
ஐஸ்
குச்சி
கூட
வாங்க
மாட்டாள்.
ஆனால்
சில்லிப்பு
சிறிது
பழகி
விட்டதால்
கூச்சம்
விட்டுப்
போய்விடும்
போலிருக்கிறது.
குடித்துவிட்டு
டம்ளரைக்
கழுவும்
எண்ணத்துடன்
கையிலேயே
வைத்துக்
கொண்டிருக்கிறாள்.
“அப்படியே
வச்சிடும்மா.
பூவு
வந்து
கழுவி
வய்ப்பா!”
“மாடி
ரூம்
திறந்திருக்குதா
சின்னம்மா?”
“துறந்துதா
இருக்கு.
லச்சு
நேத்தெல்லாம்
வந்து
புது
டேப்பெல்லாம்
போட்டுட்டிருந்திச்சி.
எல்லாம்
அப்படி
அப்படியே
வச்சிருக்கிறான்னு
காலம
ஐயா
கோவிச்சிட்டுப்
போனாரு...”
“என்னென்ன
டேப்பு
புதிசாருக்கு?”
“அதா,
ஐயா
கோலாலும்பூர்
போயிருந்தப்ப
பேசினதெல்லாம்
நேத்து
கொண்டிட்டு
வந்திருந்திச்சி.
பெறகு
புதிசா
குன்னக்குடி
வயலின்
டேப்
ஒண்ணு
போட்டிச்சி,
என்னா
அருமை!
வெறும்
வயலின்ல,
காவேரி
உற்பத்திலேந்து
சங்கமம்
வரைக்கும்.
அது
சொல்லி
முடியாது;
ஐயாவுக்கு
ரொம்பப்
புடிச்சிருந்திச்சி.
வானொலிலேந்து
டேப்
பண்ணிருக்கு...”
“அட,
அப்ப
போட்டுப்
பார்க்கணுமே!...
வா
காந்தி.
மாடில
ரேடியோ
கிராம்
இருக்கு.
ஸ்டீரியோ
டேப்
போட்டுக்
காட்டுகிறேன்.”
காந்திக்குக்
கூட்டைக்
கீழே
வைத்துவிட்டு
ஏதோ
ஒன்றை
பற்றிக்
கொண்டு
ஆகாயத்தில்
பறக்க
எழும்பினாற்
போன்று
அச்சம்
மேலிடுகிறது.
கால்கள்
பின்னிக்கொள்கின்றன.
“வா
காந்தி!
என்ன
பயம்?...”
நடுப்படியில்
தயங்குபவளை
மேலே
கைப்பற்றி
அழைக்கிறான்.
மாடி
அறை
பெரிதாக
இருக்கிறது.
மெத்தை
போட்ட
இரட்டைக்
கட்டிலில்
பச்சைப்
பூப்போட்ட
விரிப்பு.
குட்டையான
நீண்ட
மேசைமேல்
கண்ணாடிப்
பெட்டிக்குள்
ரேடியோவைப்
போலிருக்கிறது.
அவளுக்குப்
பரிச்சயமேயில்லாத
பல
பொருள்கள்
பெரிய
கண்ணாடி
பதித்த
மெருகு
மின்னும்
அலமாரி,
சுவரில்
இவனுடைய
தந்தையின்
முழு
உருவ
வண்ணப்படம்
அதில்
சரிகை
மாலை
விளங்குகிறது.
சாலி
கண்ணாடிப்
பெட்டி
மூடியைத்
திறந்து
டேப்பை
எடுத்து
ஒவ்வொன்றாகப்
பார்க்கிறான்.
டக்டக்கென்று
ஒசையிட,
ஒவ்வொன்றாகப்
பொருத்திச்
சுழலவிட்டுப்
பரிசீலனை
செய்கிறான்.
“உனக்கு
என்ன
பாட்டுப்
பிடிக்கும்
காந்தி?
புதிசா
இப்ப
வந்திருக்கே,
அந்த
சினிமாப்
பாட்டு
வைக்கட்டுமா?”
குமிழ்களைத்
திருகி
அடித்து,
சுழல
விடுகிறான்.
சந்தனக்கிண்ணம்,
தேனின்
பலா...
என்று
காதற்பாட்டு
சுருள்
அவிழ்கிறது.
அவன்
அவள்
அருகில்
வந்து
தோளைத்
தொட்டு
விழுங்குபவனைப்
போல்
பார்க்கிறான்.
அவள்
அவன்
கைகளை
விலக்க
முயலுகிறாள்.
“காந்தி
நீ
ஏன்
பயப்படுற?...
நா...
நா...
உன்னைக்
காதலிக்கிறேன்.
உன்ன
பாத்ததிலேந்து
என்னால்
அமைதியா
இருக்க
முடியல
காந்தி,
ஐ
லவ்
யூ...
எங்கப்பாவிடம்
சொல்லி
சம்மதத்தோட
கூட்டி
வந்தாப்போல
நினச்சிக்க.
காந்தி.
ஏன்
பேசமாட்டேங்கற?...”
காந்தியினால்
பேசத்தான்
முடியவில்லை.
ஏதோ
ஒரு
பேரலை
மோதினாற்போல்
பரவசமாகும்
சிலிர்ப்பாகத்
தோன்றுகிறது.
“காந்தி...
ஐ
லவ்
யூ,
நீ
ஏன்
பேசாமலிருக்கிற?.
காந்தி
காந்தி!...”
தனது
வாழ்க்கையில்
இப்படி
ஒரு
திருப்பம்
வரப்போகிறதென்று
அன்று
காலையில்
கூட
நினைவு
இல்லை.
ஆனால்
அவள்
அவனுடைய
ஆக்கிரமிப்பில்
இருந்து
திமிறவில்லை.
திமிறும்
மறுவினை
கூட
அவள்
உடலில்
நிகழவில்லை.
எத்தனையோ
நாட்கள்
காத்திருந்தாற்
போன்று
அவனைச்
சுவீகரித்துக்
கொள்ளும்
உணர்வுகளே
அவள்
தடைக்
குரல்களை
அமுக்கி
விடுகின்றன.
கட்டிக்காக்கும்
மிகையில்லாமல்
இயல்பாகவே
காக்கப்பட்டிருந்த
மெல்லிய
இழைகள்
ஆரவாரம்
இன்றி
கரைந்து
போகின்றன.
----------------
10
வீரமங்கலத்துக்குச்
சென்று
உடையார்
வீட்டில்
விசாரித்துவிட்டு
வடிவு
திரும்புகிறான்.
காந்தி
அங்கு
வரவேயில்லையாம்.
பொழுது
சாய்ந்து
இருள்
பரவிக்
கொண்டிருக்கிறது.
சாலையை
விட்டு
வரப்பில்
இறங்கி
அவன்
விரைந்து
நடக்கிறான்.
அவனுடைய
கண்களுக்குச்
சட்டென்று
மின்னி
நெளியும்
அரவம்
தென்பட்டு
விட்டது.
அதே
மின்னல்
வேகந்தான்,
கையில்
வால்
சிக்க,
பிடித்துக்
கரகரவென்று
ஒர்
அசுர
வேகத்துடன்
சுழற்றுகிறான்.
அந்த
வேகத்தில்
அது
நஞ்சைக்
கக்கும்.
சுழற்றிக்
கொண்டே
வரப்பில்
அடித்தால்
பத்தாது.
மடைப்பக்கம்
கல்லில்
போட்டு
அறைகிறான்.
சுழற்றல்,
அறைதல்.
பாம்பு
தன்
வீரியத்தை
இழந்துவிட்டது.
காடா
விளக்கினடியில்
பஞ்சமி
மிளகாய்
அரைக்கிறாள்.
மாரியம்மா
பிள்ளையை
மடியில்
போட்டுக்கொண்டு
மெல்லிய
குரலில்
பாடித்
தட்டுகிறாள்.
இவன்
உள்ளே
செல்கிறான்.
விளக்கை
வைத்துக்கொண்டு,
பின்
முற்றத்தில்
அதைப்
பரிசீலனை
செய்தவாறு
வளைந்த
சிறு
கூரிய
கத்தி
கொண்டு
சீராகக்
கிழித்து
நினத்தை
வேறாக்குகிறான்.
நல்ல
பாம்பு,
அவ்வளவு
பருமனில்லை.
என்றாலும்
நீளமாக
மூன்றடிக்கு
மேல்
இருக்கும்.
மண்வெட்டியை
எடுத்துக்
குழிதோண்டி
நினத்தைப்
புதைத்து
முடிவிட்டு,
தோலைக்
குளத்துப்பக்கம்
கொண்டு
செல்கிறான்.
நன்றாகக்
கழுவிக்
கொண்டு
வந்து,
உப்பைச்
சீராகத்
தடவி
கயிற்றில்
தொங்க
விடும்
நேரத்தில்
வீட்டில்
அப்பன்
வந்துவிடுகிறான்.
“ஏண்டால,
அந்த...
யா
மவன்
கெரு
வச்சிட்டிருக்கிறான்.
நீ
இப்ப
இத்த
அடிச்சிக்
கொண்டாந்த?”
சாம்பார்
சாராயம்
குடித்தாலும்
நிதானமே
இழக்க
மாட்டான்.
“ஏழெட்டு
ரூபாக்கிப்
போவும்.
அவங்
கெடக்கிறான்.
காலடில
வந்து
சுத்திச்சி.
நான்
புடிக்கப்
போனனா?”
“காந்திப்
பொண்ணக்
காணமுன்னு
சொன்னாங்க?”
“அதா
வீரமங்கலம்
உடயார்
வூட்டுக்குப்
போய்
விசாரிச்சிட்டு
வரச்சொன்னாங்க.
அங்கொண்ணும்
வரலியாம்.”
“பொட்ட
புள்ளகள
வக்கிறாப்பல
வக்கணும்.
ஒண்ணும்
போற
போக்கு
செரியில்ல.
இந்த
விருத்தாலம்
பய
கூட
மூலைப்பயலுமில்ல
சேந்திட்டுத்
திரிகிறான்?
வீரபத்திரன்
சொல்லிட்டிருக்கிறான்,
அம்பது
ரூபா
குடுக்கிறானுவளாம்
அஞ்சு,
நிமிட்டில
அல்லாம்
பேத்திட்டுப்
போயிடணுமாம்!
களுதப்
பயலுவ,
வரிக்கல்லத்
தூக்கி
அப்பால
போடுறாப்பல
நினைச்சிட்டானா?”
“முதலாளி
கம்முனு
இருக்கிற
வரய்க்கும்
நமக்கு
ஒண்ணும்
பயமில்ல,
அதெல்லாம்
கைய
வய்க்கமுடியாது.”
மீசையைப்
பல்லில்
கடித்துக்
கொண்டவாறு
பொங்கும்
மகிழ்ச்சியை
வடிவு
அடக்கிக்
கொள்கிறான்.
அம்சுவே
அவனுக்குச்
சொந்தமாகிறாள்.
அவருக்குத்
தெரியாதா?
சாடை
மாடையாக
லட்சுமியக்காளும்
புரிந்து
கொண்டிருப்பாள்.
“நாளக்கி
சம்பா
ஒழவு
இருக்குதாம்.
வீரபத்திரஞ்
சொன்னான்.
நம்ம
பக்கம்
எதும்
செல்லல.
இங்கியும்
சம்பாச்
சீரெடுக்கணும்.
அது
ஒரு
ரெண்டேக்கரிருக்கு.
ஆனா
மொதலாளி
ஒடம்பு
சரியில்ல.
நாளக்கி
மாட்ட
ஓட்டிட்டு
வாரேன்.
கருக்கல்லன்னே...”
ஆவி
பரக்க
வடித்த
சோற்றைத்
தட்டில்
போட்டுப்
பரப்புகிறாள்
தங்கச்சி.
வண்டியோட்டிச்
சென்ற
பழனிப்
பயல்
அசுரப்
பசியுடன்
வந்துவிட்டான்.
சாட்டைக்
குச்சியைக்
கூரையில்
பத்திரமாகச்
செருகி
விட்டுத்
தலைத்துணியை
உதறிக்கொண்டு, “சோறு
வைக்கா?
என்று
ஆணையிடுகிறான்.
சாராயம்
குடித்திருக்கிறான். “ஏண்டால,
நீ
மத்தியானம்
என்ன
சொல்லிட்டுப்
போன?”
“என்னா
சொன்னே?”
“குடுரா
காச
சாங்காலம்
அஞ்சு
ரூபாயாக்
கொண்டாந்து
தாரேன்னு
அரிசி
வாங்க
வச்சிருந்த
காசத்
தூக்கிட்டுப்
போயிட்டா!”
“நா
என்ன
இப்ப
தரமாட்டேன்னா
சொன்னே?...”
வேட்டி
இடுப்பில்
கைவிட்டு
கசங்கிய
ஒரு
ரூபாய்
நோட்டை
எறிகிறான்.
“ஏண்டா,
இதானா
காசு!”
“நாளக்கி
மிச்சம்
தாரேன்!
சோறு...
சோறு...!”
“இந்தப்
பய,
நெல்லு
மிசின்ல
மூட்ட
தூக்கிப்
போட்டு
நாலு
அஞ்சி
சம்பாரிச்சி
இப்பிடிக்
குடிச்சித்
தொலக்கிறான்.
குடிசய
வேற
பேத்துட்டுப்
போவணும்ங்கறானுவ...
இன்னக்கிப்
பூர
ஒரு
வேலையுமில்ல.
ஒருமா
நடவுக்கு
அஞ்சாளுன்னு
கணக்கு.
முப்பத்தஞ்சு
ரூபா
கூலிக்கு
பன்னண்டாளுன்னு
மேச்
சாதிக்காரியல்லாம்
மினுக்குச்
சேல
கட்டிட்டு
நடவுக்கு
எறங்கிடறாளுவ...
நா
என்னாத்த
அரிசி
வாங்க,
எண்ண
வாங்க,
புளி
வாங்க?...”
இதெல்லாம்
யார்
காதிலும்விழுவதில்லை.
பழனிப்
பயல்
படுத்ததும்
தூங்கிவிடுவான்.
குப்பன்
பீடி
குடித்துக்
கொண்டு
பொன்னனிடம்
கொஞ்சம்
குந்திப்
பேசிவிட்டு
வருவான்.
வடிவு
பீடியை
வாயில்
வைத்துக்கொண்டு
குளத்தைச்
சுற்றிக்கொண்டு
வெளியே
போவான்.
மடை
பார்க்கும்
பொறுப்பு
அவனுக்குத்
தான்.
சில
சமயம்
கருக்கலில்
போய்விட்டு
வருவான்.
இரவில்
முதலாளியைப்
பார்த்து,
சங்க
சமாச்சாரம்,
ஊர்சேதி
பொது
நிலவரம்
பேசி
வருவான்.
முதலாளி
வீட்டுத்
திண்ணையில்
விளக்கெரிகிறது.
“ஏண்டா?
நீ
போயி
எந்நேரம்
வந்து
சேதிசொல்லுற?
என்னாடா
இருக்காளா
இல்லையா.
செறுக்கிமவ?...”
வசைகள்
கட்டுக்கடங்காமல்
பொல
பொலக்கின்றன.
“இல்ல
மொதலாளி.
நா
அப்பமே
வரணுந்தா
பொறப்
பட்டே...
அதுக்குள்ளாற...”
தலையைச்
சொறிகிறான்.
பொய்
எதுவும்
கைகொடுக்க
வரவில்லை.
“உடயாரு
மருமவ
இல்ல.
அவுங்கல்லாம்
புதுக்குடிக்கு
சினிமா
பாக்க
போயிருக்காவளாம்.
அங்க
என்னமோ
புதுசா
படம்
வந்திருக்கில்ல...”
“...யா
மவ;
ஐயா
காலு
வீங்கிக்
கிடக்காருன்னு
ஒரு
அச்சம்,
கூச்சம்
எதுனாலும்
இருந்தா
போவாளா?
இவபாட்டுக்கு
சினிமாக்கா
போறா?
வரட்டும்
சொல்ற,
தெருவுல
நிக்க
வச்சி
செருப்பாலடிக்க...”
“என்னாத்துக்கு
அவன
வச்சிட்டுக்
கத்துறிய?
சரோஜா
கூட்டிருப்பா.
சினிமான்னு
போயிருக்கா
போல.
அப்படி
எப்பவும்
போமாட்டாளே
அவ?”
“ஏண்டால,
நிசந்தாஞ்
சொல்லுறியா?
காந்தி
வந்திச்சாமா
அங்க?"
இப்போ
அவள்
வரவில்லை
என்று
சொன்னால்
அவன்
மீது
கோபம்
பாயும்.
“அதுதாங்
கேட்டேன்
மொதலாளி.
ஒடயாரு
அவங்கல்லாம்
சினிமாவுக்குப்
போயிருக்காடா,
போன்னிட்டாரு.”
“ஏண்டா,
பெரியம்மா
கூடவா
போயிருக்கு?”
“வூட்ட
யாரும்
இல்ல...”
“சினிமான்னா,
ராத்திரிவருவாகளா?
அவங்க
சித்தாமு
வீட்டில
தங்குவாங்க
காலம
வருவாங்க.
இவ
ஏம்
போறா,
அறிவு
கெட்டவ?
நீங்க
ரொம்பத்
தகிரியம்
குடுத்துத்தா
அவ
இத்தினி
துணிச்சலாப்
போறா!”
அவள்
அவர்
சந்தேகப்பட்டபடி,
ஆறுமுகத்தின்
வீட்டை
நாடிப்
போயிருக்கவில்லை
என்று
சம்முகத்துக்குச்
சற்றே
ஆறுதலாக
இருந்தாலும்
இரவு
தங்க
வாய்ப்பெடுத்ததில்
சொல்லொணாத
கோபம்
வருகிறது.
“காலம
வந்து
சேருவா.
படிச்ச
பொண்ணு.
அவங்க
கேட்டிருப்பாங்க.
இவ
என்ன
இப்ப
ஆருவூட்டுக்கோ
போயிட்டாளா?
மரியாதி
தெரிஞ்ச
சிநேதிதங்க,
ஏம்
போட்டுக்
கத்துற?..”
என்று
பாட்டியும்
கூறுகிறாள்.
“அதென்னமோ,
காலம
அவ
மொவத்தில
நா
முழிக்க
மாட்டே...
அந்தக்
கழுத
வந்ததும்
உள்ள
தள்ளிக்
கதவச்
சாத்தி
வையி.
கடனோ
உடனோ
வாங்கி,
கட்டிக்
குடுத்துத்
தொலக்கணும்.
வடிவு!
காலம
எங்கூட
புதுக்குடி
வாடால.
முத
பஸ்ஸில
போயிட்டு
இந்தக்
காலையும்
டாக்டர்கிட்ட
காட்டிட்டு,
இவ
விசயம்
தோது
பண்ணிட்டு
வாரே.
இப்பிடி
செறுக்கிமவ
ராத்தங்கிட்டு
வாரான்னா
எவ்வளவு
கேவலமா
எல்லாம்
பேசமாட்டானுவ?
நாம
பேசல?
அவ
இவ
ஒழுங்கில்லன்னு
நம்மகிட்ட
பஞ்சாயத்துப்
பண்ணவரப்ப,
நாமே
இப்பிடி
ஒளுங்கில்லாம
போயிட்டா
எந்த
மயிரா
மதிப்பா?
ஒரு
நாயமில்ல?”
வடிவு
ஒன்றும்
பேசவில்லை.
அவன்
தங்கச்சியை
ஐயனார்
குளத்தில்
கட்டிக்கொடுத்து
மூன்று
வருஷம்
வாழவில்லை.
கையில்
குழந்தையுடன்
திரும்பிவிட்டாள்.
அவள்
புருசன்
ஒரு
பொட்டப்
பயல்,
காசை
வாங்கிக்கொண்டு
புதுக்குடி
ஆசுபத்திரியில்
போய்
ஆபரேசன்
பண்ணிக்கொண்டு
வந்திருக்கிறானாம்.
பெண்சாதியை
வாழவைக்கத்
துப்பில்லாத
பயல்,
யாருக்கடி
கருப்பமானேன்னு
அடித்து
இம்சைப்படுத்தியிருக்கிறான்.
இவள்
இங்கே
வந்திருக்கிறாள்.
பிள்ளை
பெற்று
ஆறு
மாசமாகிறது.
மாமியார்
சாவுக்கும்
இவள்
போகவில்லை.
எந்தப்
பஞ்சாயத்துத்
தீர்ப்பும்
இல்லாமல்
இவள்
இங்கே
இருக்கிறாள்.
அம்சுவை
அவன்
கட்டிக்கொள்ள
பஞ்சமி
இங்கு
இருப்பது
கூட
ஒரு
தடையாகப்
பேசக்கூடும்.
கிழவி
மிகவும்
கருவக்காரி.
வரப்பும்
மேடும்
பள்ளமும்
அவன்
பிறவி
எடுத்த
நாட்களாகப்
பழகிய
தாய்ப்பூமி.
இப்போதும்
அந்தப்
புளியமரம்
அங்கு
இருக்கிறது.
முறுக்கேறிய
கைவிரல்களால்
அழுந்தப்
பூமியைப்
பற்றிக்கொண்டு
உட்கார்ந்திருக்கும்
ஓர்
அரக்கனைப்
போல்
இருக்கிறது.
பக்கத்தில்
ஓர்
இலுப்பை
மரம்
முன்பு
இருந்தது.
இப்போது
வெட்டிவிட்டார்கள்.
அதில்
தான்
ஏனை
கட்டித்
தொங்க
விட்டிருப்பார்கள்.
அவனும்
அப்படித்
தொங்கியிருப்பான்.
அம்கவும்
அப்படித்
தொங்கியிருப்பாள்.
நாளைக்கு
அவர்களுக்குக்
குழந்தை
பிறந்தாலும்
அந்த
வயல்
வெளிகளில்
தான்
ஓடியாடி
வளரும்.
வரப்போரப்
பொந்துகளில்
நண்டைப்
பிடித்து
முதுகோட்டை
வகிர்ந்து
குடித்து
விளையாடுவார்கள்.
மாட்டின்
வாலை
முறுக்கி
ஓட்டிக்
கூச்சல்
போட்டுக்கொண்டு
களிப்பார்கள்.
ஆற்றிலே
முக்குளி
இட்டுத்
துளைவார்கள்.
குளத்தில்
முங்கிச்சென்று
அல்லிப்
பூப்பறித்து
வருவார்கள்.
அவன்
பிள்ளையும்
விடமுள்ள
பாம்பைப்
பிடித்துக்
கரகர
வென்று
சுழற்றி
அதை
மாய்க்கக்
கற்றுக்கொள்வான்.
இப்படியே
அவன்
பிள்ளை,
அவன்
பிள்ளை,
அவன்
பிள்ளை
என்று
இந்த
வயற்காட்டில்...
மடை
பார்த்துவிட்டு
வீடு
திரும்பியவன்
சிறிதுநேரம்
கூடக்
கண்ணயரவில்லை.
கோயில்
பூசாரியின்
குரல்
கேட்கிறது.
“மத்தியானத்துக்குள்ளார
ஆளுகளெல்லாம்
வாராங்க.
செங்க
வண்டி
மண்ணு
வண்டி
வரும்.
மரியாதியா
எல்லாம்
காலி
பண்ணிடுங்க.”
வடிவு
துள்ளினாற்போல்
எழுந்து
உட்காருகிறான்.
“காலி
பண்ணலன்னா
என்ன
செய்திடுவீங்க?”
“ஏண்டா?
எத்தினி
திமிரு
உனக்கு,
பன்னிப்பயலே?
மூஞ்சி
முகரை
பேந்துபோகும்!
கோயில்
எடத்த
காலிபண்ணிட்டுப்
போங்கன்னு
ஆறுமாசமா
சொல்லிருக்கு
என்ன
வெள்ளாட்டா
டா?”
“யார்ரா
வெள்ளாடுறாங்க.
நீ
மருவாதி
வக்கணும்!”
“வடிவு
சும்மாரு!...
பூசாரியய்யா,
நாங்க
கேட்டிருக்கிறம்.
ஒரு
நாலஞ்சு
நா.
இப்பதான்
எதோ
கூலி
எங்கக்கு
வரும்?
வார
அமாசின்னிக்குக்
காலி
பண்ணிடறம்...”
“நீ
சும்மாரு.
இவனுகளுக்கிருக்கிற
ரயிட்
நமக்கு
என்ன
இல்ல
இப்ப?”
“என்னடா
ரயிட்டுனு
பேசற?
அம்மங்கோயில்
வளவில
உக்காந்திட்டு
அசிங்கம்
பண்ணிறிய..?”
குப்பன்
சாம்பார்
மகனை
விலக்கி
விடுகிறான்.
“எல,
உன்ன
கருக்கல்ல
மொதலாளி
வரச்
சொன்னாரில்ல?
நீயே
இங்க
இப்ப
நிக்கிற?
போடா...”
மகனைப்
பற்றிக்
குளம்
சுற்றி
அப்பால்
தள்ளிவிட்டு
வருகிறான்
சாம்பார்.
ஏதோ
கைமாறிப்போன
ஏமாற்றம்
நேரிட்டாற்போன்று
வடிவுக்குக்
கோபம்
வருகிறது.
“திருட்டுப்
பயலுவ,
பத்து
வருச்மா
கோயில்
சொத்தக்
கொள்ளையடிச்சி
வீடு
வாசல்
அது
இது
கட்டிக்கிட்டாங்க.
இப்ப
இவனுவ
சாமி
கும்புடறானுவளா..”
பூமணி
ஆற்றில்
தண்ணிர்
படி
முழுக
ஓடுகிறது.
முகத்தைக்
கழுவிக்
கொள்கிறான்.
தொண்டையைக்
காறி
உமிழ்ந்து
கொப்புளிக்கிறான்.
பளாரென்று
விடிந்து
பறவையினங்கள்
வானில்
பறந்து
செல்கின்றன.
அதைப்
பார்த்துக்
கொண்டே
நிற்கின்றான்.
மனிசனுக்குத்தான்
எல்லாக்
கட்டுக்காவல்
சங்கடங்களும்
என்று
தோன்றுகிறது.
கிளியும்
குருவியும்
தன்னிச்சையாகத்
தேடித்
தின்னுகின்றன.
ஆண்
பெண்
கூடிக்
குஞ்சுபொரித்துச்
சந்தோசமாக
இருக்கின்றன.
ஒரு
மரத்தில்
கிளியும்
மைனாவும்
குருவியும்
ஓணானும்
மரங்கொத்தியும்
காகமும்
சொந்தம்
கொண்டாடி
இரைதேடிக்
கூடுகட்டுகின்றன.
கிளியும்
குருவியும்
சண்டை
போடுவதில்லை.
ஓணானும்
மரங்கொத்தியும்
சண்டை
போடுவதில்லை.
மனிசன்
மட்டும்
ஒருத்தருக்கொருத்தர்
என்று
இருப்பதில்லை.
புதிய
ஞானோதயம்
வந்துவிட்டாற்போல்
பூரித்துப்
போகிறான்.
இதை
அம்சுவிடம்
சொல்லவேண்டும்.
அம்சுவிடம்
எத்தனையோ
பேசவேண்டும்
போல்
பரபரப்பாக
இருக்கிறது.
ஆனால்...
வாயிலில்
கிழவன்,
கிழவி
அரண்
இருக்கிறார்கள்.
சம்முகம்
கொல்லைப்பக்கம்
போசி
வெந்நீரில்
காலை
வைத்துக்கொண்டு
படியில்
உட்கார்ந்திருக்கிறார்.
மாடுகளை
அவிழ்த்து,
படலைக்கு
வெளியே
முளையில்
கட்டுகிறான்.
“இன்னிக்கு
ஒழவோட்ட
போறமான்னு
கேட்டுட்டு
வாரச்
சொன்னாரு
அப்பா.”
“இருக்கட்டும்,
சம்பாச்சீரு,
முதல்ல
நாளு
இன்னிக்கு
நல்லால்ல.
கால
பஸ்ஸுக்குப்
புதுக்குடி
போய்ட்டு
வருவம்.
ராமலிங்கம்
வண்டி
தாரேன்னாரு
மாட்டக்கட்டி
ஓட்டிட்டுப்
போவலாம்.
மாட்ட
ஓட்டிட்டுப்போ...”
சம்முகம்
உடல்
நலிவினால்
மட்டுமில்லை,
இந்தப்
பத்துப்
பதினைந்து
நாட்களில்
ஆடிப்
போய்விட்டார்.
கண்கள்
சோர்ந்து,
சவரம்
செய்யாத
முகமும்,
தளர்ந்து
தொங்கும்
கழுத்துமாகப்
பரிதாபத்துக்குரியவராக
இருக்கிறார்.
“அடியுரமும்
யூரியாவும்
வாங்க
வச்சிருந்த
காசை
எடுத்துச்
செலவழிக்க
வேண்டியிருக்கு.
குண்டான்
ஓட்டயாயிடிச்சி.
இங்க
வந்தா
ரெண்டு
ரூவா
மேல
சொல்றா.
கடயில
பாத்து
வாங்கிட்டு
வரணும்னிருந்தேன்...”
லட்சுமி
முணுமுணுத்துக்கொண்டு
ரூபாய்
நோட்டை
எண்ணிப்
பையில்போட்டுக்
கொடுக்கிறாள்.
“இப்ப
அதும்
இதும்
முணுமுணுக்காத,
அந்த
நாய்
வந்தா
இந்த
ரூமில
வச்சிப்
பூட்டி
வை!
நான்
டாக்டரிட்டக்
காட்டிட்டு
சங்கத்துக்குப்
போயி
பொன்னுவைப்
பாத்துப்
பேசிட்டு.
முடிஞ்சா,
அவம்மாளையும்
பாத்திட்டுத்தா
வருவேன்.
அவன்
அப்படி
மேல
மேல
எகிறுற
புள்ளயில்ல.
இன்னிராவில
வரலன்னா,
நாளக்கித்தான்
வருவேன்.
காபந்தா
இருந்துக்குங்க...”
வெண்மையான
வேட்டியும்
சட்டையும்
அணிந்து
கொள்கிறார்.
வடிவு
வெள்ளாழத்
தெருவுக்குச்
சென்று
ராமலிங்கத்தின்
வண்டியை
ஓட்டிக்கொண்டு
வருகிறான்.
அதற்கு
முன்
குடிசைக்குள்
சென்று
சட்டையணிந்து
வேறு
வேட்டியை
உதறி
உடுத்திக்கொண்டு,
பாம்புத்
தோலை
ஒரு
சாக்குச்
சுருணையில்
பத்திரமாகச்
சுற்றி
வைத்துக்
கொள்கிறான்.
நடவுக்குச்
செல்லும்
பெண்கள்
வண்டியில்
சம்முகம்
ஏறச்
சிரமப்படுவதைப்
பார்த்து
நிற்கின்றனர். “எங்க
போறாவ?
ஆசுபத்திரிக்கா?...
தஞ்சாவூருக்கா?...
ஒடம்பு
ரொம்ப
லேவடியாப்
போயிட்டாரே?”
“புதுக்குடிக்குத்தாம்
போறாரு...”
“பத்துப்
பதுனஞ்சி
நாளாச்சி
கண்ணிலியே
காணம்.”
“ஒண்ணுக்கும்
கவலப்படாத,
ஆத்தாள
நினைச்சி
பாரத்த
போட்டுருக்கிறம்.
சரியாப்பூடும்..”
என்று
கிழவி
தைரியம்
சொல்கிறாள்.
“சம்முவம்,
வண்டிலியா
போற?
நா
வாரண்டால...!”
கிழவர்
தலைதுாக்கும்போது
கிழவி
தொட்டமுக்குகிறாள்.
“உனக்கென்ன
இப்ப?
இனி
அங்கிட்டுப்
போயி
கள்ளக்
குடிச்சிட்டு
ஆடிட்டு
வரணுமாக்கும்!
கெட
சும்மா!”
“வாரேன்
லட்சுமி.
எங்கடா
பழனிப்பய
வந்தானா?”
“ஆமா
முதலாளி.
கீச்சுக்
குரலில்
கூறித்
தாவி
ஏறி
அமர்ந்துகொள்கிறான்
பழனி,
“மருள்
நீக்கில
பஸ்
ஏத்திவிட்டுப்
போட்டு
மாட்ட
ஓட்டிட்டுப்
போற
முதலாளி.”
“சரி,
சரி.”
ஏரைத்
தூக்கிக்கொண்டு
சின்னமயான்
எதிரே
வருகிறான்.
பழனி
சாட்டையால்
வீறி
மாடுகளை
முடுக்குகிறான்.
நல்ல
பாதை
இல்லை.
ஆற்றுமேட்டுக்குக்
கீழே
கிழக்கே
சென்று
ஆற்றைக்
கடக்கவேண்டும்.
உள்ளூரில்
அவரால்
நடந்து
சென்று
பஸ்
ஏறுவது
கடினம்.
மேலும்
பலரும்
பலதும்
கேட்பார்கள்
என்று
சம்முகம்
அஞ்சினார்.
வண்டி
குலுங்கி,
ஆடிப்
பத்தடி
கடக்கவில்லை.
நாகு
ஓட்டமாக
ஓடி
வருவது
தெரிகிறது.
“இந்தப்
பயல
ஆரு
துறந்துவுட்டது?
எல
நிறுத்துடா
வண்டிய
வடிவு,
அவனக்
கூட்டிட்டுப்
போயி
கதவச்
சாத்திட்டு
வா!”
அதற்குள்
நாகு
நாக்குழம்ப
எச்சில்
ஒழுக
வண்டியைப்
பிடிக்க
வந்து
விடுகிறான்.
“நா...
நா...ம்.
ஹை
ஹை...
நம்...”
“போடா
வீட்டுக்கு!
போ!
எடுறா
கைய!”
பழனி
வண்டியை
நிறுத்த,
வடிவு
அவனை
இழுத்துப்
பார்க்கிறான்.
ஆனால்
இந்தப்
பேய்ப்
பயலுக்கு
எத்தனை
வலிமை!
“தூக்கி
ஆத்துல
கடாசுடா!
அடிச்சிட்டுப்
போவட்டும்?”
“நா...
நாவு...
நாம்...
ஹைஹை...”
ஹை
ஹை
என்று
தான்
வண்டியில்
போகவேண்டும்
என்று
கபடமில்லாத
ஆசையை
அவன்
வெளியிடுகிறான்.
ஆனால்
யாருக்கும்
அது
உகப்பாக
இல்லை.
இதற்குள்
லட்சுமியும்
விரைந்து
வருகிறாள்.
இருவருமாக
அவன்
ஊளையிட,
இழுத்துக்கொண்டு
செல்கின்றனர்.
‘மாடு
மேய்க்கக்கூட
லாயக்கில்லாமல்
ஒரு
பயல
வச்சிட்டு
இப்படி
வாழ்க்கையை
இழுத்திட்டுப்
போகவேண்டிருக்கே...’
என்று
நெற்றியில்
அடித்துக்
கொள்கிறார்.
-------------
11
புதுக்குடியில்
காலையில்
மழை
பெய்திருக்கிறது
போலிருக்கிறது.
இரண்டு
துாற்றல்
விழுந்தால்
போதும்,
சாலை
கசகசவென்று
கால்
வைக்கத்
தகுதியில்லாமலாகி
விடும்.
பஸ்
நிறுத்தம்
கசகசப்பின்
உச்சம்.
சாதாரண
நாளாக
இருந்தால்
சம்முகம்
விசுவநாதன்
வீட்டுக்கு
நடந்து
சென்றுவிடுவார்.
டவுன்
பஸ்
ஏதோ
போகிறது.
ஆனால்
அதற்குக்
காத்திருந்து,
அது
நிற்கும்
இடத்திலிருந்து
மீண்டும்
நடப்பது
பிரயாசையாக
இருக்கும்.
வடிவு
ஒரு
ரிக்ஷாக்காரனிடம்
பேரம்
செய்து,
மூன்று
ரூபாயிலிருந்து
ஒன்றே
கால்
ரூபாயில்
இறங்கி,
அவரை
உட்காரச்
செய்கிறான்.
“நீங்க
போயிட்டு
வாங்க
முதலாளி.
நா
பின்னோடையே
வாரேன்.”
“வீடு
தெரியுமில்ல?”
“ஏந்
தெரியாது?”
கையில்
சாக்குச்
சுருணை,
வீச்சம்
இரண்டும்
அவன்
இரகசியத்தை
அம்பலப்படுத்துகின்றன.
‘...ப்பயல்,
பாம்பு
கொன்றிருக்கிறான்.
விருத்தாசலம்
பிள்ளை
சொன்னது
சரியாகத்தானிருக்கிறது!”
பெரிய
வீதி
தாண்டி,
மண்டபம்
கடந்து
ரிக்ஷா
செல்கிறது.
வெயில்
விரைவாக
உச்சிக்கு
ஏறுகிறது.
மணி
பதினொன்றிருக்கும்
என்று
தோன்றுகிறது.
வழக்கம்போல்
விசுவநாதன்
மேல்
திண்ணையில்
உட்கார்ந்திருக்கவில்லை.
வண்டிக்கு
ஒன்றேகால்
ரூபாயைக்
கொடுத்துவிட்டு
மெள்ளப்
படி
ஏறுகிறார்.
உள்ளிருந்து
பெரிய
கண்களும்
தாழம்பூச்
சிவப்புமாக
அவர்
பெண்தான்
வருகிறாள்.
“அப்பா
இருக்கிறாராம்மா?”
“...குளிச்சிட்டிருக்காங்க.
நீங்க
ஆரைப்
பாக்க
வந்தீங்க?”
அவள்
கண்கள்
அவருடைய
பற்றுப்
போட்ட
காலின்
மீது
படிகிறது.
“அப்பாரைத்தா,
விசுவநாதன்.
கிளியந்துறை
சம்முகம்னாத்
தெரியும்.”
சற்றைக்கெல்லாம்
நெற்றியில்
துளி
நீருடன்
மேலே
பனியனைப்
போட்டுக்கொண்டு
விசுவநாதன்
வருகிறார்.
“என்னப்பா
சம்முகம்?
இரண்டாயிரம்
ரூபாய்
கிடைச்சிடிச்சா?”
சிரிக்கிறார்.
சம்முகத்துக்குச்
சிரிப்பு
வரவில்லை.
மனதில்
ஏதேதோ
தலைகால்
புரியாத
ஆத்திரங்கள்.
அந்தச்
சிறுக்கி
நேத்துக்
காலம
ஓடிட்டா
என்று
அழவேண்டும்
போலிருக்கிறது.
அவள்
உடையார்
வீட்டுப்
பெண்ணுடன்
சினிமாவுக்குச்
சென்றிருக்க
வில்லை
என்று
ஏதோ
மனக்குறளி
கூறுகிறது.
ஏனெனில்
அவள்
ஒரு
தீர்மானமில்லாமல்
ராத்தங்கி
இருக்கமாட்டாள்.
“நேத்துக்காலம
அந்தச்
சிறுக்கி
வீட்ட
விட்டுப்
போனவ
திரும்பி
வர
இல்ல,
சாமி.
ஒடயார்
வீட்டுக்குப்
போறேன்னு
போனவ
வரல.
அங்க
தலையாரிப்
பயல
அனுப்பிச்சேன்.
இல்ல,
சினிமாவுக்குப்
போயிருக்காங்கிறான்.
எனக்கு
சமுசயம்
ஏன்னா,
அந்தத்
தேவுடியா-மவன்,
இங்க
அன்னிக்குக்
காரில
வந்தானே,
அவன
எங்க
வீட்டுக்
கோடரிக்காம்பு
வீட்டுக்கே
கூட்டியாந்தான்.
தெருத்
திண்னயில
உட்காந்து
எங்காது
கேக்க,
இந்தச்
சிறுக்கிகிட்ட
எங்கூட்டுக்கு
வந்து
அப்பாரப்
பாரு,
உனக்கு
சீட்
கிடைக்கும்னு
குழயடிச்சான்...
இப்ப
எங்கிட்ட
சிநேகிதி
கிட்டப்
போறேன்னு
காதுகுத்திட்டு
ஓடிட்டா...
சாமி...
படிக்க
வச்ச
ரெண்டு
நாய்களும்
இப்பிடித்
துரோகம்
பண்ணிடுச்சே?”
அவர்
கடகடவென்று
சிரிக்கிறார்.
“நீ
ஏண்டா
சம்முகம்
பிரலாபிக்கிற?
இதெல்லாம்
உன்னாலும்
என்னாலும்
தடுத்து
நிறுத்த
முடியுமா?
பள்ளம்
கண்ட
எடம்
தண்ணி
பாயிது!”
“என்ன
சாமி,
இப்பிடிச்
சொல்றீங்க?
சேத்துப்
புழுக்களா
இருந்தவங்க
இன்னிக்கு
இந்த
அளவுக்கு
வர
எத்தினி
அடியும்
மிதியும்
பட்டோம்?
குடும்பம்
எப்படிப்
பஞ்சிப்
பிசிறுகளாச்சி?
இன்னும்
ஒரு
மூக்கறைப்
பிண்டத்தை
வச்சிச்
சுமை
இழுத்திட்டிருக்கிறோம்.
இப்ப
கண்ணு
முழிச்ச
இந்த
நாய்களுக்கு
நன்னி
இல்லாம
போயிடிச்சே?
கோட்டைன்னு
நினைச்சி
இறுமாப்பு
வச்சிட்டிருக்காதேன்னு
மூஞ்சிலடிச்சிட்டுப்
போனாப்பல...”
“அட
ஏண்டா
பொலம்பிச்
சாகற?
படிச்ச
பொண்ணு.
உங்காலத்துப்
பிரச்னை
வேற;
இப்ப
அதுங்க
கண்ணோட்டம்
வேற,
ஏம்
விருதாவா
சங்கடப்பட்டுட்டிருக்கே?
விட்டுத்தள்ளு!”
“எப்படிங்க
விட்டுத்
தள்ளுவது?
எங்க
தாய்
தகப்பனுக்கு
இருந்திராத
சவுரியம்
எங்களுக்கிருக்கு,
எங்களுக்கில்லாத
சவுரியம்
எங்க
மக்களுக்குன்னு
அவங்கள
கோபுரத்தில
ஏத்தி
வைக்கணும்னு
பாடுபட்டேன்.
பையன்
கட்டிக்கிட்ட
வேட்டிய
நா
உடுத்துவேன்.
பொண்ணு...
அவள
சமீன்வீட்டுப்
புள்ள
மாதிரி
நடத்தினேன்...”
அவர்
அருகில்
வந்து
தோளைப்
பற்றுகிறார். “என்னடா
இவ்வளவு
திராபையா
இருக்கிற
பொண்ணாவது
புள்ளயாவது;
ஏதோ
உன்
கடமை,
நீ
செஞ்சே.
அவங்கவங்க
கரும
பலனை
அவங்கவங்க
அநுபவிச்சிட்டுப்
போறாங்க...”
திடுக்கிட்டாற்போல்
சம்முகம்
குலுங்குகிறார்.
“வெந்ததத்
தின்னு
விதி
வந்தாச்
சாவோம்,
நாம
சாணிப்
புழுக்களப்
போல
இருக்கத்தான்
பிறவி
எடுத்தோம்ங்கறது
அறியாமை.
எழுந்திருங்கடா”
என்று
ஆவேசப்பிரசங்கம்
செய்த
விசுவநாதனா
இவர்?
“என்ன
சாமி!
நீங்களே
இப்ப
கருமம்
அது
இதுன்னு
பேசுறீங்க?
இன்னும்
எங்க
குடிகள்ள
ஒரு
சிலரத்
தவுர
எல்லாம்
சேத்தில
உழச்சிட்டு,
கள்ளக்
குடிச்சிட்டு,
பொண்டு
பிள்ளைகளைப்
பராரியா
நிக்கவச்சிட்டிருக்காங்க.
நினைச்சிப்
பாத்தா
ஒரு
முன்னேத்தமில்ல.
சுடுகாட்டுக்குப்
போக
வழி
குடுக்க
மாட்டேங்கறாங்க.
அன்னிக்கு
சாமி
கும்பிடாதியன்னும்
வள்ளிக்கும்
முருகனுக்கும்
திரட்சிக்
கல்யாணம்னும்,
ஊர்
மேயுற
திருட்டுச்
சாமிகளை
ஏண்டா
கொண்டாடணும்னும்
அசிங்க
அசிங்கமா
பேசினானுவ,
நோட்டீசு
போட்டு
ஒட்டினானுவ.
எங்க
பொண்டுவ
திருட்டுத்
தனமா
சாமி
கும்புடப்
போவாங்க.
இப்ப
இன்னிக்கு
திடீர்னு
சாமி
கும்பிடணும்,
கோயில்
சீர்
பண்ணனும்,
இப்ப
குடிசயக்
காலி
பண்ணுன்னு
கிட்டிய
வக்கிறான்.”
“ஆர்ராது?...”
“அதா
விருத்தாலம்புள்ள,
இன்னும்
ஊரில
இருக்கிறவங்க
அல்லாந்தா.”
“இப்ப
ரொம்ப
செழிப்போ?...”
“கோயில்
சொத்தெல்லா
அவங்கய்யில
தான
இருக்கு?
பத்து
வருசமா
கொள்ளையடிச்சிருக்கானில்ல?”
“திருட்டுப்
பயலுவகதா
சாமி
பூதம்னு
வேசம்
போடுறானுவ.
அவனுவகளுக்குத்தான
பயம்?”
“...
சாமி,
என்
காலப்
பாருங்க!
இது
வேற
ரோதன.
அன்னிக்கிப்போன
பிறகு
நடமாட்டமே
இல்ல...”
குதிகாலைத்
திருப்பிக்
காட்டுகிறார்.
பாத
முழுவதுமே
வீங்கி
இருக்கிறது.
அவர்
கைவிரலால்
வீக்கத்தை
அழுத்திப்
பார்க்கிறார்.
பிறகு
உள்ளே
சென்று
சட்டையை
மாட்டிக்கொண்டு
திரும்புகிறார்.
அவரால்
காலைக்
கீழே
ஊன்றி
வைக்க
முடியவில்லை.
மெள்ள
சுவரைப்
பற்றிக்கொண்டு
நொண்டினாற்போன்று
அடுத்த
வீட்டுப்படி
ஏறுகின்றனர்.
வாயில்மேல்
திண்ணையில்
கைக்குழந்தைக்காரிகள்,
சளி,
இருமல்,
தலைக்கட்டு
என்று
ஒரு
நோய்க்
கூட்டம்
காத்திருக்கிறது.
கடந்து
உள்ளே
செல்கின்றனர்.
இடைகழிக்கப்பால்
பெரிய
கூடத்தின்
ஓர்
ஓரத்தில்
திரை
இருக்கிறது.
ஒரு
வெள்ளைச்சேலை
நர்சும்,
இன்னும்
சில
நோயாளிகளும்,
டாக்டர்
உள்ளே
பார்க்கிறார்
என்பதை
அறிவிக்கின்றனர்.
பெஞ்சி
ஒன்றில்
அவனுடன்
அமர்ந்து
கொள்கிறார்.
உள்ளிருந்தவர்
வந்ததும்
இவர்களை
முதலாக
விடுகிறாள்.
“அட...
வாங்க
சித்தப்பா,
எனக்குச்
சொல்லி
அனுப்பக்
கூடாது?
நான்
வருவேனே?”
சம்முகம்
பின்
தொடருவதைப்
பிறகே
கவனிக்கிறாள்.
“நம்ம
பழைய
நாளைய
தோஸ்த்,
கீதா.
கிளியந்துறை.
நடையா
நடப்பான்.
காலைப்பாரு...”
சம்முகம்
நாற்காலியில்
அமர்ந்து
சிறு
ஸ்டுலில்
காலை
வைத்துக்
காட்டுகிறார்.
பட்டுத்துணிபோல்
மினுமினுக்கும்
முடி...
ராஜகளை.
மொழுமொழுவென்ற
கைவிரலினால்
தொட்டுப்
பார்க்கிறாள்.
முன்னுக்கு
வரும்
தன்மை
எத்தனை
முட்டுக்கட்டை
போட்டாலும்
முடங்கி
விடுவதில்லை.
இப்படி
அவர்கள்
குடியில்
பிறந்தவர்கள்
நூற்றில்
ஒருவரேனும்
வரமுடிகிறதா?
எங்கோ
ஆயிரத்தில்
ஒன்று.
இத்தனை
சலுகைகளைப்
பற்றித்
தம்பட்டம்போடும்
காலத்தில்!
கையைக்
கழுவிக்கொண்டு
வந்து
வயசு
அது
இது
எல்லா
விவரங்களும்
கேட்கிறாள்.
நீர்,
இரத்தம்
எல்லாம்
பரிசோதனை
செய்ய
வேணுமாம்.
எல்லாம்
அங்கேயே
செய்து
கொள்ளலாமாம்.
இப்போது
ஓர்
ஊசி
போட்டபின்,
அடுத்த
நாள்
பரிசோதனை
முடிந்து
விவரம்
தெரிந்தபின்
மருந்து
கொடுப்பார்களாம்.
அது
அமுங்குவது
நல்லதல்ல.
இரண்டொரு
நாள்
பாத்து
கிழித்துவிடலாம்.
சரியாகப்
போய்விடும்.
ஒன்றும்
பயப்படுவதற்கில்லை.
“அப்ப,
நீ
இன்னிக்கு
எதுக்குடா
ஊருக்குத்
திரும்பிப்
போகணும்?
பேசாம
இங்கியே
தங்கிடு!...”
சம்முகத்துக்கு
அது
உகப்பாகப்
படுகிறது.
ஆனால்,
அவரால்
நடந்துபோக
இயலாத
நிலையில்
காபி,
சாப்பாடு
என்று
இவர்
வீட்டில்
தங்குவது
சரியா?
“இப்ப...
இத
தெருக்
கோடிதான்.
நம்ம
சாவித்திரி
கூடப்
படிச்ச
பொண்ணு
அவப்பாதான்,
இந்த
பரிசோதனை
பண்றாங்க
நீ
போயிச்
சீட்டைக்
காட்டி
எல்லாம்
குடுத்திட்டு
வந்துடு.
நானும்
வரட்டுமாடா?”
“வானாம்
சாமி.
நீங்க
போங்க.
நம்மபய,
குப்பன்
மகன்
வடிவு
வருவான்.
இருக்கச்
சொல்லுங்க,
வரேன்...”
டாக்டரிடம்
காட்டி
ஒன்றுமில்லை
என்று
கேட்டபின்,
ஊசி
போட்டபின்,
சிறிது
மன
இறுக்கம்
குறைகிறது.
பரிசீலனைக்கு
ஆறு
ரூபாய்
கேட்கிறார்கள்.
நீரும்
இரத்தமும்
கொடுத்துவிட்டுத்
திரும்புகையில்
களைப்பாக
இருக்கிறது.
வடிவு
வந்தால்
மறுபடியும்
இரண்டு
ரூபாய்
செலவு
பண்ணிக்கொண்டு
சங்க
அலுவலகத்துக்குப்
போய்விடலாம்.
இவனுக்காக
ஐயர்
சாப்பிடாமல்
காத்திருக்கிறாரோ?...
அவருடைய
குடும்ப
நிலைமையை
உணர்ந்துகொண்ட
பின்
அங்கு
தங்குவது
சரியாகப்படவில்லை.
வடிவு
இந்த
வழியாகத்தான்
போக
வேண்டும்
என்பதை
எதிர்பார்த்து,
அங்கேயே
திண்ணையில்
உட்கார்ந்திருக்கிறார்.
காலை
நேரத்தின்
வரையறை
முடிந்து
கதவை
இழுத்துப்
பூட்டிக்
கொண்டு
அங்கிருந்த
ஆள்
போகிறான்.
இவர்
வெற்றுத்
திண்ணையில்
பொருந்தாமல்
அவன்
வரும்
வழி
நோக்கி
இருக்கையில்
வடிவு
சிரித்துக்கொண்டே
மறுபுறம்
இருந்து
குரல்
கொடுக்கிறான்.
“என்ன
மொதலாளி,
இங்க
உக்காந்திருக்கீங்க?”
“...வடிவு,
ஒரு
ரிச்சா
கூட்டிட்டு
வா,
சங்க
ஆபீசுக்குப்
போயிருவம்.
இங்கியே
தங்கிப்
பார்க்கணும்னு
சொன்னாங்க...”
“அப்ப...?”
“நீ
என்னக்
கொண்டுவிட்டுப்
போட்டு,
ஊருக்குப்போ,
நாளக்கிச்
சம்பா
ஒழவு
ஆரம்பிச்சிடணும்னிருந்தேன்.”
“அதெல்லாம்
நாம்பாத்துக்கிற
முதலாளி.
நீங்க
நல்லா
கவனிச்சிட்டு
வாங்க.
ஊசி
போட்டாங்களா?”
“ஆமா.
ஒண்ணும்
பயமில்ல.
இரண்டு
முணு
நாளில
நல்லாயிடும்னாங்க.
ஐயிரு
அண்ணம்
மக
தானே?
நல்லபடியா
கவனிக்கிறாங்க.
இது
ஒரு
வயசுக்குளந்த,
தேரு
பாக்க
வரும்.
இப்ப.
எத்தினி
உசரம்
போயிட்டாங்க.”
“ஐயிரப்
பாத்துச்
சொல்லிட்டுப்
போகலாம்!...”
வடிவு
அவரை
வண்டியில்
ஏற்றிவிட்டு,
ஒட்டலில்
சென்று
எலுமிச்சைச்
சோறும்
தோசையும்
பொட்டலமாக
வாங்கிக்
கொண்டு
போய்
அலுவலகத்தில்
கொடுக்கிறான்.
அலுவலகத்தில்
பொன்னடியானில்லை.
அவன்
எங்கோ
வகுப்பெடுக்கச்
சென்றிருக்கிறானாம்.
காவலாக
ஒரே
ஒரு
ஆள்
மட்டும்
இருக்கிறான்.
விசாலமான
கூடம்
இருக்கிறது.
சுருட்டி
வைத்திருக்கும்
பாயொன்றை
எடுத்துப்போட்டு
அமர்ந்து
கொள்கிறார்
சம்முகம்.
“அம்மாட்ட
சொல்லு.
மடைபாத்துத்
தண்ணிவுடு.
போறப்ப,
பன்னண்டு
ருவாக்கி,
இருக்கல்ல,
பூச்சி
மருந்து
டப்பி,
அத்த
ஒண்ணு
வாங்கிட்டுப்
போ.
நா
நாள
மறுநாளக்கிக்
கண்டிப்பா
வந்திடுவேன்.
ஒழவத்
தள்ளிப்
போடாதீங்க.
பூசாரியோ
விருத்தாலமோ
வந்து
மெரட்டினாங்கன்னா,
நா.
வந்து
பேசிக்கிறேன்னு
சொல்லுங்க.
குடிசய
இப்ப
பிரிக்கிறதாத்
தயங்க
வாணாம்...”
அடுக்கிக்கொண்டே
போகிறார்.
ஆனால்
முக்கியமான
முள்ளிருக்கும்
இடம்
தவிர்க்கிறார்.
திரும்பிச்
செல்லு
முன்
அவள்
வீட்டுக்கு
வந்திருப்பாள்.
இவரும்
இங்கே
தங்கும்
வாய்ப்பில்
பொன்னடியானைக்
கண்டு
பேசி,
இன்னும்
ஒரிரு
தலைவர்களையும்
வைத்துக்
கொண்டு
எல்லாம்
தீர்மானம்
செய்துவிடலாம்.
ஐப்பசியில்
கட்டிவிடவேண்டும்.
இவள்
கைவிட்டுப்
போய்விடக்கூடாது.
வடிவு
அவரை
விட்டபின்,
ஓட்டலில்
வந்து
மூன்று
ரூபாய்க்கு
நன்றாகச்
சாப்பிடுகிறான்.
சம்முகம்
அவன்
செலவுக்கு
ஐந்து
ரூபாய்
கொடுத்திருக்கிறார்.
பூச்சி
மருந்து
பன்னிரண்டு
ரூபாய்.
அது
தவிர,
பாம்புத்
தோலுக்காக
ஆறுருபாய்
கிடைத்திருக்கிறது.
விடுதலை
மகிழ்ச்சியில
சினிமாக்
கொட்டகையில்
வந்து
உட்காருகிறான்.
ராஜா
ராணி,
தேர்,
குதிரை,
யானை,
பூதம்,
நாகலோகம்
எல்லாம்
வரும்
படம்.
ராஜகுமாரியும்
ராஜகுமாரனும்
பூங்காவில்
காதல்
செய்யும்போது,
அம்சு
அருகில்
இருப்பதாகவே
கற்பனையில்
மிதக்கிறான்.
வாய்மடை,
வடிமடை,
வரப்பு,
வெட்டு,
குடிசைகளின்
உறுதியில்லா
நிலைமை
- எல்லாமே
அப்போதைக்கு
அவன்
உலகைவிட்டு
அப்பால்
போகின்றன.
சூனியக்காரி
ராஜகுமாரியைக்
கிளியாக்கிக்
கூண்டில்
அடைத்து
விடுகிறாள்.
ராஜகுமாரன்
பூதத்தின்
துணைகொண்டு
அந்தக்
கிளியைத்
தேடிப்
புறப்படுகிறான்.
வழியில்
நாகலோகம்.
நாககுமாரி
காதல்
பெரிய
பெரிய
விடம்
கக்கும்
நாகங்கள்
சாதுவாக
இருக்கின்றன.
நாககுமாரி
அவற்றை
ஒதுக்கி
வைத்துக்
கொண்டு
அரசகுமாரனை
உபசரிக்கிறாள்.
‘இத்தினி
பாம்பையும்
எப்படி
வச்சிப்
படம்
புடிக்கிறானுவ!
எல்லாத்துக்கும்
பல்லைப்
புடுங்கிருப்பா.
ஆனாலும்...
ஒருக்க
மட்றாசுக்குப்
போயி,
படம்
புடிக்கிறது.
ஷூட்டிங்காமே,
அதைப்
பாக்கணும்...’
என்ற
ஆசை
கபடம்
இல்லாமல்
முகிழ்த்து
வருகிறது.
------------
12
சினிமா
முடிந்து
வருகையில்
இலேசாகத்
தூற்றல்
விழுகிறது.
பஸ்
நிறுத்தத்தில்
வந்து
ஒரு
டீ
குடித்துவிட்டு,
மிட்டாய்க்
கடையில்
சேவும்
அல்வாவும்
வாங்கிக்கொள்கிறான்.
மீதி
நான்கு
ரூபாயை
மடித்துப்
பையில்
தனியாக
வைத்துக்கொண்டு
பஸ்ஸுக்காகக்
காத்து
நிற்கிறான்.
“எங்க
இந்தப்
பக்கம்?
வடிவு?...”
தேவுதான்
நிற்கிறான்!
சர்ட்டு
சராய்
போட்டுக்கொண்டு,
கையில்
ஒரு
தோல்
பையுடன்...
“ஆ...மாங்க.
தலவருக்கு
உடம்பு
சரியில்ல.
கால்ல...
வீக்கம்,
கூட்டியாந்து
ஆசுபத்திரில
காட்டிட்டு
வூட்டுக்குப்
போறேன்...”
“பஸ்
ஆறு
மணிக்கு
வரணும்.”
“நீங்க
ஊருக்குத்
தானா
சாரு!”
தேவு
சிரிக்கிறான். “என்னப்
போயி
சாருமோருங்கற.
நீயும்
நானும்
ஒண்ணாப்
படிச்ச
தோழர்கள்
தானே,
தேவுன்னு
கூப்பிடறது.”
“அதெப்படிங்க,
நீங்க
ஒசரத்துக்குப்
போயிட்டீங்க.
நாந்தா
படிக்காம
ஏரப்
புடிச்சிட்டேன்!”
வடிவுடன்
அவனும்
சிரிக்கிறான். “அப்ப
நீதான்
உசத்தி.
ஏரின்
பின்னால்
தான்
உலகமே.
உங்களைப்
போன்ற
தொழிலாளிக
இல்லன்னா,
ஏது
மத்த
வளமை
எல்லாம்?”
“அது
சரி,
அது
உளுமதா.
ஆனா
யாருங்க
அதெல்லாம்
ஒத்துக்கிறாங்க?
படிச்சி
அழுக்கு
ஒட்டாம
வேலை
செய்யிறவங்க
ஆருங்க
எங்களை
மதிக்கிறாங்க?...”
“அது
யாரோட
தப்புன்னு
நினைக்கிற?
உங்க
தப்புத்
தான்...”
“எங்க
தப்பா?...”
“ஆமாம்.
வெறும
கூலி
உசத்திட்டாங்கன்னா
கம்முனு
பேசாம
இருந்திடறீங்க...”
“பின்னென்ன
செய்யிறது?”
“பாரு,
பாரு
உங்களுக்கு
இன்னும்
என்ன
இல்லைங்கறது
கூட
பிறத்தியான்
சொல்ல
வேண்டியிருக்கு...
அது
சரி,
உன்
தலைவரு
மகளக்
கூட்டிட்டுப்
போனாரே
அன்னிக்கு,
ஸீட்
கிடச்சிச்
சேந்தாச்சா?”
வடிவு
உதட்டைப்
பிதுக்குறான். “எங்கங்க.
அதென்னமோ
ரெண்டாயிரம்
கட்டணும்னாங்களாம்.
உள்ளுக்குள்ள
ஏதோ
கரசபுரசலு.
அவருக்கும்
கால்ல
ஏதோ
குத்தி
காச்சல்
கடுப்பு.
எந்திருக்கிறதுக்கில்ல.
இந்தப்
பொண்ணு
பாருங்க..”
குரலைத்
தாழ்த்திக்
கொண்டு
சுற்று
முற்றும்
பார்க்கிறான்.
“நேத்து
காலம
எங்கோ
ஓடிட்டது.
ஒடயாரு
வீட்டுக்குப்
போச்சின்னாங்க.
என்னப்போயி
வீரமங்கலத்துல
விசாரிக்கச்
சொன்னாங்க.
அங்க
இல்ல.
நமுக்கேங்க
வம்பு.
அவங்க
சினிமாக்குப்
போயிட்டாங்கன்னு
சொன்னேங்க.
ஆக
பொண்ணு
இப்ப
வந்திருக்குதோ
என்னமோ...?”
அவன்
புருவங்களை
நெரித்துக்கொண்டு
நிற்கிறான்.
“அவரு
மகன்
மட்ராசில
இருக்காரில்ல...?
அங்க
போயிருக்குமா
இருக்கும்?"
“அதென்னன்னு
தெரியல
மகங்கூட
செரியில்லிங்க.”
இதற்குள்
பஸ்
வருவது
தெரிகிறது.
இருவரும்
ஓடிப்போய்
இடம்
பிடிக்கிறார்கள்.
முன்
வரிசையில்
கெளரவமான
தேவுவின்
அருகில்
அமரும்போது
வடிவுக்கு
மிகுந்த
மகிழ்ச்சியாக
இருக்கிறது.
இவன்
கையை
அமர்த்திவிட்டு
அவனே
சீட்டெடுக்கிறான்.
“என்னாத்துக்குங்க
நீங்க,
சீட்டெடுக்கிறது?”
“பரவாயில்ல,
நான்
உனக்குச்
சீட்டெடுக்கலாம்.
எல்லாம்
செய்யலாம்...”
புன்னகை.
கறுப்புக்கூட
உதிர்ந்து
பயல்
எப்படி
இருக்கிறான்!
படிச்சவன்
தன்
இனத்தானை
ஒதுக்குவதைத்
தான்
வடிவு
கண்டறிந்திருக்கிறான்.
கோபு,
நின்ற
இடத்தில்
கூட
நிற்காமல்
போவான்.
வாடா
போடா
என்று
எவ்வளவு
துச்சமாகப்
பேசுவான்?
ஏன்,
சட்டக்கூலி
கொடுக்கக்கூடாது
என்று
நின்றான்!
மருள்
நீக்கி
வரும்வரை
அவன்
எதுவும்
பேசவில்லை.
அங்கே
இறங்கி
நடக்கின்றனர்.
வரப்பின்
குறுக்கே
நடக்கையில்
திடீரென்று
“ஆமா,
அந்த
ஐயனார்
கொள
வெவகாரம்,
அதற்கு
ஒண்ணும்
பண்ணலியா?”
என்று
கேட்கிறான்.
“...என்ன
பண்ணுறதுங்க?
அவனுவ
பக்கம்
அல்லாக்கட்டும்
ஆளுகளும்
இருக்காங்க.
கொடி
புடிச்சிட்டுக்
கூச்சப்போடுவம்.
போலீசு
வந்து
அடிச்சி
உள்ள
தள்ளு
வா.
ஒண்ணும்
இல்லமலேயே
இவனுவ
சந்தேகம்னு
புடிச்சிட்டுப்
போயி
வாக்கரிசி
வாங்கிக்கறாங்க...”
“உங்க
சங்கம்
பின்ன
என்னதா
செஞ்சிட்டிருக்கு?”
“போன
வருசத்துக்கு
இந்த
வருஷம்
கூலி
உசந்திருக்கில்ல?”
“அது
சரிதா.
இருந்தாலும்
பல
உரிமைகளை
விட்டுக்
குடுக்கிறோம்.
சின்னச்
சின்னப்
பிரச்னைபோல
தெரிஞ்சாலும்
எல்லாரையும்
கூட்ட
அதுதான்
உதவி
செய்யும்.”
“அது
சரிதாங்க.
இப்பக்
கூட,
காலம
குடிசயப்
பேத்திடுவோம்னு
பூசாரி
பயமுறுத்திட்டுப்
போறான்.
முதலாளி
புதுக்குடில
படுத்திட்டாரு...”
குபீரென்று
தேவு
சிரிக்கத்
தொடங்கி
அடக்கிக்
கொள்கிறான்.
“என்னங்க...?”
“இல்ல,
நீ
முதலாளின்னதும்
சிரிப்பு
வந்தது...”
இவனுக்கும்
வெட்கமாக
இருக்கிறது.
“முதலாளின்னு
கூப்பிட்டுப்
பழக்கமாயிடிச்சிங்க.
நம்ம
எனத்துல,
சொந்தமா
அஞ்சுமா
வச்சிட்டு
ஒரு
தலவரா
இருக்கிறவர
நாம
முதலாளின்னு
கூப்பிடுறது
கவுரததானுங்களே?”
“...இப்பத்தா
எனக்கு
நல்லாப்
புரியுது.
நம்ம
சனங்களுக்கு
தாங்க
ஒரு
முதலாளியா,
மிராசா,
சமீனா
இருக்கணும்,
நமக்குக்கீழ
நாலுமனுசன்
கைகட்டி
சேவுகம்
பண்ணனும்ங்கற
உணர்வு
ரெத்தத்தோட
ஊறிப்போயிருக்கு.
பொது
உடமைச்
சித்தாந்தமெல்லாம்
பேசி
ஊறினாக்
கூட,
தனக்குன்னு
வாரப்ப,
எந்த
மனுசனும்
பொஞ்சாதியையேனும்
குறைஞ்சபட்சம்
அடிமைன்னு
நினைச்சி
அதிகாரம்
பண்ணாம
இருக்கிறதில்ல.
தாங்க
ஒரு
உடமைக்காரராக
இல்லாத
நிலையிலதான்
சித்தாந்தம்,
வேதாந்தம்,
எல்லாம்...”
தலைவனை
விமரிசனம்
செய்வது
என்பது
ஒத்துக்கொள்ள
முடியாத
வரம்பாக
ஊறிப்
போயிருக்கிறது.
எனவே
வடிவு
அவன்
பேச்சை
ஏற்றுக்கொள்ளவில்லை.
“நீங்களும்
எத்தினி
வருசமா
உழைக்கிறீங்க?
உங்கப்பாரும்
அடிதடி,
சிறைவாசம்னு
எத்தினி
கஷ்டப்பட்டிருக்காரு.
இன்னும்
ஒரு
சாண்
நிலம்
சொந்தமாக
வச்சிக்க
முடியல.
இவங்க
கோயில்ல
சாமில்லன்னு
சொல்றப்ப
நீங்க
கும்பிடக்கூடாது;
ஏத்துக்கணும்.
இவங்க
சாமி
கும்பிடணும்னு
சொல்றப்ப
நீங்க
குடிசயத்
தூக்கிட்டு
நடுவீதில
நிக்கணும்!
அது
சரி,
முன்ன
ஸ்கூல்
கட்டணும்னு
உங்களக்
குடிசங்களத்
தூக்கிட்டுப்போயி,
கோயிலுக்குப்
பக்கத்தில
அவங்கதா
போட்டுக்கச்
சொன்னாங்க.
அப்ப,
வெள்ளாழத்
தெருப்
பக்கத்திலோ,
அக்கிரகாரத்துக்குப்
பக்கத்திலோ
உங்க
நாலஞ்சு
பேருக்கு
எடம்
குடுக்கக்
கூடாதா?
பரப்பயல்னா,
ஊருக்கு
வெளியே
இருக்கணும்னுதா
இப்பவும்
நினைக்கிறாங்க
இல்லியா?
இத்தக்
கேக்க
உங்களுக்குத்
தெரியலியே?”
வடிவு
ஒரு
வியப்புடன்
தேவுவின்
சொற்களை
ஏற்கிறான்.
“நாயந்தான்.
இப்பக்கூட,
அக்கிரகாரத்தில
பல
வீடும்
பாழடஞ்சி
கிடக்கு.
ஆத்தோரம்
வரயிலும்
எத்தினி
கொல்லை
நீண்டு
பாழாக்கிடக்கு?
அங்க
போயிக்
குடிசைகளைப்
போட்டுக்க
எடம்
குடுப்பாங்களா?
மறுபடியும்
ஊருக்கு
வெளியே
இன்னும்
தள்ளி
ஆத்துக்கு
அக்கரையில
சட்டியத்
தூக்கிட்டு
ஓடணும்னு
தான
சொல்றாங்க...”
வடிவு
வெளிப்படையாகக்
கேட்கவில்லை.
ஆனால்
உள்ளே
சலனமடைகிறான்.
“என்ன
பேசாமலிருக்கிற
வடிவு?
புரட்சியக்
கொண்டாரோம்னு
எங்கப்பன்
உங்கப்பன்
உங்க
தலைவரோட
அப்பன்
எல்லாம்
அடிபட்டாங்க.
சாவுக்கும்
அஞ்சல.
அம்மாமாருகளெல்லாம்
போலீசுக்காரனும்
அவனும்
இவனும்
மானம்
குலச்சிச்
சுமை
சுமக்க
வச்சதையும்
பொறுத்தாங்க.
ஆனா
எல்லாம்
அடங்கிப்
போச்சு.
குடுத்த
விலையெல்லாம்
வெத்துக்கருக்காய்க்குன்னு
ஆச்சி.
நினைச்சிப்
பாரு...”
வடிவுக்குச்
சுருக்கென்று
உரைக்கிறது.
‘புரட்சி’
என்ற
சொல்லைப்
பற்றி
வடிவு
நிறையக்
கேட்டிருக்கிறான்.
அவர்கள்
சங்கத்துக்
கோஷமே
அந்த
உயிர்ச்
சொல்தான்.
உச்சவரம்புப்
போராட்டம்,
கூலி
உயர்வுப்
போராட்டம்,
விலைவாசிப்
போராட்டம்,
நிலப்
பட்டாப்
போராட்டம்
என்று
எத்தனையோ
போராட்டங்களில்
அவனுடைய
அப்பன்,
ஏன்,
அம்மாவும்
கூடக்
கலந்து
கொண்டு
சிறைக்குச்
சென்றிருக்கிறார்கள்.
ஆறுமாசம்,
நான்கு
மாசம்
என்று
போவதும்,
வக்கீல்,
கோர்ட்டு
என்று
அலைவதும்,
அவனுக்கு
வாழ்க்கையில்
சாதாரணமாகப்
பழகியவை.
ஆனால்
அவன்
பெரும்பாலும்
அந்த
சமயங்களில்
நிலத்தைப்
பார்த்துக்
கொள்ளத்
தங்கிவிடுவான்.
இப்போது
சில
நாட்களாகத்தான்
சில்லறை
சச்சரவுகளில்
சிக்கிக்
கொண்டு
காவல்
நிலையங்களைப்
பார்த்து
வருகிறான்.
சில
மாசங்களுக்கு
முன்பு
இப்படித்தான்
ஒரு
நாள்
சாயங்காலம்
குடித்துவிட்டுத்
தெம்மாங்கு
பாடிக்கொண்டு
போனான்.
நடவு,
உழவு
எதுவும்
இல்லாத
நாட்கள்.
உளுந்து
பயிறு
பிடுங்கிய
பின்
தரிசாகக்
கிடந்தன.
இவனுக்கு
அன்று
கையில்
கொஞ்சம்
காசு
கிடைத்திருந்தது.
லீவுக்கு
வந்திருந்த
ஐயர்
மகன்
கொடுத்திருந்தான்.
அஸ்தமங்கலத்துக்குச்
சினிமாவுக்குப்
போவதாக
எண்ணிக்கொண்டு
புறக்காவல்
நிலையத்துக்கு
முன்
சென்று
கொண்டிருந்தான்.
ஐயர்
மகன்
சிவப்புக்
கட்டம்போட்ட
புதிய
தேங்காய்ப்
பூத்துவாலை
ஒன்றும்
அவனுக்குக்
கொடுத்திருந்தான்.
அதைத்
தலையில்
சுற்றிக்
கொண்டிருந்தான்.
ஏட்டையா
அவனைக்
கைக்குச்சியால்
ஒரு
தட்டுத்
தட்டினார்.
“ஏண்டால?
என்னா
சமாசாரம்?...
எங்கடா
வந்து
ஆட்டம்போடுற?"
என்றார்.
அப்போது
இம்மாதிரி
பப்ளிக்காக
கள்ளுக்கடைகள்
திறந்திருக்கவில்லை.
தோப்பில்
தான்
ஊறல்
விற்பார்கள்.
ஆனால்
எல்லோரும்
குடிப்பதுதான்
அப்போது
அவனைப்
பிடித்ததற்கு
காரணம்
என்று
நினைத்தான்.
“இல்ல...
சாரு...”
என்று
குழறினான்.
ஏட்டு
அவன்
தலைத்துண்டைப்
பற்றி
இழுத்தார்.
“இன்னாடா
சேப்புத்
துண்டு
போட்டிருக்கிற?.
கம்னாட்டிப்
பயலே.”
என்று
திட்டி
முதுகில்
நான்கு
சாத்தினார்.
“ஐயோ...
இல்லீங்க..”
“குடிச்சிட்டு
வந்து
டேசன்
முன்ன
ஆட்டம்
போடுறான்.
இன்னாடா
தயிரியம்?...”
“இல்லிங்க
சாரு
இல்லிங்க
தெரியாம
வந்திட்டேன்.”
“ஏண்டால,
சேப்புத்
துண்டு
போட்டிருக்கிறியே,
புரட்சின்னா
இன்னான்னு
தெரியுமாடா?”
“தெரியும்
சாரு
புரட்சின்னா
சாஸ்தி
கூலி
வரும்.
நல்லா
இருப்போம்.
அதுக்குத்தான்
போராடுறம்...”
“அட
போடா
முட்டாப்பயல?
போயி
உந்
தலவரிட்டக்
கேளு!”
என்று
புதிய
துண்டை
உருவிக்கொண்டு
அவனை
விட்டார்.
அன்று
வந்ததும்
முதல்
வேலையாகச்
சம்முகத்திடம் “புரட்சின்னா
என்ன
முதலாளி?
சரியாச்
சொல்லுங்க!”
என்று
கேட்டான்.
சம்முகம்
நடந்த
விவரங்களைக்
கேட்டுவிட்டு
அவனுடைய
கபடமற்ற
தன்மைக்குச்
சிரித்துக்கொண்டார். “நீ
முதலாளின்னு
கூப்பிடக்கூடாது,
முதல்ல!”
‘புரட்சி
என்றால்
என்ன?’
என்று
தலைப்பிட்ட
ஒரு
சிறு
புத்தகத்தைக்
கொடுத்தார்.
“எளிமையா
எழுதிருக்கு
பாரு,
படிச்சித்
தெரிஞ்சிக்க,
நா
வந்து
கேப்பேன்,
சொல்லனும்!”
என்றார்.
இவனுக்குப்
படிக்க
வணங்குவதில்லை.
எழுத்துக்
கூட்டி
அந்தச்
சிறு
பிரசுரத்தில்
நான்கு
பக்கங்கள்
படித்தான்.
பிறகு
அப்படியே
போட்டு
விட்டான்.
அது
மறந்தே
போயிற்று.
தேவு
அவன்
வழிக்குப்
பிரிந்துபோகிறான்.
வடிவு
முதலாளியின்
வீட்டுக்கு
வருகிறான்.
வீடே
ஓய்ந்து
கிடக்கிறது.
அம்சுவும்
லட்சுமியும்
கன்னத்தில்
கைவைத்த
வண்ணம்
உட்கார்ந்திருக்கின்றனர்.
கிழவன்
படுத்துக்
கிடக்கிறான்.
கிழவியைக்
காணவில்லை.
பைத்தியக்காரப்பயல்
உள்ளே
கதவைத்
தட்டி
ஊளையிடுகிறான்.
“...காந்தி
வரலிங்களா?”
“ஆரு?
வடிவா?
முதலாளி
வரல?...”
“அவங்க
ரெண்டு
நா
தங்கி
ஊசி
போட்டுக்கிடணுமா.
நீர்,
ரத்தம்
பரிசோதனை
பண்ணிருக்காவ.
இந்தாங்க,
பூச்சி
மருந்து,
உள்ளாற
வாங்கி
வையுங்க...”
சட்டைப்பையில்
கைவிட்டு
அவர்
கொடுத்த
பணத்தில்
மீதிச்
சில்லறையையும்
பூச்சி
மருந்து
-
பில்லையும்
எடுத்துக்
கொடுக்கிறான்.
“ஐயிரு
வீட்டுக்குப்
போனாங்களா,
சருக்காராசுபத்திரிக்குப்
போனாங்களா?”
“ஐயிரு
வீட்டுக்குத்தா...”
“ஏண்டா,
புதுக்குடிக்கு
சினிமாக்குப்
போனதாவா
ஒடயாரு
சொன்னாரு?”
“ஆமா...”
“நீ
காந்தி
வந்திச்சான்னு
கேக்கலியா?”
“நா
எல்லாம்
எங்கன்னே.
சினிமா
போயிருக்காங்கன்னு
சொன்னாரு.
சரி,
காந்தியும்
போயிருக்கும்னு
சொன்னே...”
“மக்குப்
பயல்ங்கறது
சரியாயிருக்கு...”
லட்சுமி
முணமுணத்துக்கொண்டு
உள்ளே
போகிறாள்.
சொல்லத்
தெரியாமல்
சங்கடம்
செய்கிறது.
இந்தப்
பெண்,
அத்துமீறி
ஓடிவிட்டாளா?
வடிவு
அங்கே
பிறகு
தாமதிக்கவில்லை.
நிலவு
எழும்பும்
காலம்தான்.
எனினும்
நீர்ச்சாரல்
விசிறும்
மேக
மூட்டத்தில்
நிலவின்
கவர்ச்சியில்லை.
எதிரே
வருபவர்
முகம்
விளங்காத
மங்கல்
மருதனும்
பொன்னனும்
குடித்துவிட்டு
அதே
குரலில்
கூலிப்பிரிவில்
சச்சரவு
செய்வது
கேட்கிறது.
அவன்
விரைந்து
குளம்
சுற்றிப்
போகிறான்.
ஏதோ
நடவாதது
நடந்திருப்பது
தெரிகிறது.
அங்கே
ஒரு
பஞ்சாயத்து
விளக்குண்டு.
கோயில்
வாசலில்
மணல்
இறங்கியிருக்கிறது.
சவுக்குத்தடிகள்
இறங்கியிருக்கின்றன.
இடுப்பில்
பட்டை
வேட்டியும்
கழுத்தில்
உருத்திராட்சமுமாகப்
பூசாரி
நிற்கிறான்.
மணியகாரர்,
மூலையான்...
பின்னே...
ஐயோ?
அவர்கள்
வீடு...
குடிசை
என்ன
ஆச்சு?
முட்டுமுட்டாக
அரைச்சுவர்கள்
மட்டுமே
மானங்
குலைக்கப்பட்ட
நற்குடிப்
பெண்கள்போல்
நிற்கின்றன.
பஞ்சமி
செய்வதறியாது
நிற்கிறாள்.
அவளுடைய
தாய்
காளியாயி
மாரியாயி
எல்லாரையும்
கூவி
அழைத்து
அக்கிரமத்தைப்
பார்க்கச்
சொல்லி
முறையிடுகிறாள்.
போலீசை
வைத்துக்கொண்டு
பிரிக்கச்
சொன்னார்களாம்.
அப்பன்
மூங்கில்கள்,
பொடிந்த
கீற்று
எல்லாவற்றையும்
பிரித்துக்
கொண்டிருக்கிறான்.
அமாவாசி
கட்டாகக்
கட்டித்
தூக்கிச்
செல்கிறான்.
குஞ்சு
குழந்தைகள்,
ஆடு,
கோழி
நாய்,
சட்டி
பானை,
முறம்,
உரல்,
உலக்கை
எல்லாம்
அவன்
முன்
அநாதைகளாக
நிற்கின்றன.
தூங்கும்
எரிமலையை
ஏற்கெனவே
தேவு
தொட்டுப்
பார்த்திருக்கிறான்.
இப்போது
அது
புகையையும்
குழம்பையும்
கக்குகிறது.
வசையும்
குரலும்
மூர்க்கமாகப்
பாய்கின்றன.
“யார்ராவன்
தேவடியாமவன்
எங்க
வூட்டப்
பிரிச்சது?”
கொடியேறிய
அவரை
தரையில்
வீழ்ந்து
புலம்புகிறது.
படல்கட்டு
இவர்கள்
குடிசையைச்
சுற்றிப்
புதிதாக
வளைத்திருந்தார்கள்.
அதை
அகற்றவில்லை
இன்னமும்.
உடம்பிலிருக்கும்
சாரமனைத்தும்
நடந்தும்
ஓடியும்
வெட்டியும்
கொட்டியும்
போய்க்
கொண்டிருக்கிறது.
ஆனால்
நிம்மதியாகப்
படுக்க,
உட்கார்ந்து
பசியாற,
அடிநிலம்
சொந்தமில்லை,
உரிமையில்லை
என்று
உரைத்துச்
சொல்கிறார்கள்.
இந்த
மண்ணைத்
தவிர
அவர்களுக்கு
வேறு
பாத்தியதை
கொண்டாட
எதுவும்
நெருக்கமில்லை.
பல்லைக்
குத்திக்கொண்டு
விருத்தாசலம்
பிள்ளையும்
நிற்கிறார்.
“ஏங்க,
இது
நாயமா
உங்களுக்கு?
வாழுறவங்க
வூட்டப்
பிரிச்சிப்போட்டு
சாமி
உங்களக்
கும்பிடச்
சொல்லிச்சா!
அந்த
சாமிக்குக்
கண்ணில்ல?”
“யார்ராது?
வடிவுப்
பய
வந்திட்டானா?
என்னாடா...
பேச்சு
தடிக்கிது?”
“ஆமா,
தடிக்கத்தா
தடிக்கும்.
வாழுறவங்க
குடிசயப்பேத்து
மானங்குலக்கச்
சொல்லிச்சா
ஒங்க
சாமின்னு
கேட்டேன்?”
“பறப்பயலுக்கு
வந்த
திமிரப்
பாத்தீங்களா?
ஏண்டா
நீங்க
கோயில்
நிலத்தில்
இருந்துகிட்டுக்
கண்ட
மாமிசத்தையும்
உரிச்சிப்
போட்டுக்கிட்டு
அக்கிரமம்
பண்ணது
மில்லாம,
நாக்குமேல
பல்லப்போட்டு
எதித்துக்
கேக்க
வந்திட்ட!
போனாப்
போகுதுன்னு
இத்தினி
நா
வுட்டதுக்கு
எங்க
புத்தியதா
சொல்லணும்?”
“நடவு
வேலயெல்லா
ஆனபெறகு
நாங்க
போயிடறோம்னு
தான
சொல்லிட்டிருந்தோம்?
அதுக்கின்னு
இப்ப
பிள்ளையும்
குட்டியுமா
நிக்க
வச்சிட்டு
வூட்டப்
பிரிச்சது
நாயமான்னு
கேக்குறேன்.
நாங்களும்
உங்களப்போல
மனிசங்கதானே?
உங்கூட்ட
இப்படிப்
பிரிச்சிப்
போட்டா
சும்மா
இருப்பீங்களா?”
“கேட்டிங்களா
இந்தத்
திமிர்
பிடிச்சவன்,
வாதாடுறத?
ஏண்டா?
உங்க
தலைவன்
கிட்ட
ஆறுமாசத்துக்கு
முன்ன
நோட்டீசு
குடுத்து,
அப்பப்ப
சொல்லிட்டே
வந்தேன்.
மரியாதையா
பிரிச்சிட்டுப்
போனிங்களா?
சாமிக்கு
விழா
எடுக்கணும்னா
அததுக்கு
நாளு
நட்சத்திரம்
இல்லியா?
உங்க
இட்டத்துக்குத்
தள்ளி
வச்சிக்கிறதாடா?
முட்டாப்பயல?”
“பத்து
வருசமா
ஒண்னுமே
செய்யாம
தள்ளிப்
போட்டீங்களே?
ஆரக்
கேட்டீங்க
அதுக்கு?”
“எதித்து
எதித்துக்
கேக்கற
நீ?
மூஞ்சி
முகர
பேந்து
பூடும்!
என்னடா
துள்ளுற?
நீ
சொல்லியாடா
நாங்க
சாமி
கும்புடணும்?”
குப்பன்
வந்து
மகனைப்
பின்னுக்குத்
தள்ளுகிறான்.
“நாங்க
காலி
பண்ண
மாட்டமின்னா
சொன்னம்?
முதலாளிக்கு
உடம்பு
சரியில்லாம
ஆசுபத்திரிக்குக்
கொண்டு
போயிருக்கு.
இப்ப
நடவு
ஒழவுன்னு
போனாதா
எங்களுக்கு
ரெண்டுகாசு
கிடக்கிம்னு
நாயமாச்
சொன்னோம்.
நீங்க
இப்படி
நெருபிடியாப்
பிரிக்க
வச்சிட்டீங்க.”
“ஆமா,
அப்படிச்
சொல்லலன்னா
நீங்க
பிரிப்பீங்களா?
அல்லாருமாச்
சேந்து
கொடியத்
தூக்கிட்டுப்
போராட்டம்
கிளம்புவீங்க?
எலே,
நீங்க
என்னிக்கு
நாயமா
நடந்தீங்க?
வெட்டுறதும்
குத்துறதும்
அள்ளுறதும்
துள்ளுறதுமா
ஊரையே
நாசம்
பண்ணிப்போடுறீங்க.
உங்களுக்கே
நாயமில்ல,
இங்க
நாயம்
கேக்க
வரீங்க.
போங்கடா..”
இதைக்
கேட்டதும்
வடிவு
திமிருகிறான்.
“எல,
சும்மாருடா.
அவங்க
கை
இப்ப
மேலுக்கு
இருக்கு.
இப்ப
எதும்
கோபத்தில
செஞ்சிட்டா,
இவனுவளே
நாலு
வக்கப்
படப்பக்
கொளுத்திட்டு
நம்ம
செயில்ல
கொண்டு
வைப்பான்.
இப்ப
நாம
ராவிக்கு
முதலாளி
வூட்டில
போயி
ஒண்டிட்டுப்
பொழுது
விடிஞ்சி
எதானும்
பண்ணுவம்...”
அமாவாசியின்
மனைவி
கர்ப்பிணி,
மற்றவர்கள்
காலையிலேயே
இந்த
நெருக்கடி
வந்ததும்
கூட்டைப்
பிரித்துக்கொண்டு
ஆற்றுக்கு
அக்கரையில்
சேர்த்துவிட்டார்கள்.
குப்பன்
உழவுக்குப்
போய்விட்டுப்
பிற்பகலில்தான்
திரும்பியிருந்தான்.
பஞ்சமியைக்
கண்டபடி
ஏசினானாம்.
சீலையைப்
பிடித்து
இழுத்தானாம்
ரங்கன்
பயல்.
வடிவு
உண்மையாகவே
அவர்கள்
கொல்லைகளை
நாசமாக்கிவிடத்
துடிக்கிறான்.
சம்முகம்
இருந்திருந்தால்
ஒரு
படைதிரட்டி
விடுவான்
என்றே
இவர்கள்
அவர்
இல்லாத
நேரத்தில்
இந்த
அக்கிரமச்
செயலைச்
செய்திருக்கிறார்கள்.
“எல்லாம்
மொதலாளி
வீட்டுப்
பக்கம்
போயிருங்க,
காலம
பேசிக்கலாம்.”
பழனி
சோற்றுக்கான
பசியுடன்
அப்போதுதான்
ஓடி
வருகிறான்.
அவன்
தலையிலும்
சுமையை
வைத்து
அனுப்புகிறான்
குப்பன்.
வாசற்படியில்
கிழவி
குந்தி
இருக்கிறாள்.
வீட்டினுள்
சிம்னி
விளக்கு
எரிவதுகூடத்
தெரியாமல்
மங்கலாக
இருக்கிறது.
“யம்மோ..!”
இடுப்பில்
பிள்ளையும்
தலையில்
பாய்ச்சுருட்டும்
கோணியுமாகப்
பஞ்சமி...
“வீட்டெல்லாம்
போல்சு
வந்து
பிரிக்கச்
சொல்லிட்டாங்கம்மா!...”
லட்சுமி
குரல்
கேட்டு
வெளிவருகிறாள்.
அம்சுவும்
எட்டிப்
பார்க்கிறாள்.
குப்பன்
எல்லாவற்றையும்
விவரிக்கிறான்.
“கேடு
வந்திச்சின்னா
ஒரே
முட்டாத்தான்
வரும்.
என்னாத்துக்குன்னு
அழுவ?”
வடிவு
வரிக்கம்பு,
ஓலை
எல்லாவற்றையும்
கட்டி
எடுத்து
வந்து
வீட்டுப்
பின்புறத்தில்
வைக்கிறான்.
இரண்டு
ஆடுகள்,
ஒரு
கோழி,
எல்லாம்
பின்
தாழ்வாரத்தில்
இடம்
பெறுகின்றன.
அன்று
லட்சுமி
அடுப்பு
மூட்டிச்
சோறு
பொங்கியிருக்கவில்லை.
இப்போது
இந்த
எதிர்பாரா
விருந்தைச்
சாக்காக்கி
அம்சு
அடுப்பைப்
பற்றவைத்து
உலை
போடுகிறாள்.
திண்ணை
ஓரமிருந்த
கலப்பை,
சாக்கு
போன்ற
சாமான்களைப்
பின்புறம்
கொண்டு
வைத்து
வாயிலின்
மறு
திண்ணையில்
குப்பன்,
மாரியம்மா,
பஞ்சமி
எல்லோருக்கும்
இடம்
ஒதுக்குகிறாள்.
வீட்டில்
நிலவிய
சோர்வையும்,
சங்கடமான
அமைதியையும்
இந்த
இடையீடு
நீக்குகிறது.
நாகு
பஞ்சமியின்
குழந்தையைப்
பார்த்துவிட்டுக்
குதிக்கிறான்.
“ஐயா...
பா.ப்பா...
கொழ்ழா...”
என்று
கையை
நீட்டி
ஆர்ப்பரிக்கிறான்.
“ஆமா.
புள்ள
ஒண்னுதா
கொறச்ச...”
கிழவி
முணுமுணுத்தாலும்
பஞ்சமி
அவன்
மடியில்
குழந்தையை
வைக்கிறாள்.
சூடுபரக்க
எல்லோருக்கும்
அம்சுதான்
சோறும்
குழம்பும்
வைத்துத்
திண்ணையில்
கொண்டு
கொடுக்கிறாள்.
அவளுடைய
பாட்டன்
விருத்தாசலம்
பிள்ளை
வகையறாக்களை
வசை
பொழிந்து
கொண்டே
சோறுண்ணுகிறார்.
லட்சுமிக்கு
ஒரு
கவளம்
எடுக்கக்கூட
மனமிறங்கவில்லை.
“காலமேந்து
ஒரு
பருக்கயில்லாம
இருக்கிற,
என்னம்மா
இது?”
கடிந்துகொண்டு
இரண்டு
வாய்
உண்ணச்
செய்கிறாள்
மகள்.
குப்பன்
சாம்பாருக்குச்
சோறு
வைத்துக்
கொடுக்கையில்
வடிவு
இன்னமும்
சுமை
சுமந்து
வருகிறான்.
பனந்துண்டம்,
குந்தாணி,
எரு
முட்டை
என்று
தட்டுமுட்டுக்கள்
வீடு
குலைந்ததும்
வளர்ந்து
வருவதுபோல்
நீளுகின்றன.
இறுதியாகக்
காத்திருந்து
அம்சு
அவனுக்குச்
சிறு
விளக்கை
வைத்துச்
சோறு
படைக்கிறாள்.
அந்த
இடிபாடுகளின்
இடையிலும்
அம்சுவின்
முகம்
எதிர்கால
நம்பிக்கையாக
உணர்வூட்டுகிறது.
“போதும்,
போதும்...”
என்று
அவள்
முகத்தைப்
பார்த்துக்
கொண்டே
அவன்
மொழிந்தாலும்,
கைகளும்
மனமும்
வேறொரு
கோணத்தில்
பரபரக்கின்றன.
பின்
தாழ்வரையில்
ஆடு,
கோழிக்
கூண்டு,
எருமுட்டை,
அடுக்கு
ஆகிய
தட்டுமுட்டுக்களுக்கிடையில்
பீடி
குடித்துக்
கொண்டு
அவன்
உட்காருகிறான்.
துாற்றல்
விழுகிறது.
உழவுமாடுகள்,
ஒரு
கறவை
வற்றிய
மாடு,
கரைந்துவிட்ட
சிறு
வைக்கோற்போர்,
அப்பால்
எருக்கிடங்கு
என்று
கொல்லையில்
ஒவ்வொரு
சதுர
அடியும்
பயன்படுத்தப்
பட்டிருக்கிறது.
நாகு
அறைக்குள்
செல்ல
மறுக்கிறான்.
லட்சுமி
சிறிது
நேரம்
போராடிவிட்டுக்
கோடியில்
அவன்
அறைக்குள்
தள்ளிக்
கதவைச்
சாத்துகிறாள்.
பின்னர்
நடுவீட்டுக்
கதவையும்
சாத்திவிட்டு
அம்சுவும்,
லட்சுமியும்
படுத்துக்
கொள்கின்றனர்.
“ராத்திரி
காபந்தா
இருக்கணும்.
இந்தப்
பயலுவ
மாட்டப்
பத்திட்டுப்போனாலும்
போவானுவ.
வேற
என்னமே
அடாவடியாச்
செஞ்சாலும்
செய்வானுவ.”
தெருத்திண்ணையில்
முடங்க
இருக்கும்
அப்பனைத்
தட்டி
எழுப்பி,
“பின்னால
போயி
இரு.
நா
வயப்பக்கம்
ஒரு
சுத்துப்
போயிவார.
வேணுமின்னு
மாட்ட
ஆட்ட
வுட்டு
மேயச்
சொல்லுவானுவ!”
அம்சுவுக்கு
உறக்கம்
கொள்ளவில்லை.
இந்த
மழையிலும்
தூற்றலிலும்,
கொழுந்து
விட்டெரியும்
மேற்குடிப்பகையிலும்
அவன்
இருட்டில்
ஏன்
போகவேண்டும்
என்றிருக்கிறது.
“யம்மோ..!
அத்த
இப்பப்
போவாணாம்னு
சொல்லு...!”
“உனக்கென்னடி
அத்தினி
கரிசனம்
அவனவனப்
பத்தி?
அவனவன்
கவலப்பட
மாட்டானா?”
“இல்லம்மா,
ஊரு
கெட்டுக்கிடக்கயில,
இந்தாளும்
கோவத்தில
எதானும்
அடாவடியாப்
பழி
பாவத்துக்கு
ஆளாறாப்பல
எதேனும்
செஞ்சிட்டா?”
லட்சுமிக்குச்
சுருக்கென்று
தைக்கிறது.
நேரம்
பற்றாமலிருக்கிறது.
இவன்
தன்
கோபத்தைக்காட்ட
அவர்களுடைய
வயல்களில்
மாட்டை
விட்டோ,
மடையை
அடைத்தோ,
வைக்கோலை
நாசம்
செய்தோ
பழிக்காளாகலாம்
இல்லையா?
தேனிக்
கூட்டில்
தீயை
வைத்து
ஒட்டித்
தேனைக்
கவர்ந்து
கொள்ளும்
ஆதிக்க
மனிதனைப்போல்
அவர்கள்
ஆள்கட்டு,
அதிகாரம்
எல்லாம்
உடையவர்களாக
இருக்கின்றனர்.
இந்தக்
குடிசை
பெயர்த்தல்,
பிணம்
தூக்க
இடம்
கொடுக்க
மாட்டோம்
என்று
மறுத்தது,
எல்லாம்
கவனிக்கப்படாமல்
போகாது.
வரும்
மாசம்
சங்கத்தின்
பெரிய
கூட்டம்
இருப்பதாகவும்,
பல
பிரச்னைகளை
முன்வைத்துப்
பெரிய
போராட்டம்
நடத்த
இருப்பதாகவும்
சம்முகம்
சொல்லியிருக்கிறார்.
எனவே,
எதிராளி
பலமறியாமல்
இவன்
எதையேனும்
செய்துவிட்டு,
நமது
ஒற்றுமைப்
பலம்
சிதறிவிட
வாய்ப்பு
வரக்கூடாதே?...
லட்சுமி
கதவைத்
திறக்கிறாள்.
“வடிவு...?
எல
வடிவு...?”
சிம்னி
விளக்கைப்
பெரிதாக்கிப்
பார்க்கிறாள்.
குப்பன்
சாம்பார்தான்
கோழிக்கூட்டுக்கும்
வறட்டிக்
குவியலுக்கும்
நடுவே,
சாக்கு
விரிப்பில்
சுருண்டு
குறட்டை
விடுகிறான்.
வாயிற்
கதவைத்
திறந்து
திண்ணையில்
பார்க்கிறாள்.
“என்னாடி?...”
“வடிவுப்
பயல
வெளியில
எங்கும்
ராவுல
போவானாம்னு
சொல்லத்தா.”
“அவ
ஆயிப்பனுக்கு
இல்லாத
அக்குசு
ஒனக்கென்னடி?
தென்ன
மரத்துல
தேளு
கொட்டி
பன
மரத்துல
நெறி
ஏறிச்சாம்?
பெரும்பண்ண,
மிராசுன்னு
அந்தச்
செறுக்கி
நினைப்பு.
கமுக்கமா
கதவச்
சாத்திட்டுப்
படுங்க
போயி...”
கிழவியின்
எரிச்சல்
புரிகிறது.
இவர்களுக்கு
இடம்
கொடுத்தது
மட்டுமில்லை,
அம்சு
சோறு
வடித்துப்
போட்டது
பிடிக்கவில்லை.
பொழுது
உறக்கமில்லாமலே
கழிகிறது.
-------------
13
இரண்டு
நாட்களுடன்
சம்முகத்தின்
நோய்
குணமாகி
விடவில்லை.
ஊசி
போட்டு,
ஒத்தடம்
கொடுத்து,
பழுத்து
அதைக்
கீறி
வினையை
வெளியாக்க
ஒரு
வாரம்
ஆகிறது.
டாக்டரம்மா
நல்ல
கைராசிக்காரி.
காலையில்
தினமும்
பொன்னடியான்
வந்து
அவரை
டாக்டர்
வீட்டுக்கு
அழைத்துச்
செல்கிறான்.
சங்கத்து
அலுவலகத்தில்
ஒரு
புறம்
பாயை
விரித்துப்
படுத்தவாறு
பல
புத்தகங்களைப்
படித்துக்
கொண்டும்
மன
உளைச்சல்
நினைவு
வராமல்
வருபவர்
போகிறவர்களிடம்,
பழைய
நண்பர்களிடம்
பேசிக்
கொண்டும்
ஆறுதலாகக்
கழிகிறது.
சோசலிசப்
பாதையில்,
பாரதி
பாடல்கள்,
மாதர்
முன்னேற்றம்,
புதிய
சிந்தனைகள்,
என்ற
தலைப்புகளில்
சிறு
புத்தகங்களை
ஆழ்ந்து
படிக்க
முடிகிறது.
அலுவலகத்துக்குப்
பின்னால்
ஆறு
ஓடுகிறது.
கற்களைக்
கூட்டி
வைத்து,
தகர
டின்னில்
சுடுநீர்
போட்டுக்
கொடுத்து,
டீக்கடையில்
இருந்து
நாஸ்தா
வாங்கிக்
கொடுத்துப்
பொன்னடியான்
மிக
அருமையாகப்
பணிவிடை
செய்கிறான்.
காலில்
பிளவையைக்
கீறிவிட்ட
அன்று,
ஆசுபத்திரி
பெஞ்சியிலேயே
மாலை
வரை
படுத்திருக்கிறார்.
பிறகு
ஒரு
குதிரை
வண்டி
வைத்துக்கொண்டு
திரும்பி
வருகின்றனர்.
அடுத்து
இரண்டு
நாட்களில்
ஊர்
திரும்பும்
நம்பிக்கை
வந்துவிட்டது.
கையிலிருந்த
நூறு
ரூபாயில்
வண்டிச்
செலவு,
நாஸ்தா,
காபிச்
செலவே
ஐம்பது
ரூபாயாகி
விட்டன.
ஊசி
மருந்து
பன்னிரண்டு
ரூபாய்.
மற்ற
சில்லரைச்
செலவு
பத்து
ரூபாய்.
மீதிப்
பணத்தை
எண்ணிப்
பார்க்கையில்
இருபது
ரூபாய்
தேறவில்லை.
டாக்டருக்குக்
கொடுக்கவேண்டுமே?
“நீங்க
அதப்பத்திக்
கவலப்படாதீங்க
காம்ரேட்.
நீங்க
நல்லபடியாகி
ஊருக்குத்
திரும்பணும்...”
என்று
அன்பு
பாராட்டும்
இளைஞனிடம்
மனம்
ஒன்றிக்
கொள்கிறது.
அவனிடம்
சாடையாகத்
தன்
மகளைக்
கட்டுவது
பற்றிக்
கூடத்
தெரிவித்திருக்கிறார்.
“ஒரு
நட
வீட்டுக்குப்
போயி
கவலப்பட
வாணாம்னு
சொல்லிட்டு
வரட்டுமா
காம்ரேட்?”
என்றான்.
“வாணாம்.
அவுங்களுக்குத்
தெரியும்.
எதுக்கு
வீண்
செலவு,
நடை?”
அவர்
மறுத்ததன்
காரணம்,
அந்த
எண்ணம்,
உள்வினையாக
மனசுக்குள்
புரையோடிக்
கொண்டிருக்கிறது.
காந்தி
திரும்பி
வந்திருக்கக்
கூடும்
என்றே
நம்பிக்
கொண்டிருக்கிறார்.
ஏனெனில்,
அவர்
கெடு
வைத்த
இரண்டு
நாட்கள்
தாண்டிவிட்டதால்,
லட்சுமி
பஸ்
ஏறி
அலுவலகத்துக்கு
வந்திருப்பாள்.
வரவில்லையாதலால்,
மகள்
வந்திருப்பாள்
என்று
திடம்
கொள்கிறார்.
மறுநாள்
இறுதியாக
பிளாஸ்திரி
போட்டுக்
கொண்டு
ஊர்
திரும்பவேண்டும்
என்ற
நினைவில்,
முன்னிரவு
பொன்னடியான்,
தங்கசாமி
ஆகியோரிடம்
பல
விஷயங்களைப்
பற்றிப்
பேசுகிறார்.
விவசாய
சங்கத்தின்
கிளை
அலுவலகம்
கிளியந்துறைக்
கடைவீதியில்
வெறுமே
பெயருக்குத்தான்
இருக்கிறது.
அதை
வேறு
பக்கம்
போட்டு,
ஆட்கள்
வந்து
வசதியாகச்
செய்தி
படிக்கவும்,
தங்கள்
பிரச்னைகளைப்
பேசி
முடிவெடுக்கவும்,
ஓர்
ஒழுங்கு
செய்யவேண்டும்.
மேலும்
வாரம்
ஓரிரு
முறை
வந்து
பொன்னடியான்
வகுப்பு
நடத்துவதற்கும்
ஏற்பாடு
செய்யவேண்டும்.
காலையில்
அவர்
எழுந்து
பல்
துலக்கி
முகம்
கழுவிக்
கொண்டு,
வெளியே
டீக்கடையில்
வந்து
தேநீர்
அருந்துகையில்,
பழைய
நண்பர்
ஒருவர்
வருகிறார்.
“யாரு?
கிளியந்துற
சம்முகமா?
ஏம்ப்பா,
ஒனக்கு
ஒடம்பு
சரியில்லன்னு
சொன்னாரு
தங்கசாமி?”
“ஒண்ணில்ல
அண்ணாச்சி.
கால்ல
ஒரு
பொளவ
புறப்பட்டு
இருந்திச்சி...”
பண்ணக்குடி
அண்ணாச்சி
என்பார்கள்.
அந்தக்
காலத்தில்
இவர்
அடியாள்களுக்குக்
கிலியூட்டுபவர்.
கொலைக்குற்றம்
சாட்டப்பட்டு
ஏழு
வருடங்கள்
சிறைத்தண்டனை
அநுபவித்து
விட்டு
வந்தவர்.
அவர்
கண்களைச்
சுருக்கிக்
கொண்டு
அருகில்
வந்து
பார்க்கிறார்.
நெடுநெடுவென்ற
அந்த
உயரம்
தான்
வளையாமல்
இருக்கிறது;
முடி
பொல்லென்று
நரைக்க,
வற்றிச்
சுருங்கி
முகமே
அடையாளம்
தெரியவில்லையே?
“ஆமா.
ஒங்கிட்ட
ஒண்ணு
கேக்கணுமின்னு.
உம்மக,
படிச்சிட்டிருக்கா,
கலியாணம்
கட்டிட்டியா?”
சம்முகத்தினால்
மனவெழுச்சியை
அடக்கிக்
கொள்ள
முடியவில்லை.
“என்னடா?
என்ன
விசயம்?”
“ஒண்ணுமில்லிங்க
அண்ணாச்சி
உள்ள
வாருங்க...”
“...
நா
ஏங்கேட்டன்னா,
ஒரு
ஏழெட்டு
நா
மின்ன,
உம்
பொண்ண
கொடிமங்கலம்
ஐயர்
கிளப்பில
பாத்தேன்.
உம்
பொண்ண
எனக்குத்
தெரியுமே?
இங்கதான
படிச்சிட்டிருந்திச்சி?
அன்னக்கி
எதோ
சர்ட்டிபிகேட்
வாங்கணுமின்னு
கூட்டிட்டு
வந்திருந்தியே?...”
இதயம்
துள்ளி
வாய்
வழியாக
வந்து
விடும்
போல்
துடிக்கிறது.
“ஆறுமுகத்துப்
பய,
அதா
கோனான்
மகளக்
கட்டிக்கிட்டானே,
அவளுக்குப்
பெறந்த
பய,
குருசாவா,
ஸ்டாலினா?
அவம்
பேரு
எனக்கு
ஞாபகமில்ல,
சாலின்னு
கூப்பிடுவா.
அவம்
பின்னோட
மோட்டார்
சைக்கிள்ள
வந்து
எறங்கிச்சி.
நா.
எதுர
பஸ்ஸுக்கு
நின்னிட்டிருந்தேன்.
போயி
சாப்பிட்டுப்
போட்டுப்
போறாங்க
அட,
இதென்ன
ஏடா
கூடமா
இருக்கு
சம்முவத்தும்
பொண்ணு
போல
இருக்கேன்னு
நினைச்சிட்டுக்
கிளப்புப்
பக்கம்
போயி
நின்னே.
ஐயிரு
எனக்குத்
தெரிஞ்சவருதான்.”
சம்முகத்தின்
கண்கள்
அடக்க
முடியாமல்
குளம்
நிரப்புகின்றன.
“அண்ணாச்சி,
பொண்ணுகளுக்குச்
சொதந்தரம்
குடுக்கணும்னு
சொல்றாங்க.
நல்லது
கெட்டது
தெரியாம,
நாலு
பேரறியக்
கலியாணம்னு
கெளரவமா
முடிக்காம,
இப்படிப்
பேச்சுக்கிடமாக்கிடிச்சேன்னு
தாங்க
முடியல...”
“அப்ப...
உன்னக்
கேக்காமதா
ஓடிப்போயிரிச்சா?”
“ஒண்ணுமில்லீங்க.
படிக்கணும்னு
அதுக்கு
ரொம்ப
ஆச.
தொழில்
படிப்புன்னு
சேத்துடணும்னுதான்
போனேன்.
அவங்க
கூசாம
ரெண்டாயிரம்
வேணும்னு
கேட்டாங்க.
நானெங்க
போக?
அப்ப,
இந்தப்
பய,
வூட்டுக்கே
வந்து
நாஞ்
சிபாரிசு
பண்ணுவே,
எங்கப்பாரு
சொன்னாப்
போதும்னு
ஆச
காட்டினான்,
நானும்
இருந்தேன்.
சண்ட
போட்டு
வெரட்டி
இதையும்
கண்டிச்சேன்.
காலு
உபாத
வேற.
இவ,
ஒடயாரு
வீட்டுக்குப்
போறன்னு
ஓடிப்போயிருக்கா.
தெரிஞ்சு
போகல
அண்ணாச்சி!
அப்பன்,
பொண்ணு
வேட்டயாடுறவன்னு
பிரசித்தம்.
இப்ப
மகன்
தொடர்ந்திட்டிருக்காம்
போல.
நம்ம
குடிலயா
கால
வைக்கணும்...”
வசைகள்
தொடருகின்றன.
“ரொம்பச்
சல்லியம்
பண்றானுவ
இதெல்லாம்
திட்ட
மிட்டுச்
செய்யிற
வேலை
சம்முவம்.
கட்டுக்கோப்பா
இருக்கிற
ஓரமைப்ப
ரொட்டித்
துண்டப்
பிக்கிறாப்பல
நினைச்சிட்டு
ஊடுருவிப்
பிச்சிப்
போடுறாங்க.
நாம்
பாரு,
நேத்து
ஊருல
இல்ல.
பொண்ணுக்கு
ஒரு
மாப்பிள
தேடுற
விசயமா
போயிட்டே.
போன
எடத்தில
நினைச்சாப்பல
வரமுடியாம
தவக்கமாயிடிச்சி.
வந்தா,
நம்ம
மாடு
அவுங்க
கொல்லையில
போயி
வாழய
மேஞ்சிடிச்சாம்.
மேய்க்கிற
பயலப்
போட்டு
அடிச்சி
கைய
முறிச்சிட்டானுவ.
வந்ததும்
வராததுமா
அவனக்
கூட்டிட்டு
ஆசுபத்திரில
போயி
காட்டிட்டு
இப்ப
கேசு
குடுக்க
வந்தேன்...”
சம்முகத்துக்குத்
தலை
சுற்றுகிறது.
மனிதர்
எல்லோரும்
உயிர்
தழைக்க
அவர்கள்
மண்ணில்
விளைவு
காணப்
பாடுபடுகிறார்கள்.
இந்த
உற்பத்தி
இல்லை
யென்றால்
வாழ்க்கையின்
அடிநிலையே
பெயர்ந்து
போகும்.
இந்த
உற்பத்தியில்
ஈடுபடும்
மக்களை
அலைக்கழித்து
அவர்களை
வாழ
விடாமல்
செய்வதற்குத்தான்
எத்தனை
சக்திகள்!
மனித
வாழ்வின்
நல்
ஆக்கத்துக்குத்
துணை
நிற்கவேண்டிய
அரசியல்
சக்திகள்
ஆதிக்க
சக்திகளாகப்
போட்டிக்களத்தில்
இறங்கிப்
போராடுவதிலேயே
மனித
சக்திகள்
எல்லாம்
விரயமாகின்றன.
இந்தப்
புதுக்குடிக்கு
வரும்
கிராம
மக்கள்
பெரும்பாலும்
அடிதடி,
ஆசுபத்திரி,
வம்பு
வழக்கு,
கோர்ட்டு
கச்சேரிக்குத்தான்
வருகிறார்கள்.
முன்பெல்லாம்
இவ்வளவு
போக்குவரத்து,
இவ்வளவுக்குத்
தீவிர
விவசாயம்,
முன்னேற்றம்
இல்லைதான்.
ஆனால்
இதெல்லாமும்
மனிதர்
வாழ்வை
உயர்த்துவதைக்
காட்டிலும்,
உடைக்கும்
பணிக்கே
உதவிக்
கொண்டிருக்
கின்றனவே?
அவர்
சென்றபின்
இவனுக்கு
நிலை
கொள்ளவில்லை.
விசுவநாதனிடம்
சென்று
இந்தப்
பெண்
ஓடி
விட்டதைச்
சொல்லி
விட
வேண்டும்
போல்
இருக்கிறது.
எதுவும்
சாப்பிடவுமில்லை.
யாருக்காகவும்
காத்திருக்கவில்லை.
அவராகவே
பஸ்ஸைப்
பிடித்து
ஏறி,
ரத
வீதிக்குச்
சென்று
இறங்குகிறார்.
விசுவநாதன்
வாசலில்தான்
உட்கார்ந்திருக்கிறார்.
கண்
சரியாகத்
தெரியாததால்
மகள்
பேப்பர்
படித்துக்
காட்ட
வேண்டும்
என்று
காத்திருக்கிறார்.
“வணக்கம்
சாமி.”
“என்னடா,
சம்முகம்,
காலங்காத்தால
வந்திட்ட?
ஊருக்குப்
போகப்
போறியா
இன்னிக்கு?”
“இன்னிக்குத்தாம்
போகணும்.
உங்ககிட்ட
ஒரு
விசயம்...”
“என்னடா,
பெரிய
விசயம்.
மருந்து
-
ஊசிக்குத்தான்
பணம்
குடுத்திட்ட,
கட்டுக்
கட்டினவனுக்கு
அஞ்சு
ரூபா
குடு.
உனக்கோ
சர்க்கரை
அது
இது
ஒண்ணுமில்ல.
வயல்ல
நடக்கிறவனுக்கு
அதெல்லாம்
ஏன்
வருது?
டாக்டருக்கெல்லாம்
நீ
ஒண்ணும்
குடுக்கவாணாம்,
போ!”
உளம்
நெகிழ்ந்து
போகிறது.
“ரொம்ப
நன்றிங்க.
இது...
இது
மட்டுமில்லய்யா,
அந்தக்
கழுத.
அதா
மவ,
அந்தப்
பய
மகங்கூட,
அதா
அன்னக்கி
வந்திருந்தானே,
அவங்கூட
சினிமால
வாராப்பல
மோட்டார்
சைக்கிள்
பின்னால்
குந்திட்டுச்
சுத்துறாப்ல.
கொடிமங்கலம்
ஐயர்
கிளப்பில
பாத்தேன்னு
பண்ணக்குடி
அண்ணாச்சி
இப்ப
சொன்னாரய்யா.
அப்படியே
வெட்டிப்
போடணும்போல
இருக்கு.
என்
குடில,
என்
ரத்தத்தில
பெறந்து
எங்க
எனத்துக்கே
துரோகம்
செஞ்சிட்டாளே?
கேட்டதிலேந்து
பொறுக்கலய்யா!”
“அட...
பாவி.
இதுக்கேண்டா
நீ
இப்பிடி
அழுவுறே?
அதா
மூலையில
பாத்தியா...”
திண்ணையின்
மேற்கு
மூலையில்
வைக்கோல்
சவுரி
கூளம்
தொங்க
ஒரு
குருவி
உட்கார்ந்திருக்கிறது.
“என்
கண்ணுக்கு
நல்லாத்
தெரியல
இப்ப.
ஆனா,
அதுங்க
விர்விர்ரென்று
போறதும்
வரதும்
குப்பையும்
கூளமும்
கொண்டு
போறதும்
நன்னாத்
தெரியிறது.
ஓடி
ஓடிக்
கூடு
கட்டும்.
பிறகு
மாத்தி
மாத்திக்
குஞ்சு
பொரிச்சதும்
சோறு
குடுக்கும்.
சரியா
இருபத்தோராம்
நாளு,
கூட்டவிட்டு
குஞ்சு
வெளியே
வரும்.
பறந்துபோக
அம்மாவும்
அப்பாவும்
சொல்லிக்
கொடுக்கும்.
பறந்து
போயிடும்.
பிறகு
அது
வரவே
வராது.
போயே
போயிடும்.
இதே
காரியமா
நான்
வாட்ச்
பண்ணிருக்கேன்.
அறுப்பான
நிலத்த
மறுபடி
காயப்
போட்டு,
கிடயவிட்டு
தண்ணி
வுட்டு
உழுது
விதக்கிறாப்பல,
இதுங்க
கூட்டை
சீர்
பண்ணும்.
மறுபடி
முட்ட
வைக்கும்.
திரும்பிக்
குஞ்சு
பொரிச்சு
ஆகாரம்
குடுக்கும்.
ஒரு
ஜோடி,
பாரு
மூணு
தரம்
முட்ட
வச்சதும்
ஆண்
என்ன
பண்ணிச்சிங்கற?
புதுசா
ஒரு
பெட்டயக்
கூட்டி
வந்திடுத்து.
அந்தக்
கிழப்
பெட்டைக்
குருவி
நேத்து
தனியா
உக்காந்து
இருந்தது...”
அவர்
சிரிக்கிறார்.
“நீங்க
சிரிக்கிறீங்கய்யா...”
“சிரிக்காம
என்ன
செய்யலாம்ங்கற?
இதுல
ஒரு
தத்துவம்
இருக்கு
சம்முகம்.
மனுசனுக்குப்
பகுத்தறிவு
இருக்குன்னு
பேரு,
அதுங்களுக்குப்
பகுத்தறிவு
இல்ல,
ஆனா,
‘இன்ஸ்டிங்ட்’ங்கற
உணர்வு -
இயல்புணர்வு
இருக்கு.
அததுபடிக்கு
அதது
நடக்கிறது.
எல்லா
உயிர்களுக்கும்
இனப்
பெருக்கம்
குறிக்கோள்.
அதுவே
சாவுது,
இல்லாட்டி
பிற
பிராணிகளுக்கு
இரையாகுது.
ஒரு
இனப்
பட்சியோடு
இன்னொரு
இனப்பட்சி
அநாவசியமாச்
சண்ட
போட்டு
பாத்திருக்கியா
நீ?
மனிசன்தான்,
பகுத்தறிவுங்கறத
வச்சிட்டுச்
சுயநலம்
வளத்திட்டு,
அடுத்தவன்
வாழணும்ங்கிற
எண்ணமில்லாம
அழிஞ்சி
போறான்.
இதை
அரசியல்
சமுதாய
அமைப்புக்கள்
இன்னும்
கூறுபோட்டுக்
கோளாறு
பண்ணிட்டு
வருது.
இதை
இந்த
நிலையில்
ஒண்ணுமே
செய்யமுடியாது.
அதது
போக்குலதா
வுடணும்...”
“அதெப்படி
அய்யா
விட்டுட
முடியும்...?
அந்தப்
புள்ளையை
எத்தினி
கனவோட
வளர்த்தேன்?
போயி
சாணிக்
குழில
குதிச்சிருக்கிறாளே?...”
“அதெப்படி
நீ
சாணிக்
குழின்னு
சொல்ல
முடியும்?
நானானால்,
எங்க
சாவித்திரி
இப்படிப்
போயிருந்தால்
அலட்டிக்க
மாட்டேன்.
அவம்மாவானா
கத்துவ.
இப்ப
நான்
ஒண்ணு
கேக்கிறேன்.
உன்
பொண்ணு
ஆறுமுகத்தின்
பயலுடன்
போகாமல்,
என்னுடைய
பயலோ,
இல்ல
உன்
சங்கத்தச்
சார்ந்த
எந்தப்
பயலுவ
கூடவோ
போயிருந்தால்
நீ
இப்படிக்
கோபிச்சிப்பியா?”
சம்முகத்துக்கு
இலேசாகச்
சிரிப்பு
எட்டிப்
பார்க்கிறது.
“அதெப்படிங்க?”
“என்ன
அதெப்படி?
நீ
ஒப்புவியா,
மாட்டியா?”
“ஒப்புவேன்.
இந்தப்
பொண்ணு
இப்ப
நம்ம
விட்டுப்
போயிடிச்சே,
நம்ம
கொள்கை
நியாயம்
எதுவும்
இல்லாத
இடத்துக்குப்
போயிட்டதேன்னுதா
வருத்தம்.”
“அப்ப
அவ
சுதந்தரத்த
இது
கட்டுப்படுத்தல?
அதுக்கு
நமக்கு
என்ன
உரிமை
இருக்கு?
நினைச்சிப்
பாத்தா,
ஒரு
மதம்,
அரசியல்
கட்சிபோல
இருக்கிற
சில
பெரிய
அமைப்புக்கள்
எல்லாமும்
கூட,
சிலருடைய
சுயநலத்தை
வளர்க்கத்தான்
பயன்படுறாப்பல
இருக்கு.
மனுசனை
மேம்படுத்த,
மனித
தத்துவத்தை
மேலாக
மதிக்க
ஒரு
கொள்கைன்னு
வகுத்தால்,
அதற்குன்னு
சில
நியதிகள்,
நீதிகள்,
ஒழுக்கங்கள்
எல்லாமே
அதைக்
கட்டிக்காக்க
வேண்டியிருக்கு.
மதமெல்லாம்கூட
இப்படி
வாழ்க்கை
முறையைச்
சுயநலமில்லாமல்
ஒழுக்கம்
பாலி
க்கணும்னு
வற்புறுத்தியிருக்கு.
எதுவுமே
இன்னிக்கு
முக்கியமான
குறிக்கோள்
இல்லாம
போனதுனாலதான்
தாறுமாறாயிருக்கு...”
“படிச்ச
பொண்ணுதான்.
ஆனால்
படிக்காதவர்களுக்கு
இருக்கிற
அனுபவம்
அவளுக்கு
இருக்கல.
பேச்சில
மயங்கியே
போயிருக்கா.
அவனுவ
கூட்டக்
குலைக்கிறாப்பல.
அதச்
சாதகமாக்கிக்
கூட்டிட்டுப்
போயிருக்கிறானுவ...”
“இன்னிக்குச்
சராசரி
படிக்கிற,
படிச்ச
இளம்பிள்ளைகள்
எல்லாரும்
எதோ
எங்கியோ
கானல்
நீரைப்
பாத்து
ஓடுறாப்பல
ஓடிட்டிருக்காங்க.
வாழ்க்கையிலே
அநுபவிக்கணும்
பணம்
வேணும்,
அதிகாரம்
வேணும்.
அதற்குக்
கவர்ச்சிகள்.
சினிமா,
பத்திரிகை.
நீ
இதெல்லாம்
பாக்க
மாட்டே...!
உனக்கெங்கே
சந்தர்ப்பம்?”
“எனக்கு
மானம்
போயிடிச்சய்யா,
ஊர்ப்பஞ்சாயத்தக்
கூட்டி
நாயமா
அவள
விலக்கணும்,
சொல்லப்போனா...”
“அடபோடா,
முட்டாள்!
வீட்டுக்கு
வந்தாச்
சேத்துக்காத!
அவ்வளவுதான்.
இறகு
முளச்சிப்
பறந்து
போயிட்டா?...”
“நிச்சயமாச்
சொல்றேன்.
அவ
பறந்து
போகல.
அப்படி
ஒண்ணுந்
தெரியாம
கால
உட்டிருக்கா...
நா...
இப்ப
என்ன
நாயம்
ஊருக்குச்
சொல்லுவே?
முத்துக்கருப்பன்
மகளுக்கு
நொத்துரி
லேந்து
சம்பந்தம்
கொண்டுவந்தா.
அந்தப்
பய,
வேற
கட்சிக்குப்
போயிட்டா.
அந்த
சம்பந்தம்
வாணாண்டான்னு
கருத்துச்
சொன்னேன்.
இப்ப
வேற
சம்பந்தம்
தான்
கட்டியிருக்கு.
செங்கச்
சூளையில
வண்டி
ஓட்டுறான்.
குடிச்சிட்டு
உதை
உதைன்னு
உதைக்கிறான்.
அந்தப்
புள்ள
அழுதிட்டு
வந்திருக்கு.
எனக்கு
நினைச்சாலே
நெஞ்சுக்கு
வேதனையா
இருக்கு.
இப்ப,
அவன்
சொல்ல
மாட்டான்?”
“என்ன
செய்யிறதுடா?
ஒரு
சமுதாயப்
பொறுப்புன்னா
எப்பவுமே
கணக்குச்
சரியாகிறதில்ல.
தப்புக்கணக்கும்
வுழுது?
கீதையில,
அதா,
உன்
கடமையச்
செய்யி,
எது
நடந்தாலும்
நீ
அசையாம
இருங்கறது.
அதுதாண்டா
யோகம்?”
“என்னத்தய்யா
‘யோகம்’
பண்ணுறது!
மனசு
கெடந்து
அல்லாடுது?”
டாக்டரிடம்
வந்து
பிளாஸ்திரி
போட்டுக்கொண்டு
திரும்பி
வருகையில்
அலுவலகத்தில்
லட்சுமியும்
வடிவும்
வந்திருக்கின்றனர்.
அவருடைய
கோபம்
அவர்களிடத்தில்
பாய்கிறது.
“என்னாத்துக்கு
இப்ப
வெட்டிக்கு
பஸ்
சார்ச்சுக்
குடுத்திட்டு
வந்திய?”
லட்சுமி
திகைக்கிறாள்.
“நீங்க
வந்தவங்க
ஒரு
பேச்சு
சொல்லியனுப்பணுமில்ல?
என்ன
ஏதுன்னே
புரியல.
கிளவியானா
நேரத்துக்கு
நேரம்
புடுங்கி
எடுக்குது,
போயிப்
பாத்துட்டு
வாடின்னு...”
“அது
சரி,
இவன
என்னாத்துக்குக்
கூட்டிட்டு
வந்த!
உனக்கு
எடந்
தெரியாதா?
ஏண்டா?
மேச்சாரி
ஒழவு
முடிச்சாச்சா?
சம்பா
நடவாகணுமே?”
லட்சுமியும்
அவனும்
மெளனம்
சாதிக்கின்றனர்.
“ஏண்டால,
நா
கேக்கிறம்
கம்மா
இருக்கிற?”
“விருத்தாசலம்
பிள்ளையும்
பூசாரியும்
எங்கவூட்டெல்லாம்
அன்னிக்கு
நான்
போறதுக்குள்ளாற
போலீசு
வச்சிட்டுப்
பிரிச்சுப்
போட்டுட்டாங்க
முதலாளி!”
குண்டைத்
தூக்கிப்
போட்டாற்
போலிருக்கிறது.
“அடப்பாவிங்களா?...”
“இவ
அன்னிக்கி
ராத்திரி
வந்து
தங்கிட்டுப்
போனவந்தா,
காலமதா
வந்திருக்கிறான்.
குப்பன்
சாம்பாருதா.
பாவம்,
கீத்து
வாங்கி
வளச்சிவச்சிருக்கா.
அந்தப்
பளனிப்பய
வெளயாட்டுப்பய.
நீங்களே
கேளுங்க
இவன!”
“இல்ல
மொதலாளி,
குடிச
போட
அம்பது
ரூபாதான்னு
வீரபுத்திரன்
குடுக்கிறான்.
அதுல
என்ன
ஆகும்
மொதலாளி?
ஆட்ட
வேற
அன்னிக்கு
ராவில
எந்தப்
பயலோ
பத்திட்டுப்
போயிட்டான்.
அவனத்
தேடி
லச்சுமாங்குடி
போன...”
“புளுகிறான்.
மட
தண்ணிப்
பாக்கல,
ஒண்ணில்ல.
ஆளயே
காணோம்.”
சம்முகத்துக்குச்
சொல்லொணாக்
கோபம்
வருகிறது.
“சரி,
இந்த
சண்டையெல்லாம்
இப்ப
வானாம்.
நா
என்ன
செத்தா
பூடுவ?
கையில
காசில்லாம
செத்திட்டிருக்கிற.
காருக்கு
அஞ்சு
ரூபா,
காபிக்கு
நாலு
ரூபான்னு
செலவு
வச்சிட்டு
வாரிங்க...”
“நா
இங்க
வக்கிலப்
பார்க்க
வந்தே
முதலாளி.
அவங்க
செஞ்சது
அநியாயம்.
அந்த.
ரவுடிப்
பய,
தங்கச்சிகிட்ட
அக்குரமமா
நடந்திட்டானாம்...”
“என்னாது?”
“ஆமா
முதலாளி,
எங்கய்யா,
தம்பி,
ஆம்பிள
ஆருமில்லன்னு
அது
சொல்லிச்சாம்.
நல்லதாப்
போச்சுடின்னு
உள்ளாற
துரத்தி
வந்து
சீலயப்
புடிச்சி
இழுத்தானாம்.
பன்னிப்பய,
சும்மா
வுடுறதா?
அவனுவ
வேணுன்னு
கட்சி
கட்டிட்டு
வம்புக்கு
வரானுவ...”
இது
நுட்பமாக
வந்து
மருமத்தைத்
தாக்குகிறது.
உண்மைதான்.
சாமி
கும்பிடுவதும்கூடக்
கட்சிகளின்
ஆதிக்கத்தைக்
காட்டுவதுதான்.
பலவீனமான
இடத்தில்
கண்ணியை
மாட்டினால்
சுருக்கு
இறுக்கிவிடும்.
ஆனால்
தொட்டதற்கெல்லாம்
வக்கீல்
கோர்ட்டு
என்று
இவன்
போனால்
அவன்
சாமானியமாக
விட்டுவிடுவானா?
வெட்டு,
குத்து,
எரிப்பு
என்று
கடுமையாக
தாக்குதல்
என்றால்
எதிர்த்தாக்குதல்
உடனே
தொடுக்க,
பக்கபலம்
சேரும்.
இது
சிறு
சிறு
பொசுங்கல்கள்.
சீலையை
இழுத்தானா,
கற்பழித்தானா
என்பதற்குச்
சாட்சியங்களைக்
கொண்டா
என்பான்.
அந்தப்
பெண்
முன்பேயே
கற்பை
இழந்தவளா
என்று
குறுக்குக்
கேள்வி
போடுவார்கள்.
இதுபோல்
வம்பு
வழக்காடி
களைத்துப்
போய்விட்டார்.
ஒருகால்
அந்தப்
பயல்கூட
அவள்
ஒடியிருப்பாள்
என்ற
ஊகம்
இருந்தபோது
முன்நாளெல்லாம்
தன்
மகள்
சம்மதமின்றி
அவளைக்
கடத்திப்
போனான்
என்று
வழக்காடலாம்
என்று
நினைத்தார்.
அதற்கும்
காந்தியின்
ஒத்துழைப்பு
வேண்டும்.
அவளை
மீண்டும்
சந்தித்து
ஒப்புதல்
வாக்குமூலம்
வாங்க
வேண்டும்
என்று
தள்ளினார்.
இப்போதோ
இது
குளவிக்
கொட்டல்கள்.
எல்லோரும்
எதிர்த்து
நிமிர்ந்து
கூலிச்
சலுகை,
அடிமை
நிலை
விட்ட
வேலைச்
சுதந்திரம்,
வேலை
நேரம்
என்று
ஒவ்வொன்றாகப்
பெற்று
வந்திருக்கிறார்கள்.
இதற்குமேல்
முன்னேற்றம்
பெற்றால்
அது
ஆதிக்கம்
செலுத்திப்
பழக்கப்பட்டவர்களின்
கோட்டைக்கே
ஆபத்தென்று
பல
இடைஞ்சல்களைக்
கொண்டு
வருகிறார்கள்.
“ஆத்திரப்பட்டுப்
பிரோசனமில்ல.
நாம
காலச்
சேத்தில
வுட்டுப்
பழக்கமானவங்கதா.
இருந்தாலும்
நீ
இப்ப
சொல்லுறது,
இதுக்குன்னு
கேசு
குடுக்கப்போறது,
ஆத்துப்
பொத
மணல்
மாதிரி
உள்ளாற
இழுத்திட்டுப்
போயிடும்.
முதல்ல
அது
கோயில்
நிலம்.
நாம
குடிச
போட்டு
ஆக்கிரமிச்சிட்டோம்னு
தா
பாயுவாங்க.
அவங்க
நோட்டீசு
குடுத்ததும்
மெய்;
ஆனா
பிச்சுப்
போட்டிருக்க
வானாம்.
சமரசமாப்
போயிருக்கலாம்.
நாம
பொறுப்போம்;
சமயம்
வரும்,
செயலில்
காட்டலாம்.
நம்ம
பக்கம்
நிறைய
நியாயம்
இருக்கு.”
“நீங்க
ரொம்பப்
பயப்படுறீங்க
முதலாளி:
இன்னிக்கு
எந்த
மயிரானும்
அரிசனங்க
குடிசயப்
பிரிக்கச்
சட்டமில்ல?”
“என்னடா,
நீ
துள்ளுனாப்
போதுமா?
நான்
சொல்லிட்டே
இருக்கேன்ல?
சட்டம்
என்னெல்லாமோதா
இருக்கு.
அவனுவ
சட்டம்
தெரியாதவனுவளா?.
நான்
வந்து
எல்லாம்
பாக்குறேன்.
இப்ப
எல்லாம்
விவரமா
விசாரிச்சி
தவராறு
அத்து
மீறல்
எல்லாம்
குறிச்சிட்டு,
பேரணிக்கு
மகஜர்
தயாரிக்கிறமில்ல,
அப்ப
வைக்கிறோம்.
அவங்களே
இப்பிடி
நடந்திருக்குன்னா
விசாரணை
பண்ண
ஏற்பாடு
செய்யிவாங்க...”
அவன்
தலையைச்
சொறிகிறான்,
குனிந்துகொண்டு. “தும்ப
வுட்டு
வாலைப்
புடிக்கிறீங்க
முதலாளி!”
“சர்த்தாண்டா!
பெரிய...
விவகாரக்காரந்தா,
இப்ப
சொன்னதைக்
கேளு,
அடுத்த
பஸ்ஸப்
புடிச்சிட்டு
வூட்டுக்குப்
போலாம்.”
வீச்சம்
லேசாக
மூக்கில்
இழைகிறது.
கருவாடா?
“என்னாடா,
சாக்குப்
பையில?”
கீற்றுப்புன்னகை
முகிழ்க்கிறது.
“ஒண்ணில்ல
முதலாளி...”
“என்னடா
ஒண்ணில்ல?
வக்கீல்
வூட்டுக்குப்
பெரிய
கருவாடா
கொண்டிட்டுப்
போற?”
“இல்ல
முதலாளி,
நாம்
போயிட்டு
நிமிட்டுல
பஸ்ஸுக்கு
வந்திடற.
நீங்க
போங்க...”
சாக்குப்
பையை
இடுக்கிக்கொண்டு
அவன்
நிற்காமல்
ஓடுகிறான்.
“...பாம்பு
பிடிக்கப்
போயிருக்கிறான்...
மட்டு
மரியாதியே
வைக்கிறதில்லிங்க...”
தங்கசாமி
லட்சுமியைப்
பார்த்து
வருகிறார்.
“என்னாமா?
வூட்டுக்காரரை
அளச்சிட்டுப்
போக
வந்துட்டீங்களா?
நாங்கல்லாம்
மனிசங்கல்லியா?”
“ஐயோ,
யாருங்க
அப்பிடிச்
சொன்னது?
நீங்கதாம்
பாத்துட்டீங்க...!”
“ஏம்மா,
உங்க
பக்கம்
ஆரும்
மாதர்
சங்கத்துப்
போராட்டம்
எதிலும்
சேர
மாட்டேங்கறீங்க?
தாசில்தாராபீசு
முன்ன
குடும்ப
கார்ட
மாத்தி
ஒவ்வொரு
ஆளுக்கும்னு
கணக்குப்
போட்டு
அரிசி
குடுக்கணும்.
சர்க்கரை
மத்தும்
அத்தியாவசியப்
பண்டங்கள்
குடுக்கணும்னு
போராட்டம்
நடந்திச்சி.
உங்க
பக்கம்
கிட்டமா
சொல்லி
அனுப்பினேன்னிச்சி.
நீங்க
யாரும்
எதுக்கும்
வாரதில்ல?”
“அவங்கவங்களுக்கு
வூட்டுப்பாடு,
வெளிப்பாடுன்னு
சரியாப்
பூடுது.
எனக்கும்
குடும்பத்துல
ஒரே
நெருக்கடி..”
“எல்லாரும்
பொம்பிளங்க
சேந்தாத்தா
சங்கத்துக்குப்
பலம்னு
பேசுறாங்க.
ஆன
அவனவன்
வூட்டுப்
பொம்பிளய
வெளில
விடாம
காபந்து
பண்ணிக்கிறான்!”
சம்முகத்தைச்
சாடையாகப்
பார்த்துக்
கொண்டுதான்
தங்கசாமி
குறிப்பிடுகிறார்.
சம்முகம்
சாதாரணமாக
இருந்தால்
சிரித்திருப்பார்.
இப்போது
சிரிப்பு
வரவில்லை.
“எல்லாம்
பேசறதுக்குத்
தாங்க
நல்லா
இருக்கு
நடமுறக்கி
வர
முடியாது.
இன்னிக்கிருக்கிற
நிலமயில,
பொம்பிளங்களக்
கூட்டிட்டு
வரதே
லேசான
காரியமில்ல...”
இந்தக்
கருத்தை
உதிர்த்துவிட்டு
சம்முகம்
கொடியில்
இருக்கும்
துண்டை
பத்திரமாக
எடுத்து
மடித்துப்
பைக்குள்
வைத்துக்
கொள்கிறார்.
தன்
பையில்
டாக்டர்
சீட்டு,
மருந்து
வாங்கின
கடை
பில்
எல்லாவற்றையும்
பார்த்து
வைத்துக்
கொண்டு
பணத்தை
எண்ணிப்
பார்க்கிறார்.
“காம்ரேட்,
இதொரு
வேட்டி
இருக்கு,
வுட்டுட்டுப்
போடாதீங்க!”
பொன்னடியான்
பார்த்து
எடுத்து
வருகிறான்.
“நன்றிப்பா...
ஒத்த
வேட்டியோட
வந்தனா?
ஐயரு
கொடுத்தாரு...”
“வரேம்ப்பா,
பிறகு
நான்
சொன்னதெல்லாம்
ஞாபக
மிருக்கில்ல?”
“இருக்கு
போயிட்டுவாங்க
காம்ரேட்
பிறகு
பார்த்துக்கலாம்...
வணக்கம்!”
எல்லோரிடமும்
விடைபெற்றுக்கொள்கிறார்.
லட்சுமி
பையைக்
கையில்
எடுத்துக்
கொண்டு
அவருடன்
நடக்கிறாள்.
காலில்
செருப்புப்
போட்டுக்
கொண்டு
நடந்தாலும்
கூச்சமாக
இருக்கிறது
அவருக்கு.
ரிக்ஷா
என்றால்
ஒன்று
ஒன்றரையாகிவிடும்.
லட்சுமிக்கு
டவுனுக்கு
வருவதே
அருமை.
அதை
ஒரு
சினிமா
பார்த்தோ,
கடையில்
இரண்டொரு
சாமான்
வாங்கியோ,
கொண்டாட
முடியாதபடி
சந்தோஷங்களை
ஒரேயடியாக
மகள்
கொண்டு
போய்விட்டாளே
என்று
குமைகிறது.
“நீங்க
சின்னய்யருக்கு
எழுதி,
எப்படியானும்
ரெண்டாயிரம்
புரட்டித்தாரேன்னு
சொல்லியிருக்கலாம்.
அவளுக்கு
அதுதாங்
குற.
காவாளயப்
போட்டுட்டுத்
தண்ணிலயும்
வுட்டு
அது
அழுவி,
ஒழவோட்ட
ஆளில்லாம
வீணாப்
போன
சங்கதியா
யிட்டது.
அதா
அவளுக்கு
ஆத்திரம்...”
“வெவரமில்லாம
பேசுற!
அரிசனம்
அரிசனம்ங்கற
சலுகையும்
கட்சிக்கு
ஆள்
சேக்கிற
துண்டிலப்
போலப்
பயன்படுத்தறாங்க.
நாம
இதை
எதுத்துப்
போராடணுமே
ஒழிய
நாமே
லஞ்சம்
குடுக்கிறதா?”
“ஆமா...
எல்லாரும்
ஒரு
நிலையிலதா
நிக்கிறாங்களாக்கும்?
அன்னிக்கு
ஊரே
சாமி
கும்பிடக்
கூடாதுன்னு
சொன்னிங்க.
ஒங்ககிட்டயே
அவன்
மொத
வசூலுக்கு
வந்து
பத்து
ரூபா
வசூல்
பண்ணிட்டுப்
போறான்.
கோயில்
சொத்து,
நிலம்,
தோப்பு
எல்லாம்
என்னாச்சின்னு
கேக்க
யாருக்குத்
தெம்பிருக்கு?”
“நாங்
குடுத்தேனா?
நீதான்
என்னமோ
ஒடனே
கொண்டாந்து
வச்சே!
இவங்கசாமிகிட்டல்லாம்
உனக்குத்தான்
பயம்!”
“நீங்கதான்
நோட்டில்
பேரெழுதினிங்க?
பிறகு
நான்
பொய்யா
நிக்கணுமா?
இந்த
வடிவுக்கு
நீங்க
காசு
குடுத்தது
எப்பிடித்
தெரிஞ்சிச்சோ?
ஒருக்க
அவனுவளே
சொல்லியிருப்பா
னுவ!
நேத்தெல்லாம்
ஆரும்
சாமி
கும்பிடக்
கூடாதுன்னவரு
இப்ப
அவங்க
கூடச்
சேந்திட்டுப்
பணம்
குடுத்தாராமே
முதலாளின்னு
ஏங்கிட்ட
இப்பக்
கேக்கிறான்.
எதானும்
சொன்னா,
‘ரொம்பக்
கெடுபிடி
பண்ணாதீங்க?
எங்கிட்டுப்
போனாலும்
எங்கக்குக்
கூலி
இருக்கு.
ஒரே
எடத்தில்தான்
உழைக்கணும்னில்ல’ன்னெல்லாம்
பேசுகிறான்.”
“ஒட்டலில்
புகுந்து
இரண்டு
இட்டிலி
சாப்பிட
இடம்
தேடுகின்றனர்.
ஒரு
மேசையில்
சரகம்
சப்-இன்ஸ்பெக்டர்
உட்கார்ந்திருக்கிறார்.
சம்முகம்
பணிவாக
ஒரு
மரியாதை
தெரிவித்துவிட்டு,
அடுத்த
முன்பக்கம்
காலியாகப்
போகும்
நாற்காலிக்குக்
காத்து
நிற்கிறார்.
சாப்பிட்டுவிட்டு
வெளியே
வந்ததும்
பஸ்
நிறுத்தத்தில்
சம்முகத்தை
ஓரிடத்தில்
உட்காரச்
சொல்லிவிட்டு,
ஒரு
தேநீர்
வடிகட்டியும்,
பாண்டிச்சேரி
லாட்டரிச்
சீட்டொன்றும்
வாங்குகிறாள்
லட்சுமி,
டவுனுக்கு
வந்துவிட்டு
வெறுமே
எப்படிச்
செல்வது?
நாகுவுக்கு
ஒரு
கடலைமிட்டாய்
வாங்கி
வைத்துக்
கொள்ளுகிறாள்.
கன்யாஸ்திரி
ஒருத்தி
அவளைப்
பார்த்துக்
கொண்டே
வருகிறாள்.
புன்னகை
செய்கிறாள்.
“காந்திமதியின்
அம்மாளில்ல?”
எப்போதோ
பத்தாவது
படிக்கையில்
பள்ளிக்கூட
விழாவுக்குக்
கூட்டிப்
போனாள்.
எப்படி
நினைவு
வைத்துக்
கொண்டிருக்கிறாள்!
“காந்தி
எலக்ட்ரானிக்ஸ்
கோர்ஸ்
சேரப்போறேன்னுதே?
சேந்திச்சா?”
“இல்ல.”
“ஏ
வந்து
சர்ட்டிபிகேட்
வாங்கிப்போச்சி?
நல்லா
படிக்கிற
பிள்ளையாச்சே?”
“அதொண்ணும்
தோதுப்படல...
கல்யாணங்
கட்டிக்
குடுத்திடறதா
இருக்கிறோம்.”
அவளிடமிருந்து
கத்திரித்துக்கொண்டு
வருகிறாள்.
என்னவெல்லாம்
கனவு
கண்டிருக்கிறாள்!
சமுதாயத்தில்
மதிப்பாக
அவளுக்குக்
கல்யாணம்
கட்டி,
படித்து
வேலை
செய்யும்
மருமகனைப்
பார்த்துப்
பெருமைப்
படவேண்டும்,
என்றெல்லாம்
எண்ணியிருந்தார்களே!
அதொன்றும்
இல்லாமல்
போய்விட்டது.
ஊரில்
தை
அறுவடை
முடிந்தபின்
கொச்சையான
விவகாரங்கள்
நாய்க்குடைகளாக
விரியும்.
அந்தச்
சுவாரசியத்தில்
ஆற்றோரம்
குளத்தோரம்
கூடும்போது,
நாயக்கர்
வீட்டில்
நெல்புழுக்கப்
போகும்போது
யார்
யாரை
எல்லாம்
பற்றியோ
பேசுவார்கள்.
இப்போது
அவள்
மகளைப்
பற்றி
நாயக்கரம்மா
காது
கிழியப்
பேசுவாளே?
அதுவும்,
சேந்தன்
பெண்
சாதி
வள்ளியம்மை
சோடிப்பதில்
வல்லவள்.
அவளுக்கு
வெறும்
வாயையே
மெல்லத்
தெரியும்.
இந்தத்
தலைமைப்
பதவியின்
மயில்
பீலிகளை
உலுக்கிக்
கீழே
போடுவாள்.
“இவ
என்ன
முறைப்படி
முதலா
கட்டினாளா?
போலீசுக்காரனுக்கு
ஒண்ணப்
பெத்து
வச்சிருக்கிறவதானே;
அம்மயப்
போல
பொண்ணு!”
என்று
நொடிப்பாள்.
“யாரு,
லட்சுமியா?”
“ஒனக்குத்
தெரியாதா?...
இவனுவ
மிராசு
பண்ணைய
எதித்துக்கிட்டுக்
கவர்மெண்டுக்கு
விரோதமா
ஆளுவளச்
சேர்த்துக்கிட்டுத்
தல
மறவா
ஒளிஞ்சுதான
திரிஞ்சானுவ?
அப்ப
போலீசு
ராவில
வூடுகளில்,
சேரில
வந்து
வலபோடுற
மாதிரி
ஆளுவளத்
தேடுவா.
இவனுவதா
அம்புடமாட்டானுவளே?
பொம்பிளகதா
இருப்பா.
புடிச்சிக்குவாங்க.
இவளுக்கு
அப்ப
கலியாணம்
காட்சி
ஆவல.
வவுத்துல
வந்திட்டது.
என்னா
செய்யிவா?
ஆத்தாகாரி
மருந்துமாயம்
குடுத்துப்
புள்ளயக்
கரச்சிடப்பாத்தா,
அது
கரயல.
ஆனா
கோளாறாப்
போயிட்டுது.
மூக்கறையும்
மூளை
குளம்பியும்
பொறந்திடுச்சி.
பெறகுல்ல
இவுரு
வந்து
கட்னது?
முன்னியே
தொடுப்பா
இருந்ததுதான்,
இவுரு
புள்ளன்னு
சொல்லிக்கிட்டாவ.
ஆனா,
இவுரு
பெருந்தன்ம
கட்டிட்டாரு...”
பஸ்ஸில்
உட்காந்திருக்கையில்
லட்சுமிக்குக்
காட்சிகள்
படலங்களாக
அவிழ்கின்றன.
உடல்
குலுங்குகிறது.
வயலில்
வேலை
செய்யும்
படிக்காத
குமரிப்பெண்
கட்டு
மீறிவிட்டால்
சங்கத்துக்கு
ஒவ்வாத
சம்பந்தமாக
இருந்தால்
சாதிவிட்டுத்
தள்ளி
விடுவார்கள்.
அவள்
பின்னர்
நடவு,
களை
என்று
வயலில்
இறங்க
முடியாது.
ஏனெனில்
அவள்
சேற்றில்
கால்வைக்க
வந்தால்
மற்றவர்
அனைவரும்
அங்கிருந்து
வெளியேறி
விடுவார்கள்.
அதனால்
எந்தப்
பண்ணைக்காரனும்
அத்துமீறிய
ஆட்களுக்கு
வேலை
கொடுக்கமாட்டான்.
இந்தக்
கட்டுப்பாட்டினால்
தாமாகவே
திரும்பி
மந்தைக்குள்
வந்து
சேர்ந்து
கொள்வார்கள்.
ராமாயி
மகள்
இப்படித்தான்
எவனோ
அயலூர்க்காரன்
சேர்வையுடன்
ஓடிப்போனாள்.
திரும்பி
வந்துவிட்டாள்.
இப்போது
மூக்கன்
மச்சானைக்
கட்டி
இரண்டு
பிள்ளைகளிருக்கின்றன.
குஞ்சிதம்...?
வெளியூர்க்காரி.
பள்ளக்குடிப்
பெண்
தான்
என்று
சொல்வார்கள்.
ஓடிவந்தவள்.
பார்க்கச்
சுருட்டை
முடியும்,
புருபுருவென்ற
முகமுமாக
அழகாக
இருக்கிறாள்.
ஆனால்
திரும்ப
ஊருக்குப்
போகமுடியாமல்,
இங்கேதான்
உயர்ந்தசாதி
என்று
சொல்லிக்கொண்டு
மேற்குடியாரை
அண்டி
ஊழியம்
செய்கிறாள்.
அவர்களுக்கே
உடம்பை
விற்றுத்
தின்னும்
பிழைப்பாயிருக்கிறாள்.
அக்கிரகாரத்திலும்,
வேளாளர்
தெருவிலும்
கோலோச்சும்
விடலைகள்
‘அவ
என்ன
சாதி
தெரியுமில்ல?’
என்று
கண்ணடிப்பார்கள்.
தோளைப்
போர்த்திக்
கொண்டு
பவ்வியமாக,
‘நாங்க
வெள்ளாழருங்க!’
என்பாள்.
ஒரு
பெண்
மீறினால்,
உதிரிப்பூவாகக்
காலில்
மிதிபட
வேண்டும்.
கண்கள்
சுரந்து
சுரந்து
பார்வையை
மறைக்கிறது.
சம்முகம்
வெளியே
பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
நடவான
வயல்கள்
கண்களிலே
தென்படுகின்றன.
சில
இடங்களில்
கயிறு
கட்டிய
வரிசைகளாய்
பாய்
நடவு
நட்டிருக்கிறார்கள்.
திருமணத்தாலி
பூட்டிக்கொண்ட
மங்கல
மகளிர்
அணி
அணியாக
நிற்பது
போல்
ஒரு
காட்சி.
இவர்களுடைய
மண்ணில்
எதுவும்
முடியவில்லை.
மகன்,
மகள்,
கட்டாக
இருந்த
கூட்டாளிகள்
எல்லோருமே
சிதறிப்
போகிறார்கள்.
சிதறிச்
சிதறிப்
போகிறார்கள்.
சின்னா
பின்னமாகிப்
போய்
மானுட
உறவின்
தொடர்புகள்
வறண்டு
பொடியாகிப்
போய்...
எல்லோரும்
வாருங்கள்!
ஒன்றாகச்
சேருங்கள்!
உரிமைக்காக
ஒன்றுபட்டுப்
போராடுவோம்!
உரிமைக்காக
ஒன்றுபட்டுப்
போராடுவோம்!
ஏகோபித்த
குரல்
முழங்க,
ஆயிரம்
பதினாயிரமாக
நில
உரிமைக்காரர்களின்
அடியாட்களையும்
அடக்குமுறையையும்
எதிர்த்து
நின்று
இரத்தம்
சிந்தத்
துணை
நின்ற
சக்திகள்
துண்டு
துண்டாகச்
சிதறிப்
போகின்றன.
சம்முகம்
கண்களை
மூடிக்கொள்கிறார்;
தாள
முடியவில்லை.
----------
14
கோகிலம்,
காந்தியிடம்
மிகவும்
பிரியமாகவே
இருக்கிறாள்.
கன்னங்குழியப்
புன்னகை
செய்துகொண்டு
அவளிடம்,
“சாப்பிடவேயில்லியே?
கூச்சப்படாதே!”
என்று
சொல்கிறாள்.
நித்யமல்லிகைப்
பூக்களைச்
செண்டாகக்
கட்டி
அவள்
கூந்தலில்
கொண்டு
வந்து
வைக்கிறாள்.
ஏலம்
கிராம்பு
மணக்கும்
பாக்குப்பொடியும்
வெற்றிலை
கண்ணாம்பும்
தட்டத்தில்
வைத்து
“வா,
வெத்தில
போட்டுக்க
காந்தி!”
என்று
உபசரிக்கிறாள்.
“...படிக்கிற
பொண்ணுன்னு
நா
வெத்திலை
பேர்டுறதேயில்ல...”
காந்திக்கு
அவளிடம்
சகஜமாகப்
பேச
இயலாதபடி
ஏதோ
ஒரு
தடை
உறுத்திக்கொண்டிருக்கிறது.
தீவிரமாக
ஏதேனும்
பேசிவிடுவாளோ
என்று
அவளும்
அந்தப்
புன்னகையுடன்
நிறுத்திக்
கொள்வதாகத்
தோன்றுகிறது.
அவளைப்பற்றி
அங்கு
வந்த
சில
நாட்களில்
சாலியின்
வாயிலாகவே
அறிந்து
கொள்கிறாள்.
அவள்
இசை
வேளாளர்
மரபில்
வந்தவள்தான்.
ஆடற்கலை
பயின்று
அரங்கேறியதும்
உண்மைதான்.
நில
உடமைக்காரர்களை
எதிர்க்கும்
கட்சியில்
இருந்து
ஆறுமுகம்
போராடி
சதிவழக்கொன்றில்
குற்றவாளியாகிச்
சிறைத்தண்டனையும்
பெற்றவர்.
இதற்கு
முன்பே,
அவருக்குச்
சொந்த
மாமன்
மகளுடன்
திருமணமாயிருந்தது.
சிலகாலம்
தலைமறைவாகக்
கூத்துாரிலும்
மங்கலத்திலும்
இருந்த
காலத்தில்,
இட்டிலிக்கடை
போட்டிருந்த
பொன்னம்மாவின்
அழகு
மகள்
திலகம்
அவருக்குக்
காதலியானாள்.
கைவிடாமல்
அவளைத்
திருமணம்
செய்துகொண்டார்.
முதல்
மனைவி
இக்காலத்தில்
இறந்து
போயிருந்தாள்.
சிறையிலிருந்து
வந்தபின்
அவர்
புதிய
வாழ்க்கை
தொடங்கினார்.
புதிய
அரசியல்
கட்சி
ஆட்சிக்கு
வந்தபின்
அவர்
கைக்கொண்ட
நெல்வியாபாரம்,
அவருக்குச்
செல்வச்
செழிப்பையும்
பல
தொடர்புகளையும்
கொண்டு
வந்திருக்கிறது.
கோகிலத்தின்
தாயும்
பாட்டனாரும்
அவள்
புகழ்
வாழ்க்கையில்
கொடிகட்டவேண்டும்
என்றுதான்
வற்புறுத்தி
னார்கள்.
ஆனால்
அவளோ
கல்லூரியில்
படிக்கவேண்டும்,
திருமணம்
செய்து
கொள்ளவேண்டும்
என்றே
பிடிவாதமாக
இருந்தாள்.
தாயும்,
பாட்டனாரும்
இறந்த
பிறகு
அவள்
சொத்துக்களை
அநுபவிக்கவும்,
அவளை
ஏமாற்றவுமே
ஓர்
அந்தண
இளைஞன்
சிநேகம்
கொண்டிருந்தான்.
அந்த
நிலையில்
அவளிடம்
தம்
தொழில்
நிமித்தமாகப்
பழகும்
சந்தர்ப்பம்
ஆறுமுகத்துக்கு
வாய்த்தது.
இவர்
தொடர்பு
ஏற்பட்டபிறகு,
சொத்துக்கள்
பாதுகாப்பாக
இருக்கின்றன.
அவருக்கு
உரியவளாகவே
வாழ்ந்து
வருகிறாள்.
இரண்டு
முறைகள்
கருத்தரித்தும்
மகப்பேறு
வாய்க்கவில்லை.
சென்ற
ஆண்டில்
தஞ்சை
மருத்துவமனையில்
சென்று
ரணசிகிச்சை
செய்துகொள்ள
வேண்டிய
கட்டாயம்
ஏற்பட்டது.
காலையில்
எழுந்தால்
காபி,
இட்டிலி,
பொங்கல்
என்று
பலகாரங்கள்,
மணக்கும்
சோப்புத்
தேய்த்துக்கொண்டு
குளியல்:
நல்ல
சேலை,
படிக்க
விதவிதமான
கதைப்
புத்தகங்கள்,
பத்திரிகைகள்,
சினிமா
இலக்கியங்கள்.
வண்டிகட்டிக்
கொண்டோ
மோட்டார்
சைக்கிள்
பின்னமர்ந்தோ
கொடி
மங்கலம்
விஜயா
டாக்கீசில்
சினிமா
என்று
நாட்கள்
சிட்டாக
ஒடுகின்றன,
காந்திக்கு.
அங்கவஸ்திரம்
மாலையாகக்
கீழ்வரை
தொங்க,
ஆறுமுகம்
அங்கே
முதல்நாள்
சந்திக்கையிலே
சாலி
அவளை
அவரைக்
கும்பிடச்
சொன்னான்.
“அப்பா,
இவளுக்கு
பாலிடெக்னிக்ல
அட்மிசன்
வேணுமாம்!”
அவர்
சிரித்தார்.
“அதென்னாத்துக்குமா
உன்னப்போல
பெண்களுக்கு?
ஒரு
டீச்சர்,
இல்லாட்டி
டாக்டர்னாலும்
கவுரவமாயிருக்கும்.
பியூசி.
பிரவேட்டாப்
படிச்சிடேன்!
இங்க
தஞ்சாவூரிலியே
மெடிகல்
அட்மிஷன்
வாங்கித்
தாரேன்!”
என்றார்.
காந்திக்கு
இது
ஆகாயத்தில்
பறப்பதாக
இருந்தது.
பின்னர்
தனிமையில்
காதலனிடம்,
“நெறயச்
செலவாகும்னு
சொல்றாங்களே,
டாக்டர்
படிக்க?”
என்று
வியப்புடன்
வினவினாள்.
“செலவானா
என்ன?
எங்கப்பாக்கு
நீ
டாக்டராகனும்னு
ஆசையிருக்காதா
என்ன.”
அவளது
கற்பனை
சிறகடித்துப்
பறந்தது.
தான்
கையில்
ஸ்டெத்துடன்
ஆசுபத்திரியில்
நடப்பது
போலும்,
அங்கே
ஒதுங்கிப்
பாவங்களாக
நிற்கும்
கிராமத்துப்
பெண்கள்
இவளைக்
கண்டு
வணக்கம்
தெரிவிப்பதுபோலும்
ஒரு
கற்பனை.
“நம்ம
கிளியந்துற
சம்முக
வாய்க்காரு
மகதா
வூட்டவுட்டுப்
போயி,
டாக்குட்டரா
படிச்சி
வந்திருக்கு”
என்று
அவர்கள்
சொல்லிக்
கொள்வார்கள்.
அதிசயிப்பார்கள்.
சீக்குக்
குழந்தைகளையும்,
கிழவிகளையும்
தான்
தொட்டுப்
பார்த்து
வைத்தியம்
செய்வதுபோலும்,
தன்
பாட்டியும்
அங்கு
வந்து
நின்று
அவளை
முகத்தைத்
தடவி
திருட்டி
சொடுக்குவது
போலும்
ஒரு
கற்பனை.
“நீங்க
அநாவசியமா
விரோதம்
பாராட்டிக்
கோவிச்சிட்டீங்கப்பா,
ஊரிலியே
கெடந்திருந்தா
நா
இப்படி
முன்னுக்கு
வந்திருக்க
முடியுமா?...”
“தப்புதாம்மா,
நீ
செயிச்சிட்டே!”
என்று
தந்தை
ஒப்புக்
கொள்வது
போல்
ஒரு
காட்சி.
“இனிமே
என்னாடா
சம்முகம்!
சம்பந்தியாயிட்டே
அவனவின்
சவுரியத்துக்குத்தான்
எல்லாமே,
அந்த
குடிசயில
நீ
என்னாத்துக்கு
இருக்கணும்
இனிமே?
புரட்சி
கிரட்சி
எல்லாம்
வெறும்
பம்மாத்துப்
பேச்சு.
நம்ம
முதல்ல
கவனிச்சுக்கணும்.
அதுக்குப்
பிறகுதா
சமுதாயம்,
தேசம்
எல்லாம்.
நீ
நல்லா
சந்தோசமா
இருந்தாத்தானே
பிறத்தியானுக்கு
எதானும்
செய்யமுடியும்?...”
இப்படி
ஒரு
கற்பனை.
ஊஞ்சற்பலகையில்
அமர்ந்து
காந்தி
தனது
புகுமுக
வகுப்புப்
பாடங்கள்
பற்றிப்
பல்கலைக்
கழகத்துக்கு
எழுதி
விசாரிக்கவேண்டும்
என்று
சாலியிடம்
கேட்பதைப்
பற்றி
நினைத்துக்
கொண்டிருக்கையில்
அவனே
வருகிறான்.
“காந்தி.
அப்பாக்கு,
அம்பேத்கார்
முன்னேற்ற
சங்ககாரங்க
ஒரு
பாராட்டு
நடத்தறாங்களாம்.
அவருடைய
சேவையைப்
பாராட்டி,
பலரும்
பேசுறாங்க.
உன்னையும்
மேடையிலேத்தணும்னு
எனக்கு
ஆசை.”
அவளுக்கு
இனம்
புரியாததொரு
நடுக்கம்
பரவுகிறது.
“வாணாங்க...”
“ஃபூல்
என்ன
வாணாங்க?
அம்பேத்கார்
தாழ்த்தப்பட்ட
மக்களுக்குச்
சேவை
செய்தார்.
அந்த
வழியில்
இவரும்
சேவை
செய்கிறார்னு
பேச
வேண்டியதுதான்.
உனக்கு
எப்படிப்
பேசுவதுன்னு
நான்
சொல்லித்
தாரேன்.
நீ
பேசினா
நல்லா
இருக்கும்.
போஸ்டர்ல
பேர்
போட்டு,
போட்டோ
பிடிக்க
ஏற்பாடு
செய்றேன்.
கைதட்டி
உன்னை
உற்சாகப்படுத்த
நிறையப்
பேர்
இருக்காங்க...!”
“எனக்கு
வெக்கமா
இருக்குங்க...”
“அட,
என்ன
நீ
இப்படிச்
சுத்த
பயந்தாங்குளியா
இருக்க!
கூட்டம்
திருச்சில,
ஒருதரம்
வெற்றியா
மேடை
ஏறிட்ட,
பின்னால
பிரமாதமான
எதிர்காலம்
இருக்கு.
இப்பெல்லாம்
பேச்சுதான்
மூச்சு...”
அவன்
மாடிக்கு
அழைத்துச்
சென்று
டேப்பைத்
தட்டிவிட்டு,
தானைத்தலைவர்கள்,
புலவரேறுகள்
தமிழ்க்
காவலர்கள்
பேசிய
பேச்சுக்களைக்
கேட்கச்
செய்கிறான்.
“இப்ப,
பெண்கள்
அரசியல்
களத்தில
புகுந்தால்
விருவிரென்று
அமைச்சர்
பதவி
வரை
வரமுடியும்.
நீ
படிக்கிறதுபடி,
ஆனால்
இதுவும்
முக்கியமானது
காந்தி.
எப்படியும்
நீ
முன்னுக்கு
வரணும்ங்கறது
என்
ஆசை.”
புதிய
கிளர்ச்சியில்
எதுவுமே
புரியவில்லை.
பெரிய
அச்சு
போஸ்டரைக்
கொண்டுவந்து
காட்டுகிறான்.
அவளுடைய
பேச்சுப்
பயிற்சிக்குத்
தொடர்ந்து
ஊக்கம்
அளிக்கிறான்.
கோகிலமும்
மகிழ்ந்து
போகிறாள்.
விழாவுக்கு
முன்னாள்
மைய
அமைச்சர்
ஒருவரும்
வருகை
தருகிறார்.
காரில்
அவள்,
கோகிலம்
இருவரும்
செல்கையில்
சாலி
வண்டியை
ஒட்டுகிறான்.
திறந்த
வெளி
மேடையில்
யார்
யாரோ
பேச்சாளர்.
பிரமுகர்கள்
இருக்கின்றனர்.
ஆறுமுகம்
விரல்களில்
மோதிரம்
மின்ன,
மினுமினுத்த
சட்டையின்
மீது
மேல்
உத்தரீயம்
விளங்க,
விழா
நாயகராக
அமர்ந்திருக்கிறார்.
அவளைப்
பலருக்கு
அறிமுகம்
செய்விக்கிறான்
சாலி.
ஆறுமுகத்தின்
தொண்டைப்
பற்றி
முன்னாள்
அமைச்சர்
‘தீனதயாளன்’
என்று
புகழ்ந்துரைக்கிறார்.
பேச்சாளருக்கு
சாலி
தான்
பெரிய
மாலையைப்
போடுகிறான்.
பிறகு
ஒவ்வொருவராக
வந்து
புகழ்ந்து
ஆறுமுகத்துக்கு
மாலை,
துண்டு
என்று
பரிசளிக்கிறார்கள்.
இடையில்,
செல்வி
காந்திமதியை
எழுதிக்
கொடுத்திருந்த
படி
தலைவர்
அறிமுகம்
செய்துவைக்கிறார்.
“இளைய
தலைமுறையின்
பொற்சுடர்,
கல்லூரிப்
பட்டம்
பெற்றவர்.
தீனதயாளரின்
ஆதரவில்
முன்னுக்கு
வரும்
புகழ்த்தென்றல்..”
என்று
அறிமுகம்
அடுக்குகிறார்.
காந்தி
உருப்போட்டிருந்த
சொற்களை
இனிய
குரலில்
உரையாக
ஆற்றும்போது,
கையொலி
கலகலப்பாக
உற்சாக
மூட்டுகிறது.
புகைப்படங்கள்
பளிச்
பளிச்சென்று
அவளை
மெய்சிலிர்க்கச்
செய்கின்றன.
ஆறுமுகம்
மறுமொழியுரைத்ததும்,
நன்றி
கூறல்களும்
கூட
அவள்
செவிகளில்
விழுந்தாலும்
மனதில்
பதியவில்லை.
தனது
ஒளிமயமான
எதிர்காலம்
பற்றிய
கனவுகளிலேயே
மூழ்கிக்
கிடக்கிறாள்.
தான்
மிக
நன்றாகப்
பேசியதாகப்
பெருமை
பூரிக்கிறது.
“வெளுத்துக்கட்டிட்ட
காந்தி.
அப்பாக்கு
ரொம்ப
சந்தோசம்.
நாளைக்கு
எல்லா
பேப்பரிலும்
உம்
பேச்சுக்கு
இம்பார்டன்ஸ்
குடுத்து
போட்டோ
வரணும்னு
சொல்லி
வச்சிருக்குறேன்!”
இவர்கள்
இருவரையும்
ஒட்டலில்
விட்டுவிட்டு,
கோகிலமும்
ஆறுமுகமும்
காரில்
ஊர்
திரும்புகின்றனர்.
“காந்தி...
எனக்கு
ரொம்பப்
பெருமையா
இருக்கு.
பரிமேலழகன்
இல்ல,
அவரு
ரொம்பப்
பாராட்டினாரு
அவரு
ரொம்பப்
பவர்ஃபுல்
ஆளு.
யாரு
எலக்சன்ல
ஜயிக்கனும்ங்கறத
அவருதான்
தீர்மானிக்கறாரு.
ரெண்டு
தடவையா
அப்பாவ
ஜயிக்க
வச்சவர்
அவருதா.
இப்ப
அப்பாவ
நிக்கவானான்னு
சொன்னவரும்
அவருதா.”
“ஆரு,
பெரிய
மாலையா
போட்டு
அப்பாவப்
பாராட்டினாரே,
பெரிய
கொடுவா
மீச
வச்சிட்டு?”
“உனக்கு
அறிமுகம்
செய்து
வச்சேனே?
அவுருதா.
அவர்
சொல்லிட்டார்னா
சொன்னதுதான்.
உன்ன
வார
இடைத்
தேர்தல்ல
நிக்க
வக்கலாம்னு
அவர்
சொன்னாலும்
ஆச்சரிய
மில்ல,
அப்படிப்
பாராட்டினாரு...”
எல்லாம்
மிக
இன்பமாக
இருக்கிறது.
ஓட்டல்
அறையில்
அல்வாவும்,
தோசையும்,
பரோட்டாவும்,
பாலும்
பழமும்
வரவழைத்துச்
சாப்பிடுகின்றனர்.
“நான்
கொஞ்சம்
வெளியே
போயி
ஃபிரன்ட்ஸ்கிட்ட
பேப்பரில்
செய்தி
போடுறது
சம்பந்தமா
பேசிட்டு
வாரேன்.
நீ
படுத்துத்
தூங்குறியா
கண்ணு?...”
மென்மையாக
முத்த
மிடுகிறான்.
“சீக்கிரம்
வந்திடுங்க.
நான்
தூங்கிட்டா
எழுந்து
கதவைத்
திறக்கிறது
சிரமம்...!”
“...அப்ப.
நா
வெளியே
பூட்டிட்டுப்
போயிடட்டுமா?
நீ
எந்திரிக்க
வேணாம்.
உள்ளாற
வந்து
இப்பிடி
எழுப்பட்டுமா?...”
“சீ.
போங்க...”
“போறேன்...
போறேன்...”
சிரித்துக்கொண்டே
மென்மையாக
அவளை
விட்டுக்
கதவைச்
சாத்திக்கொண்டு
போகிறான்.
உறக்கம்
உடனே
வந்துவிடவில்லை.
புதிய
கிளர்ச்சிகளில்
மனம்
அலைபாய்கிறது.
பேச்சு...
அரசியலுக்கு
அதுவே
ஆயுதம்.
காந்தி
பெரிய
பேச்சாளராகி,
தேர்தலுக்கு
நின்று
வெற்றிபெற்று
அமைச்சராக
வரக்கூடிய
எதிர்காலம்
இருக்கிறது.
பள்ளர்-பறையர்
கட்சி
என்று
சார்ந்து,
கூலிப்
போராட்டம்,
குடிப்போராட்டம்
என்று
எதிர்ப்புக்
கொடியையே
தூக்கிக்
கொண்டிருந்தால்
மக்கள்
ஆதரவு
ஏது?
விளக்குகள்,
வசனங்கள்,
புதிய
பகட்டுக்கள்,
பாராட்டுக்கள்
எல்லாவற்றுக்கும்தான்
மதிப்பு
இருக்கிறது.
பத்திரிகையில்
பெயர்
வரும்.
பெயரை
அப்பா
பார்த்தால்?
அவர்
பார்க்காவிட்டாலும்
மற்றவர்கள்
பார்த்துச்
சொல்வார்கள்.
“துரோகி!”
என்று
பல்லைக்
கடிப்பார்.
ஆனால்
வெற்றிப்
படியின்
உச்சியிலே
அவள்
செல்வாக்கான
குடைக்
கீழ்
வீற்றிருந்தால்
அப்போதும்
துரோகி
என்று
உதறித்
தள்ளுவாரா?
உறக்கம்
பிடிக்கவில்லை.
வெளியே
கதவு
தாழ்
கிளிக்கென்று
விடுபடும்
சத்தம்
கேட்கிறது.
அவள்
அவசரமாக
விளக்கை
அணைத்துவிட்டு
முகத்தை
மூடிக்கொண்டு
உறங்குவதாக
பாவனை
செய்கிறாள்.
சில
விநாடிகளில்
அவள்
முகத்திரை
விலக்கப்பட்டு,
ஒரு
காட்டு
மீசைக்குத்தலின்
ஆக்கிரமிப்பில்
திடுக்கிட்டுத்
திமிறுகிறாள்.
அவளுக்கு
இந்நாள்
பழக்கமாயிருக்கும்
மதுவின்
வாசனை
சூழ்ந்து
நெருக்குகிறது.
பளிரென்று
உதயமான
சந்தேகம்
வலுக்க
அவள்
தன்
பலமனைத்தையும்
திரட்டி
அந்த
முகத்தை
விலக்கப்
போராடுகிறாள்.
சாலிக்கு
இத்தனை
பெரிய
முகமுமில்லை,
இம்மாதிரியான
மீசையுமில்ல.
“சி,
போ!
யாரு
நீ?...”
அவன்
சிரிப்பு
அசிங்கமாக
இருக்கிறது.
“தெரியலயாடி
உனக்கு
இன்னும்?”
“சீ
போயிடு!
இல்லாட்டி
இப்பக்
கத்திக்
கூச்சலிட்டு
ஊரக்
கூட்டிடுவேன்!”
“உங்கூச்சலுக்கு
இங்க
யாரும்
வரமாட்டாடி
பத்தினித்
தங்கம்!
ஆனானப்பட்ட
மேச்சாதிப்
பொண்ணுகளே,
இந்த
மன்னனுக்கு
மசிஞ்சு
வருவா.
அரிசனச்
சிறுக்கி,
என்னாடி
எகிறற?...”
“அட...
பாவி?”
“ச்,
அழுது
ஊரக்
கூட்டாத.
உன்ன
முன்னுக்குக்
கொண்டாரணும்னு
சாலி
சொன்னான்.
புத்தியா
இரு.
ஏங்கிட்ட
வந்த
எந்தச்
சிறுக்கியும்
நடுத்தெருவில
நிக்கமாட்டா...”
அவள்
முகத்தை
மூடிக்கொண்டு
அழுகிறாள்.
அவன்
விடவில்லை.
அவளுடைய
கனவுகள்,
கபடமறியாத
கற்பனைகள்
எல்லாவற்றையும்
தகர்த்தெறிந்து
தூய்மை
என்று
போற்றக்
கூடியதொரு
மரபை
உடைத்து
அவளைப்
படுகுழியில்
வீழ்த்தி
விட்டதான
உணர்வை
அளித்துவிட்டுப்
போகிறான்.
கண்ணாடியில்
தெரியும்
தன்
முகம்
மிகவும்
கோரமாக
இருக்கிறது
அவளுக்கு.
விம்மி
இதயம்
உடைய
அழுகிறாள்.
தனது
மாயக்
கனவுகள்
இப்படிக்
குலைக்கப்பட்டதை
எண்ணி
எண்ணித்
தேம்புகிறாள்.
காதலனாகக்
காட்சி
அளித்தவன்
கயவனிலும்
கயவன்
என்று
கண்டு
பொங்கிக்
குமுறுகிறாள்.
வெய்துயிர்க்கிறாள்.
அவள்
இந்த
நாட்களில்
படித்த
கதைகளில்
சினிமாக்களில்
வரும்
கற்பழிக்கப்பட்ட
நாயகிகளில்
ஒருத்தியாக
ஆகி
விட்டாளே?
ஓட்டலில்
விஷமுண்டு
செத்தவர்கள்,
ரயில்
தண்டவாளத்தில்
கிணற்றில்,
ஆற்றில்,
கடலில்.
உயிர்விட்டவர்கள்.
அவளும்
உயிர்விடத்தான்
வேண்டுமா?
ஐயோ...!
காதல்,
கலியாணம்,
படிப்பு
என்றும்
பதவி
என்றும்
காட்டிய
ஆசை
வார்த்தைகள்...
இதெல்லாம்
துாண்டிலில்
வைத்த
இரைகளா?
ஐயோ,
அப்பா...!
அம்மா..!
“காந்தி,
சட்டை
எடுத்து
வச்சியா?
காந்தி
இந்தக்
காகிதத்துல
என்ன
எழுதியிருக்கு
பாரு!
காந்தி
உனக்கு
இந்தப்
பை
வச்சுக்க...”
“எங்க
காந்தி
கத்திரிச்சி
ஒட்டிச்சு,
இந்த
லெனின்
படம்
காந்தி
படம்
அல்லாம்...”
செவிகளைப்
பொத்திக்
கொண்டாலும்
அந்தக்
குரல்கள்
மண்டையை
ஆக்கிரமித்துக்
கொள்கின்றன.
பாட்டி
இதமாகக்
கூந்தலைத்
தடவிப்
பின்னும்
குரு
குருப்பாய்
முடி
முழுவதும்
பரவி
அவளைக்
குறுக்குகிறது.
“ஏ
காந்தி,
என்
சர்ட்டத்
தோச்சி
வச்சியா?
உனக்கு
லைப்ரரிலேந்து
புத்தகம்
கொண்டாந்திருக்கிறேன்!”
என்று
உரிமை
கொண்டாடிய
அண்ணன்,
அவன்
தான்
இவனை
வீட்டுக்குக்
கூட்டி
வந்து
அவள்
மனசில்
ஆசைப்
பொறிகளை
எழுப்பினான்.
அவனுக்கு
இந்தக்
கயவனின்
கபடங்கள்
தெரிந்திருக்குமோ!
அவளுக்கு
அடுத்து
என்ன
செய்யவேண்டும்
என்று
உடனே
உருப்படியாகச்
சிந்திக்கத்
தெரியவில்லை
என்றாலும்
அவன்
கயமையைக்
கிழித்துக்
காட்ட
வேண்டுமென்ற
ஆத்திரம்
மூண்டு
நிற்கிறது.
விடியற்காலையில்
தலையில்
ஒரு
துண்டுடன்
அறைக்குள்
வந்த
அவன்
சிரித்துக்கொண்டு
தன்னை
அணுகும்போது
எழுந்து
நின்று
கர்ச்சிக்கிறாள். “சீ!
நில்லுங்க
அங்க!
நீங்க
இவ்வளவு
மோசமா
சதி
செய்யிவிங்கன்னு
நா
கொஞ்சமும்
நினைக்கல...!”
அவன்
மீசையை
வளைத்துப்
பல்லால்
கடிக்கிறான்.
“இப்ப
என்ன
வந்திடிச்சி
ஒனக்கு?”
“இன்னும்
என்ன
வரணும்?
என்ன
ரூமில
அடச்சிட்டு
ஒரு
பன்னிப்பயல
வுட்டிருக்கிறீங்க!”
“நா
வுட்டனா.
நீ
என்ன
சொல்றன்னே
புரியல.
நா
பத்திரிகை
ஆபீசில
போயி
உக்காந்து
பேச்செல்லாம்
ஒழுங்காப்
பாத்துக்
குடுத்திட்டு
வந்தேன்.
இன்னிக்கிச்
சாங்கால
எடிஷன்ல
வருது
எல்லாம்.
முழு
சைஸ்
போட்டோ!”
“வூட்டவுட்டு
வந்ததுக்குச்
சரியான
பாடம்
கத்துக்
கிட்டேன்.
அவம்
மீசையும்
அவனும்
ஐயோ...?”
நெஞ்சு
வெடிக்கத்
துயரம்
பீறிடுகிறது.
“ஷ்,
அழாதே
காந்தி...”
என்று
அவளை
மென்மையாக
முகத்தைப்
பிடித்துச்
சமாதானம்
கூற
வருகிறான்.
“இப்ப
என்ன
ஆயிடிச்சி?
ஒண்ணில்ல.
போயி
குளிச்சிட்டு
வாடா,
கண்ணு.
கற்பு
கற்புங்கறதெல்லாம்
பொண்ணுகளைத்
தளைப்படுத்தற
வெலங்கு.
நீ
சுதந்தரமா
இருக்கலாம்.
உனக்கு
அடுத்தடுத்து
மேடையில
நிறையச்
சந்தர்ப்பம்
வந்து
பெரிய
புள்ளியாகப்
போற...”
அவள்
கண்களைத்
துடைத்துக்
கொள்கிறாள்.
“எனக்கு
மேடையும்
சுதந்தரமும்
வாணாம்.
நீங்க
என்னைக்
கலியாணம்
பண்ணிக்கிடணும்...”
“பண்ணிக்கிட்டாப்
போச்சு.
இப்பவே
நீ
என்
மிஸஸ்ன்னு
தான்
எல்லாரிட்டயும்
சொல்லியிருக்கிறேன்.”
“சீ...!”
“சீ
என்ன
சீ?
நான்
ப்ராட்
வியூஸ்
உள்ளவன்...”
“நீங்க
ஒரு
மிக
மோசமான
ஆளு,
பெண்
சாதியையே
விலைக்கு
விக்கிற
கீழ்த்தரமான
ஆளு...
அப்ப...!”
அவன்
பொறுமை
மீறிக்
குரலைக்
கடுமையாக்குகிறான்.
“என்னடீ
என்னன்னு
நினைச்சிட்டு
மிஞ்சுற?
நா
மனசு
வச்சா,
உன்ன
இப்ப
விபசார
தடைச்
சட்டத்துங்கீழ
விலங்கு
போட்டுக்
கூட்டிட்டுப்
போக
வச்சிடுவேன்!
ஜாக்கிரத...!
என்ன?”
------------
15
மண்வெட்டிக்குப்
புதிதாகச்
சீவி
வைத்த
கட்டையுடன்
வீரபுத்திரன்
பெரிய
பண்ணை
ஐயர்
வீட்டுக்
கொல்லையில்
நுழைகிறான்.
அக்கிரகாரத்து
வீடு,
வாயில்புறம்
வீட்டின்
முன்பகுதி
முழுவதும்
பல
பொருள்
சிறப்பங்காடிக்கு
விட்டிருக்கிறார்கள்.
பூமணி
ஆற்றுக்கரை
வரை
நீண்ட
கொல்லையில்
விருத்தாசலம்
பிள்ளை
ஆயிரங்
காய்ச்சித்
தென்னை
பயிரிட்டிருக்கிறார்.
அதற்குத்
தண்ணீர்
விட்டுப்
பார்த்துக்
கொள்ளும்
பொறுப்பு
குஞ்சிதத்துக்கு.
பின்
கொல்லைத்
தாழ்வரையில்
அவள்
பொங்கித்
தின்று
முடங்குவதாகப்
பெயர்.
ஆனால்
அருணாசலத்தின்
காபிக்
கிளப்
நாஸ்தாவும்,
குருக்கள்
வீட்டிலோ,
பிள்ளைவாள்
வீட்டிலோ
வேறெங்கோ
சோறு
கிடைத்துவிடும்.
இரவுக்கு
எங்கிருக்கிறாள்,
யாருக்கு
உடல்
தசை
தீர்க்கிறாள்
என்பதை
அறுதியிட்டுச்
சொல்லமுடியாது.
பெரிய
பண்ணை
ஐயர்
குஞ்சிதபாதம்
இறந்து
அவர்
குமாரர்கள்
வாரிசாக
வந்த
பிறகு
அவர்கள்
யாருமே
இங்கு
இருக்கவில்லை.
பண்ணையும்
உச்சவரம்பு
வந்ததும்,
பலர்
பங்கில்
பிரிந்து
போயிற்று.
விருத்தாசலம்பிள்ளையின்
மேற்பார்வையில்
தான்
இப்போது
எல்லாம்
இருக்கின்றன.
பெரியம்மா
இங்கு
சிறிது
நாட்களுக்குத்
தனியாக
இருந்தாள்.
பின்னர்
உடல்
நலம்
கெட்டுப்
பெரிய
மகனுடன்
டில்லிக்குச்
சென்று
அங்கேயே
இறந்து
போனாள்.
அந்தப்
பெரிய
மகனும்
சென்ற
இரண்டாம்
ஆண்டு
மாரடைப்பில்
இறந்துபோனார்.
அவர்
மக்களுக்கெல்லாம்
இந்த
கிராமத்தையே
தெரியாது.
இரண்டு
மைந்தர்களும்,
மகளும்
அமெரிக்காவிலும்
ஆஸ்திரேலியாவிலும்
ஊன்றிவிட,
அந்தம்மாவும்
அங்கேயே
போய்விட்டதாகத்
தெரிகிறது.
இங்கு
அப்போதைக்கப்போது
மகளின்
வழிவந்த
மருமகப்
பிள்ளை
வாசுதேவன்
தான்
வந்து
தொடர்புகொண்டு
ஆண்டில்
ஒருமுறை
பணம்
பெற்றுச்
செல்பவர்.
வாசுதேவன்
செங்கற்பட்டுப்
பக்கத்தில்
ஒரு
பள்ளிக்கூடத்தில்
ஆசிரியராக
இருக்கிறார்.
மிகவும்
பயந்த
சுபாவம்.
அவருக்கே
நிலபுலன்கள்
இருக்கின்றன.
இந்த
வீடு
வாசல்
எல்லாவற்றையும்
விற்றுத்
தொலைத்துவிட்டு,
டவுனில்
இரண்டு
ஃப்ளாட்
வாங்கிப்
போட்டாலும்
பயனுண்டு
என்று
சொல்லிக்
கொண்டிருக்கிறார்.
வீடாவது
வீடு
மூன்று
கட்டு,
கூடம்,
தாழ்வரை,
பெரிய
முற்றம்
முழுவதும்
கம்பிவலை
அடித்திருக்கிறது.
தென்னந்தோப்பிலிருந்து
காய்கள்
கொண்டு
வந்து
எண்ணெய்
ஆடக்
காயப்
போடுவதற்காக,
அண்மையில்தான்
விருத்தாசலம்
பிள்ளை
வலைபோட்டார்.
அறைகளுக்குள்
தேக்குமர
பீரோக்கள்,
பெட்டிகள்
நிறையப்
பாத்திரங்கள்.
பெரும்படிப்
பாத்திரங்களைச்
சென்ற
ஆண்டில்தான்
வாசுதேவன்
வந்து
விற்றுப்
பணமாக்கினார்.
எல்லாம்
பிள்ளை
மூலமாகத்தான்.
வாசுதேவன்
வந்துவிட்டால்
அவருக்கு
ராஜ
உபசாரம்
நடக்கும்.
விருத்தாசலம்
தரையில்
உட்காரக்கூட
மாட்டான்.
பின்னால்
கைகட்டிக்கொண்டு
நடப்பான்.
“இவ்வளவு
பெரிய
வூடு
எதுக்குங்க
சும்மா
கெடக்கிறது?
நாந்தா
இப்படி
அங்காடிக்குக்
குடுக்கணும்னு
பேசி,
தோது
பண்ணினேன்.
ஏதோ
நூறு
ரூபா
வாடகைன்னு
வரும்.
கெடந்துட்டுப்
போவுது!”
என்று
கையெழுத்துக்கு
நீட்டியபோது
வாசுதேவன்
உளம்
குளிர்ந்து
போனார்.
ஒரு
பகுதி
நிலம்,
சிறுகச்சிறுக,
அவனுக்கே
என்று
இந்தப்
பத்து
வருஷங்களில்
தீர்ந்துவிட்டது.
அந்த
வீட்டின்
நடுவறையில்
ஒரு
நிலவறையும்
அதில்
சில
பாத்திரங்களுடன்
ஒரு
இரும்புப்
பெட்டியும்
இருப்பது
வாசுதேவனுக்கும்
தெரியும்.
“மாரியம்மன்
கோயில்
சொத்து.
இதில
நகையெல்லாம்
எதோ
இருக்கும்பா.
எல்லாம்
பெரிய
மாமிக்குத்
தெரியும்.
சாவியக்கூடத்
தேடி
எடுக்கணும்.
இதிலெல்லாம்
எனக்கென்ன
தலையிலெழுத்து?
கிராம
விவகாரத்தில்
நான்
தலையிடணும்னு”
என்று
வாசுதேவன்
பொதுப்படையாகச்
சொல்லியிருந்தார்.
நிலவறையைத்
திறந்து
இருக்கிறார்கள்.
பெரிய
அண்டா,
கொப்பரை,
கோயில்
வழிபாட்டுச்
சாமான்களைக்
குருக்களும்,
அவர்
மைத்துனன்
நடராசனும்,
ரங்கன்
பையனும்
பிள்ளையும்
பாத்திரங்களை
எடுப்பதை
மேற்பார்வை
செய்வதுபோல்
கூடியிருக்கிறார்கள்.
“ஏ
குஞ்சிதம்?
இங்க
வாடி!
இதெல்லாம்
புளிபோட்டு
சுத்தமா
விளக்கி
வை!”
தென்னைக்கு
நீரூற்ற
வந்த
குஞ்சிதத்தைக்
கூப்பிட்டுப்
பாத்திரங்களை
எடுத்துச்
செல்லப்
பணிக்கிறார்கள்.
வீரபுத்திரன்
குஞ்சிதத்துக்கு
உதவியாக
ஏற்றி
இறக்கி,
ஆற்றுக்கரையில்
தேய்க்கக்
கொண்டு
வருகையில்
கிட்டம்மா
அங்கு
வருகிறாள்.
“த,
பொழுதோட
வூட்டுக்குப்
போயிடு!
புள்ளங்க
தனியாயிருக்கும்...!”
என்றவள்
குஞ்சிதத்தைக்
கண்டதும்
ஒரு
வசையை
உதிர்த்துக்
காறி
உமிழ்கிறாள்.
வீரபுத்திரன்
மறுமொழி
கூறவில்லை.
“என்ன?
நாம்பாட்டுக்குச்
சொல்லிட்டிருக்கிற,
நீ
பேசாமலிருக்கிற?”
“எல்லாம்
வார.
நீதாம்
போறிய,
அப்புறம்
இதென்ன?”
“நாம்
போயிட்டு
நாளக்களிச்சி
மக்கியநா
சாங்காலமாவும்
வாரதுக்கு.
ஒழுங்கா
பொழுதோட
வந்து
புள்ளங்கள
பாத்திட்டுருங்க.
அந்தப்
பய,
பள்ளிக்கொடத்துக்குப்
போவாம
டிமிக்கி
குடுத்திட்டுத்
திரிவா.
செவகாமிட்ட
சொல்லியிருக்கிற
வூட்டப்
பாத்துக்குங்க!.
என்னா?”
“சரி,
சரி.
நீ
போ...!”
“எல,
எங்கடா
போறா
உம்
பொம்பிள?”
விருத்தாசலம்
கேட்டுக்கொண்டே
வருகிறார்.
‘புதிய
பெண்
பிள்ளை
வந்திருக்கிறாள்
என்றால்
கழுகுக்கு
மூக்கில்
வேக்கிற
மாதிரி
வந்திடறாம்
பாரு’
என்று
நினைத்துக்
கொள்கிறான்
வீரபுத்திரன்.
“மட்றாசிக்கு...”
“அடி
செருப்பால.
என்னடா
மட்றாசில?”
“பேரணிங்க...!”
“என்னடா
பேரணி,
ஊரணி,
மயிரு?
நீங்கதா
ஏழு
ஒம்பது
வாங்குறிங்களே!”
“கூலி
ஒண்ணுதாங்களா?
என்னா
வெல
விக்கிது
சாமான்
சட்டெல்லாம்?
மனிசன்
செத்தா
பொதக்கிறதுக்கு
எடமில்ல,
பொணத்தைக்
கொண்டிட்டுப்
போக
வழியில்ல,
குடியிருக்க
எடமில்ல,
குடிக்கத்
தண்ணியிருக்காது
கோட
வந்திட்டா!”
“என்னாடா
அடுக்கிட்டேப்
போற?
குடியிருக்க
எடமில்லாததா
இவ்வளவு
பேச்சுப்
பேச
வாயி
வந்திச்சான்னு
கேக்குற?
இன்னிக்கு
உரவில
பூச்சி
மருந்து
வில
விக்கிறது
தெரியிதா?
முன்னப்போலவா
நீங்க
வேல
செய்யிறீங்க!”
“வெலவாசிக்
கோரிக்கயுந்தா
வைப்பாங்க.
உழைச்சிப்
பாடுபடுகிறவனுக்கு
நெல்லு
விக்கிற
விலயச்
சொல்ல
உரிமையில்ல.
எவனோ
நிர்ணயஞ்
செஞ்சு
போடுறான்.
கட்டுப்படியாவுலன்னா
எங்க
மேல
நீங்க
பாயுவீங்க.
ஒரம்,
பூச்சி
மருந்து
அது
இதெல்லாம்
பண்ணுற
தொழிற்சாலைச்
செலவெல்லாம்
அந்த
மொதலாளிக,
அதுந்
தலயில
வச்சு
வெவசாயி
தலையில
கட்டுறாங்க.
கூலி
அதிகம்
சம்பளம்
அதிகம்னு
சாமான்
வெலய
ஏத்துறாங்க.
நீங்க
என்னமோ
அஞ்சு
ரூபாய
ஏழு
ரூபாயாக்கிட்டோம்,
ஏழ
ஒன்பதாக்கிட்டோம்னு
பெரிசாச்
சொல்லிக்கிறீங்க.
ஒரு
நாயித்துக்கிழமை
உண்டா?
சம்பளத்தோட
லீவு
உண்டா?
சீக்காப்
படுத்தா
ஏன்னு
கேக்க
நாதி
உண்டா?
என்ன
பத்திரம்
பாதுகாப்பு?
இன்னும்
கடன்
வாங்கிட்டு
வட்டி
குடுக்க
முடியாம
சாவுறோம்...”
“அடி
செருப்பால.
இந்தப்
பய
என்ன
பேச்சுப்
பேசுறாம்
பாரு?
ஏண்டால,
அன்னிக்குப்
பண்ண
கீழன்னு
இருந்தப்ப,
மிராசுதார்
எல்லாந்தாங்
குடுத்தாரு.
கலியாணம்
கருமாந்தரம்,
அது
இதுன்னா
மிராசுதார்
குடுத்தாரு.
அப்பவும்
அடிமைன்னு
சொல்லி
எகிறினிங்க.
சட்டம்
கொண்டு
வந்துட்டாங்க.
இன்னிக்கு
வேறயாச்
சுதந்தரமா
இருக்கிறீங்க.
இப்பவும்
அழுவயா?”
“என்னா
சொதந்தரங்க
இப்பவும்
இருக்குது,
சோத்துக்கு
இல்லாத
சொதந்தரம்?”
“அடிரா
செருப்பால.
சொதந்தரம்
வந்து
உங்களுக்கு
என்னடா
ஒண்ணும்
வரல?
வாய்க்
கொளுப்பு
வந்திருக்கே?
போறது,
எங்கனாலும்
போயி
சம்பாதிக்கிறது!
அண்டின
எடத்தயே
துரத்திட்டுத்
திரியறது.
பெரிய
படிப்பு!...
சரி
சரி,
அண்ட
கட்டப்
போனவ
நீ
இங்கெங்க
வந்த?”
“மம்முட்டி
கம்பொடிஞ்சி
போச்சி,
வந்த
இத
போறேன்.”
“இன்னிக்கு
எல்லாப்
பங்கும்
சப்ஜாடா
முடிச்சுரணும்.
நாத்துப்
பறிக்க
ஆரு
போனது?”
“சித்தையன்
போயிருக்கிறான்...”
“உம்
பொம்பிள
சொன்னான்னு
முடிக்காம
போயிடாத,
கள்ளுக்குக்
காசு
தார,
இருந்து
முடிக்கணும்...”
விருத்தாசலம்
மீசையைத்
திருகிக்
கொள்கிறார்.
ஒரு
கீழ்ப்பார்வை
குஞ்சிதத்தின்
மீது
பதிந்து
மீளுகிறது.
புதுக்குடிச்
சங்க
அலுவலகத்தில்
கூட்டம்
தேனிக்
கூட்டைப்போல்
பொங்கி
வழிகிறது.
உள்ளே
தோரணமாகத்
தொங்கும்
பிரசுரங்களில்
மூவண்ணங்களில்
டிராக்டரை
ஓட்டும்
குண்டுப்
பெண்ணும்,
முகம்
மட்டும்
தெரியும்
கூடுபோன்ற
விண்வெளி
உடையணிந்த
வீரனும்
கண்கள்
இடுங்கப்
பற்களைக்
காட்டிச்
சிரித்துக்
கொண்டிருக்கின்றனர்.
சுவரில்
குறுந்தாடி
லெனினும்,
பரந்த
அடர்தாடி
கார்ல்மார்க்ஸும்
புடைப்புச்
சித்திர
முகங்களைக்
காட்டிக்
கொண்டிருக்கின்றனர்.
நீண்ட
கோட்டில்
செருகப்
பெற்ற
ரோஜாவுடன்
முழு
வடிவாக
நேரு
புன்னகை
புரிகிறார்.
சுத்தியல்
நட்சத்திரங்களுடனும்,
சந்தனப்பேலா
வடிவில்
பொங்கும்
நெற்கதிர்
செண்டுடனும்
கதிர்
அரிவாள்
தொடர்புகொண்டு
சுவர்
முழுதும்
கோலச்
சின்னங்
காட்டுகிறது.
நரை
திரைகள்,
பொங்கும்
இளமைகள்,
ஒயர்
பைகளில்
வெள்ளைத்துணி
மற்றும்
டிபன்
தூக்குகள்,
சம்புடங்கள்
என்று
குழுமியிருக்கும்
கிராமத்தாரில்
பலரும்
இரவே
நடந்து
வந்திருப்பதால்
ஆங்காங்கே
படுத்து
அயர்ந்திருக்கின்றனர்.
சிலர்
கூடி
நின்று
வாயிலில்
பீடி
குடித்துக்
கொண்டிருக்கின்றனர்.
எதிரே
உள்ள
வெற்றிலைப்
பாக்குக்
கடையில்,
எண்ணெய்
வழியும்
கறுத்த
சருமம்
பளபளக்க,
புதிய
மினுமினுப்புச்
சட்டையும்
வேட்டியும்
சிவப்புத்
துண்டும்
கோலத்துக்குப்
புதுமையாகவே
நிற்க,
சில
இளைஞர்கள்
வண்டி
வருகிறதா
என்று
பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.
செவத்தையன்
படியில்
காலை
ஊன்றிக்
கொண்டு
புட்டம்
தரை
தோயாமல்
குந்தி
இருந்து
பீடி
குடிக்கிறான்.
“மாமா,
பணம்
கட்டிட்டீங்களா?”
பொன்னடியான்
மரியாதையாகவே
பலரையும்
விசாரித்துக்
கொண்டு
வருகிறான்.
“என்னாயுசில
ஒருதரம்
மட்றாசி
போய்ப்
பாக்கணும்.
அதா
வார...”
பற்கள்
விழுந்து
கண்
குழிந்து
சுருங்கிப்போன
கைத்தடிக்
கிழவர்
ஒருவரின்
ஆசை.
“நாகப்
பட்ணத்தக்
காட்டிலும்
பெரிசில்ல...?”
“நாலு
நாளக்
கூலி
போயிடும்,
நட்டந்தா.
ஆனா
இது
போல
சந்தர்ப்பம்
வருமா?...”
ஒருவரின்
நியாயம்.
“நாப்பது
ரூபா
இப்ப
பஸ்
சார்ச்சிக்குக்
குடுக்கிறமில்ல?
அதையும்
சேத்துக்
கணக்குப்
பாத்தா.
கூடத்
தானாவுது.
ஆனா,
அதுக்கெல்லாம்
பாத்தா
ஆவுமா?”
“ஏது
நாலு
நா?
இத
இன்னிக்குப்
புறப்படுறம்.
நாளக்கி
அமாசி.
அமாசியன்னிக்கு
வேல
இல்ல.
முடிச்சுட்டு
ராத்திரி
கிளம்பி
மக்யா
நா
திரும்பிடப்
போறம்.”
“அட
இதுக்குனு
மட்றாசி
போறம்.
சமுத்திரம்,
பீச்,
பெரிய
மாடிக்கட்டிடம்,
லைட்டவுசு,
இன்னும்
என்னென்னவோ
இருக்காமில்ல...
எல்லாம்
ஒரு
நடை
பார்க்கணுமில்ல?”
“அதெல்லாம்
பாத்திட்டே
தான
பேரணில
நடந்து
போறம்?...”
“நா
எழுபத்தாறுல
ஒரு
பேரணில
கலந்திட்டேன்.
குளிக்க
கொள்ள
முடியாம
வெயில்
வேற,
கட்டமாப்
போச்சி...”
“ஆமா
உனக்கு
மூணு
நேரமும்
குட்டயில
எருமயப்போல
கெடக்கணும்!”
“ஏப்பா..?
இன்னா
விசயம்.
நம்ம
தலவர்
மவ
ஆறுமுகம்
மவன.
சொல்லிக்கிறாங்க...?
ஆக்சன்
ஏதும்
எடுத்தாங்களா?...”
“ஓடிட்ட
பெறகு
என்னாத்த
ஆக்சன்
எடுக்கறது?”
“அப்ப
மைத்த
பேருக்கும்.அதே
ரூலுதான?
பொட்ட
புள்ளகளுக்கு
ரொம்ப
நீளச்சி
குடுக்கக்
கூடாது.
கண்டிசன்னா...”
“ஆமா!
பொட்ட
புள்ளைங்க
இல்லாம
நீங்க
கிளிச்சிருவீங்க!”
கட்டைக்
குரல்
அங்கே
ஒரு
வெட்டு
வெட்டிக்கொண்டு
பாய்கிறது.
“ஆரு?
மாதர்
சங்கத்து
அம்மாளா?
ஏம்மா?
பேரணிக்கு
உங்கூட்டுக்காரன்
வரல?”
“அவரும்
வந்தா
எப்பிடி?
நாந்தான்
வாரே...”
“இந்தம்மாதா
அஞ்சாம்பிளக்கி
சமமாச்சே!...”
“ஆமாய்யா.
நானும்
பாத்திட்டே
வாரேன்.
இத்தினி
பேரு
வெள்ளயும்
சள்ளயுமா
உக்காந்திருக்கிறீங்க.
உணிமையா,
மாதரை
மதிக்கிறவங்களா
இருந்தா,
நீங்க
ஒரு
பத்துப்
பொண்டுவளன்னாலும்
கொண்டாரனுமில்ல?
நாம்
போயி
மல்லுக்கு
நின்னு
அத,
பிரேமாப்
பொண்ணையும்
சங்கிலியம்மாவையும்
கூட்டிட்டு
வந்தேன்,
எல்லாம்
பேசுவீங்க!”
“அம்மா,
உங்கிட்ட
வாய்க்
குடுக்க
முடியுமா?...”
“இத
தலவர்
வாராரு.
அட
என்னங்க,
நீங்ககூட
அக்காளக்
கூட்டிட்டு
வரல!...”
சம்முகம்
சிரிக்கிறார்.
முழுச்சிவப்புத்
தேங்காய்ப்
பூத்துவாலை
சட்டைக்குமேல்
விளங்க,
கையில்
வயர்
பையில்
துண்டு,
வேட்டி,
இட்லிப்
பொட்டலம்
சகிதம்
பேசாமலே
தங்கசாமி
பண
வசூல்
செய்யும்
மூலைக்குச்
செல்கிறார்.
“பாத்தீங்கல்ல?
பேசாமலே
போறாரு?...
பொண்டுவளுக்குத்
தயிரியம்
வாரணும்னு
மேடையில
பேசுவாங்க
அல்லாரும்!
ஆனா
வூட்டுக்குள்ள
போனா,
கதையே
வேற.
இத
களப்பாள்
காரரு
வாராரு
இந்தத்
தோழரும்
கம்முனு
தா
வாராரு.
அம்பது
அறுபது
பேரு
வார
பக்கத்திலே
மூணே
பொண்டுவ!
நோட்டீசு
குடுத்து
படிச்சிப்
படிச்சி
சொல்லிட்டு
வந்தே...”
“அட
ஏம்மா
லவலவன்னு
கத்திட்டே
இருக்கிற?
பொண்டுவ
அல்லாரும்
உன்னப்போல
இருப்பாங்களா?
வூடு
வாச,
புள்ள
குட்டின்னு
இருக்கில்ல?”
குப்பன்
சாம்பார்
தொளதொளத்த
சட்டையும்
சிவப்புக்
கரை
வேட்டியுமாக
நெருங்கி
நின்று
கிட்டம்மாளுக்குப்
பதில்
கூறுகிறான்.
“ஆமா,
நாம்
பேசுனா
லவலவன்னு
கத்தறது!
நீங்க
வார
பணத்தக்
கள்ளுக்கடயில
குடுத்திட்டு...”
“ஏங்க?
வண்டி
என்னமோ
பத்து
மணிக்கே
வந்திடும்னாங்க
நான்
வேகமா
ஓடியாரேன்...”
பேச்சை
மாற்றுகிறான்
ஒருவன்
சாதுரியமாக.
“நாங்க
குப்புமங்கலத்திலேந்து
நடந்தே
வாரம்.
நீங்க
எந்துரு?...”
“நாங்க
கண்ணங்கோயில்.
ராவே
இங்க
வந்திட்டம்.
காலம
ஏழு
மணிக்கெல்லாம்
வண்டிக்கு
ரெடியா
இருக்கணும்னு
இத...
இந்தத்
தோழர்தா
கண்டிசனாச்
சொன்னாரு.
சார்ச்சுக்
குடுத்திட்டுப்
போறதுன்னா
பதினேளு
ரூபா
டிக்கெட்டே
ஆயிப்போவுதாம்.
இப்ப
நமுக்கு
ஒருவேள
சாப்பாடு,
நாஷ்தா
இதுல
அடக்கம்.”
வடிவு
அலுவலகத்துக்கு
வெளியே
நின்று
ஏக்கப்
பெருமூச்சுடன்
பார்த்துக்
கொண்டிருக்கிறான்.
புதிய
சட்டையும்
கிராப்
வாரலும்
முகச்சவரமுமாகப்
பளிச்சென்று
சிவப்புத்
துண்டு
தெரிய
பல
இளைஞர்கள்
பேரணிக்கு
வந்து
கொண்டிருக்கின்றனர்.
நாற்பது
ரூபாய்
கொடுத்துக்கொண்டு
அவனால்
போக
இயலாது.
“நீங்கதா
முன்னியும்
போயிருக்கீங்க.
நாந்தா
பட்ணம்
பாத்ததில்ல.
நாம்
போறன்
பேரணிக்கு!...”
என்று
கூறிப்
பார்த்தான்.
“கெடடா,
கம்மா,
அவுங்க
குப்பன்
சாம்பாருன்னு
ஆபீசில
பொறுக்கி
எடுத்திட்டாங்க.
நா
இன்னும்
எத்தினி
நா
இருக்கப்போறேன்?
செறுபய,
உனக்கு
எத்தினியோ
சந்தர்ப்பம்
வரும்,
போவலாம்.
அவங்க
இது
செரியில்லன்னா
டில்லில
தலநகரில
போய்
பேரணி
நடத்துறதா
இருக்காங்க.
அப்ப
உன்னையே
அனுப்பச்
சொல்றண்டா?”
என்று
அடித்து
விட்டான்
அப்பன்.
முதலாளியிடம்
குழைந்து
கேட்டுப்
பார்த்தான்.
“ஒரு
வூட்டிலேந்து
ரெண்டு
பேரும்
வர்றதுக்கில்லடா.
மேலும்
எல்லாரும்
போயிட்டா
பங்கில
மடைபாத்து
வுடுறது
ஆரு?...”
சம்முகம்
அவன்
வருவதற்கு
இடம்
கொடுக்கவில்லை.
இருந்தாலும்
ஆசை
அவனைத்
துரத்தி
வந்திருக்கிறது.
சினிமாவில்
மட்டுமே
கண்டிருக்கும்
சென்னைப்
பட்டினம்,
மாடி
பஸ்,
பகலைப்
போல்
இரவிலும்
ஒளிரும்
சாலைகள்,
இருபது
மாடிக்
கட்டிடங்கள்,
மின்சார
ரயில்
வண்டி,
குளுகுளுவென்று
வெய்யிலிலும்
குளுமையாக
இருக்கும்
சினிமாக்
கட்டிடங்கள்,
சிலைகள்
எல்லா
விந்தைகளையும்
பார்க்கும்
ஆசை
அவனுக்கு
அடங்கவில்லை.
வண்டி
வரும்
சமயத்தில்
நின்று
எப்படியேனும்
புகுந்துவிட்டால்
முதலாளி
இறக்கிவிட
மாட்டார்
என்று
குழந்தைபோல்
நம்பிக்கொண்டு
நிற்கிறான்.
சம்முகம்
வெளியே
வருபவர்,
இவன்
அசட்டுச்
சிரிப்புடன்
நிற்பதைப்
பார்த்து
விடுகிறார்.
திடுக்கிட்டாற்போல்
விழிக்கிறார்.
“ஏண்டா,
நீ
எப்ப
வந்த?...”
“கொஞ்ச
மின்னாடி.”
“நாங்க
வந்த
பஸ்ஸிலயா
வந்த?...
நீ
எதுக்குடா
வந்த,
இப்ப?...”
“நானும்
வார
முதலாளி,
நானும்
பேரணில
கலந்து
கோசம்
குடுக்கறேன்
முதலாளி...!”
தலையைச்
சொறிகிறான்.
“அட...ப்பாவி?
நீ
வரப்போறேன்னே
தெரியாது?
அதெல்லாம்
இப்ப
நீயும்
வரதுக்கில்ல.
ஏண்டாலே,
சின்னக்
குளந்தபோல
ஓடி
வந்திருக்கிற?
உங்கையாக்குத்
தெரியுமா?...”
அவன்
தெரியாது
என்று
தலையாட்டுகிறான்.
“ஒரு
தரம்
இப்ப
கூட்டிட்டுப்
போங்க
முதலாளி...”
“இப்ப
வந்து
என்னடால
வம்பு
குடுக்கற?
உன்னையாவது
கூட்டிட்டுப்
போறதாவது?
பேசாம
வந்த
வழிய
திரும்பிப்போ.
நாம
யாருமில்லன்னா,
வயல்ல
மாட்டவுட்டு
அடிச்சாலும்
கேள்வி
முறயில்ல.
கோவம்
வரும்படி
நடக்கிற!”
“இல்ல
முதலாளி,
இந்த
ஒரு
தடவை...”
சம்முகத்துக்குக்
கோபம்
வருகிறது.
“முதலாளி
முதலாளின்னு
கழுத்தறுக்கிறடா
நீ!
இனிமே
முதலாளின்னு
கூப்பிடக்கூடாது!”
“பின்ன
எப்பிடிங்க
கூப்பிடுறது?”
இவனைச்
சற்று
எட்டத்
தனியாக
அழைத்துச்
செல்கிறார்.
“ஏண்டால
இப்படி
மானத்த
வாங்குற?
போயி
ஊருல
வேலயப்
பாரு.
அடுத்த
தடவை
எதுன்னாலும்
உன்னையே
அனுப்பச்
சொல்றேன்.”
“இல்ல
முதலாளி...”
சிரிப்பு
வந்து
விடுகிறது.
“முதலாளின்னு
கூப்பிடலன்னா
எப்பிடிங்க
கூப்பிடுறது?”
‘தோழரே’
என்று
சொல்லிக்
கொடுக்க
சம்முகத்துக்கும்
நா
எழவில்லை.
“அண்ணேன்னு
கூப்பிடுறது!”
வடிவுக்குச்
சிரிப்பு
கொள்ளாமல்
வழிகிறது.
“அண்ணேன்னு
எப்பிடிங்க
கூப்பிடுறது?
அண்ணேன்னு
அளச்சா,
அண்ணன்
மவள
ஆருன்னாலும்
கட்டுவாங்களா?
மாமான்னு
கூப்பிடுறேன்
முதலாளி?”
சம்முகத்துக்கு
சிரிப்புத்தான்
வருகிறது.
அவனுடைய
கபடமற்ற
குழந்தை
உள்ளம்
கோபிக்கும்படியாக
இல்லை.
“அப்ப,
இப்ப
நான்
சொல்றதைக்
கேளு!
வர
பஸ்ஸைப்
புடிச்சி
ஊருக்குப்
போய்
வேலையப்பாரு!
பொண்ணக்
கட்டணும்னா,
பொறுப்போட
வேலையப்
பாக்கணும்,
நடக்கணும்;
உன்ன
நம்பித்தா
நா
எல்லாம்
விட்டுப்
போறேன்!”
“எனக்குப்
பட்டணம்
பாக்கணும்னு
ரொம்ப
ஆசையா
இருக்கு
மாமா!”
“பாக்கலாம்டா.
கலியாணம்
ஆனதும்
அனிமூன்
அனுப்பி
வைக்கிறேன்.
இப்ப
நீ
ஊருக்குப்
போ!”
திரும்பி
அவன்
பஸ்ஸில்
ஏறிச்
செல்லும்
வரை
பார்த்த
பின்னரே
சம்முகம்
அலுவலகத்துள்
செல்கிறார்.
வடிவுக்கு
ஒரு
ஆறுதல்,
அவன்
மாமா
என்று
அழைத்து
மனதில்
உள்ளதை
வெளியிட்டு
விட்டான்.
அவர்
கோபிக்க
வில்லை.
கலியாணம்
கட்டி,
அவனைப்
பட்டணத்துக்கு
அனுப்பி
வைப்பார்!
அங்கு
மச்சான்,
படித்து
வேலை
செய்யும்
மச்சான்,
பாப்பாரப்
பெண்ணைக்
கட்டி
இருக்கும்
மச்சான்
வீட்டில்
தங்குவார்கள்.
அவனும்
நாகரிகமாக
நடப்பான்.
அம்சுவுடன்
பட்டணத்தில்
கைகோத்து
உலவுவான்!
மாடி
பஸ்ஸில்,
எலக்ட்ரிக்
வண்டியில்
போவார்கள்.
குளுகுளுவென்று
சினிமாக்
கொட்டகையில்
உட்கார்ந்து
சினிமா
பார்ப்பார்கள்.
என்ன
பேரணி!
ஒரு
இடமும்
பார்க்க
முடியாது.
போய்விட்டு
உடனே
வண்டியேறித்
திரும்பி
விட
வேண்டும்.
போகாததும்
நல்லது...
மாமா...
அம்சுவிடம்
ஓடிப்போய்
இதைச்
சொல்லப்
பரபரக்கிறது
மனம்.
பஸ்ஸின்
வேகம்
போதவில்லை.
-------------
16
“குடிப்பதற்கு
நீர்
வேண்டும்!
குடியிருக்க
இடம்
வேண்டும்!
புதைப்பதற்கு
சுடுகாடு
வேண்டும்!”
ஆயிரம்
பதினாயிரமாக
இந்தக்
கோஷம்
வானைச்
சென்று
முட்டுகிறது.
சம்முகம்
இதற்கு
முன்
பல
பேரணிகளில்
கலந்து
கொண்டிருக்கிறார்.
இந்தப்
பேரணியில்
அவருடைய
தலைமுறையைச்
சேர்ந்தவர்களே
அதிகமாகத்
தெரிகின்றனர்.
முதன்முதலில்
அவர்கள்
கிராமத்திலிருந்து
ஆட்சியாளரின்
துணையோடு
அவர்களை
அடக்க
முயன்ற
அமைப்பை
எதிர்த்துப்
பத்து
மைல்
தொலைவு
ஆண்களும்
பெண்களுமாக
டவுனுக்குப்
பேரணி
வந்த
நாள்
அவருக்கு
நினைவு
இருக்கிறது.
அப்போது
அரசியல்
விடுதலை
பெற்றிராத
நாட்டின்
குடிமக்கள்
அவர்கள்.
அவருக்குப்
பதினெட்டு
வயசு,
மீசை
அரும்பும்
கிளர்ச்சி
மிகுந்த
பருவம்.
‘அடிமையாக
இருப்பதுதான்
நம்
விதி’
என்று
அழுந்திக்
கிடந்த
மக்களை
ஊரூராகச்
சென்று,
“தாத்தா
வாங்க,
மாமா
வாங்க,
மாமி
நீங்களும்
வாங்க,
அண்ணே,
அக்கா
எல்லாரும்
கலந்துக்குங்க!”
என்று
உற்சாகத்துடன்
திரட்டினான்.
எந்த
இருட்டானாலும்
பகையானாலும்
உயிர்
அச்சம்
உறைத்ததில்லை.
வாலிபத்
தோழர்களின்
அணியே
வெளியிருந்து
வந்த
தலைவர்களைப்
பூரிக்கச்
செய்திருந்தது
அந்நாளில்,
“நாளை
எண்ணி
வட்டி
வாங்கும்
நமன்களை
ஒழிப்போம்!”
“உழுபவனுக்கு
உரிய
பங்கை
அமுல்
படுத்துங்கள்!”
“புரட்சி
ஒங்குக...
இன்குலாப்
ஜிந்தாபாத்!”
என்றெல்லாம்
இவர்கள்
முறை
வைத்துக்
கோஷமிட்டுக்
கொண்டு
வெள்ளமாய்ப்
பெருகி
வந்தார்கள்.
‘இவர்களைக்
கட்டுப்படுத்த
முடியாது’
என்ற
வகையில்
அந்த
எழுச்சி
அப்போது
பொங்கி
வந்திருந்தது.
இப்போது
அவருக்குக்
கோஷமிடவே
வாய்
அவ்வாறெழவில்லை.
அப்போதிருந்த
நம்பிக்கை
ஒளி
இப்போது
குறைந்து
விட்டது.
“அமுல்படுத்து!
அமுல்படுத்து!”
“சட்டக்
கூலியை
அமுல்
படுத்து!”
சட்டம்
போட
அப்போது
போராட்டம்;
இப்போது
சட்டம்
போட்டும்
அமுல்படுத்தப்
போராட்டம்!
தங்கள்
அணியில்
மூன்றே
மூன்று
பெண்களில்
கிட்டம்மாள்
கட்டிக்
கொண்ட
தொண்டையைக்
கிழித்துக்கொண்டு
கூவுகிறாள்.
“மாதர்
தம்மை
இழிவு
செய்யும்
மடமையைக்
கொளுத்துவோம்...”
“தாக்காதே,
தாக்காதே!
அரிசன
மக்களைத்
தாக்காதே!”
சுதந்திரம்
வந்து
முப்பத்து
மூன்று
ஆண்டுகளாகியும்
அரிசனங்களுக்குத்
தனித்
தொகுதிகள்,
தனி
அமைச்சகங்கள்
என்று
சிறப்புக்
கண்காணிப்பு
என்று
ஆடம்பரம்
காட்டியிருப்பது
தான்
பெரிதாக
இருக்கிறது.
வெயில்
மிக
உக்கிரமாகத்
தலையில்
படிந்து,
நெற்றியில்
வியர்வை
வழிகிறது.
துண்டைத்
தலையில்
போட்டுக்
கொள்கிறார்.
“விவசாயத்
தொழிலாளிகளுக்கு
ஒருங்கிணைந்த
சட்டம்
கொண்டு
வா!”
“பென்ஷன்
வழங்கு!
பென்ஷன்
வழங்கு!”
“கூலியோடு
வார
விடுமுறை,
மருத்துவ
வசதி
எல்லாம்
வழங்கு!”
சாலையோரங்களில்
கடைகளில்
வணிக
நிறுவனங்களில்
உள்ள
மனிதர்கள்,
நடைபாதைகளில்
நடப்பவர்கள்
இதைச்
சிறப்பாகக்
கவனித்ததாகவே
தெரியவில்லை.
நேப்பியர்
பூங்காவிலிருந்து
ஊர்வலம்
தொடர்ந்து
வருகையில்
போக்குவரத்து
ஊர்திகளுக்குத்தான்
பாதிப்பாக
இருக்கிறது.
“என்ன
ஊர்வலம்?...
விலைவாசியாக
இருக்கும்!
வேறென்ன?
தினம்
ஒரு
பேரணி
ஊர்வலம்!”
“இல்லப்பா
விவசாயத்
தொழிலாளர்
சங்கம்!”
“அது
பச்சைக்
கொடியில்ல?
இது
சிவப்புக்
கொடியாக
இருக்கு?”
“எல்லாத்
தொழிலாளர்
சங்கத்திலும்
எல்லா
வர்ணக்
கொடியும்
இருக்கு
இப்ப!...”
“எல்லாரும்
சேந்து
எதானும்
செஞ்சாலும்
பலனிருக்கும்.
ஒருத்தன
மத்தவன்
கழுத்தப்
புடிக்கிறதிலியே
இருந்தா
என்னத்த
நடக்கும்?
இத்தயே
சாதகமாக்கிட்டு
மேலே
போறவன்
போயிட்டே
இருக்கிறான்...”
நடைபாதையில்
இந்தப்
பேச்சுக்களைச்
செவியுறுகிறார்
சம்முகம்,
உறைக்கிறது.
ஓரிடத்தில்
குளிக்க
இறங்கும்
கோலத்தில்
தனது
இளமைப்
பூரிப்புக்களைக்
காட்டிக்கொண்டு
ஒரு
சினிமா
நடிகையின்
‘கட்
அவுட்’
கண்
சிமிட்டிப்
புன்னகை
காட்டி
‘நீங்கல்லாம்
எங்க
போறீங்க?
இப்படி
வாங்க!’
என்று
அழைக்கிறது.
“உரவிலை
குறையுங்கள்!
உற்பத்தி
செய்த
நெல்லுக்குக்
கட்டுப்படியாகும்
விலை
கொடுங்கள்!”
கோஷமே
இடறி
விழுவதுபோல்
இருக்கிறது.
“என்ன
எளவுக்கு
இப்பிடிப்
பொம்பிள
பொம்மய
வச்சித்
தொலைச்சிருக்கானுவ
தூத்தேறி!”
கிட்டம்மா
காறித்
துப்புகிறாள்.
பழக்கப்பட்டுப்
பழக்கப்பட்டுக்
காய்த்துப்
போன
சாலைகளில்
அத்தனை
கால்களின்
அத்தனை
மக்களின்
செருப்பில்லா
அடிகளின்
உயிர்த்
துடிப்பேறியும்
உணர்ச்சிப்பொடி
பறக்கவில்லை. “எனக்கு
உணர்ச்சியே
கிடையாது”
என்று
கிடக்கிறது.
இந்தப்
பேரணிச்
செலவு,
உடல்பாடு
இவற்றால்
முன்னே
நின்று
வாழ்வின்
முண்டு
முடிச்சுக்களாய்
அச்சுறுத்தும்
பிரச்னைகளைக்
கரைக்க
முடியப்
போகிறதோ?
மழைச்சாரல்
ஓய்வதும்
திடீரென்று
வலுக்கத்
தொடர்வதும்
போன்று
குரல்கள்
தளர்ந்து
ஓயும்
சமயம்
எங்கோ
ஒரு
தனிக்குரல்
எழும்பப்
பலரும்
அதைத்
தொற்றுவதுமாக
தமிழகத்தின்
மூலைமுடுக்குக்
கிராமங்களிலிருந்து
வந்த
மண்ணின்
மைந்தர்களின்
பேரணி
சாலையில்
வருகிறது.
உயர்நீதிமன்றம்
வரும்போதே
காவல்
துறையினர்
தடுத்து
நிறுத்துகின்றனர்.
தலைவர்கள்
மட்டுமே
அமைச்சரைச்
சந்தித்துக்
கோரிக்கைப்
பத்திரங்களை
அளிக்க
அழைத்துச்
செல்லப்படுகின்றனர்.
பேரணி,
சென்னைப்பட்டினம்
போகிறோம்,
நான்கு
நாள்
சம்பாத்தியம்
போகும்
என்று
மிகப்
பெரியதோர்
உச்சகட்டத்தை
எட்டியாயிற்று.
அதிகாலையில்
அவர்கள்
கூடுவாஞ்சேரிக்கு
அருகில்
வண்டியை
நிறுத்திக்
காலைக்கடன்கள்
முடித்து
வந்தனர்.
இனி
பகலுணவுப்
பொட்டலங்களைப்
பெற்றுக்கொண்டு
பசியாறிய
பின்,
ஒரு
சுற்று
ஊரைப்
பார்த்து
விட்டு
இரவு
பத்து
மணியளவில்
கிளம்ப
வேண்டியதுதான்.
“நான்
கோபுக்குக்
கடிதாசி
எழுதியிருக்கிறேன்.
இப்ப
கிளம்பட்டுமா?”
விடைபெற
நிற்கும்
சம்முகத்தைப்
பொன்னடியான்
நிறுத்துகிறான்.
“ஏன்
காம்ரேட்?
இப்பதா
ஃபுட்
பாக்கெட்
ஏற்பாடு
பண்ணிருக்காங்க,
சாப்பிட்டுவிட்டு
வண்டில
இவங்க
எல்லாருடனும்
ஒரு
சுத்து
நீங்களும்
பார்க்க
வாங்க.
சாங்காலம்
அஞ்சு
மணிக்குத்தா
ஆபீசில
இருந்து
மகன்
வருவாரு.
வண்டி
அநேகமா
விடிகாலமதான்
கெளம்பும்.
நீங்க
எடம்
சொல்லுங்க.
வந்து
பிக்கப்
பண்ணிக்கிறம்!”
சம்முகத்துக்கு
இது
உவப்பாக
இருக்கிறது.
மகன்
ஆயிரம்
விளக்குக்குப்
பின்னே
ஒரு
குடிசைமாற்று
வாரியக்
குடியிருப்பில்
இருப்பதாக
முகவரி
கொடுத்திருக்கிறான்.
மாலை
ஐந்து
மணி
சுமாருக்கு
அங்கு
வந்து
இறங்கும்
சம்முகம்
முடிந்தால்
இரவே
சங்கத்
தலைமை
அலுவலகத்தில்
வந்து
சேர்ந்து
விடுவதாகச்
சொல்லி
விடைபெறுகிறார்.
அடுக்கு
வீடுகளைச்
சுற்றிக்
கசகசவென்று
இரைச்சல்;
அழுக்கும்
புழுதியுமாகச்
சிறுவர்
சிறுமியர்,
இளைஞர்,
ஆடவர்,
பெண்டிர்
தரையோடு
இருக்கும்
குழாயைச்
சுற்றிய
மேடை
பெயர்ந்து
பொக்கையும்
பொள்ளையும்
நாற்றமும்
பாசியுமாக
பெண்டிர்
கூச்சலும்
வசையுமாக
இருக்கிறது.
கிராமத்திலும்
இவை
இருக்கின்றன.
ஆனால்.
அங்கு
இல்லாத
கபடம்
இங்கே
வேரோடிப்
போயிருக்கிறது.
படி
ஏறி
மூன்றாம்
மாடிக்குச்
செல்லவேண்டும்
என்று
கண்டு
கொள்கிறார்.
படியேறும்
போதே
புதிய
ஆள்
என்பதை
அவர்
துண்டும்
முகமும்
காட்டி
விடுகின்றன.
தலையைச்
சொறிந்துகொண்டு
அழுக்குப்
பனியனுடன்
வரும்
ஒரு
பரட்டை
இன்னொரு
கையில்
பிடித்த
புகையும்
துண்டு
பீடியுடன்,
“ஆரு
நயினா?
ஆரப்
பாக்க
வந்த?”
என்று
விசாரிக்கிறான்.
“கோபால்னு...
கைத்தறி
ஆபீசில
வேல
பண்றாரு...”
“ஐயிரு
பொண்ணக்
கட்டிருக்கே...”
“ஆமா...”
“அவுரு
எட்டு
மணிக்கு
மேலில்ல
வருவாரு?...
வூட்ட
அது
வந்திருக்குதோ
இன்னாமோ,
போயி
பாரு
நயினா!”
இந்தக்
கோட்டைக்குள்
எவன்
வந்தாலும்
போனாலும்
எனக்குத்
தெரிந்துதான்
ஆகவேண்டும்
என்பது
போலிருக்கிறது,
அவன்
அனுமதி
வழங்கும்
பேச்சு!
அவனுக்கு
வேலையான
பின்
அவர்
ஒரே
ஒருமுறை
தான்
சென்னையில்
அவனை
வந்து
பார்த்திருக்கிறார்.
அப்போது
சங்கக்
கூட்டத்துக்காக
வந்தார்.
அவனைப்
பத்து
நிமிசம்
பார்க்க
முடிந்தது.
புதிய
மெருகும்
களையுமாக
இருந்தான்.
அவருக்குப்
பெருமையாக
இருந்தது.
பி.ஏ.யில்
ஒரு
பகுதி
அவன்
தேறியிருக்கவில்லை. “முடிஞ்சா
அத்தை
முடிச்சிடுரா!”
என்றார்.
வேலை
செய்து
சம்பாதிப்பவன்
என்று
பணம்
எதுவும்
அவனாகவும்
கொடுக்கவில்லை.
இவருக்கும்
கேட்கக்
கூச்சமாக
இருந்தது.
பையனானாலும்
அவன்
தோளுக்குமேல்
வளர்ந்து
படித்துவிட்டதால்
சட்டென்று
அந்நியமாகிவிட்டாற்
போன்ற
பாவம்
இவருள்
ஓங்கியிருந்ததுதான்
காரணம்.
ஆனால்
அவன்
இவர்
ஊர்
திரும்புகையில்
ஓட்டலுக்குக்
கூட்டிச்
சென்று
உபசாரம்
செய்து,
பிஸ்கோத்து
கேக்கும்
கொடி
முந்திரிப்
பழமும்,
அம்சுவுக்கும்
காந்திக்கும்,
கழுத்து
மணி
மாலையும்,
முடியில்
வைத்துக்கொள்ளும்
அலங்கார
ஊசிகளும்
வாங்கிக்
கொடுத்தான்.
அதைத்
தொடர்ந்து
வந்ததுதான்
திருமணச்
செய்தி.
தாம்
அங்கே
சென்றிருக்கையில்
அவன்
அவளைச்
சந்திக்கச்
செய்து
தம்மிடம்
கேட்டிருக்கவில்லை
என்ற
மரியாதைக்
குறைவு
அவருள்
புழுவாகக்
குடையாமலில்லை.
நான்
வேறாகிவிட்டவன்,
என்
வாழ்க்கைப்
பற்றிய
முடிவுகளை
நானே
எடுப்பேன்
என்று
சொல்வது
போலிருந்தது.
பிறகு
அவன்
ஒரு
மாசத்துக்கு
முன்பு
திடுமென்று
புறப்பட்டு
வந்து
சண்டைக்
கொடி
ஏற்றிவிட்டுச்
சென்றிருக்கிறான்.
இவர்
முன்னதாகக்
கடிதம்
எழுதிப்
போட்டிருக்கிறார்.
அவன்
வீட்டுக்கு
முன்னதாகவே
வந்திருக்கலாம்;
அல்லது
வந்துவிடுவான்.
இவர்
கதவு
எண்ணைப்
பார்த்துக்
கொண்டே
வந்து
தட்டுகிறார்.
அடுத்த
பகுதியில்
ஒரு
பெண்
வாயிற்
படியில்
டிரான்ஸிஸ்டரைப்
பெரிதாக
வைத்துக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறாள்.
அதிலிருந்து
வரும்
பாட்டு
ஒரே
கத்தலாக
இருக்கிறது.
தனது
தட்டல்
உள்ளே
இருக்கும்
மருமகளுக்குச்
செவியில்
விழுமா
என்ற
ஐயத்துடன்
சற்றே
ரேடியாவை
நிறுத்து
என்று
சொல்லும்
பாவனையில்
பார்க்கிறார்.
ஆனால்
அவள்
அதைப்
பொருட்படுத்தாமல்
வெளியே
கைபிடிச்
சுவரில்
வைத்துவிட்டுச்
சாய்ந்து
நிற்கிறாள்.
சினிமாப்பாட்டு
புரியத்
தொடங்குகிறது.
விரசமான
சொற்களில்
காதல்
பாட்டு.
அவர்
பலமாக
அழுத்திக்
குத்துவதுபோல்
கதவைத்
தட்டுகிறார்.
கதவு
திறக்கப்படவில்லை.
ஆனால்
உள்ளிருந்து
குரல்
வருகிறது.
“ஆரு?”
“நா...
சம்முகம்,
ஊரிலேந்து
வந்திருக்கிறேன்.
கிளியந்துறை.”
கதவு
மறுகணம்
தாழ்ப்பாள்
விடுபட்டுத்
திறந்து
கொள்ளும்
என்று
எதிர்பார்க்கிறார்.
பொய்யாகிறது.
“...அவுரு
இன்னிக்கு
வர
நேரமாகும்.
பிறகு
வாங்க?”
அவருக்கு
நா
ஈரம்
வற்றி
உலர்ந்து
போகிறது.
“நா.
கோபுவின்
அப்பாதான்.
கதவு
திறங்க...”
“ஆராயிருந்தாலும்
அப்புறம்
வாங்க...”
மனதோடு
ஒரு
வசை
தெறித்து
விழுகிறது.
நல்லவேளையாக
நாவில்
குதிக்கவில்லை.
விழுங்கிக்கொள்கிறார்.
உடல்
முழுவதும்
ஒரு
சூடு
பரவிக்
குழம்புகிறது.
“ஆராயிருந்தாலும்...
அப்புறம்
வாங்க?”
அவர்
பெரிதாகக்
கருதி,
பெருமை
பொங்க,
தன்
வியர்வையைத்
தேய்த்து
அவனுடைய
ஏற்றம்
கண்டார்.
தாம்
வருவதாகக்
கடிதம்
எழுதியிருந்தும்
இவ்வாறு
அவமானம்
செய்திருக்கிறான்.
அந்தப்
பெண்
என்ன,
படித்தவளா?
நாகரிகம்
தெரிந்தவளா?
வந்தவர்,
புருஷனின்
தகப்பன்
என்பதை
அறிவித்த
பின்னரும்
கதவு
திறந்து
பார்த்துப்
பேச
மாட்டாளா?
வெளியில்
டிரான்சிஸ்டரை
வைத்துக்கொண்டு
நோட்டம்
பார்க்கும்
பெண்
ஒரு
சொல்
உதிர்க்கவில்லை.
அவள்
மீதும்
கோபம்
வருகிறது.
பொட்டைச்
சிறுக்கிகள்!
பல்லை
இளித்து
மயக்கி,
பெற்றவர்கள்
பாசத்தையே
துடைத்துவிடச்
செய்யும்
சிறுக்கிகள்!
வாசலில்
நிற்க
வைத்து,
கதவடைக்கச்
சொல்லி
அவமானம்
செய்கிறான்
துரோகி!
கட்சி
மாறலைக்
காட்டிலும்
படுபாதகமான
துரோகம்!
பையில்
இருக்கும்
கதம்பமும்,
பழமும்
அவரைப்
பார்த்து
நகைக்கின்றன.
தாயிடம்
ஐம்பது
ரூபாய்
வாங்கிச்
சென்றிருக்கிறான்.
இவர்
கையில்
பத்தே
ரூபாய்தான்
இருக்கிறது.
போகும்போது
பத்து
இருபது
வாங்கிச்
செல்லவேண்டும்
என்று
நினைத்திருந்தார்.
சொந்த
மகனிடமே
அவமானப்பட்டுத்
திரும்பி
நடக்கையில்
நெஞ்சு
குலுங்குகிறது.
வழி
நிச்சயமாகத்
தெரியாது.
இருள்
பரவிவிட்ட
நேரம்.
எல்லாச்
சாலைகளும்,
குறுக்குத்
தெருக்களும்
ஒரே
மாதிரித்
தெரிகின்றன.
எட்டுப்
பேரிடம்
வழிகேட்டு
அவர்களுடைய
வண்டியும்
தோழர்களும்
தங்கிய
இடத்தை
வந்தடைகிறார்.
“அதுக்குள்ள
மகனப்
பாத்திட்டு
வந்திட்டியா?...”
தங்கசாமி
பீடிக்கங்கைத்
தட்டிக்கொண்டு
கேட்கிறான்.
“இல்லீங்க,
இந்த
ஊருல
கேட்டா
எவனாலும்
வழி
வெவரம்
சொல்றாங்களா?
அடுத்தாப்பில
கொலவுழுந்தாக்கூடப்
பாக்க
மாட்டாங்கறது
சரியாத்தானிருக்கு.
அதுவும்
இந்த
ஊருப்
பொம்பிளங்க,
என்னமோ
நாம
வெளியூரு
ஆளுன்னா
அவங்களக்
கடிச்சி
முழுங்கிடுவம்போல
கேட்டாக்கூட
பதில்
சொல்ல
மாட்டேங்கறாளுவ.
காலம
ஆபீசு
பக்கம்தான்
பாக்கணும்.
பாக்காம
போகக்கூடாது.
வண்டி
காலம
எத்தினி
மணிக்குக்
கெளம்பும்...”
“அதா
இப்ப
சிலபேரு
சினிமாக்குப்
போயிட்டாங்க,
காலம
விடியறப்பதா
கெளம்பனும்?...”
“கொஞ்சம்
நின்னிங்கன்னா
அந்தப்பய
ஒம்பதுக்கு
ஆபீசுக்கு
வந்திடுவான்.
பாத்துட்டு
வரேன்.
இல்ல,
வண்டி
நிருபுடியாப்
போவணும்னாதா
என்ன
பண்ணுறதுன்னுறேன்...”
“ஒரு
அரை
மணி
போதுமில்லை,
அட்ஜஸ்ட்
பண்ணிக்கிட்டாப்
போச்சு...”
சம்முகம்
எட்டுமணிக்கு
முன்பாகவே
அவனுடைய
அலுவலகத்தின்
முன்
வந்து
காத்திருக்கிறார்.
இரவு
முழுவதும்
உறங்கியிராத
முகம்
சோர்வில்
அயர்ந்திருக்கிறது.
அவன்
பஸ்ஸைவிட்டு,
இறங்கி
வருவதை
அவர்
பார்த்துவிடுகிறார்.
அவரை
அங்கு
அவன்
எதிர்பார்த்திருக்கவில்லை
போலும்?
திடுக்கிட்டுப்
பின்
சமாளித்துக்
கொள்கிறான்.
“என்னப்பா?
ராத்திரி.
திலகம்
சொல்லிச்சி.
நாந்தா,
காலம்
கெட்டுக்கிடக்கு
தெரிஞ்சி
வச்சிட்டு
உறவு
அது
இதுன்னு
சொல்லிக்
கதவைத்
தட்டினாத்
திறக்காதன்னு
சொல்லிருந்தேன்.
இப்படித்தானே
சொல்லிட்டுக்
கொலையே
பண்ணிடறாங்க
இங்க?...
ஓ,
பேரணிக்கு
வந்திருந்தீங்களாப்பா?
நேத்து
ஸ்டாக்
டேக்கிங்.
ஒரே
வேல,
அப்புறந்தான்
பேரணின்னு
எனக்கே
தெரிஞ்சிச்சி.
திலகம்
சொன்னதும்
அவளைக்
கோவிச்சிட்டேன்.
ரொம்ப
வருத்தப்பட்டேன்...”
“அப்படியா?
நான்
உனக்கு
லெட்டர்
போட்டிருந்தேனே,
வரல?”
“லெட்டரா?
ஒண்ணும்
வரலியே?
நானே
நேத்து
வாரப்ப,
பேரணிக்கு
வர்றவர்
இங்க
வந்து
தங்கிட்டுப்
போகக்கூடாதா,
வித்தியாசமாகவே
நினைச்சுக்கிறாங்களேன்னு
வருத்தப்
பட்டேன்...”
“நீ
ஆபீசிலியா
இருந்தே?...
சரி,
உன்
தங்கச்சி,
வீட்டவிட்டு
ஓடிட்டா.
தெரியுமாடா?...
அன்னிக்கு
நீதான
கூட்டிட்டு
வந்த
துரோகிப்
பயல,
இவ,
காலம
பொய்யச்
சொல்லிட்டு
ஒடிப்போனா.
வெளில
தலகாட்ட
முடியல.
உனக்குத்
தெரியுமாடா?”
அவன்
திடுக்கிட்டு
விடவில்லை.
எங்கோ
பார்க்கிறான்.
“எனக்கெப்பிடித்
தெரியும்?
அவனாக
உதவி
செய்யிறேன்னு
வந்தான்.
சும்மா
துரோகி
துரோகின்னு
சொல்றதுல
என்னப்பா
லாபம்?
இஷ்டப்பட்டுப்
போயிருந்திச்சின்னா
நல்லதுதான்.
சுகமாயிருக்கும்...”
“சுகமாயிருக்கும்!
அப்பன்
ஊருப்
பொம்பளை
எல்லாம்
அழிச்சவன்.
அவன்
மகன்
எப்படியிருப்பான்?
அவன்
ஒழுங்கா
வச்சிருப்பானோ,
கூட்டிவிட்டுச்
சம்பாதிப்பானோ?
ரத்தம்
கொதிக்கிது...!”
“அப்பா,
அப்பா...
என்ன
இது,
இதெல்லாம்
இங்கே
வச்சிப்
பேசாதீங்க!
மானேசர்
வருவார்
இப்ப.
நீங்க
அப்புறம்
வாங்க!”
“அப்புறம்
வேற
வந்து
உன்
வீட்டு
வாசல்ல
மானங்கெடனுமா?
அப்புறமும்
இப்புறமும்
வானாம்.
நீ
இப்ப
பணத்தைக்
குடு.
நான்
போறேன்.”
“ஏது
பணம்?”
“என்னடா
ஏதுன்னு
கேக்கிற?
உங்கம்மாட்ட
குழயடிச்சி
வாங்கிட்டுப்
போனியே
அம்பது
ரூபா?...”
“அம்மாட்டியா?
நானா?
அம்பது
ரூபா
நா
வாங்கிட்டு
வந்தனா?
அவங்க
கூலிப்பணம்
குடுத்தாங்க.
வடிவுகிட்ட
அப்பவே
குடுத்திட்டேன்.
அவன்
கண்டமானிக்கும்
பேசினான்.
அதனாலதா
நீங்க
வரவரைக்கும்கூட
நிக்காம
வந்தேன்...
இப்ப
நீங்க
இப்படி
ஒரு
பழியைப்
போடுறீங்க?
சீச்சீ!...”
“அட...
பாவி,
உங்கம்மா,
பெத்த
தாயப்
பொய்
பேசுறவளாக்கிட்டியே...”
“என்னப்பா,
கொஞ்சம்கூட
ஒரு
டீஸன்ஸி
இல்லாம
இங்க
நின்னிட்டுக்
கத்துறீங்க?
நா
வாரேன்!
வீட்ல
வந்து
பேசிக்கலாம்,
போங்க!”
அவன்
விர்ரென்று
உள்ளே
சென்றுவிடுகிறான்.
எரிமலை
புகையாகக்
குழம்புகிறது;
கண்கள்
சிவக்கின்றன.
மிகப்
பெரிய
சென்னைப்
பட்டினமும்
அதன்
இயக்கமும்
அவருடைய
உணர்வை
விட்டு
நழுவிப்
போகின்றன.
சொந்த
மகனே
இப்படிப்
போனானே?
தன்
மகன்
காலில்
சேறுபடலாகாது,
பிறந்த
குடியை
உயர்த்திப்
பெருமை
சேர்ப்பான்
என்று
கனவு
கண்டார்.
ஈர
மண்
ஒட்டக்கூடாது
என்று
நினைத்ததற்கு
ஈரத்தையே
துடைத்து
விட்டார்கள்.
பெற்றவனும்
பெற்றவளும்
அழுக்கென்று
துடைத்து
விட்டார்கள்.
உணர்ச்சியை
விழுங்கிக்கொண்டு
துண்டைத்
தலையில்
போட்டுக்கொண்டு
நடக்கிறார்.
------------
17
கடந்த
சில
நாட்களாகத்
தாயும்
தகப்பனும்
ஆக்ரோசமுடைய
இரு
பூனைகள்போல்
சண்டைபோட்டுக்
கொள்வதாக
அம்சுவுக்குத்
தோன்றுகிறது.
மாறாக
பாட்டியும்
பாட்டனும்
சீண்டிக்
கொள்ளும்
பேச்சும்
பிணக்கும்
ஓய்ந்துவிட்டன.
மகள்
ஓடிப்போனது,
தாயும்
தகப்பனுக்குமன்றி
பாட்டிக்கும்
ஓர்
அடிதான்.
ஏன்,
பாட்டன்
கள்ளுக்கடைக்குச்
சென்றுவரும்
நேரம்
தவிர
மற்ற
நேரங்களில்
திண்ணையில
முடங்கியே
கிடக்கிறார்.
பொழுது
விடிந்ததிலிருந்து
அன்று
நாகு
ஊளையிடுகிறான்.
இந்த
ஊளையொலி
புதிதல்ல.
பழக்கமான
இசைதான்.
ஆனால்
வாழ்க்கை
இப்போது
சுருதி
குலைந்து
கிடப்பதால்
இது
நாராசமாக
இருக்கிறது.
“அந்தப்பய
மென்னியத்
திருகிக்
காவாயில
போடு!
என்னாத்துக்குடி
எளவு
இப்படி
ஊளயிடுறா?
இந்தப்
பயலுக்கு
ஒரு
சாவு
வரமாட்டேங்குது.”
வாசலில்
கோலம்
போட்டுவிட்டு
வரும்
அம்சுவை
அழைத்து
லட்சுமி
இரகசியமாக,
“போயி
நாலு
இட்டிலி
வாங்கிட்டு
வா.
நேத்து
முச்சூடும்
எதுவும்
சாப்பிடல
அவெ.
பசிக்கிதோ
என்னமோ?...”
என்று
கூறுவதும்
சம்முகத்துக்குக்
கேட்டுவிடுகிறது.
“ஏய்,
எங்கடி
போற?
இவளயும்
காலங்காத்தால
கடவீதிக்குப்
போகச்
சொல்லு!
பல்ல
இளிச்சிட்டு
எவங்
கூடயேனும்
போவா?
மானம்
அச்சம்
மரியாதி
ஆத்தாளுக்கிருந்தால்ல
மவளுக்கு
இருக்கும்?
ஒரு
ஒச்சம்
வந்து
ஊரே
சிரிக்கிது;
தலைநீட்ட
முடியல.
புழுக்கப்
பயலுவல்லாம்
நாக்கப்
பல்ல
இடுக்கிட்டுச்
சிரிக்கிறான்.
அறிவு
இருக்குதா
உங்களுக்கு?”
லட்சுமிக்கு
ஆத்திரம்
தாளவில்லை.
சாணியை
அள்ளிக்
கூடையில்
போட்டு
மூலையில்
கொட்டுகிறாள்.
பரட்டுப்
பரட்டென்று
முற்றத்தைப்
பெருக்குகிறாள்.
சம்முகத்துக்கும்
எழுச்சி
அடங்கவில்லை.
அவருடைய
ஆற்றாமைக்கு
ஒரே
இலக்காக
இருப்பவள்
லட்சுமிதான்.
முடி
சிலும்பலில்லாத
கூந்தல்
கட்டு,
எப்போதும்
கலையாத
பளிச்சென்ற
பொட்டு,
பெரிய
அந்தஸ்தைக்
காட்டும்வகையில்
சீராகக்
கொசுவம்
வைத்து
உடுத்த
சேலைக்கட்டு,
பதிந்த
ரவிக்கை,
கட்டுவிடாத
உடல்
எல்லாம்.அவருடைய
கடந்த
கால
நிகழ்ச்சிகளின்
மூலைமுடுக்குகளை
எல்லாம்
குடையும்
வண்ணம்
கோபமூட்டுகின்றன.
அறைக்
கதவு
திறக்கப்படாததால்
நாகு
கதவைப்
போட்டு
தட்டுகிறான்.
இவர்
எழுந்துசென்று
கதவைத்
திறக்கிறார்.
அவன்
சமையலடுக்கின்
கீழ்
சென்று
உட்கார்ந்து
கொள்கிறான்.
சற்றைக்கெல்லாம்,
வாயில்
பல்
குச்சியுடன்
ஆற்றுக்கரை
மேட்டில்
நிற்கையில்
நாகுவின்
ஊளையொலி
மீண்டும்
கேட்கிறது.
நடுவீட்டில்
வந்து
அவன்
அசுத்தம்
செய்திருக்கிறான்.
லட்சுமி
அவனை
இழுத்து
வருவதும்
அவன்
ஊளையிடுவதுமாக
ஒரு
அரங்கம்
விரிந்திருக்கிறது.
சம்முகம்
புளிய
மரத்திலிருந்து
ஒரு
நீண்ட
பிரம்பை
ஒடித்து
வருகிறார்.
பளார்
பளாரென்று
முதுகிலும்
காலிலும்
பேய்
பிடித்தாற்போல்
வீறுகிறார்.
நாகு
ஐயோ
ஐயோ
என்று
பயங்கரமாக
ஊளையிட,
லட்சுமி
கத்த,
தெருவில்
கூட்டம்
கூடிவிடுகிறது.
“பாவம்,
அந்தப்
பயலுக்கு
அமாசி
வேந்திடிச்சின்னா
இப்பிடியாவுது...!”
என்று
சொல்லிக்
கொண்டு
போகின்றனர்.
“உங்களுக்கு
என்ன
இன்னிக்குப்
பேயி
புடிச்சிருக்கா...”
இரத்தம்
கசியும்
பையனின்
காலைப்
பார்த்து
முதுகைப்
பார்த்துக்
கண்ணீர்
தளும்ப
விம்முகிறாள்
லட்சுமி.
“அம்மா...
அம்மா...
அம்மா...”
வார்த்தை
குழம்பும்
அந்தக்
குழந்தையைக்
கண்களைத்
துடைத்துச்
சமாதானம்
செய்து
ஓரமாக
அழைத்துச்
செல்கிறாள்.
“காபி...
காபிம்மா
கா...”
“காபிதான?
வச்சித்தாரேன்.
நீ
ஏன்
அழுவுற?
நீ
கத்தினதாலதான
அப்பா
அடிச்சாரு?...”
சம்முகம்
புளியம்
விளாறை
மேட்டிலிருந்து
ஆற்றில்
வீசி
எறிகிறார்.
மனசில்
ஒட்டிக்
கொண்ட
சாணியை
வீசி
எறிந்து
கழுவ
வேண்டும்
போல்
ஓர்
அருவருப்பு
தோன்றுகிறது.
அக்கரை
எல்லாம்
பச்சைப்
பாயலாகக்
கண்களில்
அமுதத்தைத்
தடவுகிறது.
புரட்டாசிச்
சூரியன்
தகத்தகாயமாக
அந்தப்
பச்சையின்
மூலகாரணம்
நானே
என்று
விரியக்
கதிர்களைப்
பரப்புகிறான்.
இந்த
மனிதர்களெல்லாம்
அற்பம்
என்று
சொல்லுகிறானோ?
தனது
ஏலாமை
விசுவரூபமாக
முட்ட,
அழவேண்டும்
போலிருக்கிறது.
லட்சுமி...
அவளை
அமுதமென
அணைத்துச்
சுகித்திருக்கிறார்.
அவர்களை
அறியாமைச்
சேற்றிலிருந்து
கை
தூக்கிவிட...
உயிரைப்
புல்லாக
மதித்து
அங்கே
வந்த
தலைவர்களை,
வேட்டை
நாய்களைப்
போல்
போலீசார்
துரத்திப்
பிடிக்க
அலைந்த
போது,
அவர்களுக்காக
இவன்
காவலாய்
நின்ற
போது,
ஊழியம்
செய்த
போது,
இடையில்
இவள்
எத்துணை
சக்தியூட்டுபவளாக
இருந்தாள்?
நாட்டாண்மைக்காரரின்
மகளாக,
நெஞ்சில்
ஆசையைச்
சுமந்த
காதலியாக
இருந்து,
எந்த
நேரத்திலும்
புகலிடம்
தேடி
வந்தவருக்குத்
தம்மால்
சோறும்
நீருமளிக்க
முடியும்
என்ற
துணிவையும்
நம்பிக்கையையும்
அளித்திருந்தாள்.
அந்தக்
குடிசையில்
ராஜன்
என்ற
கல்லூரி
மாணவன்
தங்கியிருந்திருக்கிறான்.
கொள்கைப்
பாடங்கள்
புகட்டுவதில்
மன்னன்.
அநேகமாகச்
சம்முகத்துக்குச்
சம
வயசுக்காரனாக
இருப்பான்.
இல்லையேல்
ஒன்றிரண்டு
கூட
இருந்திருக்கும்.
பால்
வடியும்
முகம்.
அந்தக்
குடிசைக்குள்
ஒரு
மாதம்
போல்
தலைமறைவாக
இருந்தான்.
நாளெல்லாம்
படிப்பான்;
எழுதுவான்.
சம்முகம்
அவ்வப்போது
வெளிச்செய்தி
கொண்டுவருவான்.
எழுதியதை
எடுத்துக்கொண்டு
செல்வான்;
இரவு
கூட்டங்களுக்கு
ஏற்பாடு
செய்வான்.
நாட்டாண்மையின்
மகள்
லட்சுமி
அப்போதெல்லாம்
சோறு
கொண்டுவந்து
போடும்போது
ராஜனுடன்
சிரித்துப்
பேசுவதைக்
காண்பான்.
இவன்
வெளியேயிருந்து
வந்து
போகும்
ஆள்.
அவனோ
தலைவர்
என்ற
ஆழ்ந்த
மதிப்புக்குரியவன்.
அப்போதெல்லாம்
கபடமாகவோ,
சந்தேகத்துக்குரியதாகவோ
ஓரிழை
கூடச்
சிலும்பல்
தெரிந்ததில்லை.
பெரிய
பண்ணையின்
செல்வாக்கை
ஒடுக்கவே
சின்னப்பண்ணை
சுந்தரமூர்த்தி
இந்தப்
புரட்சிக்காரரை
ஆதரித்தார்.
லட்சுமியின்
அப்பன்
பெரிய
பண்ணையின்
கீழிருந்த
ஆள்.
ஆனாலும்
உள்ளூற
இவர்கள்
பக்கமிருந்து
வெளிப்படையாக
விரோதித்துக்
கொள்ளாமல்
அஞ்சிக்
கொண்டிருந்தான்.
“எலே
சம்முவம்?
வெதக்
கோட்டயில
எலி
இருக்குதாம்.
தீவட்டிக்காரன்
புகை
போட
வாரானாம்!”
இந்தச்
செய்தியை
லட்சுமிதான்
கொண்டு
சென்றாள்.
தப்பிச்சென்ற
அவனை
மறைவானபடியே
கடத்திக்கொண்டு
வாய்க்கால்
மதகடியில்
படுக்கவைத்ததும்,
காவல்துறையினர்
மேலே
சென்றதும்
இப்போதுபோல்
சம்முகத்துக்கு
நினைவுக்கு
வருகிறது.
அன்றிரவு
அந்தச்
சேரி
முழுவதும்
போலீசு
புகுந்து
வேட்டையாடி
இருந்தது.
லட்சுமியின்
உடல்
முழுவதும்
அலங்கோலங்கள்.
ஒருநாள்
ஒரு
பகல்
சென்ற
பின்னரே,
அவன்
செய்தி
அறிந்து
பதுங்கி
வந்து
பார்த்தான்.
விம்மி
வெடிக்க
அழுத
அவளை
முதலாவதாகத்
தீண்டி
அணைத்து
ஆறுதல்
கூறியது
அப்போதுதான்.
மறைந்தும்
மறையாமலும்
சாடையாகவும்
சைகையாகவும்
நெஞ்சங்களைப்
பரிமாறிக்
கொண்டிருந்தவர்கள்
அந்தக்
குதறப்பட்ட
வேளையில்தான்
பகிரங்கமாக
ஒருவருக்கொருவர்
என்று
தாங்கி
நின்றனர்.
இதைத்
தொடர்ந்து
சம்முகம்
போலீசின்
கண்களில்
மண்
தூவ,
ஓடி
ஒளிய
வேண்டியதாயிற்று.
சுந்தரமூர்த்தியின்
மைத்துனரின்
வீட்டில்
கடலூரில்
சென்று
தோட்ட
வேலைக்காரனாக
இருந்தான்.
ஆறு
மாசம்
கழித்து
நாகப்பட்டணம்
கோர்ட்டில்
அவர்
சொன்னபடியே
ஆஜராகி,
பின்னர்
அவர்
முயற்சியிலேயே
ஜாமீனில்
வெளியே
வந்தான்.
ஊரே
சூனியமாகி
இருந்தது.
லட்சுமியின்
அப்பன்
இறந்து
போயிருந்தார்.
அம்மாளுடன்
மாமன்
ஊரான
பாங்கலுக்குச்
சென்றதாகச்
சொன்னார்கள்.
அப்போதெல்லாம்
இப்படிப்
பஸ்ஸா
இருந்தது?
நடை...
எங்கேனும்
ஒளிந்து
போக
வண்டி
கிடைத்தால்
உண்டு.
ஒரு
முன்னிரவில்
அவன்
சென்று
கதவைத்
தட்டினான்.
குளிர்காலம்.
திண்ணையில்
யாரோ
பெரியவர்
படுத்திருந்தார்.
“ஆரது?”
“நாந்தா
கிளியந்துற...”
குரல்
சட்டென்று
காட்டிக்
கொடுத்து
விட்டது.
“லட்சுமி...!”
விளக்கை
எடுத்து
வந்து
அவன்முன்
காட்டினாள்
தாய்.
“நீ...
உசிரோடு
இருக்கியா
தம்பி?...
சாமி
முனிஸ்வரனே?...”
என்று
கரைந்தாள்.
லட்சுமி...
லட்சுமி...
அந்த
விளக்கொளியில்
சிலைபோல்
நின்றிருந்த
கோலம்
அவனுக்கு
மறக்கேவேயில்லை.
நெற்றியில்
குங்குமமும் -
திருநீறும்,
விம்மிய
மார்பும்
முன்
தள்ளிய
வயிறும்,
செம்மை
வெளுத்த
நிறமும்...
ஷ்...
குப்பென்று
ஒர்
உஷ்ணம்
பாய்ந்து
உலுக்கினாற்
போல்
இருந்தது.
தாய்
உள்ளே
உட்கார்த்தி
வைத்து
சோறு
போட்டாள்.
எங்கோ
அக்கம்
பக்கமிருந்து
சோறு
வாங்கித்தான்
வந்திருந்தாள்.
அந்த
நேரத்தில்
லட்சுமி
அவனிடம்
சொன்ன
சொற்கள்...
“இங்க...
எல்லாரும்...
நீங்கன்னு
நினைச்சிட்டிருக்காங்க.
நான்
உங்ககிட்ட
புனிதம்னு
வேசம்போட
இஸ்டப்படல.
போலீசுக்காரப்
பாவி
அநியாயம்
பண்ணிட்டான்.
எதுனாலும்
தின்னு
கரச்சிடலாம்னு
அம்மா
சொல்லிச்சு.
கலியாணம்
ஆகுமுன்ன
வாணான்டின்னு.
நா
உங்கள
ஒருக்க
உசிரோட
பாத்துச்
சொல்லிட்டு,
ஆறு
குளம்
எதிலன்னாலும்...”
அவள்
மேலே
பேச
விடாதபடி
வாயைப்
பொத்தினான்.
“போவட்டும்.
எல்லாரும்
நினைக்கிறாப்பல
அது
எம்புள்ளயாவே
இருக்கட்டும்.
நீ
இல்லேன்னா
எனக்கு
ஒண்ணுமேயில்ல...
ஆறு
குளமெல்லாம்
பேசாத,
லட்சுமி!”
என்றான்.
உடனே
சுந்தரமூர்த்தி
முன்னிலையில்
தான்
அவர்கள்
கல்யாணம்
நடந்தது.
விசுவநாதனும்
கூடக்
கல்யாணத்துக்கு
வாழ்த்துக்
கூறினார்.
பிறகு
தான்
அவர்
சிறைக்குச்
சென்றதும்
கூட.
வழக்கு,
கோர்ட்டு,
சிறை
என்று
கல்யாணம்
செய்த
சில
ஆண்டுகள்
எப்படியோ
கழிந்தன.
குழந்தை
பிறந்து
ஒரு
வயசு
வரையிலும்
எதையும்
நுட்பமாக
அவர்கள்
கவனிக்கவில்லை.
மரத்தடியில்
ஏணையில்
போட்டுவிட்டு
இவர்கள்
வேலைக்குப்
போவார்கள்.
பசித்தழும்
போது,
மற்ற
குழந்தைகள்
குட்டைத்
தண்ணீரையோ
காவாய்த்
தண்ணீரையோ
கூட
ஊற்றுவார்கள்.
கோபால்
பிறந்து
அவன்
பேச,
நடக்க
ஆரம்பித்த
பின்னரும்,
இதற்குப்
பேச்சு
வரவில்லை.
எல்லாம்
குழம்பிற்று.
காற்று
கருப்பு
சேட்டை
என்று
பெண்கள்
அப்போது
ஊர்க்கட்டை
மீறி
எங்கோ
சென்று
பூசாரி
வைத்தியம்
செய்தார்கள்.
பயனில்லை.
பையனின்
வளர்ச்சியும்
ஏடாகூடமாக
இருந்தது.
காந்தியும்
அம்சுவும்
பிறந்த
பின்
இரண்டு
தடவைகள்
கருவுற்றாள்.
இரண்டும்
நிற்கவில்லை.
அப்போதுதான்
சின்னப்பண்ணை
வீட்டு
அம்மாள்
சொல்லி,
அவள்
புதுக்குடி
ஆஸ்பத்திரிக்குச்
சென்று
பிள்ளை
வேண்டாம்
என்று
சிகிச்சை
செய்து
கொண்டாள்.
அந்தச்
சமயத்தில்தான்
கிழவி
இவனைப்
புதுக்குடி
ஆஸ்பத்திரியில்
கொண்டு
காட்டினாள்.
குணமாகச்
சிகிச்சை
சாத்தியமில்லை
என்று
சொல்லிவிட்டார்கள்.
இப்போது
சில
நாட்களாக,
இந்தப்
பயல்
போலீசுக்காரனின்
அசுரவித்தா,
அல்லது...
சிறைக்குச்
சென்று
மஞ்சட்
காமாலை
நோய்
வந்து
செத்தானே,
அந்தத்
தலைவனா
என்று
சந்தேகம்
வந்திருக்கிறது.
இவள்
ஏன்
கருவைக்
கலைக்கவில்லை
என்று
தோன்றுகிறது.
இவள்
ஏன்
அந்தப்
பயலைச்
சோறுட்டிப்
பாதுகாக்கிறாள்
என்று
எரிச்சல்
வருகிறது.
சோறு
தின்பதற்கும்
குளிப்பதற்கும்
சில
நாட்கள்,
ஊரைக்
கூட்டுகிறான்.
காந்தியிடம்
அவனுக்குப்
பயம்
உண்டு.
காந்தி
சென்ற
பிறகு,
இங்கே
எல்லாம்
குலைந்து
போயிற்று.
லட்சுமி
விரும்பி
துரோகம்
செய்திருக்கிறாளா?...
இந்த
எரிச்சலைத்
தாள
முடியவில்லை.
ஆற்றில்
மடமடவென்றிறங்கிக்
குளிக்கிறார்.
உடம்பைத்
தேய்த்துத்
தேய்த்து
ஓடும்
நீரில்
மூழ்கிக்
குளிக்கிறார்.
அவர்
வாழ்க்கையில்
எத்தனையோ
சந்தர்ப்பங்கள்
நேர்ந்தும்
லட்சுமியின்
மீது
இப்படிச்
சந்தேகம்
இதுவரையிலும்
தோன்றியதில்லை.
எண்ணங்கள்
முறுக்குப்
பிரிந்த
வடத்தின்
முனைகளாய்
எப்படி
நினைவுகளை
நெருடுகின்றன!
கொள்கை
வீரர்கள்,
உயிரைப்
புல்லாக
நினைத்தவர்கள்,
மேல்மட்டத்து
உயர்மதிப்புக்குரியவர்கள்,
பலரை
அவர்
தொண்டன்
என்ற
முறையில்
நெருங்கிப்
பழகி
அறிந்திருக்கிறார்.
எவரும்
மாமுனிவர்
இல்லை.
ஐயர்,
முதலியார்,
நாயுடு
எல்லோரும்
மனிதர்களே;
பலவீனங்கள்
இல்லாத
மனிதர்
யாருமில்லை.
தாழ்ந்த
சாதிக்காரன்
மட்டுமே
நெறிகாக்கும்
விஷயத்தில்
பலவீனப்பட்டவன்
என்பதில்லை...
எனவே
லட்சுமி...
அந்தப்
பயல்...
“மொதலாளி...?
கரையில்
வடிவு
தோளில்
மண்வெட்டியுடன்
நிற்கிறான்.
நீருக்குள்ளிருந்து
தலைநீட்டி
வாயைக்
காறிக்
கொப்புளித்த
பின்
அவனைத்
திரும்பிப்
பார்க்கிறார்.
வடிவு
தவறை
உணர்ந்தாற்
போன்று
புன்னகை
செய்கிறான்.
“என்ன
மாமா,
ஐயமாரப்
போல
காலங்காத்தால
குளிக்க
எறங்கிட்டிய?”
“சும்மாதா,
நின்னே;
பல்லு
விளக்கிட்டு
குளிக்கலாம்
போல
இருந்திச்சி,
களையெடுக்க
ஆளனுப்பிச்சிட்டியா?”
“ஐயா
கூட்டிப்
போயிருக்காரு.
நா
மேச்சாரிப்
பங்கு
மடை
பாத்திட்டு
வார.
வூட்ட...
அந்தப்பய
வந்திருக்கிறா,
மாமா...”
அவன்
தயங்கித்
தலையைச்
சொறிகிறான்.
“யாரு...?”
“நீங்க
வாங்க,
சொல்றேன்...”
சம்முகம்
கோவணத்துடன்
படியேறி
வேட்டியைக்
கசக்கிப்
பிழிகிறார்.
ஈர
உடல்
மறைய
விரித்துப்
பிடித்துக்
கொண்டு
வருகிறார்.
“ஐயனாரு
கொளத்துலேந்து
அவெ
வந்திருக்கிறான்...”
“யாரு,
சோலையா?
பஞ்சமி
புருசனா?”
“ஆமா.
ஆயி
செத்துப்
போச்சி.
வூட்ட
கஞ்சிகாச்ச
நாதியில்ல.
தம்பிகாரன்
மாமியா
வூட்டோட
போயிச்
சேந்திட்டா.
அப்ப
என்னியோ
அல்லாம்
சொன்னானுவ.
தெரியாம
செஞ்சிட்டேன்னு
கூட்டிட்டுப்
போவ
வந்து
நிக்கிறா...”
“இப்ப
புள்ள
அவனிதுதாமா...?”
வடிவுக்குக்
கடைக்
கோடியில்
சிரிப்பு
எட்டிப்
பார்க்கிறது.
“நீங்க
வந்து
சொல்லுங்க
மாமா...”
வீட்டினுள்
சத்தத்தையே
காணவில்லை.
வேறு
வேட்டி
உடுத்து
மேலே
துண்டைப்
போர்த்துக்கொண்டு
நெற்றியில்
துளி
திருநீற்றைப்
பூசியவராக
வடிவுடன்
நடக்கிறார்.
இப்போது
குடிசைகள்
அக்கரையில்
இருக்கின்றன.
எல்லாம்
வேரூன்றும்
ஆதாரம்
இல்லாத
வெற்றுக்
கூரையும்
கீற்றுத்
தடுப்புக்களுமாக
இருக்கின்றன.
இவனுடைய
வீட்டின்
வாயிலில்
கயிற்றுக்கட்டிலில்
உட்கார்ந்து
சோலை
பிள்ளையைக்
கொஞ்சிக்
கொண்டிருப்பது
கண்களில்
படுகிறது.
முடியில்
நிறைய
எண்ணெய்
அப்பிக்
கொண்டு
சிகப்புச்
சட்டை
போட்டிருக்கிறான்!
எட்ட
இருந்து
பார்க்கும்
இந்தக்
காட்சி,
சம்முகத்துக்கு
நெஞ்சில்
அடிப்பது
போலிருக்கிறது.
ஒரு
பெண்ணை
உயர்த்துகிற
தாய்மைக்கு
மதிப்புக்
கொடுப்பது
அந்தப்
பிள்ளையை
மனிதப்பிள்ளை
என்று
நினைப்பது
தானோ?
இவர்களைக்
கண்டதும்
அவன்
அவசர
அவசரமாக
எழுந்திருக்கிறான்.
“வணக்கமுங்க...”
“உக்காந்துக்க,
நீயும்.”
“இருக்கட்டும்;
நீங்க
உக்காருங்க...”
“சுடுகாட்டுக்கு
வழி
வேணும்னு
கோரிக்கை
வச்சிருக்கு.
போரிங்குழாய்
போடறதுக்கும்
நெருக்கிட்டிருக்கிறோம்.
இந்தக்
கோடைக்குக்
கஷ்டம்
இருக்காது.”
“தோப்போட
பாதையையே
குறுக்கா
கொண்டாந்து
ரோட்டில
சேத்திடலான்னு
முன்னியே
வந்து
பாத்து
எல்லாம்
எழுதிட்டுப்
போயிருக்காரு,
கணக்கப்பிள்ளை.
டேப்பெல்லாம்
வச்சி
அளந்தாவ.
அதுக்குள்ள
செட்டியாரு
நெலத்த
வித்துப்
போட்டாரு.
எல்லாக்
கோளாறும்
வந்திரிச்சி...”
“நெருக்கிட்டே
இருப்போம்.
இப்பு
என்ன,
பெஞ்சாதிய
கூட்டிப்
போகவா
வந்திருக்கிற?”
அவன்
நிலத்தைப்
பார்த்துக்
கொண்டிருக்கிறான்.
“என்னமோ
அன்னிக்குப்
பொல்லாத
நேரம்...
என்னமோ
நடந்துபோச்சி.
இப்ப,
அது
வந்தா
கூட்டிட்டுப்
போவலான்னு.
புருசன்
பொஞ்சாதின்னு
ஒரு
கட்டுக்குள்ள
ஆன
பெறகு...
படலக்கி
அந்தால
பூசிணிக்கா
வுளுந்தாக்கூட
எடுத்துக்கிறம்.
புள்ள,
பொஞ்சாதிய
வெலக்கி
வுடுறது
செரியில்லன்னு
தோணிச்சி...”
குழந்தையை
அவன்
இன்னும்
வைத்துக்
கொண்டிருக்கிறான்.
அது
சிவப்பு
சட்டையின்
பித்தானைப்பற்றி
இழுக்கிறது.
துருதுருவென்று
கைகளையும்
கால்களையும்
அசைக்கிறது.
“...சும்மாருடா...
பயலே...”
என்று
கொஞ்சிக்
கடிகிறான்.
“பஞ்சமி!
இங்க
வா
பொண்ணு!”
சம்முகத்தின்
குரலுக்காகவே
காத்திருந்தாற்
போல்
அவள்
குடில்
வாயிலில்
வந்து
நிற்கிறாள்.
“என்ன
சொல்லுற!...
உனக்கு
விருப்பம்
எப்படி
இருக்கு?”
“இங்க
ஏன்
கெடக்கணும்?...
அது
சொன்னாப்பல
அப்ப
ஆரு
பேச்சயோ
கேட்டுட்டுப்
பேசிடிச்சி.
ஊருல
கண்டதும்
பேசுறாங்க...”
“அப்ப
உனக்குப்
புருசன்
மேல
கோவமில்ல?...”
சம்முகத்துக்குச்
சிரிப்பு
வருகிறது.
ஆனால்
அவள்
சிரிக்கவில்லை.
“ஏன்
கோவம்?
யாருமேல
எப்பிடிக்
கோபிச்சுக்கிறதுங்க?
மண்ணுல
சாணியயுங்
கொட்டுறோம்.
தழயுந்தா
அழுவப்
போடுறம்.
அதுலியே
நின்னுட்டு
எச்சியும்
துப்பிட்டுத்தா
நாத்து
நடுறம்
சேத்துல
பொறக்கிறவங்க
என்னாத்தக்
கோவப்படுறதுங்க,
சொல்லுங்க?”
சம்முகம்
சிலையாகிப்போகிறார்.
பஞ்சமி,
அவருக்குத்
தெரிந்து
இடுப்பில்
துணியைச்
சுற்றிக்கொண்டு
பெயருக்கு
மாறாப்புப்
போட்டுக்கொண்டு
நாற்று
நட
இறங்கிய
சிறுமி...
அந்தக்
காலத்தில்
பெண்கள்
நடவுக்கு
இறங்கினால்
நிமிர
முடியாது.
ஒரு
பெண்ணின்
இயல்பான
ஆசாபாசங்கள்,
வேட்கைகள்,
உந்துதல்கள்
எல்லாமே
அந்த
மண்ணோடுதான்.
மார்பில்
பால்கட்டும்.
நீர்முட்டிக்
காலோடு
வழியும்.
நாவின்
வறட்சியை,
பசி
தாகம்
போன்ற
வேட்கைகளை
மாற்ற
வெற்றிலைச்
சருகை
நிமிர்ந்து
வாயில்
அடக்க
இயலாது.
அப்போது...
அவருடைய
தாய்,
“டேய்,
யார்ரா...!’
என்று
பயங்கரமாக
ஒரு
நாள்
கத்தினாளாம். “நான்
காளியாயி,
நான்
காளியாயிடா.
போடுங்கடா
பூசை!...”
என்று
வெடித்து
வந்ததாம்
குரல்.
மணிகாரன்
பயந்து
போனானாம்.
சாமி
வந்திடிச்சு
தங்கம்மாளுக்கு
என்று
நடுங்கி,
“தாயே,
என்ன
வேணும்
சொல்லு...”
என்று
கன்னத்தில்
போட்டுக்
கொண்டானாம்!
ஆனால்
இந்தத்
தந்திரத்தை
எப்போதும்
கையாள
முடியுமா?
குட்டு
வெளிப்பட்டு
விட்டால்...!
மண்ணின்
புதல்விகள்
மண்ணைப்
போல்
எல்லாரும்
பொறுக்கிறார்கள்...
சோலை
வாங்கி
வந்தான்
போல
இருக்கிறது.
முறுக்கும்
வாழைப்பழமும்
வருகின்றன.
குழந்தை
அவரைப்
பார்த்துச்
சிரிக்கிறது.
அரையில்
ஒரு
செப்புக்காசு
சேர்த்து
சிவப்புக்
கயிறு
கட்டியிருக்கிறான்.
அகன்ற
கண்களில்
மை,
நெற்றி
முழுதும்
அப்பிக்
கொண்ட
மைப்பொட்டு.
குழந்தை...
பரங்கி
பூசணியையே
பாக்குறதில்ல...
இது
மனிதக்
குழந்தை.
யாரோ
சொந்தம்
கொண்டாடி
யார்
வீடுகளிலோ
பொன்னும்
மணியும்
பாலும்
நெய்யுமாக
வளமை
செழிக்க
யார்
வீட்டுச்
சேர்களுக்கோ
போய்ச்
சேர
பசியும்
பட்டினியுமாக
உதிரம்
கொடுத்தார்கள்.
அப்போது
அந்த
மண்ணை
வெறுத்தார்களா?
இன்றும்
உச்சவரம்பும்
உரிமைச்
சட்டமும்
கண்துடைப்புக்களாக
விளங்கும்
போதும்
மண்ணை
வெறுத்துவிட
முடியுமா?
குழந்தையை
முத்தமிட்டுக்கொண்டு
ஒரு
முறுக்குத்
துண்டை
விண்டு
கொடுக்கிறார்.
மனம்
லேசாக
இருக்கிறது.
------------
18
காருக்குள்
அமர்ந்திருப்பவர்
யாரென்று
இனம்
கண்டுகொள்ள
முடியாது.
கறுப்பு
அடித்த
கண்ணாடி;
பின்னால்
பட்டுத்திரை.
“இன்னிக்கு
நாம
திருவாரூர்
போலாமா
காந்தி?
புதுப்படம்
வந்திருக்கு...”
அவனை
அப்படியே
கழுத்தைப்
பிடித்துவிடவேண்டும்
போல்
இருக்கிறது.
கபடமறியாது,
உலகை
எட்டி
அளக்கக்
கால்வைக்கத்
துடித்த
அன்றைய
காந்தி
இல்லை.
ஆழந்தெரியாத
சகதியில்
முட்புதரில்
சிக்கிக்
கொண்டிருக்கும்
மலர்
அவள்.
வடிவு
பாம்புக்கு
அஞ்சாமல்
முள்ளுக்கும்
கூசாமல்
தாழைக்குலை
கொண்டு
வருவான்.
உடையார்
வீட்டில்
சரோஜாவுக்கு
அந்தப்
பூவில்
உயிர்.
என்ன
வாசம்
பாரு!
பீரோத்துணில
வச்சா
அப்பிடியே
புதிசா
இருக்கும்
என்று
போற்றிப்
போற்றி
வைப்பாள்.
வரப்பில்
நடக்கும்போது
சேற்றில்
விழக்
கால்
தடுமாறி
விட்டால்,
பிறகு
குளித்துக்
கரையேறிவிடலாம்.
இந்தச்
சேற்றிலிருந்து
கரையேறுவது
எப்படி?
நறுமண
சோப்பு,
பவுடர்,
பூ,
பொட்டு,
நல்ல
சேலை,
எந்த
நீரினாலும்
போக்கமுடியாத
சேறு...
“சின்னம்மா
வராங்களா?...”
“சின்னம்மாவுக்கு
இப்ப
வார
புதுப்படம்
எதுவும்
புடிக்கலியாம்...”
கண்களைச்
சிமிட்டுகிறான்
சாலி,
கோகிலத்தைப்
பார்த்துக்
கொண்டே.
இந்தக்
கிராமத்திலிருந்து
அவள்
ஓடிச்
செல்வதைப்
பற்றி
நினைக்கவே
முடியவில்லை.
சிறிது
நேரம்
வாசலில்
போய்
நின்றால்கூட
பலருடைய
கண்கள்
தன்மீது
பதிவது
போலிருக்கிறது.
ஆனால்
இவ்வாறு
வெளியே
சென்றால்
தப்புவதற்கு
ஏதேனும்
வழியிருக்காதா?
அன்றைய
நிகழ்ச்சிக்குப்
பிறகு
அவள்
மிகவும்
கிலி
பிடித்துப்
போயிருக்கிறாள்.
உள்ளூற
இடிந்து
விழுந்து
அழுந்திவிட்ட
நம்பிக்கையின்
இடிபாடுகளின்
ஒரு
சிதிலத்தைப்
பற்றிக்
கொண்டுதான்
அவள்
இச்சேற்றிலிருந்து
மீளும்
வழியை
யோசிக்கிறாள்.
இவள்
மருண்டு
போயிருப்பதைக்
கண்டுகொண்ட
சாலியும்
களிப்பிக்கும்
வகையில்
அவ்வப்போது
வந்து
கல்லூரியில்
சேருவது
குறித்துப்
பேசி
உற்சாக
மூட்டுகிறான்.
பஞ்சாப்
பல்கலைக்
கழகத்தின்
நுழைமுகக்
கல்லூரிப்
பரீட்சைக்கான
காகிதங்களை
அவளிடம்
வந்து
காட்டி
அவள்
எந்தப்
பாடம்
எடுத்துக்
கொள்ளலாம்
என்று
விவாதித்தான்.
வெகுநாட்கள்
கழித்து
இப்போது
சினிமாவுக்கு
அழைக்கிறான்.
“எங்க
தங்குறோம்
ராவுக்கு?”
“நான்
உன்னைவிட்டே
போக
மாட்டேன்.
ஏன்
பயப்படுற
கண்ணு...”
அவனுடைய
ஒவ்வொரு
பேச்சிலும்
கவடம்
நெளிந்து
அருவருப்பாய்
வெறுப்பூட்டுகிறது.
தன்
மனைவியை
விலைப்
பொருளாக்குவதை
விட
வேறு
ஒரு
கேவலம்
இருக்கமுடியும்
என்று
அவளுக்குத்
தோன்றவில்லை.
“அங்க
எங்க
ஃபிரண்ட்
ஒரு
புரொபசர்
இருக்காரு.
அவர
உனக்கு
ட்யூசனுக்கு
ஏற்பாடு
பண்ணி
வச்சிடலான்னு
யோசனை
சொல்றாரு,
அப்பா.
ஏன்
காந்தி?”
“ம்.
செய்யுங்க...”
“வா,
அப்ப
இன்னிக்கு
சினிமா
பார்த்துட்டுத்
தங்கிக்
காலம
அவரப்
பாத்து
ஏற்பாடு
செஞ்சுட்டு
வரலாமில்ல?”
காரில்
போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
அட
அசட்டுப்
பெண்னே?
இந்தக்
கார்
சவாரி,
உயர்ந்த
சேலை,
அது
இதெல்லாவற்றுக்கும்
விலை
உண்டு.
இப்போ
தெல்லாம்
விலை
போடப்படாத
எந்தச்
சரக்கும்,
எந்த
இயக்கமும்
உலகில்
இல்லை.
ஒரு
பெண்ணை,
அவளது
மென்மையான
இயல்பில்
பூக்கும்
உணர்வுகளை
எப்படிக்
கபடத்துடன்
கனிய
வைத்து
அதைக்கொண்டே
அவளை
வீழ்த்துகிறார்கள்.
இந்தக்
கயவர்கள்!
கோகிலத்தின்பால்
அவளுடைய
நெஞ்சம்
ஒட்டிக்கொள்கிறது.
அவள்
தேவதாசி
மரபில்
வந்தவள்.
இந்தச்
சமுதாயம்
இப்படி
ஒரு
மரபை
அனுமதித்திருக்கிறது.
அவளுடைய
கபடமற்ற
அறியாமையில்
பயங்கரமான
இத்தகையதோர்
அனுபவம்
வெடித்துத்
துளைத்தபின்னர்
அந்தப்
பொத்தல்
வழியாக
பல
இருண்ட
பகுதிகளைத்
துலாம்
பாரமாகப்
பார்க்கமுடிகிறது.
பெண்...
பெண்ணை
இவ்வாறு
பந்தாடுவதற்கே
அவள்
தன்
நாவைப்
பறித்து
வைத்திருக்கிறார்களோ?
தனது
தாயையும்,
பைத்தியக்கார
நாகுவைப்
பற்றியும்
அவள்
இந்நாள்
வரை
தீவிரமாகச்
சிந்தித்ததில்லை.
தாயை
போலீசுக்காரன்
கற்பழித்து
விட்டான்
என்பதைச்
சில
ஆண்டுகளுக்கு
முன்னர்
அவள்
அறிந்தாள்.
விலைவாசிப்
போராட்டம்
என்று
குப்பன்
சாம்பாரின்
பெண்
சாதி
மாரியம்மாவும்
கிட்டம்மாளும்
போனார்கள்.
ஆனால்
அம்மா
போகவில்லை.
அப்போது
அப்பாவிடம்
அது
பற்றிப்
பேசும்போது
பாட்டி
“ஒருக்க
சூடுபட்டு,
அவ
சென்மம்
மிச்சூடும்
அனுபவிக்கிறது.
பெரிய
போராட்டந்தா.
ஊரு
நாயிங்களுக்கு
என்ன
தெரியும்?...”
என்று
பேசினாள்.
“துரோபத
சீலயப்
புடிச்சிழுத்தப்ப
அவ
தேவியா
இருந்தா.
இந்தக்
கலியுகத்துல
எந்தச்
சாமி
வருது?
சாமியுந்தா
கண்ணளிஞ்சி
போயி
இவளுக்கு
இந்தத்
தண்டனையைக்
குடுத்திச்சி.
காலங்காத்தால
அந்தப்
பய
குரலெடுத்துக்
கத்தையில,
வயித்தச்
சங்கட்டம்
பண்ணுது...”
என்று
கத்தினாள்.
ஆனால்
அப்போது
“சீ
இதெல்லாம்
கூட்டிச்
சொல்ற
பேச்சு!”
என்று
இழிவாகவே
தோன்றியது.
இப்போதெல்லாம்
அம்மாவின்
முகம்
அவள்
நெஞ்சில்
தோன்றும்
போது
சொல்லமுடியாத
வேதனை
தோன்றுகிறது.
ஐயா
அவளை
மணந்து,
குடும்பம்
என்ற
பேராதரவு
கொடுத்தது...
நெஞ்சு
வெடிக்க
அவர்
காலடியில்
வீழ்ந்து,
“அப்பா
நான்
தெரியாம
செஞ்சிட்டேன்,
மன்னிச்சிக்குங்க”
என்று
புலம்பத்
தோன்றுகிறது.
அந்த
வீடு,
அம்சு
காலையில்
வீதி
தெளிப்பது,
வேலைக்குச்
செல்லும்
பெண்கள்,
அவர்களிடையே
உள்ள
கட்டுப்பாடுகள்
எல்லாம்
பொருள்
பொதிந்ததோர்
அவசியமான
வாழ்வுக்காக
விரிகிறது.
ஆனால்,
அவளால்
இந்த
அழிவிலிருந்து
எப்படிப்
போகமுடியும்?
விபசாரத்
தடைச்சட்டம்
என்றால்
என்ன?
பெண்
ஒருமுறை
கற்பழிக்கப்பட்டதும்
கறைபட்டு,
அதே
வாழ்க்கைக்
குழியில்
தள்ளப்பட்டு
விடுகிறாள்.
பலமுறைகள்
தனியாக
இருக்கும்போது,
கோகிலத்திடம்
இதைப்பற்றிக்
கேட்க
நினைத்தாள்.
ஆனால்,
அவள்
பேசுவதில்லை.
சொல்லப்போனால்
காந்தி,
சினிமா
மற்றும்
கதைப்புத்தகங்கள்,
சாப்பாடு,
உடை
என்று
சாலி
அனுபவிக்கச்
சிறைப்பட்டிருப்பது
போல்தான்
இருந்திருக்கிறாள்.
வேலைக்காரப்
பெண்,
அல்லது
பண்ணை
ஆளும்
கூட
அவளிடம்
பேசமுடியாத
காவலாக
அவள்
இருந்திருக்கிறாள்.
ஒவ்வொரு
சமயங்களில்,
அந்தத்
தடை
சட்டம்
எதுவாக
இருந்தாலும்
ஏதேனும்
காவல்
நிலையத்தில்
போய்
இவர்கள்
அக்கிரமங்களைச்
சொல்லி,
அல்லது
எழுதிப்போட்டால்
என்ன
என்று
தோன்றும்.
ஆனால்
காகிதமும்
கவரும்
ஒருநாள்
கேட்டதும்
கோகிலம்,
“பாபுவை
விட்டுக்
கொண்டிட்டு
வரச்
சொல்றேன்...”
என்றாள்.
அவன்,
“பேப்பர்
பேனா
கேட்டியாமே?
யாருக்கு,
லட்டர்
எழுதணும்?”
என்றான்.
பேப்பர்
பென்சில்
வரவில்லை.
அவளுடைய
கைப்பையில்
சர்ட்டிபிகேட்,
வகையறாதான்
இருந்தது.
எழுதினால்
அவர்களுக்குத்
தெரியாமல்
அனுப்ப
முடியாதே?
திருவாரூர்
வந்துவிட்டது
புலப்படுகிறது.
ஒரு
பெரிய
ஓட்டலின்
முன்
வண்டியை
நிறுத்துகிறான்
சாலி.
மணி
ஏழு
என்பதைக்
கடியாரம்
காட்டுகிறது.
மாலை
ஆட்டம்
சினிமா
துவங்கி
இருப்பார்கள்.
ஏழு
மணிக்கு
இங்கு
வருவதன்
காரணம்.
யாருக்கு
விலை
பேசவோ?
அவளுடைய
தற்காப்பு
உணர்வு,
சக்திகளனைத்தையும்
திரட்டிக்கொள்ள
ஆயத்தமாகிறது.
கல்லாப்பெட்டியில்
இருக்கும்
தங்கச்
சங்கிலி,
குங்குமப்
பொட்டணிந்த
சிவந்த
முதலாளி
சாலிக்குப்
புன்னகையுடன்
வணக்கம்
சொல்கிறான்.
“ரூமா”
என்று
கேட்பது
போல்
முகம்
காட்டி,
சற்று
நேரத்தில்
ஒரு
சாவியை
எடுத்துக்
கொடுக்கிறான்.
அப்போது
அந்தச்
சில
நிமிடங்களில்,
காந்தி
வெளியே
பார்த்து
நிற்கையில்,
சற்று
எட்டி
ஒரு
ஆசனத்திலிருந்து
மாலை
தினசரியைப்
பார்த்துக்
கொண்டிருந்த
முகம்
சட்டென்று
அவள்
மீது
படிகிறது.
அவளும்
பார்த்துவிடுகிறாள்.
“நீயா..?”
தேவு,
“நா...
நான்தான்...
தேவு.
நான்தான்!”
இவள்
அவனைப்
பார்த்து
தன்
மன
உணர்வுகளனைத்தையும்
கொட்டிவிடும்
பாவனையில்
நிற்கிறாள்.
“...வா...
வா
காந்தி!...”
சாலி
மாடிப்படியில்
நின்றழைக்கிறான்.
ஓட்டலின்
கலகலப்பான
கூட்டத்தில்
அவளும்
கலந்து
துளியாகிவிட
வேண்டும்போல்
இருக்கிறது.
தேவு...
தேவுக்குத்
தெரிந்திருக்குமோ?
அவனுடன்
அதிகமான
பழக்கம்அவளுக்குக்
கிடையாது.
அவள்
தந்தையிடம் ‘தலைவர்’
என்று
வந்து
நின்று
குழையும்
விவசாயத்
தொழிலாளி
அல்ல
அவன்.
அன்று
பஸ்ஸில்
போகும்போது
அவன்
அவர்கள்
அருகில்
வந்து
அமர்ந்து
பேசுவான்
என்று
எதிர்பார்த்தார்கள்.
ஆனால்
வரவில்லை.
தேவு...?
அவன்
எப்படிப்பட்டவனோ?
அறைக்
கதவைப்
பையன்
திறந்துவிடப்
படியில்
தாவி
ஓடுகிறான்.
இவள்
கால்கள்
பின்னலிட
அங்கேயே
நிற்கிறாள்.
“...என்ன?
வா,
மேல...?”
அதட்டினாற்போல்
அருகில்
வந்து
சாலி
அவளை
அழைத்துப்
போகிறான்.
“நா
வரமாட்டேன்.
என்ன...”
அவள்
கத்த
நினைக்கிறாள்.
குரல்
எழும்பவில்லை.
பயம்
தொண்டையைப்
பிடிக்கிறது.
“என்ன
திகச்சிப்போயி
அங்கேயே
நின்னிட்டே?...”
“எங்கூருக்காரரு”
என்ற
சொல்
வாயில்
வந்துவிட்டது.
அவசரமாக
விழுங்கிக்
கொள்கிறாள்.
“ஒண்ணில்ல.
அவரு
கையில
பேப்பரில
ரஜினி
ஆக்ட்
பண்ணின
சினிமா
போல
படம்
இருந்திச்சி.
பாத்தேன்...”
“இன்னிக்கு
ரஜினி
படம்
போகணுமா,
கமலஹாசன்
படம்
போகணுமா?”
“இரண்டு
பேருமே
இல்லாத
படம்
ஒண்ணுகூட
இல்லியா?”
“ஏ
இல்லாம?.
முதல்ல
என்ன
சாப்பிடலாம்
சொல்லு,
ஆர்டர்
பண்ணுறேன்.”
பையன்
வருகிறான்.
இவள்
இரட்டைக்கட்டில்,
கண்ணாடி,
அறையிலிருந்து
வரும்
ஒருவிதமான
புழுக்க
நெடி,
இவற்றில்
ஒரு
பயங்கரம்
புதைந்திருப்பதான
உணர்வில்
குழம்பி
நிற்கிறாள்.
அவள்
கடந்த
சில
நாட்களாகப்
படித்திருக்கும்
பத்திரிகைக்
கதைகளில்,
மலிவுப்
பதிப்புக்களில்
சித்திரிக்கப்பெற்ற,
கற்பழிப்புப்
பெண்கள்
பலரை
நினைத்துப்
பார்க்கிறாள்.
கற்பழிப்புக்காகவே
கல்யாணங்கள்
நடக்கின்றன.
கற்பழித்தபின்,
அவளை
என்ன
வேண்டுமானாலும்
செய்துகொள்ள
உரிமை
பெற்றவன்,
உடையவன்.
இந்த
அபாக்கியத்துக்கு
ஆளான
பெண்ணொருத்தி,
கையில்
குழந்தையுடன்
பாண்டிச்சேரிக்
கடலில்
விழுந்து
உயிரை
முடித்துக்
கொள்வதைத்
தத்ரூபமாகச்
சித்திரித்திருந்தாள்
ஒரு
பெண்
கதாசிரியை.
அவள்
கற்பழிப்பை
நியமமாக்குகிறாளா?
“என்ன
ஒரே ‘மூடி’யா
இருக்கிற
காந்தி?
நீ
சிரிச்சிட்டுச்
சந்தோசமா
இருக்கணும்.
எனக்கு
உம்முனு
இருக்கிறவங்களக்
கண்டா
பிடிக்காது...”
அவள்
பளிச்சென்று
சிரிக்கிறாள்.
பையன்
இரண்டு
பிளேட்
அல்வா,
சப்பாத்தி
குருமா,
எல்லாம்
கொண்டு
வருகிறான்.
அந்தப்
பையனிடம்
ஒரு
சீட்டுக்
கிறுக்கி
‘வாசலில்
நிற்கும்
தேவுவிடம்
கொடு’
என்று
அனுப்பலாமா?
ஆனால்,
இவன்
காவலாக
இருக்கிறான்.
அல்வாவும்
குருமாவும்
நெஞ்சில்
குழம்ப
விழுங்குகிறாள்.
பழைய
காலக்
கதைகளில்
வருவதுபோல்
அற்புதம்
நிகழவேண்டும்!
கோட்டை
மதிலுக்குமேல்
ஆலமர
விழுதைப்
பற்றி
உள்ளே
கதாநாயகன்
வந்திறங்குவான்.
அப்படி
அவள்
வெகுநாட்களுக்கு
முன்
சினிமா
பார்த்திருக்கிறாள்,
அப்படி
யார்
வரப்போகிறார்கள்?
“காந்தி,
அப்பா
உன்னை
மட்றாஸ்
ஆஸ்டலில்
சேர்க்கலாம்னு
ஒரு
எண்ணம்
கேட்டாரு.
இங்கன்னா
உனக்கு
உங்கூரு
ஆளுக
வருவா,
போவான்னு
ஒரு
கூச்சம்
இருக்கும்னு
அவர்
கருத்து.
எப்படியும்
இந்த
வருசம்
எதும்
செய்யிறதுக்கில்ல.
உனக்கு
இஷ்டமா...”
“எங்கண்ணனுக்குக்
கடிதாசி
எழுதிப்
போடணும்னு
கவர்
கேட்டேன்.
நீங்க
காதிலியே
போட்டுக்கிடல...!”
“உங்கண்ணனுக்கு
நாந்தான்
சேதி
அனுப்பினேன்.
நேத்துத்தா
ஒந்திரியரு
பாத்தேன்னும்
ரொம்ப
சந்தோசம்னு
சொன்னான்னும்
வந்து
சொன்னாரு
நாந்தா
உங்கிட்டச்
சொல்ல
மறந்து
போனேன்!”
ஒன்பதரை
மணிக்குக்
கிளம்பு
முன்
குளியலறையில்
சென்று
முகத்தைக்
கழுவிக்
கொள்கிறாள்.
பவுடர்
போட்டு
மறுபடியும்
பொட்டு
வைத்துக்
கொள்கிறாள்.
திருத்திக்கொண்டு
அவனுடன்
வருகிறாள்.
ஓட்டலில்
கூட்டம்
வந்துவிட்டது.
அவர்கள்
வருகையில்
கல்லாவில்
இருக்கும்
முதலாளி,
புன்னகை
செய்கிறார்.
காரடியில்
ஒரு
பிச்சைக்காரக்
கிழவி
உட்கார்ந்திருக்கிறாள்.
வெற்றிலை
பாக்குக்
கடை
வாசலில்
கயிற்று
நெருப்பில்
பீடிக்கு
ஒருவன்
நெருப்புப்
பற்றவைக்கிறான்.
தேவு...
தேவுவைக்
காணவில்லை.
“என்ன
சினிமான்னு
முடிவு
பண்ணினிங்க?
மீண்டும்
கோகிலாவா?”
வெளியில்
இருப்பவருக்குக்
கேட்கவேண்டும்
என்ற
மாதிரியில்
சற்றே
உரக்கவே
கேட்கிறாள்.
வண்டி
செல்கிறது.
இரவில்
அதிகமாக
லாரிகள்
நடமாட்டமே
குறுக்கிடுகின்றன.
காரின்
வெளிச்சம்
சாலையில்
விழும்போது,
எதிர்
வண்டி
வெளிச்சம்
படும்போது,
இந்த
ஊரில்
யாரைத்
தெரியும்
என்று
துழாவுகிறாள்.
புதுக்குடி
பழக்கமான
இடம்;
நாகைக்குப்
போய்
வந்த
பழக்கம்
உண்டு.
‘பெண்களைத்
தனியாக
அனுப்பக்கூடாது’
என்று
பாட்டி
கடுமையாக
நிற்பாள்.
இவள்
உடையார்
வீட்டுக்குச்
செல்வதையே
ஆமோதிக்க
மாட்டாள்.
“போயிட்டு
வரட்டும்.
அப்பத்தான்
தயிரியம்
வரும்”
என்பார்
அப்பா.
‘என்
தயிரியத்தில்
அரைக்கிணறு
தாண்டி
இருளில்
விழுந்தேன்
அப்பா!’
சரேலென்று
இங்கு
விவசாயத்
தொழிலாளர்
சங்கம்
என்ற
அலுவலகம்
இருக்கும்
என்ற
நினைவு
வருகிறது.
முன்
காட்சிக்
கூட்டம்
இன்னும்
வெளிவரவில்லை.
சாலி,
சிகரெட்டை
ஊதிக்கொண்டு,
ஏ
என்று
போட்ட
அடையாளத்தில்
ஏயின்
ஒரு
காலோடு,
உடலில்
ஒன்றுமில்லாமல்
முழங்காலைக்
கட்டிக்
கொண்டு
தன்
நீல
விழியை
அந்தரங்கமான
எண்ணத்தைக்
காட்டும்
சாளரமாக்கிக்
கொண்டு
உட்கார்ந்திருக்கும்
பெண்ணைப்
பார்த்தவாறு
நிற்கிறான்.
திடீரென்று
அவள்
அருகில்
இருக்கிறாளா
என்று
பார்ப்பதுபோல
திருப்பிப்
புன்னகைக்கிறான்.
“காந்தி
நீ
ஆறு,
குளத்திலே
நீச்சலடிப்பேல்ல?”
“ஹும்...
எனக்குத்
தெரியாது...”
“உனக்கு
நீச்சலுடைபோடணும்னு
எனக்கு
ஆசை...”
சிகரெட்
சாம்பலைத்
தூணில்
தட்டிக்
கொண்டு
சிரிக்கிறான்.
“டிக்கெட்
வாங்கிட்டு
உள்ளாற
போக
நேரமாகுமா?”
“நாம
பால்கனில
உக்காந்துப்போம்...”
“ஹலோ,
என்னப்பா
சாலி
ஆளயே
காணம்..?”
யாரோ
ஒரு
விடலை
தோளைக்
குலுக்குகிறான்.
“மீட்,
மிஸ்
காந்தி?...”
பரட்டைத்
தலையும்
யானைக்
குழாய்
சட்டையுமாக
இருக்கும்
அவன்
புன்னகை
செய்கிறான்.
இவளுக்கு
இது
ஏதேனும்
முன்னேற்பாடாக
இருக்குமோ
என்ற
திகில்
பரவுகிறது.
அவர்கள்
பேசும்போது
கூடியிருக்கும்
கூட்டத்தைக்
கண்களால்
துழாவுகிறாள்.
அப்போது
படம்
முடிந்து
கூட்டம்
வெளியே
திபுதிபுவென்று
வெளிவருகிறது.
அவர்கள்
சீட்டு
வாங்க
நிற்கையில்,
சரேலென்று
காந்தி
கூட்டத்தில்
கலந்து
கொள்கிறாள்.
விடுவிடென்று
வெளியேறுகிறாள்.
அவளுக்கு
அடுத்த
சிந்தனை
இல்லை.
ஒரு
கிராமத்தான்
போன்ற
ஆணும்,
மனைவியும்
கைக்குழந்தையுடன்
முன்னே
நடக்கின்றனர்.
தலைப்
பூவைப்
பிய்த்துப்
போட்டுவிட்டு
அவள்
அவர்களுடன்
விரைகிறாள்.
“தூத்தேறி”
என்று
காறி
உமிழ்கிறாள்
அந்தப்
பெண்.
“என்னாளெவு?
கூச்சநாச்சம்
இல்லாம!...”
“அப்பிடி
இருந்தாத்தா
சனங்க
வாரங்க...”
“நெல்லால்ல.
சாமி
படம்,
ஆதிபராசக்தி
நெல்லாருந்திச்சி,
திருவிளையாடல்
நெல்லாருந்திச்சி...”
அவர்கள்
விரைந்து
நடக்கிறார்கள்.
இவள்
அவர்களுக்கு
ஈடுகொடுக்க
ஓடவேண்டி
இருக்கிறது.
பின்னே
ரிக்சாக்கள்.
லாரி
வெளிச்சம்
விழும்போது,
கார்
தன்னைத்
துரத்தி
வருவதாகக்
கிலி
பிடித்து
நா
ஒட்டிக்கொள்ள
வீழலில்
ஒதுங்குகிறாள்;
ஓடுகிறாள்.
“என்னாங்க...?
ஒங்களுக்கு
வெவசாய
சங்க
ஆபீசு
எங்க
இருக்குன்னு
தெரியுமா?...”
அந்த
ஆள்
திரும்பிப்
பார்க்கிறான்.
“ஆரும்மா
நீ?...”
“இல்லிங்க...
வந்து.
பஸ்ஸுக்கு
நானும்
எங்கண்ணனும்
வந்தம்,
அவரு
பஸ்ஸுல
என்ன
உக்காத்தி
வச்சிட்டு
எதுக்க
கடய்க்கு
போயிட்டு
இதா
வந்திடறேன்னு
போனாரு
பஸ்ஸு
அதுக்காட்டியும்
எடுத்திட்டா
நா
அண்ணன்
வரலியேன்னு
எறங்கிட்டேன்.
பாத்தா
கடயில
அண்ணன்
இல்ல.
ஓடிப்போயி
பஸ்ஸில
ஏறிப்
போயிடுச்சி
போல
இருக்கு...”
கதை
ஒன்று
ஒட்டுப்போடுவது
சிரமமாக
இருக்கிறது.
“என்னம்மா,
ராநேரம்
பதனமா
இருந்துக்கிடாம
இப்பிடி
எறங்குவாங்களா?”
“எங்கிட்ட
காசொண்ணுமில்ல.
அண்ணன்
வராம
நாம்
போயிட்டு
டிரைவர்
கேட்டா
என்ன
பண்ணுவே?...”
“எந்துாரு...?”
“புதுக்குடி
போவணும்.”
“காலம
அஞ்சரைக்குத்தா
இனி
பஸ்ஸு...”
“அதா,
ஒங்கூட்ல
வந்து
தங்கிட்டு,
மொத
பஸ்ஸில
கொஞ்சம்
ஏத்திபுட்டீங்கன்னா...
நா
உங்களுக்கு.
உங்கள
என்னிக்கும்
மறக்கமாட்டேன்...”
“புதுக்குடில
எந்தப்
பக்கம்?”
அந்தப்
பெண்
இடைமறித்தாள்.
“ரதவீதிக்குப்
போகணும்.”
“என்னாம்மா,
புத்திகெட்ட
பொண்ணா
இருக்கிறியே?
அவரு
ஆம்பிள
ஓடிவந்து
ஏறிப்பாரு.
டைவரிட்ட
சொல்லி
பாக்கச்
சொல்லுறதில்ல?”
பெண்
பிள்ளைக்கு
அவளுக்கு
இடம்
கொடுப்பதில்
விருப்பமில்லை
என்று
புரிகிறது.
பெண்கள்
தாம்
பெண்களுக்கு
முதல்
எதிரிகளாக
இருக்கிறார்கள்.
கோகிலத்திடம்
அந்தரங்கமாக
இருக்க
எவ்வளவு
முயன்றாள்?
“நடந்து
போச்சி,
கொஞ்சம்
எரக்கம்
காட்டுங்க.
எனக்குக்
கார்க்காக
குடுத்து
ஏத்தி
புதுக்குடி
அனுப்பிடுங்க.
நா.
மறக்கவே
மாட்டேம்மா...”
“இந்த
வம்பெல்லாம்
நமக்கு
என்னாத்துக்கு”
என்ற
மாதிரியில்
பெண்
பிள்ளை
நடந்து
போய்க்
கொண்டிருக்கிறாள்.
“நாங்க
இருக்கிற
எடத்துல
பெரிய...
குடும்பம்.
எல்லாம்
யாரு
என்னன்னு
கேப்பாங்க...”
“எனக்கு
ஒக்கார
எடம்
குடுங்கம்மா,
உங்களப்போல
நானும்
ஒரு
பொண்ணு.
காலையில்
நான்
போயிடுவேன்.
உங்களுக்குச்
சந்தேகம்
எதும்
வாணாம்.
புதுக்குடில...
டாக்டர்
வூடு
இருக்கு
வேண்டிய
மனிசாள்
இருக்காங்க.
உங்களுக்கு
அப்பிடி
ஒரு
ரூவாக்
காசில
சந்தேகம்
இருந்திச்சின்னா,
காதில
போட்டிருக்கிற
தோடு
கழற்றித்தாரேன்.
வந்து
வாங்கிக்குங்க...”
அந்தச்
சேற்றுக்
குழியிலிருந்து
மீள,
காலை
எடுத்துவிடும்
நம்பிக்கையில்
அவர்களைப்
பற்றிக்
கொள்கிறாள்.
------------
19
பள்ளமாக
இருக்கும்
பங்கிலிருக்கும்
அதிகமான
தேக்க
நீரை,
ஓர்
இறைவை
கட்டி
மேட்டுப்
பங்குக்கு
மாமுண்டி
இறைத்துக்
கொண்டிருக்கிறான்.
அது
கோவிலுக்குரிய
நிலம்.
சம்பாப்
பயிர்,
பகங்கொள்ளையாகக்
கண்களையும்
மனதையும்
கவர்ந்து
கொண்டிருக்கிறது.
வரப்பு
மிகக்
குறுகலாக
இருக்கிறது.
காலை
எட்டி
எட்டி
வைத்துச்
சம்முகம்
மிக
விரைவாக
வாய்க்காலில்
இறங்கிக்
கடந்து
வருகிறார்.
பொன்னடியான்
இன்று
வகுப்பெடுக்க
வரவேண்டும்.
பழைய
கடைத்தெருக்
கொட்டகையை
விட்டு
புதிதாக
ஆற்றோரத்தில்
குப்பன்
சாம்பார்
முதலியோருடைய
குடிசைகளுக்கு
அருகிலேயே
ஒரு
சிறு
கூரைக்
குடில்
அமைத்திருக்கிறார்கள்.
விவசாயத்
தொழிலாளர்
சங்கக்
கொடியை
நட்டு,
‘படிப்பகம்’
என்று
எழுதிய
அட்டையையும்
மாட்டியிருக்கிறார்கள்.
முறையாகத்
திறப்பு
விழா
என்று
ஒன்றும்
கொண்டாடவில்லை.
பொன்னடியான்
புதன்
கிழமையும்
சனிக்கிழமையும்
வருகிறான்.
முக்கியமாக
வடிவு,
மாமுண்டி,
சித்தையன்
என்று
ஐந்தாறு
ஆண்களுடன்,
அம்சு,
ருக்மணி,
சாலாச்சி
ஆகியோரும்
முதல்
வகுப்பில்
வந்து
அவன்
பாடம்
சொல்வதையும்,
பலகையில்
எழுதிப்
போடுவதையும்
கேட்டார்கள்,
பார்த்தார்கள்.
சம்முகம்,
இளைஞர்கள்,
தங்கள்
தொழில்,
பொது
அறிவு,
சமுதாயம்,
உலகம்,
அரசியல்,
பொருளாதாரம்
சார்ந்த
அறிவுபெற
வேண்டியதன்
முக்கியத்துவத்தை
எடுத்துரைத்தார்.
பின்னர்,
அடுத்த
வகுப்புக்குப்
பொன்னடியான்
வந்தபோது
சம்முகம்
ஐயர்
பூமியில்
மருந்து
தெளிப்புக்குப்
போய்விட்டார்.
அதற்கு
அடுத்த
வகுப்பில்
ஐந்தாறு
பேர்கூட
இல்லை.
வடிவு,
குப்பன்
சாம்பாரைப்
பார்த்துகொள்ளச்
சொல்லிவிட்டு,
வேறெங்கோ
உழவென்று
போயிருந்தான்.
அவன்
இப்போதெல்லாம்
அவர்
கண்களில்
அதிகம்
படுவதில்லை.
குப்பன்
சாம்பார்
மட்டுமே
கூடக்
கூட
வருகிறான்.
பழனிப்பயல்
எப்போதேனும்
இங்கு
வருகிறான்.
சேத்துார்
மதகை
எட்டியதும்
சாலையில்
சைக்கிள்
வருகிறதோ
என்று
பார்க்கிறார்.
பொன்னடியான்
சைக்கிளிலேயே
வந்து
விடுகிறான்.
காந்தியைக்
கட்டுவதுதான்
நடக்கவில்லை.
அந்தத்
தலைகுனிவு
நீங்க,
இந்த
அறுவடை
முடிந்ததும்
அம்சுவை
இவனுக்கு
விமரிசையாகக்
கட்டிவைக்க
வேண்டும்
என்றதொரு
வீம்பு
இவருள்
ஓங்கியிருக்கிறது.
“வணக்கம்
காம்ரேட்.
பத்து
நிமிசம்
லேட்டாயிடுச்சி...”
சைக்கிளை
விட்டிறங்கி
அதை
உருட்டிக்கொண்டே
அவன்
அவருடன்
நடக்கிறான்.
பசுமையில்
பூத்த
வண்ணப்
பூக்களாய்ப்
பெண்கள்
குனிந்து
களை
பறிக்கிறார்கள்.
நல்ல
மழையும்
வெயிலும்
பசுமைக்கு
வீரியம்
அளிக்க,
கன்னிப்
பெண்ணின்
மலர்ச்சிபோல ‘தூர்’
பிடித்துப்
பயிர்கள்
விரிந்திருக்கின்றன.
முட்செடிகளிடையே
மாரியம்மா
சுள்ளி
பொறுக்குகிறாள்.
“மாரியம்மா,
வடிவு
இருக்கிறானா?...”
“அவனுக்கு
ஒடம்பு
நல்லால்ல.
ஐயனார்
குளத்து
வயித்தியரிட்டப்
போனா...”
“ஏ
என்னாச்சி?
ரொம்பக்
குடிச்சிட்டானா?”
“அப்பிடியெல்லாம்
வடிவு
குடிக்கமாட்டா.
அன்னிக்கி
மழயில
முச்சூடும்
நனஞ்சிட்டான்.
சளி
புடிச்சிக்
காச்சலும்
ஒடம்பு
வலியுமா
அல்லாடினா.
சோறே
சாப்பிடறதில்லே.
பித்தமாயிருக்குன்னா...”
“சரி,
பழனி
இருக்கிறானா?”
“பழனி
இப்ப
எப்பிடி
வருவான்?
மிசின்ல
மூட்ட
வருமில்ல?”
“வகுப்ப
சாயங்
காலமா
வச்சிக்கிறதுன்னாலும்
தோதுப்படுறதில்ல.
அல்லாம்
குடிக்கப்
போயிடறாங்க.
பொம்பிளங்களுக்கு
வீட்டு
வேலயிருக்கு.
ஆனா
இப்ப
நடவு
உழவு
இல்ல,
மத்தியானம்
ஓரவரு
ஒதுக்கலான்னு
நினைச்சி
வரேன்...
அதான்,
காம்ரேட்
காலம
ஏழு
மணிக்கு
வேல
தொடங்கி,
மத்தியானம்
ரெண்டு
மணியோட
வேலய
முடிச்சிடனும்ணு
சில
இடங்களில்
அமுல்
பண்றாங்க.
மஞ்சக்குடிப்
பக்கமெல்லாம்
இதுக்கு
ஒத்திட்டிருக்காங்க,
இதுனாலே
நாம
நாலு
மணிக்குப்
படிப்பகம்
நடத்தலாமில்ல...?”
சம்முகம்
பேசாமல்
நடக்கிறார்.
இதை
ஒப்புக்கொள்ள
முடியவில்லை
அவரால்.
“நாம
இந்தச்
சங்கக்
கூட்டத்துல
பேசினதுதான?
சேத்தில
எறங்குனா
ஏழு
மணி
நேரமும்
தல
நிமிராம
வேலை
செய்ய
முடியுமா?
நடுவில
ஒருமணி,
ரெண்டு
மணி
இருக்கிறது
சரிதான்.
காலம
எட்டுலேந்து
பன்னண்டு.
பெறகு
இரண்டிலேந்து
அஞ்சு,
அஞ்சரைன்னு
இருக்கிறதா
சரி.
அநேகமா
பக்கத்திலேந்தா
பொண்டுவ
வூடுகளுக்குப்
போயிட்டுக்
கூட
வாராங்க.
புள்ளிக்கிப்
பாலு
கொடுக்கிறதுன்னு
வேற
இருக்கு...
அதுமில்லாம,
ரெண்டு
மணிக்கே
கள்ளுக்
கடயில
போயி
உக்காந்திடுவாங்கல்ல?...”
சங்கத்து
வாசலுக்கு
வருகிறார்கள்.
நாலைந்து
சிறுவர்
சிறுமியர்
மட்டுமே
ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
“ஏண்டால?
ஸ்கூலுக்குப்
போகல
நீங்க?”
பொன்னனின்
பயல்
முருகன்
சம்முகம்
கேட்டதும்
மூக்கை
உறிஞ்சிக்கொண்டு
ஒடுகிறான்.
பொன்னடியான்
குடிசைகளுக்கு
முன்
நின்று “யாருமில்ல?...
ஏ.
ராசாத்தி
உங்கண்ணனெங்க...”
என்று
ஆள்
கூட்டுகிறான்.
“எம்பேரு
ராசாத்தியில்ல...”
இடையில்
பாவாடை
கிழிந்து
தொங்க
முடி
அவிழ்ந்து
மறைக்க
அதேபோன்ற
சாயலுடைய
ஒரு
குழந்தையை
இடுக்கிக்கொண்டு
நிற்கும்
சிறுமி
சிரிக்கிறது.
சங்கத்துக்
கதவாக
அமைந்த
இரட்டை
வரிக்
கீற்றை
எடுத்து
வைக்கிறான்.
திறப்பு
வைபவத்தன்று
சாணி
மெழுகிக்
கோலமிட்டதுதான்.
கருமை
பூசிய
பலகை
ஒரு
முட்டுக்கட்டையின்
ஆதரவில்
சாய்ந்திருக்கிறது.
உள்ளே
ஆடு
கோழி
வகையறாக்கள்
வந்து
தங்கிய
அடையாளமாகப்
புழுக்கைகள்,
எச்சங்கள்.
“மாதர்
சங்கத்துக்
கிட்டாம்மாளக்
காணம்!
இத்த
நறுவிசு
பண்ணி
வைக்கக்கூடாது?”
“தா...
யாரங்க...?
பாட்டி!
கொஞ்சம்
இங்க
வா!...”
ஒரு
கிழவி
தரையைப்
பெருக்கிச்
சுத்தம்
செய்ய
அகப்படுகிறாள்.
ஒரு
கீற்றைக்
கொண்டு
வந்து
போட்டு
அமர்ந்து
கரும்
பலகையைத்
துடைத்து,
கையோடு
கொண்டு
வந்திருக்கும்
சாக்குக்கட்டியால்
தேதியை
எழுதிப்
போடுகிறான்.
பையிலிருந்து
புதிய
பத்திரிகை,
சிறிய
துண்டுப்
பிரசுரங்களை
எடுத்து
வைக்கிறான்.
சம்முகம்
யாரேனும்
வருகிறார்களா
என்று
பார்க்கிறார்.
மாடசாமி
வாய்க்கார்
கட்டம்போட்ட
சிவப்புத்
துண்டுடன்
ஓடி
வருகிறான்.
“முதலாளி...
முதலாளி...
வீரபத்திரனையும்
குஞ்சிதத்தையும்
போலீசில
புடிச்சிட்டுப்
போறாவ...!”
“என்னடா..?
போலீசிலா?”
“ஆமா
அக்கிரகாரத்துப்
பக்கம்
காலமேந்து
கூட்டம்
கூடிக்
கெடக்குது...”
“ஏ,
என்னாச்சி?”
“கோயிலில்
அம்மன்
நகையெல்லாம்
வச்சிப்
பூட்டிருந்தாங்களாம்.
பொட்டி
ஒடச்சிருக்குதாம்...”
“அதுக்கு...?
வீரபத்திரனுக்கென்ன?
கோயிலுக்கு
நகை
இருக்கிற
விசயமே
நமக்குத்
தெரியாது.”
“அதென்ன்மோ
மூணு
நா
முன்னம
செங்கல்பட்டு
ஐயிரு,
வரதராசன்
எல்லாரும்
வந்து
பொட்டி
தொறந்து
அல்லா
நகையும்
பார்த்து
வச்சிப்
பூட்டினாங்களாம்.
இப்ப
பொட்டி
ஒடச்சிருக்கு
தாம்.
சரப்பளியோ,
பதக்கமோ
காணாம
போயிடிச்சாம்.
வீரபத்திரனும்
குஞ்சிதமுந்தா
வூட்ட
ராவில
இருந்தாங்களாம்.
கிட்டம்மா
இப்பத்தா
அழுதுகிட்டே
போவுது,
வடிவுப்
பயதா
கூட்டிட்டுப்
போறா.”
“இதென்னடா
வம்பாயிருக்கு?”
பொன்னடியான்
சைக்கிளைத்
தள்ளிக்கொண்டு
வருகிறான்.
அக்கிரகாரத்துக்
கூட்டம்
இன்னமும்
கரையவில்லை.
குருக்கள்
வீட்டு
வாசலில்
ரங்கன்
பயல்,
நடராசு
சின்னத்
தம்பி,
விருத்தாசலத்தின்
அக்கா,
மூலையான்
மனைவி
எல்லாரும்
இருக்கின்றனர்.
“என்னங்க
சாமி?”
“சம்முவமா?
வாப்பா.
விசாரணைன்னு
டேசனுக்குக்
கொண்டு
போயிருக்காங்க.
நிலவறைக்
கதவு
திறந்திருக்கு.
இரும்புப்
பெட்டிய
மறு
சாவி
போட்டுத்
திறந்திருக்காங்க.
ஒட்டியாணம்,
சரப்பளி
மாலை,
கல்லிழைச்ச
பதக்கம்,
நாலு
சங்கிலி
எல்லாம்
காணலியாம்.
மூணு
நா
முன்ன
ஐயர்
வந்து
லிஸ்ட்
கொண்டாந்து
பாத்தாங்களாம்...”
“குஞ்சிதம்,
இந்தப்
பொம்பிள
பாவம்,
அத்த
வேற
புடிச்சிருக்காங்குறிய?”
“வீரபுத்திரன்
வூட்டுலதா
ராத்
தங்குறானாம்,
காவலுக்குன்னு.
தேங்கா
புடுங்கிப்
போட்டிருக்காங்க,
சாமான்
சட்டெல்லாம்
இருக்கு.
இந்தப்
பொம்பிளதா
கேக்க
வேண்டாம்.
இவளும்
இங்கதானிருந்திருக்கா.
இரண்டாங்கட்டு
ரூம்ல
நிலவற
இருக்கு...”
“ராத்திரி
பூட்டிட்டுப்
போனேன்னு
நடராசு
சொல்லுறான்.
அந்த
ரூம்
பூட்டுத்
திறந்து
பத்து
இருபது
நாளாச்சி.
பாத்திரமெல்லாம்
குஞ்சிதம்
தேச்சி
வச்சா,
எனக்குத்
தெரியும்.
அந்தப்
பக்கமே
நா
போகலன்னு
வீரபுத்திரன்
அழறான்,
பாவம்.
ஆனா,
நகை
என்னமோ
காணல.
குஞ்சிதத்தின்
சீலையில்
சாவி
இருந்ததாம்.
அதுதா
மாத்து
சாவியாம்...”
“இதென்ன
சாமி,
நம்பறாப்பல
இல்லியே?
அந்தப்
பொம்பிள
எதோ
நாலுபேர
அண்டிட்டுப்
பிழச்சிட்டிருந்திச்சி.
அத்தப்
போயி...”
“அதா
இவந்
தூண்டுதலில்
அவளும்
சம்பந்தப்
பட்டிருக்கலாம்...”
“என்னா
சாமி,
கேவுறில்
நெய்யொழுவுதுன்னா
கேக்கிறவங்களுக்கு
மதி
வாணாம்?”
“கோவிலுக்கு
சாமி
கும்புடவே
போகாத
ஆளுங்க,
கோயில்
விசயமே
தெரியாது.
இது
அப்பட்டமான
சூட்சியாயிருக்குதே?”
விருத்தாசலத்தின்
அக்காள்
மங்கம்மா
தன்
பெரிய
குரலெடுத்துப்
பாய்ந்து
வருகிறாள்.
“கழிசடங்க.
சாமி
கும்பிடப்
போகாத
சனியங்க.
இந்தக்
கோயில்
விழா
நல்லபடியா
நடக்கக்கூடாதுன்னு
கச்ச
கட்டிட்டு
இப்பிடிப்
பண்ணித்
தொலச்சிருக்குங்க.
குஞ்சிதமாம்
குஞ்சிதம்,
வெளக்குமாத்துக்குப்
பட்டுக்குஞ்சலம்.
எங்கேந்தோ
வந்த
பர
நாயி.
அத்த
வூட்ட
வச்சி,
சோறு
போட்டதுக்கு
இப்பிடிக்
கோயில்
சொத்தக்
களவாண்டிருக்கிறாளே?
வீரபுத்திரன்
தல
தெறிச்சி
நின்னான்.
என்னடா
பேச்சு?
ஒரு
நிமிசத்தில
துக்கி
எறிஞ்சிடுவா!
பண்ணக்கார
பயனுவளாவா
இருக்குறானுவ?”
சம்முகத்தின்
நாவில்
வசைகள்
தெறிக்கின்றன.
கொட்டிவிடாமல்
பதுக்கிக்
கொள்கிறார்.
“கணக்கப்புள்ள,
பழயமணிகாரர்
அல்லாருந்தா
இருந்தாவ.
அந்தக்
களுத
வாயத்
தொறந்தாளா?
இனிஸ்பெட்டரு
வந்து
கேக்கறாரு
இவ,
வாயெ
தொறக்கல.
இந்தச்
சாவி
உனக்கு
எப்பிடிம்மா
கெடச்சிச்சின்னு
கேக்குறாரு
ஒண்ணுமே
பேசல.
சரி
டேசனுக்கு
இட்டுப்
போயி
கேக்குறபடி
கேக்குறோம்னு
போயிருக்காங்க.
தங்கம்
விக்கிற
வெலயில
டேயப்பா!
போயிருக்குற
பொருள
ஒரு
லட்சத்துக்குக்
காணும்...”
இந்த
நகைகளை
இவர்களே
பதுக்கிக்கொண்டு
இப்படி
நாடகம்
ஆடுகிறார்களா?
கோயில்
திருவிழா
நாடகமே
இதற்குத்தானா?
ஆனால்
இதையெல்லாம்
எப்படிக்
கேட்பது?
“நாம
அப்ப
அஸ்தமங்கலம்
போயித்தான்
பார்க்கணும்.
முள்ளுமேல
போட்ட
துணியாக
நம்ம
சமூக
வாழ்க்கை
ஆயிடுச்சி.”
சம்முகத்துக்கு
நெற்றி
வேர்க்கிறது.
காலையிலிருந்து
ஒழுங்காக
ஒன்றும்
சாப்பிட்டிருக்கவில்லை.
சிறிது
நீராகாரம்
அருந்திவிட்டு
விடியற்காலையில்
வயலுக்குச்
சென்றவர்தாம்.
வீட்டுக்குச்
சென்று
ஏதேனும்
சாப்பிட்டுவிட்டுப்
போகலாம்
என்று
தோன்றுகிறது.
“வாப்பா,
பொன்னு,
வீட்டுக்குப்
போயிட்டு
வரலாம்...”
சைக்கிளில்
பின்னே
அமர்ந்து
கொள்கிறார்.
விரைவாகவே
விடு
திரும்பி
விடுகின்றனர்.
சைக்கிளை
வாசலில்
நிறுத்திவிட்டு
உள்ளே
குனிந்து
நுழைகிறார்.
வாசலில்
பெட்டைக்கோழியும்
ஒரு
குஞ்சும்
இரை
பொறுக்குகின்றன.
திண்ணையில்
அப்பா
படுத்திருக்கிறார்.
இப்போதெல்லாம்
இவர்
படுத்தே
கிடக்கிறாரே
என்று
தோன்றுகிறது.
வீடு
திறந்திருக்கிறது.
உள்ளே
மனித
அரவமே
தெரியவில்லை.
“அம்சு!...”
கூவிக்கொண்டே
நடுவிட்டில்
துண்டைப்
போட்டுக்
கொண்டு
அமருகிறார்.
தாய்தான்
பின்
தாழ்வரையிலிருந்து
வருகிறாள்.
“உக்காரு
தம்பி.
எங்க
ரெண்டு
பேரும்
வெளியே
போயிருக்கிறாங்களா?”
“காத்தான்
மாமன்
வந்து
சொன்னா,
நடவுன்னு
நாளாக்கிப்
பத்து
ரூபாக்கிமேல
செலவாவுதில்ல?
போயிருக்காவ...”
“சோறிருக்குதா,
எதுனாலும்
இருந்தா
எடுத்து
வையி.
ஒரே
குழப்பம்.
இப்ப
போலீஸ்
டேசனப்
பார்க்க
போவணும்...”
இதொன்றும்
கவனமில்லாதவள்
போல்
உள்ளே
பார்க்கிறாள்
கிழவி.
சமையலறை
இருட்டிலிருந்து
கையில்
தண்ணிர்
செம்புடன்
வெளிப்படும்
உருவம்
கண்களில்
முதலில்
நிழலாக
பின்னர்
தூலமாக
- உயிர்
வடிவாகத்
தெரிந்து
பார்வையை
அப்பிக்
கொள்கிறது.
தண்ணிரைக்
கொண்டு
கீழே
வைப்பவள்
குனிகையில்
கன்னத்தில்
நெருப்புத்
தழலாக
விரல்கள்
வீறுகின்றன.
தண்ணிர்
சிதறப்
பாத்திரம்
பிடியை
விட்டு
நழுவிச்
சாய்கிறது.
காந்தி
இதை
எதிர்பார்த்தவளாகவே
சுவரைப்
பற்றிக்
கொண்டு,
கண்ணீரை
விழுங்கிக்கொண்டு
அவரைப்
பார்க்கிறாள்.
‘இது
நியாயமா’
என்று
துளைப்பது
போலிருக்கிறது
அந்தப்
பார்வை.
சிறிது
நேரம்
அவருக்கும்
எதுவும்
புரியவில்லை.
பொன்னடியான்
வெளியே
வந்து
தெருவைப்
பார்க்கிறான்.
“எந்த
மூஞ்சிய
வச்சிட்டு
நாய்
மாதிரி
உள்ளே
நுழஞ்ச?
சீச்சி!
வெக்கங்கெட்டு
எப்பிடி
வந்து
உள்ளாற
நுழைஞ்சு
எம்முன்ன
வந்து
நிக்கிற?
பொட்டச்
சிறுக்கி,
உங்குணத்தக்
காட்டிட்டியே?”
அவள்
அசையவேயில்லை.
அவள்
எதிரொலி
எழுப்பியிருந்தால்
அவருடைய
பொங்கலுக்கும்
குமைச்சலுக்கும்
வடிகாலாக
இருந்திருக்கும்.
சிலையாக
நின்றதுஎழுச்சிக்குத்
தூண்டுகோலாக
இருக்கிறது.
தம்முடைய
சீற்றத்தின்
வேர்களை
அசைப்பதாக
இருக்கிறது.
எனவே
தமக்குச்
சாதகமான
வகையில்
மருமகள்
வெளியே
நிறுத்தி
வைத்தது,
மகன்
உதாசீனப்படுத்தியது
எல்லாம்
நினைவில்
புரண்டு
கொடுத்து
அவரை
வெறியனாக்குகின்றன.
“என்னடீ,
நாங்
கேக்குற,
நிக்கற?
அந்தப்
பய
கூட
ஸ்கூட்டர்லல்ல
ஊர்கோலம்
போனியாமே?
ஒட்டல்லே
பார்த்ததாக
ஒந்திரியர்
சொன்னாரு
எண்சாணும்
ஒரு
சாணாக்
குறுகிப்போனேன்.
அப்பிடியே
கெடந்து
மானம்
துடிச்சிச்சி.
அப்பிடி
ஒரு
ஒடம்பு
கேக்குமாடீ?...
இந்தக்
குடிலபெறந்து...”
வசைகள்
கட்டுக்கடங்கவில்லை.
எழுந்து
தாவுகிறார்.
கிழவி
குறுக்கே
மறிக்கிறாள்.
“என்னடால,
உனக்குப்
புத்தி
பெரண்டு
போச்சு?
அது
இந்த
மட்டுக்கும்
சமாளிச்சிட்டு
வந்திருக்குதேன்னு
ஒரு
தன்ம
வேணாம்?
இத
உம்பய
கூடத்தான்
போயி
கட்டிக்கிட்டான்.
அவன்
ஒரு
வூட்டில
கொண்டாந்து
வச்சி
கொளாவல?...”
“நீ
இப்ப
நாயம்
பேச
வந்திட்டியாக்கும்?
அவங்
கண்ணு
காணாம
தொலைஞ்சி
போயிருக்கிறா.
ஓடிப்
பூடிச்சாமேன்னு
கேட்டவங்க
திரும்பி
வந்திடிச்சி
போலிருக்குன்னு
சொல்லுறப்ப...
மானமே
போயிடுமே!
யாராருக்கோ
நாயஞ்
சொன்னான்.
பொண்ண
மட்டும்
கூட்டி
வச்சிட்டான்னு
சொல்லமாட்டா?
ஒரு
பய
என்ன
மதிப்பானா?...
இனிமே
இவள
எந்தப்பய
கட்டுவா?
போயித்தொலஞ்சவ
அங்கியே
இருக்கிறத
வுட்டுட்டு
ஏண்டி
வந்தே?”
அவளுக்கு
உதடுகள்
துடிக்கின்றன.
முகத்தை
மூடிக்கொண்டு
விம்முகிறாள்.
“ஏண்டி
வந்தே?
அப்பன்
முகத்தில
கரி
பூசினாலும்
சமாளிச்சிக்குவான்,
இருந்து
அவனச்
சாவ
அடிக்கணும்னு
திரும்பி
வந்தியா?
உனக்கு
சூடு
சொரண
இருந்தாப்
போயிருப்பியா,
போனவ
திரும்பி
வந்திருப்பியா?.
இதபாரு,
இந்த
வீட்டில
இனிமே
எடமில்ல.
நட...
எவங்கிட்ட
வேணாப்
போ...”
அவள்
கையைப்
பற்றித்
தள்ளுகிறார்.
அவள்
எதிர்ப்புக்
காட்டாததால்
தடுமாறி
விழுகிறாள்.
“லே,
சம்முகம்.
நீ
செத்த
சும்மாருடா.
அது
வரவே
மாட்டேனுதா
சொல்லிச்சாம்.
ஆத்துல
கொளத்துல
வுழுந்து
பழிகொண்டு
வராம
வந்திச்சேன்னு
எரக்கப்படு.
ஆந்தக்
குடியா
பெத்த
பயதா,
படிச்சிட்டு
வந்திருக்கிறான்ல.
தேவு,
ஐயிரு
வூட்டில
வந்திருச்சாம்.
ஐயிரு
அவங்க
கூட
சொல்லி
அனுப்பிச்சிருக்காரு.
இதபாரு
லட்டர்
கூடக்
குடுத்திருக்காரு...”
ஒரு
கடிதத்தைக்
கொண்டு
வந்து
கொடுக்கிறாள்.
“சம்முகத்துக்கு
ஆசீர்வாதம்.
மகள்
காந்தியைக்
தேவுவுடன்
அனுப்பி
வைக்கிறேன்.
எதுவும்
முரண்டாமல்
ஏற்றுக்கொள்.
அவள்
மகா
தைரியசாலி.
சோதனைக்குள்
அகப்பட்டு
அதிலிருந்து
எழும்பி
வருவதுதான்
தீரம்.
உன்னுடைய
ஊர்
கெட்டு,
சாதிக்கெட்டு,
கொள்கைக்
கெட்டு
எல்லாம்
மூட்டைக்கட்டி
வைத்துவிட்டு,
மனிதாபிமானக்
கண்ணோடு
பாரு.
புதைமணலில்
கால்
வைத்தவள்
தெரிந்து
தப்பி
வந்திருக்கிறாள்.
இன்றைய
நிலையில்
பெண்ணினம்
எவ்வளவுக்குப்
பாதுகாப்பில்லாமல்
இருக்கிறது
என்பதற்கு
அவள்
அநுபவமே
போதும்.
இந்த
நிலையை
மாற்றப்
பெரிய
அளவிலே
எதானும்
செய்ய
வேண்டுமென்று
தோன்றுகிறது.
அவளை
அடிக்காதே.
புண்படுத்தாதே.
விசுவநாதன்.”
சட்டென்று
தெருவாசலைப்
பார்க்கிறார்.
நாகு
கையில்
மண்ணை
வைத்துக்கொண்டு
சிரித்துக்
கொண்டே
நெல்
துற்றுவதுபோல்
இறைக்கிறான்.
சைக்கிளை,
பொன்னடியானைக்
காணவில்லை.
தலைவிரிகோலமாகக்
கிட்டம்மாளும்,
தேவுவும்
வருகின்றனர்.
தேவு
சற்றே
முகமலர
வணக்கம்
தெரிவிக்கிறான்.
“எங்குடில
மண்ணள்ளிப்
போட்டுட்டாங்க,
அந்தத்
தேவிடியா!
ஊராம்
புள்ளக
அத்தினி
பேரயும்
கொலச்சிப்
போடணும்னு
வந்த
பரநாயி.
எம்புருசனுக்கு
ஒண்ணு
தெரியாது.
இவுருபோயி
கள்ளச்சாவி
கொண்டாந்தாராம்.
மாரியாயி!
நீ
பாத்துக்கிட்டுத்தான்
இருக்கிற...?”
தெருவில்
உள்ள
பொட்டு
பொடிசுகள்
கூடிவிடுகின்றன.
படுக்கையோடு
கிடந்த
கிழவன்
ஏதோ
கனவு
கலைந்தாற்
போன்று
எழுந்து
உட்காருகிறான்.
“நீங்க
இப்ப
கொஞ்சம்
வாங்க.
நாம
போலீஸ்
ஸ்டேசனுக்குப்
போயி
மேக்கொண்டு
செய்ய
வேண்டியதைப்
பார்ப்போம்..”
என்று
தேவு
நிதானமாகக்
கூறுகிறான்.
“நான்
காலம
வந்திருந்தேன்...”
“நானும்
அதான்
கிளம்பினேன்...
இது
ஒரே
அடாவடியால்ல
இருக்கு.
எப்படியோ
கண்ணி
வச்சி
நாடகம்
போடுறாங்க.
கோவில்
திருவிழான்னு
வரப்பவே
சம்சயமாயிருந்திச்சி...”
“இப்ப,
முக்கியமா
மணிகாரரு.
வரதராசனெல்லாம்
கூட
ரொம்ப
அக்கறை
காட்டல.
நகை
என்னென்ன
இருந்திச்சின்னு
சரியா
லிஸ்ட்
குடுக்கவே
ஆளுங்க
இல்ல.
சாவி
செத்துப்போன
அம்மா
வாசுதேவங்கிட்டக்
குடுத்து,
அவரு
கொண்டாந்தாராம்.
ஆனா,
அது
நிலவறச்
சாவிதான்னு
குருக்கள்
சொல்றாரு...
விருத்தாசலம்,
வாசுதேவன்
நாலு
பேருக்கு
முன்ன
சாவியக்
காட்டித்
திறந்து
நகையப்
பாத்துட்டு
வச்சாருன்னும்,
பிறகு
பெட்டிய
நிலவறயில
வச்சிப்
பூட்டிட்டு
அந்தச்
சாவிய
வூட்டில
கொண்டு
பீரோவில்
வச்சாருன்னும்
சொல்றாங்க.
வீரபுத்திரன்
முந்தாநா
அவுருகிட்ட
சாயங்காலம்
காசு
கேக்கப்
போனானாம்.
கூடத்துல
அவனப்
பாத்ததாக
அம்மா
சொல்லிச்சாம்.
பீரோல
சாவி
தொங்கிச்சாம்.
ஒண்ணும்
நம்பறாப்பல
இல்ல.
கோயிலுக்கு
இத்தினி
சொத்து,
நகை
இருக்கு,
ஏன்
எண்டோமெண்ட்
போர்ட்
கீழ
வரலங்கிறதே
பெரிய
கேள்வி.
முதல்ல,
நாம
போயி
அந்தப்
பொம்பிளய
விடுவிச்சிட்டு
வரணும்.
ஸ்டேஷனிலே
ரா
நேரத்துக்கு
வச்சிக்கக்
கூடாதுன்னு
சட்டம்
இருக்கு.”
கிட்டம்மா
இதைக்
கேட்டதும்
குமுறிப்
பாய்கிறாள்.
“பொம்பிள...
பொம்பிளயா
அவு?
எங்குடிக்கில்ல
மண்ணு
போட்டுட்டா!
ஊராம்புள
ஒருத்தன்
பாக்கியில்ல.
இவ
போலீசுகாரனயும்
வளச்சிட்டிருப்பா...
ஊரு
சனமறியாம,
ஒடம்ப
வித்து
சீவிக்கிறவளுக்குப்
போயி
சட்டம்
பேசுறிய?...”
“த,
ஏனிப்படி
லோலு
லோலுன்னு
கத்துறீங்கம்மா?
ஒரு
பொம்பிளக்கிப்
பொம்பிளங்கற
எரக்க
புத்தி
உங்களுக்கு
இல்லாம
போனதுதா
எல்லாத்தயும்
விட
மோசம்!...”
அவர்கள்
படி
ஏறாமலே
நிற்கின்றனர்.
சம்முகம்
சட்டையை
மாட்டிக்
கொண்டு
செல்கிறார்.
---------------
20
நீர்,
பசுமை,
மரம்,
செடி,
புதர்
எல்லாமே
இருட்டுத்
தான்.
ஆனால்
வடிவுக்கு
எல்லாம்
துல்லியமாகத்
தெரியும்.
அந்த
இடத்து
மண்தறி
ஒவ்வொன்றுக்கும்
அவனுடன்
உறவாடிய
பரிச்சயமுண்டு.
மடையில்
குலங்
குலங்கென்று
தவளைகள்
பூரித்துப்
பாடும்
இனிய
ஒலி
அவனுக்கு
மிக
ரம்மியமான
சங்கீதம்.
இந்த
மண்ணும்
நீரும்
சில்லிப்பும்
தன்
உடலிலிருந்து
வந்தாற்போலும்,
அந்தக்
கலவையிலேதான்
உருவானாற்போலும்
பேதமற்று
உணரும்
உணர்வு.
இதற்கு
முகம்
வாய்
வார்த்தை
கிடையாது.
வீச்சு
வீச்சென்று
சுள்ளிப்
பயலாகக்
கோவணத்தைப்
பாய்ச்சிக்கொண்டு
குட்டை
மாட்டுக்கு
ஜோடி
சேர்த்து
முதன்முதலாக
நாயக்கர்
நிலத்தில்
ஏரோட்ட
இறங்கிய
காலம்
நினைவிருக்கிறது.
வெண்மையும்
நீலமும்
கருமையுமாக
மின்னும்
உடலுடன்
காது
வெட்டிக்
கொம்பு
சீவிக்கொண்டு
வந்த
வெம்பளச்சேரி
சோடியை
ஆற்றுக்கரையில்
தேய்த்துக்
குளிப்பாட்டிக்
கொட்டிலுக்குக்
கொண்டுபோகும்போது
அவனுக்கு
மண்ணும்
மாடும்
தனக்குச்
சொந்தமில்லாதவை
என்ற
உணர்வே
இருந்ததில்லை.
உழவோட்டவும்,
களியில்
நடக்கவும்,
உரம்
வீசவும்,
மருந்து
தெளிக்கவும்,
நாற்றுப்
பறித்துக்
கட்டுச்
சுமந்து
வந்து
வீசவும்
அவன்
களியாட்டங்களைப்
போல்
கற்று,
அவை
அவன்
இளமையுடன்
இசைந்திருக்கிறது.
“ஏண்டா
வடிவு?
அரி
பழுத்துட்டாப்பல
இருக்கு.
நாளக்கிக்
காலம
புதிர்
கொண்டாந்திடு!”
என்று
முதலாளி
அவனைத்தான்
கொண்டு
வரச்
சொல்வார்.
“போன
குறுவக்கி
மாமன்
சாவுன்னு
போயிட்டீங்க.
மழ
நெருக்குதுன்னு
நானே
புதுர்
எடுத்தே.
மேனியே
காணல...”
என்றார்
சென்ற
ஆண்டில்.
பழக்கப்பட்ட
காலே
வழுக்கும்
வகையில்
வானம்
யாருக்காகவோ
கண்ணிர்
வடிப்பதுபோல்
அவனுக்கு
இன்று
தோன்றுகிறது.
தடியை
ஊன்றிக்கொண்டு
விரைகிறான்.
அம்மா
பொட்டுக்
கடலையும்
வெங்காயமும்
வைத்துத்
துவையல்
அரைத்திருந்தாள்.
சுடுசோறும்,
வறுத்த
கருவாடும்
துவையலுமாக
வயிறு
நிறைய
உண்டுவிட்டு
அவன்
புறப்பட்டிருக்கிறான்.
நிறைந்த
வயிரும்
வெளிக்
குளிர்ச்சியும்
அவனுக்கு
மனம்
நிரம்பிய
உற்சாகத்தை
ஊட்டவில்லை.
இவ்வாறு
மழைக்கார்
குவிந்து
பொழிவதும்
பின்னர்
சற்றே
ஓய்ந்து
மறுபடி
ஒரு
பாட்டம்
கொட்டுவதுமாக
இருக்கும்
நாட்களில்
கண்மாய்
மடையில்
துணியைக்
கட்டிவைத்து
மீன்
விழுந்திருக்கிறதா
என்று
பார்க்கச்
செல்வான்.
வடிவுக்கு
இப்போதெல்லாம்
அந்த
மாதிரியான
ஆர்வங்களே
பிறக்கவில்லை.
கால்
அவன்
மனக்
குழப்பத்தைப்
பிரதிபலிக்கும்
வகையில்
வயலுக்குள்
நழுவ
வழுக்குகிறது.
பயிர்
மிதிபடும்போது,
பாம்பை
மிதித்தாலும்
ஏற்படாத
குளிரோட்டத்தில்
சிலிர்க்கிறது.
தவளைகளின்
ஒலியையும்,
நீர்பாயும்
ஓசையையும்
தவிர
வேறு
உயிர்ப்பே
தெரியாத
இருளில்
அவன்
நடந்தும்
ஓடியும்
போகிறான்.
இலுப்பை
மர
மேடு,
பச்சை
மரத்துக்குள்
படபடவென்று
சிறகை
அடித்துக்கொள்ளும்
பறவைகள்...
கால்வாய்;
இருமருங்கிலும்
தாழை
செழித்த
புதர்கள்...
குளத்தில்
நீர்
தெரியாமல்
மைத்தட்டாக
மூடிக்
கிடக்கிறது.
மேலே
போட்டிருக்கும்
சாக்குக்
கொங்காட்டில்
நீர்த்துளி
விழுந்து
கனமாகக்
கனக்கிறது.
ஐயனார்
குளத்துக்
கோயிலில்
முன்பெல்லாம்
ஒரு
விளக்கு
எரிவதுண்டு.
இந்த
எண்ணெய்
விலையில்
கோயிலுக்கு
யார்
விளக்கெரிப்பார்கள்?
குதிரைவீரனுக்கும்
ஐயனாருக்கும்
பூசையும்
விழாவும்
கிடையாது.
இப்போதைக்கு
இந்த
மேட்டில்
இறந்தவர்களைப்
புதைக்கும்
பூசைதான்
நடக்கிறது!
ஒரு
குடிசையில்கூட
ஒளியின்
உயிர்ப்பில்லை.
இவன்
போய்
திண்ணை
முழுவதும்
இரட்டை
விரிச்சாக்கால்
போர்த்துக்
கொண்டிருக்கும்
வீட்டுப்படி
ஏறுகிறான்.
“பஞ்சி...!
பஞ்சி...!”
கைத்தடியால்
தட்டுகிறான்.
திண்ணையிலிருக்கும்
ஆட்டின்
கழுத்துமணி
அசைகிறது.
நாய்
செவியடித்து
ஓசை
எழுப்புகிறது.
கதவைத்திறந்து
சிம்னி
விளக்கை
உயர்த்தும்
பஞ்சமிக்கும்
ஒரே
ஆச்சரியம்!
“அண்ணே!...
வாங்கண்ணே!
அட
மழல
நனஞ்சிட்டா
வந்தீங்க...”
அவன்
சாக்கை
உதறித்
திண்ணையில்
போடுகிறான்.
“இன்னாருங்க!...
அண்ணா
வந்திருக்கு,
அண்ண..!”
சோலை
திடுக்கிட்டாற்போல்
எழுந்திருக்கிறான்.
“சட்டையெல்லாம்
நனஞ்சிருக்கி...!”
“இல்ல...
மேல
துண்டுதா...
அதுங்கூட
ரொம்ப
இல்ல.”
விளக்கைப்
பெரிதாக்கி
வைத்துப்
பாயை
இழுத்துப்
போட்டு
“உக்காருங்க
அண்ணே...”
என்று
பஞ்சமி
உபசரிக்கிறாள்.
வடிவு
வேட்டிச்
சுருட்டில்
நனையாமல்
வைத்திருக்கும்
ஐயர்
கடைச்
சேவு
பொட்டலத்தை
எடுத்து
வைக்கிறான்.
“என்னா,
இந்நேரத்துல
வந்திருக்கீங்க.
பொளுதோட
வாரதில்ல?”
“பொழுதோட
வாரணும்னுதா
பாத்தே.
நேரமாயிப்
போச்சு...”
“மழ
நல்லதுதா.
பெய்யிற
நாளுல
ஊத்துனாத்தான
பயிருக்கு
நல்லது!
உங்க
பக்கம்
என்னப்பு
கோயில்ல
திருட்டுப்
போச்சாம்,
வீரபுத்திரனப்
புடிச்சி
அடச்சிருக்காங்களாம்!”
“அந்த
வவுத்தெரிச்சல
ஏங்
கேக்குறிய...?
இவுங்க
சாமி
இந்த
அக்கிரமத்தப்
பாத்துக்கிட்டிருக்கிறதுதா
எனக்குப்
புரியல.
நா
இப்ப
அதுவிசயமாத்தா
வந்தது.
இவனுவ
அக்கிரமத்துக்கு
நாம
பேசாம
இருந்திட்டே
இருந்தா
என்னக்கி
விடிவுகாலம்
வருது...”
அவன்
எதுவும்
பேசாமல்
இவன்
முகத்தையே
பார்க்கிறான்.
“இப்பதா
பாத்திட்டு
வாரே.
இங்க
எதுனாலும்
சீக்கு
செவாப்புன்னு
மொட
வந்தாகுளத்தில
வுழுந்துதா
சாவணும்
போல
இருக்கு!...”
“தாசில்தாருட்ட
பிடிசன்
குடுத்திருக்கு...”
“கிளிச்சாங்க.
இவனுவளுக்கு
அக்குசு
இருந்தால்ல?
போடால,
வயல்ல
எறங்கிப்
பொணத்தக்
கொண்டிட்டுப்
போங்கன்னு
சொல்லிட்டு
இவரு
போயிட்டாரு.
வயல்ல
எறங்கியிருந்தா
அவனுவ
சும்மா
விடுவானுவளா?
அங்க
குடிசயப்
பேத்துப்
போட்டானுவொ.
என்ன
மயிரு
பண்ணினாரு
தலவரு?
மவன
ஓட்டிவிட்டாரு,
மவள
ஓட்டிவிட்டாரு.
சேத்துக்க
மாட்ட,
நடுத்தெருவிலே
நிக்கவச்சி
செருப்பாலடிப்பேன்னாரு,
இப்ப
ஒரு
ஒடன்படிக்க
மாதிரி
திரும்பி
வந்திடிச்சாம்!...”
“யாரண்னே?
காந்தியா?...”
“ஆமாம்.
ஒழப்பாளி
ஒழப்பாளியச்
சொறண்டுற
கதயாயிருக்கு.
இப்ப
கிளாசு
எடுக்கிறாங்களாம்,
மயிரு!
இவரு
சொந்த
வூடு
கட்டியாச்சு.
இப்ப
வெளியாளு
ஒருத்தன்
வாரா.
சைக்கிளத்
தள்ளிட்டு
அவன்
வாரதும்
போரதும்!
அவன்
பு...ர...ச்...சி...ன்னு
பலவயில
எழுதிப்
போட்டுப்
பாடங்
கத்துக்குடுக்கறதும்
அம்சுவக்
கூட்டி
வுடுறதும்...?”
முகம்
சிவப்பேறுகிறது
அவனுக்கு.
“இவங்க
என்னிக்கு
இதெல்லாம்
எழுதிக்
கத்துக்கிட்டுப்
புரட்சி
பண்ணுற
வரயிலும்
நாம
சாவுறம். ‘வீணா
கத்தி
ஆப்ப்பாட்டம்
பண்ணாம
போங்க’ன்னாரு
அவன்
ஆரோட
கையாளு?
போலீசு...
எங்காளு
குத்தவாளி
இல்லண்ணு
எழுதிக்
குடுக்கிறதுன்னா
குடும்பா.
கோர்ட்டில
வந்து
பாரும்பா.
முணு
புள்ளக,
கிட்டம்மா
பொம்புள
பாவம்.
மாதர்
சங்கம்னு
உருட்டி
மிரட்டிட்டு
வருமே!
அது
ஒரே
நாள்ள
வேவுடியாயிடிச்சி..?”
கைவிளக்கில்
ஒரு
பீடியைக்
கொளுத்திக்
கொண்டு
அவனுக்கும்
ஒன்று
கொளுத்திக்
கொடுக்கிறான்
சோலை.
அந்தக்
காரப்
புகையின்
மணம்
சூழலின்
அசமஞ்சத்தனத்துக்கு
விருவிருப்பூட்டுகிறது.
பஞ்சமி
கூறுகிறாள்:
“இத,
நாட்டாம
பொம்பளக்கி
மாசம்.
முன்ன
மொதப்
பொஞ்சாதி
புள்ள
பெத்துதா
கழிச்சிக்
கண்டு
பாவம்
செத்துப்
போச்சி.
அப்ப
தரிசாக்
கெடந்திச்சி.
தூக்கிட்டுப்
போனாங்க.
இதுக்கு
முதப்புள்ள
வகுத்திலியே
செத்துப்போச்சி.
அப்ப
புதுக்குடி
ஆசுபத்திரில
வச்சிருந்தாவ.
இப்ப
மூணாவது.
ஆசுபத்திரிக்குப்
போவாணாம்னு
அது
எங்கியும்
போவல.
காலெல்லாம்
நீர்க்கொண்டு
இருக்கு...
பாவம்...”
“அதா,
இவனுவள
நம்பிப்
பிரேசனமில்ல.
கோயில்ல
பந்தப்
போடுறா
செங்க
சிமிட்டி
எங்கேந்து
வாரதுன்னு
தெரியல.
நமக்கு
ஒரு
ஆவத்துன்னா
அஞ்சு
ரூவா
குடுக்க,
ஒதவி
செய்ய
நம்மகிட்டயே
ஆருமில்ல.
அறுப்புக்காலத்துல
எதானும்
சம்பாரிச்சா,
வட்டி
குடுக்கவே
நெல்லு
செரியாப்போவுது.
நாளெல்லாம்
ஒழச்சிட்டு,
ரேசன்
கடையில
ஒண்ணுட்டொரு
நாளு
போடுற
அரிசிய
வாங்கியாந்து
அர
வயித்துக்குக்
கஞ்சி
காச்சறோம்.
ஆ,
ஒண்ணா,
அரிசனனுக்கு
கடன்,
அரிசனனுக்கு
ஆடு,
அரிசனனுக்குப்
பள்ளிக்கொடம்ன்றா!
எந்தப்பய
வங்கில
கடன்
குடுக்கிறான்,
ஈடு
எதுமில்லாம?
எவன்
நமக்குச்
சாமீன்
போட
வரான்?
ஆரோ
குடுக்கிறான்,
ஆரோ
வாங்கிக்கிறான்;
அப்பிடியப்பிடியே
போவுது!
பள்ளிக்குடுத்துக்கு
ஏண்டால
அனுப்புறதில்லன்னு
கேக்கறாங்க.
ஒரு
துணி
தச்சிக்
குடுக்க
முடியல.
பாப்பாத்தி
மவன
பள்ளிக்கொடத்துக்கு
அனுப்பிச்சி,
ஆனா
பாடும்பட்டு
எட்டாவது
வாரயில
கண்ணு
தெரியலன்னு
சொல்லிட்டேயிருந்தான்,
பெயிலாயிட்டான்.
ரெண்டு
வருசமா,
இப்ப
ஒழவுக்குத்தான
வாரா...”
அந்த
இரவின்
அந்தரங்கமான
தனிமையில்,
வடிவின்
நெஞ்சப்
புகைச்சல்
கிளர்ந்து
உள்ளிருக்கும்
ஆற்றாமைகளைத்
தள்ளி
வருகிறது.
இதெல்லாம்
எல்லாருக்கும்
தெரிந்ததுதான்.
ஆனால்
என்ன
செய்வது;
மழை
சேர்ந்தாற்போல்
ஐந்தாறு
நாட்கள்
பெய்தால்,
வீட்டுக்குள்
முடங்கி
இருக்க
வேண்டியதுதான்.
வருசம்
முழுவதுமா
கூலி
இருக்கிறது?
சோலை
எழுந்திருக்கிறான்.
“எங்க
போற
இப்ப?...”
“நாட்டாம
வூட்ட
போயிக்
கூட்டியாரேன்.”
“கூட்டிட்டு
வா
மச்சான்,
இன்னிக்கி
ரெண்டில
ஒண்ணு
தீத்துக்கணும்.
சொன்ன
பேச்சு
மாறுற
நாணயங்கெட்டவ
நம்ம
எனத்துலதா
இருக்கிறதா...”
மீசையில்
கை
போகிறது.
“நீ
வந்திருக்கிறது
அப்பாருக்குத்
தெரியுமா
அண்ணே?”
“நா
நெனச்சிட்டு
வந்தே.
அவருக்கு
சாராயம்
வாங்கிக்க
காசு
கெடச்சா
போதும்.
கடவீதில
போயி,
அந்தையிரு
வந்திருக்காரு,
இந்த
பண்ண
முதலாளி
வந்திருக்கிறாருன்னு
கை
நீட்டி
ஒண்ணு
அரைன்னு
கேக்குறாரு,
பிச்ச
வாங்குற
மாதிரி.
மொதலாளி
வூட்டுக்
கெழவனாருக்கு
சாராயம்
வாங்கிக்
குடுக்க
இவரு
ஆளு...
பேரணி
போனாங்க;
நாம்
போறேன்னு
கெஞ்சுனே.
வுட்டாரா?
போடாலா,
உனக்குத்தா
அம்சுவக்
கட்டப்போறன.
அப்ப
போலாண்டான்னாரு...
இப்ப
வெளியாளக்
கூட்டிப்
போவுறதுமா...”
கைத்
தின்பண்டம்
பறிபோன
குழந்தை
போல்
துக்கம்
பீறிடுகிறது
அவனுக்கு.
“நீ
என்னாமோ
சொன்ன,
என்னன்னாலும்
அந்தாயா,
அந்தப்
பொம்பிள
எல்லாரும்
நாந்தொட்டுகூட
எதும்
எடுக்கல,
அன்னிக்கு
வூடு
இல்லாம
அவங்கூட்டுக்குப்
போயிருந்தமில்ல?...
அப்ப
பாத்தனே,
மொதலாளி
நல்லவரு,
பொம்பிளங்க
வாணான்னிருப்பா.
வாய்க்காரு
குடிப்பொண்ணு,
சாம்பாரு
எனத்திலே
போயி
ஏண்டா
கட்டணும்,
நம்ம
புள்ளக்கி
மாப்பிளயா
கெடக்காதுன்னிருப்பாங்க...
நீ
ஏ
அண்ணே
இதுக்குப்
போயி
குமஞ்சிட்டிருக்கிற?...”
“அப்படி
இல்ல
பஞ்சி,
ஒனக்குத்
தெரியாது;
அம்சு
என்னத்தான்
கெட்டும்.
முன்னல்லாம்
அது
நடவுக்கு
வரும்.
நாயக்கர்
வூட்டுச்
சாணி
அள்ளிப்போட்டுப்
போட்டு
கொளத்துல
வந்தும்
குளிக்கும்.
இப்ப
ஒரெடத்துக்கு
அத்தவுடறதில்ல.
போனா
ஆயி
கூடதா
போவுது.
கண்ணுல
படாம
காபந்து
பண்ணியிருக்காங்க.
ஆனா,
அந்தப்
பய
கிளாசெடுக்க
வாரான்.
ரோஸ்ல
பூச்சீல.
கட்டிக்கிட்டு
முன்னாடி
வந்து
உக்காந்திருக்கா.
கூடவே
ருக்மணிப்பொண்ணு.”
“அண்ணே,
போனாப்
போவுது.
ஊருல
ஒனக்குப்
பொண்ணா
இல்ல?
இத
இப்பந்தா
மாங்கொம்புலேந்து
இவரு
மாமன்
வந்திருந்தாரு.
உம்மச்சானுக்கு
இந்த
வருசம்
கட்டுவாங்கல்ல?
தனவாக்கியம்
இருக்கு.
‘மேசராயி
சடங்கு
சுத்தி
ரெண்டு
வருசமாயிடிச்சி,
வெளுப்பா
இருக்கும்
பொண்ணு’ன்னு
சொன்னாரு.
கம்மல்
மூக்குத்தி
அல்லாம்
போட்டிருக்காவளாம்,
ஸிலுவர்
ஏனம்
இருவத்தொண்ணு
எடுத்து,
மாப்பிளக்கி
வாட்ச்
மோதரம்
அல்லாம்
போட்டுக்
கலியாணம்
பண்ணுவோம்னு
சொன்னாரு,
மழவக்காளிச்
சிரிச்சின்னா
ஒரு
நா
போயி,
இந்தப்
பயலையும்
காட்டிட்டு
எல்லாஞ்
சொல்லணும்னு
நெனைச்சே,
நீயே
வந்திட்ட...”
“இத
பாரு
பஞ்சி,
ஒருமா
நெலம்
சொந்தம்னு
இல்லாம,
ஒரு
காத்து
மழக்கி
கமுக்கா
குந்த
எடம்
இல்லாம,
நாங்
கலியாணம்
கட்டப்
போறதில்ல...”
“போண்ணே...
அதெல்லாம்
எப்ப
வந்து,
நீ
எப்ப
கலியாணம்
கட்டுகிறது?”
“உனக்குத்
தெரியாது.
புரட்சி
வரும்.
ரத்தப்
புரட்சி.
அதெல்லாம்
வராம,
இவங்க
ஒண்ணும்
வழிக்கு
வாரப்
போறதில்ல...”
பஞ்சமி
அவன்
கண்களில்
ஒளிரும்
தீவிரத்தைக்
கண்டு
உள்ளுற
பயந்து
போகிறாள்.
வாயிலில்
அடிச்சத்தங்கள்
கேட்கின்றன.
நாட்டாண்மை
கத்தி
மீசையும்
போர்வை
போர்த்த
மேனியுமாக
முன்னே
வருகிறான்.
வீரன்,
ராசப்பன்,
சங்கிலி
ஆகிய
நால்வர்
வந்திருக்கிறார்கள்.
வீரன்
நாட்டாண்மைச்
சாம்பாரின்
தம்பி.
சங்கிலி
வீரனின்
மச்சான்.
ராசப்பன்
அந்தக்
குடியிருப்பில்
ஐந்தாவது
வரை
படித்தவன்.
“என்னடா
வடிவு,
வாய்க்கார்
மகளக்
கட்டப்
போறதா
பேச்சு
வந்திச்சி...”
இவனுக்கு
மீசை
துடிக்கிறது.
நாட்டாண்மை
உட்கார்ந்து
கொள்ளப்
பாயை
நகர்த்திப்
பஞ்சமி
மரியாதை
செய்கிறாள்.
“எதும்
நெருக்கடி
இல்லாம
இந்த
நேரத்துல
வரமாட்ட?
என்னமோ
சொல்லிட்டா,
கோயில்ல
திருட்டுப்
போச்சாம்.
முப்பது
ஏனமாம்?
போலீசு
வந்திச்சாமே?...”
“ஏனமில்ல
பெரி...
சாமானுங்களாம்.
இவனுவ
கொள்ளயடிச்சிட்டு,
கங்காணம்
பாக்குற
பண்ணக்காரனப்
புடிச்சிப்
போலீசில
அடச்சிருக்கிறானுவ...”
“என்னமோ
பொம்பிள
திருடினான்னு
சொன்னானுவ!”
“பொம்புள
யாரு?
அதுவும்
சூட்சிதா.
நாம
இத்தினி
நா
அக்கிரமத்துக்குப்
பொறுத்தோம்.
இனியும்
பொறுக்கிறது
அநியாயம்.
இப்ப,
நாம
எதிர்ப்பைக்
காட்ட
இது
ஒரு
நல்ல
சந்தர்ப்பம்.
நம்ம
எனத்து
ஆளு,
வீரபுத்திரன்.
அவன
அநியாயமா
போலிசில
புடிச்சி
அடச்சிருக்கா.
நாம
நூறு
ஆயிரம்
பேராப்
போயி
போலீஸ்
டேசன
வளச்சி,
அவன
விடுவிச்சிட்டு
வந்திடணும்.”
பீடிப்புகையை
ஊதிக்கொண்டு
சுவாரசியமாக
நாட்டாமை
இவனைப்
பார்க்கிறான். “உங்க
பக்கம்
அல்லாம்
வாரானுவளா?”
“வருவானுவ.
அம்மங்கோயில்,
கண்டானூருக்கெல்லாங்
கூட
ஆளுவ
போயிருக்கா.
டேசன
ஒடச்சி,
அவன
விடுதல
பண்ணனும்.
காதும்
காதும்
வச்சாப்புல
ராவோடு
போயித்
தாக்கிடணும்...”
“அது
சரிதாம்பா.
இந்த
எடத்தில
அவம்
போலீசு
டேசன்
இருந்திச்சின்னா.
நீ
சொல்றது
சரி.
இவனுவ
வாரான்னு
சொன்னதுமேயில்ல
அவங்க
உஜாராயிடுவாங்க?
சும்மா
திபுதிபுன்னு
காருலயும்
ஜீப்பிலும்
வந்து
எறங்கி
வேட்டையில்ல
ஆடுவானுவ?”
“ஆமா,
நமுக்கு
அத்தினி
பேருக்கும்
கைகாலில்ல?
தடி
கம்பு,
கல்லு,
மம்முட்டி,
அருவா
எல்லாங்
கொண்டு
போகமாட்டோம்?”
“...அது
சரி.
நீங்க
ஆளுவ
போறதுக்குள்ள
அவன்
உஜாராயிருப்பாண்டா?.
இத,
இதுக்குள்ளாற
போலீசுக்கு
சமாசாரம்
போயிருக்கும்;
இந்த
பன்னாடப்
பயலுவ
தாக்கப்
போறானுவன்னு...”
“அதெல்லாம்
போயிருக்காது.
ரொம்ப
கமுக்கமா
ஏற்பாடாவுது...”
“சம்முக
வாய்க்காரு
கெட்டிக்காரருதா,
நல்ல
தலவருதா.
ஆனா,
அன்னைக்கு
இங்க
செத்தவள
வச்சிட்டு,
அந்தப்
பிச்சுமுத்துகிட்ட
கால்ல
வுழுந்து
கெஞ்சினோம்.
அப்ப.
அவங்கிட்டப்போயி,
இல்ல
சுந்தரத்தையா,
சின்ன
நாயக்கரு,
ஆரிட்டன்னாலும்
சொல்லி,
எங்களுக்குப்
பொணம்
கொண்டுபோக
வழி
பண்ணினாரா?
என்ன
மயிராச்சின்னு
போயிட்டானே?”
“இப்ப
நாங்கமட்டும்
போலீஸ்
டேசன
ஒடச்சி
ஒங்க
ஆளுவளக்
கொண்டிட்டு
வரணுமாக்கும்?
அவன்
கெடு
வச்சிட்டு
இங்க
வந்து
பொம்பிளங்களக்
குலச்சிப்
போடுவான்?
நாங்க
இப்ப
என்னமோ
சொல்லிட்டுப்
போனாருன்னு
பேரணிக்கு
இந்த
ராசப்பனும்
நானும்
போயிருந்தோம்.
எல்லாம்
வெவரமாக்
கேட்டு
எளுதிக்
குடுத்திருக்கு
இந்தத்
தபா,
பயிரு
அறுத்த
பெறகு
எங்களுக்குப்
பாதை
வுடணும்.
ரோடு
போடணும்.
இல்லன்னா...
ஜாடாவும்
ராவுத்தர்
பக்கம்
போவுறதுன்னு
முடிவு
செஞ்கிட்டோம்.”
வடிவு
கிணறுவெட்டப்
பூதம்
புறப்படுவதை
எதிர்பார்த்திராததால்
சற்றே
திகைக்கிறான்.
“இப்ப்
சம்முக
வாய்க்காரு
அனப்பி
நா
வந்தன்னு
ஆரு
சொன்னது?”
“பின்ன...
யாரனுப்பிச்சி
வந்த?...”
“யாரனுப்பணும்?
நமுக்கு
அறிவில்ல?
சோத்துல
உப்புப்போட்டுத்
தின்னல?”
“அப்ப
நீயா
இதெல்லாம்
ரோசன
பண்ணிட்டு
வந்தியா
ஏண்டால...?”
“இல்ல.
இப்ப
நாஞ்சொல்லமாட்டே
நமுக்குப்
பின்னாடி
படிச்சவங்க,
நமுக்காக
ரத்தம்
சிந்தத்
தயாரா
இருக்கிறவங்க
இருக்காங்க.
தெனவெடுத்தவந்தா
சொறிஞ்சிக்கணும்.
சேத்தில
கெடக்கிறவங்க
நாமதா...
நாம
எதிர்ப்பக்
காட்டினா
அவர்களும்
சேந்து
நம்மோட
நிப்பாங்க...”
“அது
யாருடா
அத்தினி
பெரிய
படிச்சாளு?
எங்கக்கும்
சொல்லிப்போடு,
தெரிஞ்சிக்கறோம்.”
அவன்
விழிகள்
குறுகுறுக்கின்றன.
குரல்
இறங்குகிறது.
“உங்களுக்குத்
தெரிஞ்சாளுதா...
நம்ம
ஆளு.
அம்மங்
கோயில்,
நாமெல்லாம்
ஒண்ணாத்
திரண்டெழுந்தா
போலீசும்
ஆரும்
ஒரு
மயிரும்
செய்யமுடியாது.
அப்பத்தா
வழிக்கு
வருவானுவ
நம்ம
பக்கம்
நாயம்
இருக்கு...”
நாட்டாமை
மீசைத்திருகலிலேயே
ஆழ்ந்திருக்கிறான்.
“அது
சரி...
எப்ப
போயி
வளச்சிக்கப்
போறீங்க?"
“நாள
ராவு.
கப்புனு
அப்பிடியே
போயி
வளச்சிச்சிக்
கிடணும்.
அந்தால
கண்டானூரு
கிளியந்தொற,
ஆத்துக்கு
இந்தப்
பக்கம்
இருந்து
எல்லா
ஊருச்சனங்களும்,
மொத்தம்
ஒரு
நாலாயிரத்துக்குக்கு
கொறயாம.
நம்ம
பலத்தைக்
காட்டணும்.
பொம்பிளங்கக்
கூட
வரணும்.
அப்ப
என்னமோ
எல்லாரும்
வந்து
போராடினாங்கதா.
இப்ப
ஒருத்தருக்கும்
ஒரு
வீருசமில்ல.
அல்லாம்
எதோ
கையில
காசு
கெடச்சா
கள்ளுக்கடயில
குடுத்திட்டு
பேசாம
போயிடுறாங்க...
அல்லாரும்
வரணும்...”
“சரிப்பா,
வாரம்
போ...”
“தடி,
கம்பு,
அருவா
எல்லாம்
கொண்டிட்டு
ஒரு
ஆறு
மணிக்கே
வந்திடணும்.
நமக்கென்னாத்துக்குன்னு
நினைச்சிரக்
கூடாது.
நம்மளப்போல
தொழிலாளி
வீரபுத்திரன்...”
“சரிப்பா...”
“கோயில்
திருவிழாவுக்கு
இங்கேந்து
ஒரு
பொம்பிளயும்
மகில்
எடுத்திட்டுப்
போகாம
பாத்துக்குங்க.
நமுக்கும்
அதுக்கும்
ஒண்ணும்
சம்பந்தமில்ல.”
“சரிப்பா...”
அவர்
‘சரிப்பா
சரிப்பா’
என்று
சொல்லும்போது
இவனுக்குச்
சிறிது
சந்தேகம்
தோன்றுகிறது. “என்னாடா
இந்தப்பய
யாருன்னு
நினைச்சிராதீங்க.
நாம
பலத்தக்
காட்டணும்...”
“அதான்
சொல்லிட்டியேடா...!
எல்லாம்
கேட்டுக்
கிட்டீங்கல்ல?
பாத்துப்புடுவோம்...”
“அப்ப...
இத்தச்
சொல்லி
போட்டுப்
போவத்தா
வந்தேன்.
நா
வார.”
வடிவு
எழுந்திருக்கிறான்.
தடியை
எடுத்துக்
கொள்கிறான்.
சாக்குக்
கொங்காணியையும்
எடுத்துப்
போட்டுக்
கொள்கிறான்.
எல்லா
ஓசைகளையும்
அசைவுகளையும்
துடைக்கும்
வண்ணம்
ஒரு
திரை
விழுந்து
விடுகிறது.
இவன்
வாயிற்படியைத்
தாண்டும்போது,
அந்தத்
திரையை
மெல்லக்
குத்துவதுபோல்
குழந்தையின்
சிணுங்கலொலி
கேட்கிறது.
-------------
21
அம்சு
இரவுச்
சோறுண்ட
பின்
தட்டை
எடுத்துக்
கொண்டு
செல்கிறாள்.
ஒரு
முழு
நாளாகிறது.
தாயும்
கூடக்
காந்தியிடம்
பேசவில்லை.
காந்தி
மூலையில்
நின்று
உள்ளூறக்
குமுறுகிறாள்.
கிட்டம்மா
“இடியாத்
தலல
வுழுந்திடிச்சுக்கா!”
என்று
ஓலமிட்டுக்
கொண்டு
வருகிறாள்.
“வாய்க்காரு
புதுக்குடி
போயிருக்காரு.
சொல்லிட்டுப்
போவலான்னு
வந்தே.
நேத்தெல்லாம்
ஒரே
அலயா
அலஞ்சிட்டம்.
இப்பிடி
இடியா
வந்திரிச்சே!”
லட்சுமி
நாகுவைச்
சோறு
தின்ன
வைத்துக்
கொண்டிருக்கிறாள்.
“நா
நல்லூரு
நாயக்கர்
நெலத்திலே
சம்பா
நடவு.
நாயக்கரம்மா
கூட
ரெண்டு
நா
கூலி
வருதேன்னு
போயிட்டே
செலவுக்கே
கட்டல.
இன்னிக்கு
வாரப்ப
வெளக்கு
வச்சிப்
போச்சி.
பஸ்ஸு
வரும்னு
நின்னு
பார்த்தே
வரல.
மழவேற
தூத்தப்
போட்டுக்கிட்டே
இருக்கு.
கடத்
தெருப்பக்கம்
வாரச்சேதா
காதுல
வுளுந்திச்சி.
குஞ்சிதத்த
வேற
புடிச்சிட்டுப்
போயிருக்காவளாம்?”
“அவ
பேச்ச
எடுக்காதீங்கக்கா!
என்
தலக்கிக்
கல்லுவுழுந்ததே
அந்த
நேயினாலதா.
நேயி
அவ
புழுத்துத்
தெருத்
தெருவா
அலஞ்சி
சாவணும்!
எம்
வவுறு
எரியிது!”
கையைச்
சொடுக்கிக்
கிட்டம்மா
சபிக்கையில்
காந்திக்கு
உடல்
குலுங்குகிறது.
“அவள
ஏன்
சாபம்
போடுற?
அவ
அலஞ்சிட்டாப்பல
உனக்கு
நல்லாயிடுமா?
நாமதா
ஏற்கெனவே
ஈனக்குடில
பெறந்து
நாயாப்
படுறமே,
பத்தாதா?”
“வூட்டோட
வுழுந்து
கெடங்கன்னு
அடிச்சிப்பே.
ஆபுரேசனப்
பண்ணித்
தொலச்சிடே,
புள்ள
வாணாமுன்னு.
அந்த
ஆம்புல
கொணந்தெரிஞ்சும்;
இப்ப
கையுங்களவுமாப்
புடிபட்டுச்
சந்திசிரிக்கிது.”
“இப்ப
இவரு
புதுக்குடிக்குப்
போயிருக்காரா?”
“ஆமா.
பணங்காசு
தோது
பண்ணணும்,
சங்கத்துல
பேசணும்னு
சொல்லிட்டுப்
போயிருக்காரு...”
கிழவி
வாயிலிலிருந்து
வந்து
அருகில்
உட்காருகிறாள்.
“புள்ளங்களெல்லாம்
வூட்டில
இருக்கா?”
“நேத்து
பூரா
பட்டினி.
அன்னாடம்
கஞ்சிக்காச்சக்
கடன்
வாங்குற
கதியாயிருக்கு.
அல்லாருக்கும்
இவ
வெடுக்குத்
துடுக்குன்னு
பேசிட்டுத்
திரியிறாளேன்னு
காட்டம்.
மாட்டி
வச்சிட்டாங்க...
நா
என்ன
பண்ணப்போற...?”
“அழுவாதடி?
இதுக்குமேல
எத்தினியோ
வந்திருக்கு.
என்னாடா,
நாம
தொடுற
பொம்பிளய
இவனும்
கை
வைக்கிறதான்னு
கூட
மாட்டிருப்பானுவ,
ஒனக்குத்
தெரியாது.
அந்தக்
களுத
கோனாம்
பய
ஒருத்தன
நம்பி
ஓடி
வந்தா,
அவெ
வுட்டுட்டுப்
போயிட்டா.
நாஞ்
சொன்னே
செவனேன்னு
இங்க
ஒரு
பக்கம்
இருந்துக்க.
இல்லாட்டி
இங்க
நம்ம
குடில
ஒருத்தனச்
சேத்துக்க.
காக்கா
குளிச்சா
கொக்காயிடுமா?
மேச்சாதிக்காரனுக்குப்
பொண்டாயிருந்திட்டா
நீ
மேச்சாதின்னு
சேத்துப்பாவளாடீன்னே.
பொம்புளயாப்
பெறந்துட்டு
சாதி
என்ன
சாதி?
அல்லாச்
சாதிலியும்
பொம்புள
சீரழியற
சாதிதே.
கட்ன
பொண்டாட்டிய
கண்ணும்
கண்ணீருமா
அடிச்சிட்டு
வண்டி
கட்டிட்டுப்
போயி
ஊருமேயுற
ஆம்புள
இருக்கிறப்ப
பொம்புளக்கி
என்ன
காவந்து
இருக்கு?
அவனுவ
மேவேட்டிய
போட்டுட்டு
டாவுடீவுன்னு
வந்திடுவா.
இவ
கத
இப்ப
என்ன
ஆச்சி?
தன்
சனம்
ஊருநாடுன்னு
இல்லாம
வெரட்டிட்டிங்கன்னு
நமக்கு
இவ
ஒழுங்கா
இருந்தா
ஈரம்
இருக்குமில்ல?
இப்ப
எவன்
வருவான்?
போலீசு
டேசன்ல
அந்த
நாயிங்க
பொம்புளயக்
கண்டா
சும்மா
வுடுமா?”
காந்திக்கு
உதடுகள்
துடிக்கின்றன.
குஞ்சிதத்தை
அவள்
பார்த்திருக்கிறாள்.
குளப்படியில்
அழுந்தக்கால்
வைக்கவில்லை
எனில்
எவ்வாறு
கால்
வழுக்கிக்
கொண்டுபோய்
விடுமோ,
அவ்வாறே
வாழ்கையும்
கவனமில்லை
எனில்
ஊன்ற
வழியில்லாமல்
போய்விடும்
போலும்!
தந்தை
வெறுத்து
உதாசீனம்
செய்தார்.
தாய்.
“ஏண்டி
கண்ணு...”
என்று
ஒரு
அன்புச்
சொல்
உதிர்க்கவில்லை.
இத்தனைக்கும்,
வாழ்க்கையில்
கரிப்பையும்,
கசப்பையும்
அநுபவித்துக்
கொண்டிருப்பவள்...
களகளவென்று
கண்ணிர்
ஊறுகிறது.
கிட்டம்மா
அவளைப்
பொருள்
பொதிந்த
பார்வையால்
பார்த்துக்கொண்டே “வாரேன்...”
என்று
போகிறாள்.
“அக்கா,
சாப்பிட
வாயே?”
என்று
அம்சுதான்
கூப்பிடுகிறாள்.
லட்சுமி
எதுவும்
பேசாமலே
நாகுவைக்
கை
கழுவத்
தள்ளிச்
செல்கிறாள்.
அவன்
காந்தியை
அப்போதுதான்
பார்ப்பவனாக
முகம்
மலருகிறான்.
“கா...யி...கா.யி...”
ஒரு
சிரிப்பு
வழிகிறது.
“முயாயி...
வய்யா...”
“போடால...”
என்று
லட்சுமி
தள்ளுகிறாள்.
காந்தி
முன்பெல்லாம்
விடுதியிலிருந்து
வரும்போது
அவனுக்குக்
கடலை
உருண்டையோ
மிட்டாயோ
வாங்கி
வருவாள்.
அந்தப்
பழக்கம்.
அவனுடைய
பிறப்பும்
வாழ்வும்
ஒரு
புதிய
பொருளை
அவளுக்கு
அறிவுறுத்துகிறது.
இந்த
நாகு
பெண்ணாகப்
பிறந்திருந்தால்
மூன்று
வயசிலேயே
வயிறு
காய்ந்து
இறந்து
போயிருக்கும்.
இத்தனை
நாட்கள்
உயிர்
வாழவே
வாய்ப்பு
இருந்திருக்காது.
“ஏண்டி
இப்ப
என்னாத்துக்கு
அழுவ?...
என்னமோ,
போன,
வந்த
இப்ப
இந்தத்
தலகுனிவு
வந்திருக்கலன்னா,
இதே
கிட்டம்மா
ஊரு
பூராத்
தமுக்கடிச்சிட்டு
வருவா?”
“இப்ப
மட்டும்
அடிக்க
மாட்டான்னு
என்ன
நிச்சியம்?
இவ
என்னாத்துக்கு
இப்ப
உள்ள
வந்தா?
ஒளவறியத்தா!"
என்று
முணுமுணுக்கிறாள்
பாட்டி.
“உங்கப்பா
பார்த்தாராடி?”
“அல்லாம்
பாத்தாச்சி.
அடிச்சாச்சி,
முள்ளு
குத்திடிச்சின்னு
சொல்லுறதும்
கல்லு
தடுக்கிடிச்சின்னு
சொல்லுறதும்
போல
பொண்ணுதா
கெட்டுப்
போவுதுன்னு
ஒலகம்
சொல்லும்.
உள்மாந்திரம்
என்னன்னு
அறிஞ்சு
தெரிஞ்ச
பொம்பளையே
அத
நெனக்கலன்னா?”
அம்மாளும்
பாட்டியும்
பேசிக்கொள்கையில்
அவளுக்குக்
கண்ணிர்
மடையாகப்
பெருகிக்
கன்னங்களில்
வழிகிறது.
“வூட்டில
செக்குலக்க
போல
நா
இருக்கிறன,
ஏங்கிட்டச்
சொல்லிட்டுப்
போனியாடீ?
புதுக்குடில,
கன்யாஸ்திரி,
அவங்கதா
டீச்சர்,
ஏங்கிட்டக்
கேக்குறாங்க.
காந்தி
எப்படி
இருக்குன்னு.
அறிஞ்சவங்க,
தெரிஞ்சவங்க,
நாயக்கர்
வூட்டம்மா,
எல்லாம்
புடுங்கி
எடுத்திட்டாங்க.
வரப்புல
வந்து
தெறிச்சிட்டா
எந்தப்
பயிரையும்
கண்டவங்களும்
முதிச்சிட்டுத்தாம்
போவா.
நாத்துக்கட்டுலேந்து
நழுவிடிச்சின்னு
ஆரு
வயல்ல
கொண்டு
வய்ப்பானுவ?
படிச்சவ,
சூடுபட்ட
குடும்பத்துல
தலையெடுத்துவ,
அச்சடக்கமா
இருக்கத்
தெரியாம
போயிட்டியே?”
“என்ன
மன்னிச்சிறது
கிடக்கட்டும்.
எத்தினி
சுமையோ
செமக்கப்
பிறந்திருக்கிற
ஊரு
உலகம்
மன்னிக்காதே?”
அவள்
கண்களைத்
துடைத்துக்
கொள்கிறாள்.
இரவில்
பத்திரமான
இடத்தில்
படுத்திருந்தாலும்
உறக்கம்
வரவில்லை.
அன்று
சாலியின்
பிடியிலிருந்து
தப்பி
ஓடி
வந்த
சாகசத்தை
நினைத்துப்
பார்க்கிறாள்.
இரவு
தனக்கு
அடைக்கலம்
கொடுத்த
செங்கமலத்தையும்,
மின்
வாரிய
ஆபீசிலே
நாட்
கூலி
வேலை
செய்யும்
அவள்
புருசனையும்,
குழந்தையையும்
நினைக்கிறாள்.
அவர்களிடம்
ஒரு
பொய்க்
கதையைச்
சொல்லி
இரவு
தங்கினாள்.
காலை
பஸ்ஸுக்கு
தணிகாசலமே
அவளைக்
கூட்டிவந்து
புதுக்குடியில்
ரத
வீதியில்
விட்டான்.
பஸ்
சில்லறை
கூட
வாங்கிக்
கொள்ளத்
தயங்கினான்.
“ஏம்மா
காதுத்
தோட்டக்
கழட்டித்
தாரங்கற?
பாவம்,
நாங்கொண்டு
உன்னப்
பத்திரமா
வுட்டுடறேன்!”
என்று
கூட
வந்தான்.
“படுபாவிப்
பயல்கள்.
இவங்க
ராச்சியம்
தானே
இப்ப
நடக்குது?
படவாவ
இந்தப்
படி
ஏற
விட்டதே
தப்பு:
நீங்கல்லாம்
இப்படித்
தொட்டாச்
சுருங்கியா
ஊளு
ஊளுன்னு
அழுறது
தாம்
புடிக்கல
எனக்கு!
அஹிம்சை
அஹிம்சைன்னு
சொன்ன
காந்தி
கூட
‘பொண்ணுகள்
தற்காப்புக்குக்
கத்தி
வச்சுக்கலாம்.
குத்தமில்ல’ன்னு
சொல்லிருக்கார்.
நான்
சாவித்திரிகிட்டக்
கூடச்
சொல்வேன்...”
என்ற
ஐயரின்
சொற்கள்
காதில்
ஒலிக்கின்றன.
“விபசாரத்தடைச்
சட்டம்னா
என்ன
மாமா...”
என்று
அவரிடம்
தான்
கேட்டாள்
அவள்.
“ஏன்?
நீ
எதுனாலும்
வெளில
சொன்னா
உன்ன
அதுல
மாட்ட
வச்சிடுவேன்னு
பயமுறுத்தினானா?”
“உங்களுக்கு
எப்பிடி
மாமா
தெரிஞ்சிச்சி?”
என்று
ஆச்சரியப்பட்டாள்.
“இது
தெரியாதா?
இதபாரு,
இந்த
தருமம்,
சட்டம்
எல்லாம்
ஆம்பிளைக்கித்
தப்பிச்சிக்கத்தா.
உங்களப்
பயமுறுத்துறதுக்கு
கற்புங்கறது.
அது
போயிடிச்சின்னு
இவனுவ
இஷ்டப்படி
வேட்டயாடுறது.
உன்னப்போல
இருக்கிற
பொண்ணுக
இனிமே
அழக்குடாது.
வேண்டியது
அழுதுட்டீங்க.
பொம்பிள
சுமக்கத்தா
மனுஷாபிமானம்.
அந்தப்பய...
நா
அவன
ஏழெட்டு
வயசில
கூட்டிட்டு
வந்திருந்தா,
பாத்தேன்.
இதுமாதிரி
ஒரு
பிரயோசனமும்
இல்லாத
சுமய
சொமக்க
வந்திருக்கு.
சட்டம்,
சமூகந்தா,
நீங்க
இந்த
அநியாயங்கள்
எல்லாம்
மாத்த
நிக்கணும்.
இவனுவ
மாதர்
சங்கம்
அது
இதெல்லாம்
போலி.
உங்க
சங்கிலிகளை
நீங்கதா
அறுத்துக்கிட்டு
ஏன்னு
கேக்கணும்.
அன்னிக்கிருந்த
எத்தனையோ
அநியாயம்
போயிருக்கு.
ஆனா,
ஒண்ணு
மட்டும்
அப்படியே
இருக்கு.
பெண்ணடிமத்தனந்தா.
இல்லாட்ட
நாக்குமேல
பல்லுப்போட்டு
எவனாலும்
நாலாயிரம்
அஞ்சாயிரம்
பத்தாயிரம்னு
கேப்பானா?
பழகின
ஆனய
விட்டுப்
புது
ஆனய
அடிமைப்படுத்துறாப்பல,
உங்களுக்கு
நீங்களா
விலங்கு
போட்டுக்கறாப்பல
தொடர்ந்து
வந்திட்டிருக்கு.
எங்க
வூட்டில,
அவ
பேசுறப்ப,
நா
பல
சமயம்
ஒண்ணுஞ்
சொல்லாம
ரசிச்சிட்டிருப்பேன்.
இப்பிடிப்
பேசுறாளேன்னு
கோவம்
வந்தாகூட
அடங்கிடும்.
பெண்ணுக்குச்
சமமா
பொருளாதார
சுதந்தரம்,
பொறுப்பில்
பங்கு,
மரியாதை
எல்லாம்
உண்டு.
சட்டத்த
மாத்தணும்.
நீங்க
ஏன்னு
கேட்டுக்
கிளம்பிட்டீங்கன்னா
ஒரு
பயலுக்கு
மூஞ்சி
கிடையாது.
கற்பு
பொம்பிளைக்கித்தானா?
விபசாரம்
பொம்பிளயாலா
வருது?...”
சாவித்திரியின்
சேலையை
உடுத்துக்கொண்டு
ஒரு
வாரம்
போல்
அந்த
வீட்டில்
அவள்
அவரிடம்
துணிவுப்
பாடம்
கேட்டாள்.
தேவு
அங்கு
அடிக்கடி
வருகிறான்
என்பதை
அப்போது
தான்
அறிந்தாள்.
அவளை
அங்கு
கண்ட
முதல்
நாளே
அவன்
திடுக்கிட்டாற்போல்
பார்த்தான்.
“நீங்க...
இங்கதா
இருக்கிறீங்களா?”
“அட்வகேட்
ராமசுந்தரம்
வீட்டுக்கு
வருவேன்.
நீ...
நீங்க...”
“நீங்க
அன்னிக்கு
ஒட்டல்
வாசல்ல
நின்னிங்க.
ஆனா
என்னால
எதுவும்
சொல்ல
முடியல.
ஆனா,
உங்களக்
கண்டதும்
எப்படீன்னாலும்
தப்பிக்கணும்னு
நிச்சயமா
நினைச்சிட்டு
ஓடிவந்தேன்...
திரும்பி
வாரப்ப
உங்களக்
காணல...”
“இருந்தேன்.
தையக்கடயில
உக்காந்து
நீங்க
போறதப்
பார்த்தேன்.
ஆனா...
எப்பிடி
என்னால
அனுமானிக்க
முடியும்?”
“அதாண்டா
சொல்லிண்டிருந்தேன்.
நீங்கள்ளாம்
இப்ப
இருக்கிற
சட்டங்களை
ஒத்துக்கக்
கூடாது.
உங்க
விலங்குகளை
நீங்களே
உடைச்சிக்கணும்னு!”
தேவு
சிரித்தான்.
“சாமி,
வடக்கெல்லாம்
பொம்பிளய
வித்து
வாங்குறதுக்குச்
சந்த
நடக்குதாம்.
பொம்பிளய
அடகுவச்சுக்
கடன்
வாங்குறாங்களாம்.
இப்பவும்
புருசன்
செத்ததும்
சிதையில
படுத்துக்கிறோம்னு
பொம்பிளக
போறாங்களாம்.”
“அவ்வளவுக்கு
இல்ல,
நாம்ப
மேலங்கறியா?
வெளயாடலடா
தேவு,
நீதான்
தீவிரமாப்
பேசுற.
இந்தப்
பொம்பிளகள
ஒண்ணுசேக்க
முடியுமா
உன்னால?
அதுக்கு
ஒரு
மூவ்மெண்ட்
வேணும்.
பொழுது
விடிஞ்சு
எத்தனை
பெண்
அவமானச்
சங்கதிகள்
கேட்கிறோம்?...”
என்றார்
அவர்.
“ஏன்
சாமி
அவுங்களக்
கூட்டுற
மூவ்மென்டையும்
ஆம்பிளதா
ஆரம்பிக்கணமா?...”
என்று
தேவு
சிரித்தான்
அவளைப்
பார்த்து.
“ஆமாண்டா,
அவங்கதா
வெளில
தல
நீட்டவே
இப்ப
பயமாயிருக்குதே?
அதெல்லாம்
இல்ல,
உங்களுக்கு
நல்லது
செய்ய
வாரம்னு
நம்பிக்கை
குடுக்கலேன்னா
வருவாங்களா?
அதான்
சொன்னேன்!”
“ஆரம்பிச்சிட்டாப்
போச்சு
சாமி.
இவங்க
வாழ்க்கையை
ஒரு
சட்டம்
பாதிச்சா,
சமுதாயத்தின்
வளமையையுந்தா
பாதிக்கிது.
இவங்களப்
போலவங்க
ஊருக்கு
வந்து
பொம்பிளங்க
கிட்ட
மனமாற்றத்தைக்
கொண்டுவரணும்.
கிராமத்தில
எதும்
பேச
முடியிறதில்ல?”
“ஜமாயிடா,
உனக்கு
இப்பவே
என்
நல்லாசி.
அந்த
காலத்துல
தேவதாசி
ஒழிப்புக்கு
முத்துலட்சுமி
ரெட்டி
சட்ட
சபையில
அப்படி
ஒரு
எதிர்ப்பைச்
சமாளிச்சாங்கப்பா.
தேவதாசி
முறை
ஒழிஞ்சாச்சின்றாங்க.
ஆனா,
இன்னிக்கி
பொண்ணுங்கள
வச்சு
வியாபாரம்
செய்யிறது
சர்வசாதாரணமாயிருக்கு.
படிக்கிறது,
சம்பாதிக்கிறது
எதுவும்
மனசை
மாத்தல.
இதுக்கு
முதல்ல
ஆம்பிளங்க
மாறவேணும்.
இவனுவள
அடிச்சித்தான்
மாத்தணும்.
உளுத்துப்போன
சாதிப்பழக்கம்,
சம்பிரதாயம்,
சமூகப்
பழக்கம்,
சமயப்
பழக்கம்
எல்லாம்
மாறணும்.
ஒரு
பொம்பிளை
காவலில்லாம
ஒரு
தனி
மனிசங்கிட்ட
அம்புட்டுட்டா
மானங்குலைக்கிறதா?
என்ன
அநியாயம்டா
இன்னிக்கு
நடக்குது?
நள்ளிரவில்
அவர்
கேட்ட,
உரைத்த
சொற்கள்
உயிருடன்
ஒலிக்கின்றன.
அவர்
தந்த
துணிவில்
அவள்
தேவுவுடன்
திரும்பி
வந்திருக்கிறாள்.
வந்தவுடன்
முதலில்
கேட்கும்
செய்தி.
“ஏண்டி
தூக்கம்
வரலியா,
முளங்காலக்
கட்டிட்டு
உக்காந்திருக்கிற?”
“என்னாடி?
என்னாடி?
எதுனாலும்
இருந்திச்சின்னா
சொல்லித்
தொல.
தாயப்போல
சீரளிய
வாணாம்.”
“யம்மா,
குஞ்சிதம்.
போலீஸ்
ஸ்டேசன்ல
இருப்பாளே.
உன்னையும்
என்னையும்
போல
பொம்பளைதான!
இதுக்கு
முடிவே
கிடையாதா?
அன்னிலேந்து
இன்னி
வரயிலும்,
காட்டுமிராண்டி
காலத்தேந்து,
இன்னிக்குச்
சந்திரனுக்கு
மனுசன்
போற
காலத்திலும்
ஒரே
நீதிதானா?
இப்பல்லாம்
போலீஸ்
ஸ்டேஷன்ல
ஒரு
பொம்பளையும்
ராவில
வச்சிருக்கக்
கூடாதுன்னு
சட்டம்
இருக்குதாம்?”
“சட்டம்
எத்தினியோதா
இருக்குன்னு
சொல்றாங்க.
அதொண்ணும்
நமக்கு
உதவுறதில்லியே?”
“அம்மா,
ஒதவாத
சட்டத்த
நாம்
மட்டும்
ஏன்
வச்சுக்கணும்?
ஒதவாத
சட்டத்துக்கு
நாம
ஏன்
அஞ்சி
நடக்கணும்?...”
“அஞ்சலன்னா
என்னாடி
செய்ய
முடியும்?”
“பொம்பளக்கிப்
பொம்பளையே
எதிரியா
நிக்காம
நம்ம
எனம்னு
நினைக்கணும்.
கிட்டம்மா
குஞ்சிதத்த
என்னா
திட்டுத்
திட்டுச்சி?
குஞ்சிதம்
ஏதோ
ஊருலேந்து
புருசன்
வெரட்டி
வந்திச்சின்னு
பாட்டி
சொல்லிச்சி.
இப்பிடி
வந்த
உடனே
அவளைக்
கண்ணியமா
ஆரும்
வாழ
விடல.
கட்டின
பொஞ்சாதி
புள்ளகளுக்குத்
துரோகம்
செஞ்ச
வீரபுத்திரனுக்குக்
கச்ச
கட்டிக்கிட்டு
இப்ப
எல்லாம்
போராடுவாங்க.
ஆனா,
குஞ்சிதம்...?
அவ
எடுபட்ட
பொம்பிள.
ஆ,
ஊன்னா
அவ
விவசாய
சங்கத்துக்கு
மெம்பரில்ல,
மாதர்
சங்கத்துல
இல்ல,
ஆரு
செலவு
செய்யிறதுன்னு
கேட்டாலும்
கேட்பா?
நாம
ஒரு
பத்து
நூறு
பொம்பிள
போயி,
எண்டா
பொம்பிளயை
ராவில
டேசன்ல
அடச்சி
வச்சியன்னு
கேட்டா?...
கேட்டா?
நாங்க
பூச்சிங்க
இல்ல,
கொட்டுற
தேளுன்னு
காமிச்சா?...”
இருளில்
அந்தக்
குரலில்
புதிய
முறுக்குடன்
தாயின்
செவிகளில்
பாய்கிறது.
“ஏண்டி?
போலிச
நாம
எதுத்துக்க
முடியுமா?”
“ஒருத்தரா
முடியாது.
பொம்பிளன்னா,
அவள.
அவள
எப்பிடியும்
நசுக்கிடலான்னு
இருக்கிறத
எல்லாரும்
சேந்தா
மாத்த
முடியாதா?
அம்மா
ஆம்புளக
வந்து
நம்ம
பக்கம்
இருக்க
மாட்டான்னு
தோணுது.
தப்பித்
தவறி
யாரோ
ஒருத்தக
இருப்பாங்களா
இருக்கும்.
நாமளே
சேந்து
இதுக்கு
ஒரு
நியாயம்
கேக்க
இது
சந்தர்ப்பம்...
நாம்
இத்த
நழுவ
விடக்கூடாது.”
-----------
22
நவராத்திரி
விழா
தொடங்கப்
போகிறது.
பெருமாள்
கோயில்,
சிவன்
கோயில்
இரண்டிலும்
வழக்கத்துக்கு
அதிகப்படியான
பூஜைகளில்
குருக்கள்
பரபரப்பாக
இருக்கிறார்.
மாரியம்மன்
கோயில்
புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
சுதைச்
சிற்பக்
கோபுரம்
கோபி
வண்ணப்
பின்புலத்தில்
சிற்பங்கள்
புதிய
பொலிவு
கொண்டு
விளங்குகின்றன.
சுற்றுக்குள்
முன்
மண்டபம்
மொட்டையாக
இருந்தது.
அதற்குச்
சிமந்துக்
கூரை
போட்டிருக்கிறார்கள்.
வெளிச்சுவரில்
வெண்மையும்
சிவப்புமாகப்
பட்டை
தீட்டித்
துலங்குகிறது.
குடிசைகள்
இருந்த
இடம்
துப்புரவாகச்
சமமாக்கப்
பட்டிருக்கிறது.
பெண்கள்
பொங்கலிடக்
‘கோடு’
கிழித்திருக்கிறார்கள்.
கடை
கண்ணிகள்
வரப்போவதற்கு
முன்னோடி
ஒரு
தொட்டி
ராட்டினம்
வந்திருக்கிறது.
சேரிப்
பிள்ளைகள்
ஏக்கத்துடன்
எட்ட
நின்று
பார்த்துக்
கொண்டிருக்கையில்,
மற்ற
சிறுவர்
சிறுமியர்
பத்துபைசாவும்
இருபது
பைசாவும்
கொடுத்து
அதில்
சுழன்று
களிக்கிறார்கள்.
ஆங்காங்கு
வயல்களின்
இடையே,
கிராமங்களின்
வெளியே
ஒதுக்குப்புறங்களில்
முட்டு
முட்டாய்
வைக்கோல்
வேய்ந்ததும்,
வெறும்
கூரையாகவும்
மண்
சுவர்களாகவும்
விளங்கும்
குடில்களில்
ஒரு
புதிய
கிளர்ச்சி
உருவாவதைத்
தோற்று
விக்கும்
எந்த
அடையாளமும்
இந்தப்
பகுதிகளில்
தெரியவில்லை.
குருக்கள்
மலர்
கொய்கிறார்.
குளத்தில்
ஏட்டையாவின்
வீட்டுக்குச்
சொந்தமான
நான்கு
வாத்துக்களும்,
தன்
உடமையாளரை
விளக்கும்
கம்பீரத்துடன்
அன்னங்களைப்போல்
உலவுகின்றன.
மாட்டு
வாகடம்
செய்யும்
ஆசுபத்திரிக்
கிழவன்
இருமிக்
கொண்டு
ஆற்றுப்
படித்துறையில்
பல்
துலக்குகிறான்.
மழை
பெய்து
சகதியாயிருப்பதால்
ஆற்றோர
மேட்டுப்
பாதை
வழுக்குமென்று
பஸ்ஸை
ஊருக்குள்
நுழைய
விடாமலே
திருப்பிவிட்டான்.
சம்முகம்
நடந்து
வருகிறார்.
வெயில்
சுள்ளென்று
விழுகிறது.
இந்த
வெயிலில்
முதிர்ந்த
மணிகள்
குப்பென்று
பழுக்கும்.
அறுவடைக்குத்
தயாராகும்.
சனி,
ஞாயிறு
வந்துவிடுகிறது.
திங்கட்
கிழமைதான்
சென்று
வீரபுத்திரனை
விடுவித்து
வர
முயற்சி
செய்யவேண்டும்.
அதற்குள்
பணம்...
பணம்
திரட்டவேண்டும்.
வடிவு...
தடியை
ஊன்றிக்
கொண்டு
ஆற்றுப்
பாலம்
கடந்து
ஓடுவது
தெரிகிறது.
சம்முகம்
எதிர்
வெயிலுக்குக்
கண்களை
சரித்துக்
கொண்டு
கூவுகிறார்.
“வடிவோய்...!...
வடி...வோய்...?”
அவன்
திரும்பிப்
பார்க்கவில்லை.
இரவு
முழுவதும்
உறங்கவில்லை.
அவர்களுக்கு
எதிராகப்
போராட்டம்
நடத்துவது
என்று
கூடிப்பேசி
முடிவு
எடுக்கவே
நேரமாகிவிட்டது.
படுத்த
இடத்தில்
மூட்டைப்பூச்சிகள்,
மண்டையைக்
கொத்தும்
பிரச்னைகள்.
பொன்னடியான்
காந்தியைக்
கட்டுவான்
என்று
தோன்றவில்லை.
ஐயரைப்
பார்க்க
இப்போது
நேரமில்லாமலாகிவிட்டது.
வீட்டுப்பக்கம்
திரும்புமுன்
ஆற்றுக்கரை
மேட்டில்
அம்சு
நிற்பதைப்
பார்க்கிறார்.
“ஏண்டி,
அங்கே
போயி
நிற்கற?...”
வடிவு...
அவனுக்காகவா?
“என்னாடி?”
“ஒண்ணில்லப்பா...
நாவு...
நாவு
ஓடிட்டான்...”
“எங்க?”
“அம்மாளும்
அக்காளும்
போனாங்க.
இவனும்
கூடப்
போறன்னு
ஓடினா.
ரூமில்
போட்டுட்டுப்
போனாங்க.
ரொம்பக்
கத்துனான்
தொறந்துவுட்டேன்.”
“அம்மாளும்
அக்காளும்
எங்க
போயிட்டாங்க?”
எப்படிச்
சொல்வது?
“என்னாடி
நிக்கற?
எங்க
போயிட்டாங்க?”
“கிட்டம்மா
மாமி
வந்து
ராத்திரி
அழுதிச்சி.
ரெண்டு
பேரும்
காலம
எல்லாப்
பெண்டுவளயும்
சேத்துட்டு,
அஸ்தமங்கலம்
போலீசு
டேசன்ல
போயி
ஆர்ப்பாட்டம்
செய்யப்
போறாங்க...”
சம்முகம்
திகைக்கிறார்.
“பாட்டியெங்க?”
“இங்கதா
இந்தப்
பொம்புளகளெல்லாம்
சேத்துக்கிட்டுப்
போகப்
போவுது...”
“அட?
இவளுவளுக்கு
இம்புட்டுத்
தயிரியம்
வந்திடிச்சா?
ஆம்புளக
எல்லாம்
தொலஞ்சிட்டாங்கன்னு
இவளுவ
கெளம்பிட்டாளுங்களா?”
“வேற
ஆரு
இங்க
வந்தது!
தேவு
வந்தானா?”
அம்சு
இல்லை
என்று
தலையை
ஆட்டுகிறாள்.
“இதென்னடா
இது!...”
அவர்
வாயில்
முற்றத்தில்
வந்து
நிற்கிறார்.
தண்ணிர்
கொண்டுவரும்
ருக்மணி
பார்த்து
விடுகிறாள்.
“அண்ணன்
இத
வந்திட்டாரு.
என்னாங்க!...
நாங்க
பொண்டுவள்ளாம்
போலீஸ்
டேசனுக்குப்
போறதுன்னா
முடிவெடுத்திருக்கு.
தண்ணி
கொண்டாந்து
வெச்சிட்டு,
அல்லாம்
போறம்.
நீங்க
புள்ள
குட்டியப்
பாத்திட்டு
வூட்ட
பொறுப்பா
இருங்க!”
“அட...
அம்புட்டுத்
தயிரியம்
வந்திடுச்சா?
இதெல்லாம்
ஆரு
கெளப்பி
வுட்டது?”
“ஆரு
கெளப்பி
வுடணும்?...
யாருன்னாலும்
கெளப்பி
வுடணும்னா
வருமா!
எப்பயும்
நீங்கதா
போவிய?
இப்ப
நாங்க
போறம்.
பதினோரு
மணி
வாக்குல
அல்லாம்
அஸ்தமங்கலம்
ரோட்டில
வந்திடுங்கன்னு
லட்சுமியக்கா,
சொல்லிட்டுப்
போச்சி.
தலவரு
பெஞ்சாதியாச்சே,
சொன்னா
கேக்கவானாம்?”
சம்முகம்
உணர்ச்சியை
விழுங்கிக்
கொள்கிறார்.
செவத்தையனும்
கோடியான்
வீட்டுத்
தாத்தாவும்
வெயிலில்
நிற்கின்றனர்.
“இப்பத்தா
வரீங்களா,
மொதலாளி...
அல்லாம்
போலீஸ்
டேஷன்
வளச்சிக்கப்
போறாங்களாம்?
நம்ம
பொம்பிளகளுக்கு
எம்மாந்
தெகிரியம்
பாருங்க!”
“வளச்சிக்கிடட்டம்,
ஆனா
நாம
இங்க
உக்காந்திருக்கிறதா?...”
அம்மா
வருகிறாள்.
கண்களைச்
சரித்துக்
கொண்டு.
“அல்லாரும்
ரோட்டாண்ட
போறாவ.
சேத்துரு
மதகுக்கப்பால
ஒடயாரு
வூட்ட
போயிச்
சொல்லிட்டு
வாரக்
காலமேயே
குப்பன்
சாம்பார
அனுப்பிச்சிருக்கு.
இவளுவல்லாம்
போனா
ஒரு
தவ
தண்ணிவோணுமில்ல?...”
“அது
சரி,
ஆரு
இதெல்லாம்
இப்ப
திடீர்னு
கெளப்பி
விட்டது
அம்மா?”
“ஏண்டா...
ஆருன்னாலும்
கெளப்பணுமா?
வகுத்துப்புள்ள
அந்த
நேரம்
வந்ததும்
வாராப்புலதா.
என்னா
அக்குரவம்;
பொம்பிள
எத்தினிக்குப்
பொறுப்பா?
காந்தி
திடீர்னு
ராத்திரி
எந்திரிச்சிப்
போலாம்னா.
பொம்பிளயப்
போலீஸ்
டேசன்ல
வைக்க
அதிகாரம்
இல்ல.
போயி
வுடச்
சொல்லுவம்னா.
கெளம்பிட்டாளுவ
போவட்டும்னு
நானுந்தா
சொன்னே.
தா,
ஆத்துக்கப்பால
மேக்கால
கெளக்கால
எல்லாச்
சேரி
சனமும்
பொம்பிளயும்
போங்கடான்னு
சொல்லச்
சொன்னே.
இந்தக்
கெளவனும்
கொமரிப்
பெண்ணும்
இல்லன்னா
நானுந்தா
போயிருப்பேன்.
வந்தது
வாரது,
துணிஞ்சடிச்சுப்
போவம்!
இனிமே
என்னாத்துக்குடி
பயப்படணும்?
இனிமே
எழக்கப்
போறது
ஒண்ணில்லன்னு
போகச்
சொன்னே...”
சம்முகம்
சட்டைப்
பையில்
கடனாகப்
பெற்று
வந்த
ஐம்பது
ரூபாயை
நெருடிக்
கொள்கிறார்.
போகாதீர்கள்
என்று
தடுக்க
அவருக்கு
எந்த
அதிகாரமும்
இல்லை.
ஆனால்,
காந்தியா
இவ்வளவு
புகை
எழும்பப்
பொறி
இட்டிருக்கிறாள்?
வீரமங்கலத்தில்
ஒரு
பொதுக்
கூட்டம்
போட்டிருக்கிறார்கள்
என்ற
நினைவு
வருகிறது.
ஊனமுற்றோருக்கு
உதவியளிக்கும்
வங்கி
விழா.
எங்கு
பார்த்தாலும்
பெரிய
பெரிய
விளம்பரங்கள்
தொங்கின.
பெரிய
சாலையில்
புதுக்குடியில்
ஆட்சியாளர்களை,
அதிபர்களை
வாழ்த்தும்
வளைவுகளும்
தோரணங்களும்
அமர்க்களமாக
இருந்தன.
காவல்துறை
மிகக்
கெடுபிடியாக
இருக்கும்
இந்த
நேரத்தில்,
இவர்கள்
ஆர்ப்பாட்டம்
செய்யப்
புகுந்தால்
என்ன
நடக்கும்?
சம்முகம்
வீட்டுக்குள்
அடி
வைக்காமலே
குளத்தைச்
சுற்றிக்கொண்டு
வயல்களினூடே
செல்கிறார்.
ஒரு
ஈ
காக்கை
தென்படவில்லை.
அந்த
நேரத்துக்கு
வெயிலும்,
கதிர்
வந்து
தலையசைக்கும்
பயிரின்
மென்மையான
வாசனையும்
அவருக்கு
உறுத்தவில்லை.
அம்மன்
கோயில்
சேரியின்
முன்
வண்ணார்
குளத்தின்
பக்கம்
புதியதொரு
சுவரொட்டி
குடிசைச்
சுவரொன்றில்
தெரிகிறது.
‘ஊனமுற்றோருக்கு
நல்வாழ்வு
சைக்கிள்
வழங்கும்
திட்டம்!...’
‘விதவையருக்கு
மறுவாழ்வு
- உதவித்
தொகையளிக்கும்
திட்டம்!...’
‘தொழிலாளிகளுக்குச்
சாதனங்கள்
அளிக்கும்
திட்டம்.’
அந்தச்
சுவரொட்டியைத்
தவிர,
வேறு
எதுவும்
சேரியில்
புதுமையாகத்
தெரியவில்லை.
வண்ணார்
குளம்
நாகரிகக்காரியின்
அற்ப
உடைபோல்
பாசியாடை
உடுத்துத்
தன்
வறட்சியை
மறைத்துக்
கொண்டிருக்கிறது.
மேல்
சாதியார்
அங்கு
வரமாட்டார்கள்.
அழுக்கு
வண்டுகளைப்
போல்
சில
குழந்தைகளும்
சிறுவர்
சிறுமியரும்
பாதையில்
நடந்துவரும்
அவரை
முறைத்துப்
பார்க்கின்றனர்.
மற்றபடி
எந்த
உற்சாக
உயிர்ப்பும்
இல்லை.
வீடுகளெல்லாம்
வறுமையினால்
தன்
மேனி
மறைக்க
இயலாத
குமரி,
கந்தல்
கொண்டு
மூடி
நாணிக்
கண்
புதைப்பதைப்
போல்
கண்
புதைத்துக்
கிடக்கின்றன.
ஒன்றில்
ஒரு
கிழவி,
மேல்
சீலைக்
கிழிசலுடன்
இனிமேல்
எனக்கென்ன
என்று
உட்கார்ந்து
கிடக்கிறாள்.
“ஆயா,
தேவு
வூடு
எங்க
இருக்கு?”
ஆயாவுக்குக்
குரல்
காட்டக்கூடச்
சக்தியில்லை
போலும்!
கையை
மட்டும்
அந்தத்
திசையில்
அசைக்கிறாள்.
இதென்ன,
ஊரே
சுடுகாடா
போயிட்டாப்புல
ஆரயும்
காணோம்...!
படலைக்குள்
சில
குடிசைகள்,
சொறி
நாய்கள்.
ஆட்டுப்
புழுக்கைகள்
நிறைந்த
திண்ணையில்
இன்னொரு
கிழம்.
பிறந்த
மேனியில்
ஒரு
பயல்
அழுதுகொண்டு
நிற்கிறான்.
“ஏண்டா
அழுவுற?
அம்மால்லாம்
எங்க?"
பையன்
விசித்து
விசித்து
அழுவதிலேயே
இருக்கிறான்.
நடவு,
அறுவடை
என்று
வேலை
நெருக்கும்
காலங்களில்
தான்
குடிசைகள்
இவ்வாறு
வெறுமையாகக்
காட்சியளிக்கும்.
இந்த
நிலை
இப்போது
அசாதாரணம்.
மூங்கிற்
பிளாச்சி
போட்ட
குடிசை
ஒன்று
நாகரிகமாகத்
தெரிகிறது.
பிளாச்சுக்
கதவு
பூட்டியிருக்கிறது.
“ஏ
பயலே?
இந்த
வூட்டுக்காரங்கல்லாம்
எங்க?”
யாருக்கும்
சொல்லத்
தெரியவில்லை.
வெயில்
உச்சிக்கு
ஏறுகிறது.
அதற்குள்
எல்லாரும்
கிளம்பி
இருப்பார்களா
என்ன?
உள்ளுற
ஒரு
தோல்வி
உணர்வும்
எரிச்சலும்
மண்டுகின்றன.
சாலையைத்
தொடும்
இடத்தில்
சாக்கால்
மூடிக்கொண்டு
ஒரு
சிறு
கடை.
அங்கும்
விளம்பரத்தில்
ஊனமுற்றோர்
உதவி,
சலவைத்
தொழிலாளருக்கு
அமைச்சர்
இஸ்திரிப்
பெட்டி
வழங்குகிறார்.
ஒருகால்
மாலைக்
கூட்டத்துக்கு
இப்போதே
எல்லோரும்
போயிருப்பார்களா!
சாலையில்
கண்களைக்
கொண்டு
பார்க்கையில்
சங்கக்
கொடியைத்
தூக்கிக்கொண்டு,
நாலைந்து
பேர்
வருவது
தெரிகிறது.
இரண்டு
பெண்பிள்ளைகள்,
மூன்று
ஆண்கள்.
குழந்தையைத்
தூக்கிக்கொண்டு
வருகிறாள்
ஒரு
பெண்.
“வணக்கம்
அண்ணே!
நாங்க
குமட்டூரிலேந்து
வாரம்.”
“ஆரு
சொல்லியனுப்பிச்சது?”
“செத்தமின்னதா,
பளனி,
குப்பன்
சாம்பாரு
மவ
சைக்கிள்ள
வந்து
சொன்னா.
அல்லா
வாங்க
அத்தமங்கலம்
போலீசு
டேசனாண்ட,
தலவரப்
புடிச்சி
வச்சிருக்காவன்னா,
ஒடனே
ஓடியாரம்...”
ஓரத்துக்
கடையில்
வெற்றிலை
புகையிலை
வாங்கிக்
கொண்டு
நடக்கின்றனர்.
“நாஞ்
சொன்ன,
தலவர
இல்ல.
பொம்பிளயத்தா
புடிச்சி
வச்சிருக்குன்னு
சொன்னான்னு,
நீ
இல்லன்னே!...
சம்சாரத்தத்தா
புடிச்சிருக்காவளா,
இல்ல...”
“கிஷ்டா,
மாரியம்மங்
கோயில்
நகையத்
திருடிட்டான்னு
அநியாயமா
பழிபோட்டு
வீரபுத்திரன்ங்கற
தோழரையும்,
குஞ்சிதம்மாங்கற
பொம்பிளயயும்
நேத்துப்
புடிச்சி
வச்சிருக்கா.
இந்த
அநியாயத்தைக்
கண்டிக்கத்தாம்
போறோம்
இப்ப.”
குருதிச்
சிவப்பான
கொடி
ஒன்றுதான்
அவர்களுடைய
வித்தியாசமான
தன்மையை
எடுத்துரைக்கிறது.
சாலையில்
செல்லச்
செல்ல,
ஆங்காங்கு
வயற்கரைகளில்
ஒற்றையும்
இரட்டையும்
ஆணும்
பெண்ணுமாக
வருகின்றனர்.
இவர்கள்
நடவுக்கோ,
உழவுக்கோ
செல்லவில்லை
என்பதைக்
கொடிகள்
இனம்
காட்டுகின்றன.
வீரமங்கலம்
சாலை
முகப்பில்
மோரும்
நீருமாகக்
கரைத்து
வைத்துக்கொண்டு
கந்தசாமி
வழங்குகிறான்.
குருவிச்
சிவப்பு
வெற்றிலை
வாயும்
நரைத்த
முடியுமாக
உடையார்
நிற்கிறார்.
“வணக்கம்
சாமி...”
“லே,
சம்முகமா,
பாத்தியாட
பொம்பிளகள?
அப்ப
முதமுதல்ல
நாம
புதுக்குடிக்குக்
கிளம்பினமே,
நாப்பத்துமுணுல?
அப்பிடி
இருக்கு!
முழுகம்
பொம்பிளகதா.
காந்தி
காலம
வந்திச்சி,
ஆறுமணி
இருக்கும்.
குப்பங்கூட,
மாமா
இப்பிடி
சமாசாரம்.
நாங்க
போகப்
போறம்னிச்சி.
அதுக்குள்ள
இவ்வளவு
கூட்டம்
கூட்டணும்னா
அவிங்களுக்கு
எத்தினி
ஆக்ரோசம்
இருக்கணும்?”
“மந்திரி
வந்து
விழாவில்ல
இன்னிக்கு?...
இப்ப
போலீசு
வந்திடாது...?”
“விழா
முந்தாநாள்ள?...
அது
ஒரு
சாங்கியம்.
கட்சிக்காரன்
நாலு
பேருக்கு
வழங்கி
எல்லாம்
ஆயிப்போச்சே!...”
“நா
தேதியக்
கவனிக்கலியா?
இன்னிக்கு
இருபத்தெட்டில்ல,
அது
இருவத்தாறு...”
இவர்
காந்தியையும்
லட்சுமியையும்
பார்க்கவில்லை.
கிட்டம்மாவின்
முகத்தில்
சலனமில்லை.
இவரைப்
பார்த்து
“வணக்கம்
அண்ணே”
என்று
தெரிவிக்கிறாள்.
அவள்
மனசுக்கு
குஞ்சிதத்துக்காக
இத்தனை
பெரிய
ஆர்ப்பாட்டம்
செய்வது
பொறுக்கவில்லை
போலும்!
“எத்தினி
மணிக்குக்
கிளம்புறாங்களாம்?”
ஓரத்தில்
அமர்ந்து
ஒரு
பெண்
குழந்தைக்குப்
பால்
கொடுக்கிறாள்.
“அதா
போயிருக்காவ,
மின்னாடி
கொஞ்சம்
பேரு.
பொம்புள
வச்சிருக்கக்
கூடாதாமில்ல!
நமக்கென்ன
எளவு
தெரியிது!”
“இதா
எங்க
கொழுந்தியா
மவள
இட்டுட்டுப்
போயி
கண்டமானியும்
பேசினானுவ...
எத்தினியோ!”
ஆல
மரத்துக்
குருவிகள்
இரைவதுபோல்
ஒரு
கலகலப்பு.
பொழுது
சாயத்
தொடங்கும்
நேரத்தில்
இவர்கள்
அணி
கிளம்புகிறது.
“மாதர்
ஒற்றுமை,
ஒங்குக!”
“பெண்ணை
இழிவு
செய்யும்
பேய்களே,
ஒடிப்போங்கள்!”
தேவுவின்
குரல்
தனித்து
ஒலிக்க,
பல
குரல்களும்
முறை
வைக்கின்றன.
“நிரபராதிகளை
விடுதலை
செய்!”
“குஞ்சிதத்தை
விடுதலை
செய்!
காவல்
நிலையங்களைக்
கற்பழிப்பு
நிலையங்களாக்காதீர்!
மாதர்
தம்மை
இழிவு
செய்யும்
மடமையைக்
கொளுத்துவோம்!”
காந்திக்கு
எங்கிருந்து
இத்தனை
ஆவேசம்
வருகிறது?
லட்சுமி
பழி
தீர்க்க
வந்திருக்கிறாளா?
நெல்
அறைவை
ஆலையும்,
பெரிய
பள்ளிக்கூடமும்
இடம்பெற்ற
அஸ்தமங்கலத்துக்
கடை
வீதியில்
அண்மைக்
காலங்களில்
கண்டறியாத
பெண்கள்
கூட்டம்.
அந்தக்
காவல்
நிலையம்
உயர்
மதிப்புப்
பெற
புறக்காவல்
நிலையத்திலிருந்து
ஏற்றம்
கண்ட
பின்
இத்தகைய
கெளரவத்துக்கு
ஆளாவது
இதுவே
முதல்
தடவை.
கூட்டத்தில்,
ஐந்துக்கொரு
விகிதமே
ஆண்கள்
கலந்திருக்கின்றனர்.
அவர்களும்
விளிம்பு
கட்டிக்கொண்டு
நிற்கின்றனர்.
இவர்கள்
காவல்
நிலையத்தை
நெருங்கு
முன்பே
நிலையத்திலிருந்து
காவலர்
மறிக்கின்றனர்.
“குஞ்சிதத்தை
விடுதலை
செய்!
காவல்
நிலையம்
கற்பழிப்பு
நிலையமல்ல!”
சம்முகம்
முன்
பக்கம்
செல்ல
விரும்பவில்லை.
கூட்டத்தின்
பின்னே
அவரும்,
வீரமங்கலத்து
ராசுவும்,
சின்னையாவும்,
சேர்ந்தாற்போல்
நிற்கின்றனர்.
வடிவு
தடியுடன்
நடுவில்
மீசையை
முறுக்கிக்கொண்டு
நிற்கிறான்.
மாலை
வெயில்
இறங்கும்
நேரம்.
“எல்லாம்
திரும்பிப்
போங்க!
போயிடுங்க!
இங்க
ஒரு
பொம்பிளயும்
காவல்
நிலையத்தில்
கிடையாது!”
“பொய்!
குஞ்சிதத்தையும்
வீர
புத்திரனையும்
இங்கு
கொண்டுவந்தீர்கள்,
குஞ்சிதத்தை
விடுதலை
செய்யுங்கள்?”
“இதா...
ஸ்டேஷன்ல
யாரும்
கெடையாது.
பொம்பிளய
நேத்து
ராவே
விட்டுவிட்டோம்.
என்னத்துக்கு
வீணா
ஆர்ப்பாட்டம்
பண்ணுறிங்க?”
இது
ஒரு
சூழ்ச்சியா?
நிசமா?
“இங்கே
பெண்
யாரும்
இல்லை.
வீணாக
ஆர்ப்பாட்டம்
செஞ்சு
கலவரம்
பண்ணாதீங்க.
போங்க!”
“குஞ்சிதம்
இல்லை
என்பதை
எப்படி
நம்புவது?”
“நீவாணா
உள்ளாற
வா...!
பாரு?”
“சீ!”
என்று
காறி
உமிழ்கிறாள்
லட்சுமி.
“நாங்க
அத்தினி
பேரும்
உள்ளாற
வந்து
பார்ப்போம்!”
“இதம்மா,
வீண்
வம்பு
பண்ணாம
மரியாதயாப்
போயிடுங்க.
பெண்
பிள்ளைகளை
இரவுக்கு
வைப்பதில்லை.
விட்டுவிடுகிறோம்.
காலம
ஸ்டேஷன்ல
வந்து
அவங்க
பதிவு
செஞ்சிட்டுப்
போயிடுவாங்க!”
“அப்ப.
அந்தம்மா
எங்க
இருக்காங்கன்னாலும்
துப்பு
சொல்லணுமல்ல?”
லட்சுமியும்
காந்தியுமே
பேச்சு
வார்த்தை
நடத்துகிறார்கள்.
“அது
நாங்க
சொல்றதில்ல.
வாணா
காலம
எட்டுமணிக்கு
வருவா.
வந்து
பார்த்துக்குங்க!”
இவர்கள்
என்ன
செய்வதென்று
திகைக்கையில்
படார்
படாரென்று
அதிர்வேட்டுக்களைப்
போன்று
ஓசை
கேட்க,
கூட்டத்தினிடையே
இருந்து
பானைத்
துண்டுகள்
காகிதங்கள்
வெடித்துச்
சிதற,
“ஐயோ,
சுடுறான்,
சுடுறான்”
என்று
பெண்கள்
அல்லோகல்லோலமாக
அந்தக்
குறுகிய
கடைத்தெருவின்
ஓரங்களில்
சிதறிப்
போகின்றனர்.
வெளியிருந்து
காலிக்கும்பல்
புகுந்து
தள்ளுவதைப்
புரிந்து
கொண்ட
வடிவும்,
பெண்களுக்குக்
காவலாக
வந்த
வேறு
சில
ஆடவர்களும்
கைத்தடிகளாலும்,
கொடிக்
கம்புகளாலும்
தாக்கத்
தொடங்குகின்றனர்.
“சட்டிக்குள்ள
பட்டாசு
வெடிய
வச்சிக்
கொளுத்திருக்கிறானுவ...
நம்ம
ஆளுவ
அமைதியா
இருங்க.
தோழரெல்லாம்
அமைதியாக
இருங்க!”
கற்கள்
வந்து
விழுகின்றன.
சம்முகத்தின்
நெற்றியை
ஒரு
கூரான
கல்
பதம்
பார்க்கிறது.
லட்சுமிக்குத்
தோளில்
அடி
விழுகிறது.
ஒரு
நடுத்தர
வயசுக்காரி
மோதப்பட்டுக்
கீழே
விழுகிறாள்.
காவலரின்
குண்டாந்தடி
சுழன்று
குழப்பத்தை
அடக்க
அகப்பட்டவர்
மண்டையை
உடைத்து
விடுகிறது.
ஒன்றிரண்டு
வேடிக்கை
பார்த்தவர்கள்கூட
அவசரமாகக்
கடைகளை
மூடிவிட்டனர்.
வடிவுவின்
தோள்பட்டையில்
விழுந்த
அடி,
அவனைத்
தரையில்
வீழ்த்தி
விடுகிறது.
மீண்டும்
எழுந்து
பெண்பிள்ளைகள்
தலைகளில்
அடி
விழக்கூடாதென்று
தடுக்கிறான்.
கைகளில்
ஓங்கி
அடி
விழுகிறது.
காந்தி
இத்தகைய
கலவரத்தை
எதிர்பார்த்திருக்கவில்லை.
சிறுபிள்ளை
உற்சாகத்துடன்
முன்
வரிசையில்
நின்ற
அவளுக்கு
நெஞ்சு
பதைக்கிறது.
தேவு
வடிவுவைத்
தூக்கி
நிறுத்தித்
தோளில்
கை
கொடுத்துச்
செல்கிறான்.
கீழே
விழுந்த
பெண்ணின்
முகத்தில்
தண்ணிரைத்
தெளித்து
முதலுதவி
செய்யச்
சிலர்
விரைகின்றனர்.
அந்திநேரத்தில்
பொல்லென்று
மலர்ந்த
புதரனைத்தும்
மிதிபட்டுச்
சிதைந்து
மண்ணோடு
புரண்டாற்போன்று
அவர்களுடைய
நம்பிக்கை
உற்சாகங்கள்
சிதைந்து
போகின்றன.
--------------
23
அம்சுவுக்கு
உள்ளே
அடி
வைக்கவே
தோன்றவில்லை.
சிறிது
நேரம்
கொல்லை
ஆற்றுக்
கரை
மேட்டிலிருந்து
எதிர்ச்
சாரியில்
செல்லும்
ஆட்களைப்
பார்க்கிறாள்.
இன்னும்
சிறிது
நேரம்
வாசலில்
இறங்கி,
கிழக்கே
குளக்கரை
வரையிலும்
சென்று
வாய்க்கால்
கடந்து
யாரேனும்
வருகிறார்களா
என்று
பார்க்கிறாள்.
அவர்களெல்லாம்
அஸ்தமங்கலம்
போனால்,
போலீஸ்
டேஷன்
ஆர்ப்பாட்டம்
என்றால்
எப்போது
வருவார்களோ?
மூக்கனும்
அவன்
மாமியார்க்
கிழவியும்
திண்ணையில்
குந்தியிருக்கிறார்கள்.
“நாவுவ
உள்ளே
போட்டிருக்கியா
அம்சு?”
“இல்ல
பாட்டி.
அவனத்தா
தேடுறே,
காலம
ஒடிப்
போயிட்டா...”
“அங்க
கோயிலாண்ட
ராட்டினம்
வந்திருக்கில்ல?
எல்லாம்
ஓடிப்போயிருக்குங்க...”
வீட்டுக்குள்
ஒடி
வருகிறாள்.
பாட்டி
தாத்தாவுக்கு
சோறும்
நீருமாக
உப்புப்போட்டு
மிளகாய்த்
துவையலுடன்
வைத்துக்
கொடுக்கிறாள்.
“சோறு
சமச்சி
வைக்கிறாயாடி?...
எதுனாலும்
போட்டு
ஒரு
குளம்பும்
காச்சி
வய்யி.
அந்தப்பய
எங்க
இருக்கிறானோ?”
“காணம்
பாட்டி..!”
“ஓடிப்
போயிட்டு
வருவா.
என்னமோ
கப்பலே
முழுவுறாப்பல
இருக்கு,
அவனப்பத்தி
என்ன
இப்ப?”
அம்சுவுக்கு
உள்ளூற
ஏதோ
ஓர்
அச்சம்
ஆட்கொள்ளுகிறது.
சோற்றை
வடித்து
வைத்து,
ஒரு
காரக்
குழம்பைக்
கூட்டி
வைக்கிறாள்.
வீடுபெருக்கி,
மாடுகளுக்குத்
தண்ணிர்
காட்டி,
எல்லா
வேலையையும்
முடித்தாயிற்று.
வெயில்
பின்
முற்றத்துச்
சுவரில்
ஓடிவிட்டது.
காந்தி
மணிக்கணக்காகப்
புத்தகம்
படிப்பாள்.
படங்கள்
கத்திரிப்பாள்.
ஒட்டுவாள்.
ஏதேனும்
வீட்டுக்குள்
செய்வாள்.
அம்சுவுக்கு
வீட்டுக்குள்
உட்கார்ந்திருக்கவே
பொருந்தாது.
நாகு
இத்தனை
நேரம்
எங்கும்
போய்
வராமலிருந்ததில்லை.
ஒருமுறை
மருள்
நீக்கி
வரையிலும்
போய்விட்டான்.
அவனை
அந்தப்
பக்கத்தில்
எல்லாருக்கும்
தெரியும்.
கொண்டு
வந்து
விட்டு
விடுவார்கள்.
அவனுக்குத்
தண்ணிரைக்
கண்டால்
பயம்.
ஆறு
குளத்தில்
நிச்சயமாக
இறங்கமாட்டான்.
நெருப்புப்பெட்டி
கிடைத்தால்
கொளுத்துவான்.
பீடி
குடிக்கவேண்டும்
என்று
சாடை
காட்டுவான்.
வெளியே
யாரேனும்
குடித்துக்
கொண்டிருந்தால்
போய்க்
கேட்பான்.
கோடித்
தாத்தா
அவனுக்குப்
பீடி
குடிக்கக்
கொடுப்பார்.
அவள்
அம்மா
திட்டுவாள்...
“என்னாடி?
அம்சு?
இங்க
வந்து
நிக்கிற?”
“நாயக்கர்
வூட்டம்மா!”
“வாங்கம்மா...
வாங்கம்மா!...”
“என்னாடி?
எல்லாம்
பேசிக்கிறாவ?
உங்கக்கா
வந்திட்டாளாமே?”
“வாங்கம்மா,
பாட்டி
இருக்கு...”
“கேட்டதுக்குப்
பதிலக்
காணல?...”
“ஆமாம்மா.
அல்லாரும்
இன்னிக்கு
அஸ்தமங்கலம்
போயிருக்காவ...”
“என்னா
விசேசம்?”
“வீரபுத்திரன்
மாமாவப்
போலீசில
புடிச்சி
வச்சிருக்காவல்ல?
அதுக்குத்தா?”
நாயக்கரம்மா
புருவத்தைச்
சுளிக்கிறாள்.
“அதுக்கு
இவங்கெல்லாம்
போயி
என்ன
செய்யப்
போறாங்கடி?”
“எனக்குத்
தெரியாதுங்க,
பாட்டிகிட்ட
கேளுங்க...”
“சாதுரியக்
காரியாச்சே
நீ!
ஏண்டி!
கோயில்
விழாவுக்கு
இப்ப
ஆரும்
மகில்
எடுத்திட்டுப்
போயிக்
கும்பிடுறதில்லைன்னு
தீந்திடிச்சா?”
“அதப்பத்தி
எல்லாம்
பேசிக்கலிங்க.
வூட்டுப்பக்கம்
வாங்கம்மா,
பாட்டி
இருக்கு...”
“மூட்டு
வலிக்கிதுடி
கொஞ்சம்
வாத
மடக்கி
எல
கொண்டான்னு
ஒங்கிட்டச்
சொல்லச்
சொல்லி
அசந்துட்டே.
கோமதி
சொன்னா,
மூலையா
வுட்டுக்
கொல்லையில
இருக்குன்னு.
அதுவர
வந்தமே
கோயில்ல
என்னமோ
வர்ணமெல்லாம்
அடிச்சிருக்காவன்னாங்களே,
பாத்திட்டுப்
போவம்னு
வந்தே.
நீ
இங்க
மேட்டுல
நிக்கிறியே?
ஏன்னு
கேட்டேன்.
உள்ள
போடி!
காலம்
கெட்டுக்
கிடக்குது!”
மாலை
குறுகி
மஞ்சள்
முறுகிக்
கருமை
பரவுகிறது.
வெளியில்
கட்டிய
மாட்டை
உள்ளே
கட்டிச்
சாணியை
எருக்குழியில்
போட்டாயிற்று.
அம்சுவுக்குப்
பொழுதைப்
பிடித்துத்
தள்ளினாலும்
போகவில்லை.
தாழ்வரையிலுள்ள
அறை
நாகுவில்லாமல்
திறந்து
விறிச்சிட்டுக்
கிடக்கிறது.
அக்கரையில்
கள்ளுக்கடையில்
பளிச்சென்று
பெட்ரோமாக்ஸ்
லைட்
தெரிகிறது.
கீழே
பாம்பாய்
நெளியும்
ஆறு.
முதுகில்
வரிப்பாலம்.
அதன்
மீது
நிழலுருவங்கள்
சொட்டாய்ச்
சொட்டும்
பனித்துளிப்போல்
ஒவ்வொன்றாக
நகர்ந்து
வருகின்றன.
கொசுக்கள்
ஙொய்யென்று
செவிகளில்
பாடுகின்றன.
மாரியம்மாவின்
குரல்
கேட்டது.
“புள்ள
வந்திச்சா?”
“ஆரு
அப்பாவயா
கேக்குறிங்க?
அவரு
காலம
வந்திட்டுப்
போயிட்டாரு...”
“அவங்கல்லாம்
இப்ப
எங்க
வருவாங்க?
நாவு...
அரச
மரத்தடில
குந்திட்டு
பீடி
குடிச்சிட்டிருக்கு.
புள்ளங்கள்ளாம்
கூடிச்
சிரிச்சிச்
சீட்டுதுங்க.
இது
புக
வுட்டுட்டு
இருந்திச்சு.
வூட்டுக்குத்
தெரியுமோ,
தெரியாதோன்னு
ஓடியாந்தே.
சோறு
வச்சீங்களா?...”
“வச்சே!
நீங்க
சாப்பிடுறீங்களா?...”
வெற்றிலைச்
சாற்றைத்
துப்பிவிட்டு
வேண்டாம்
என்று
மாரியம்மா
கைகாட்டுகிறாள்.
“நாம்
போறேன்.
பதனமா
இருந்துக்க.
அந்தப்
பயல
முடுக்கி
வுட்டுட்டுப்
போறேன்.
ரெண்டு
வெறவு
இருந்தா
தாயே?”
முட்சுள்ளியை
ஒடித்துக்
கூடையில்
வைத்துக்
கொண்டு
செல்கிறாள்.
இவர்களுக்கே
விறகு
தீர்ந்துவிட்டது.
மூங்கிற்
காட்டில்
போய்
கொஞ்சம்
சேகரித்து
வரவேண்டும்.
கொல்லைப்படலை
இழுத்துக்
கட்டிவிட்டு
வாசற்பக்கம்
வருகிறாள்.
“சோறு
சாப்பிட்டுட்டுப்
படுத்துக்கடீ.
நா
மூக்கனப்
போயிப்
பாத்துட்டு
வரச்
சொல்லுற.”
கிழவர்
எழுந்து
கேட்கிறார்.
“எல்லாம்
எங்க
போயிட்டாவ?”
“முன்ன
போனமே
புதுக்குடிக்கு
அப்படி
எல்லாம்
போயிருக்காவ.”
“கூலித்
தவராறா?...”
“இல்ல...
பொம்பிளயப்
போலீசில
கூட்டிட்டுப்
போயிருக்கிறானா...”
ஒரு
வசையை
உதிர்த்து
விட்டுச்
சாராயத்தைப்
பருகுகிறார்.
லொக்
லொக்கென்று
இருமல்
வருகிறது.
தெருவில்
பிள்ளைகள்
குஞ்சுகள்
போகும்
அரவங்கள்.
யார்
வீட்டிலோ
பிள்ளை
அழுகிறது.
மாடத்தில்
முணுக்
முணுக்கென்று
சிம்னி
விளக்கு
எரிகிறது.
நடுவிட்டில்
அம்சு
விரிப்பை
விரித்துப்
படுக்கிறாள்.
பாட்டி
அருகில்
வந்து
சுருங்கிய
கையை
அவள்
தலையில்
இதமாக
வைக்கிறாள்.
“சோறு
தின்னியா
கண்ணு?...”
“அவுங்கல்லாம்
வரட்டுமே!...”
இருளில்
மூங்கில்
தோகைகள்
சரசரப்பதுபோல்
ஓசை
கேட்கிறது.
“பாட்டி!
நாவு...
நாவு
வந்திருக்கிறா...?”
“நீ
இரு.
நாம்
போயிப்
பாக்கிறே...”
பாட்டி
பின்பக்கக்
கதவைத்
திறக்கிறாள்.
பின்பக்கம்
யார்
யாரோ
ஒடிவரும்
அரவங்கள்.
கிழவிக்கு
நெஞ்சு
திக்கென்று
குலுங்குகிறது.
நா
மேலண்ணத்தில்
ஒட்டிக்
கொள்கிறது.
அவள்
உள்ளே
வந்து
கதவை
அழுத்தமாகத்
தாளிடுகிறாள்.
அம்சு
விளக்கைக்
கையில்
எடுத்துக்கொண்டு
வாயிற்பக்கம்
நாகு
வந்திருக்கிறானோ
என்று
பார்க்கப்
போகிறாள்.
அடுத்த
கணம்
வாசலில்
வெள்ளையும்
சள்ளையுமாக
இருளில்
உருவங்கள்.
ஒரு
மொட்டை
பனியன்,
“டேய்,
சிறுக்கி
துணிய
அவுங்கடா
வசமாச்
சிக்கிட்டா”
என்று
கொக்கரிக்கிறது
இரட்டைத்
தொண்டையில்.
கிழவிக்கு
எப்படிப்
புலனாயிற்றோ?
அடுத்த
நிமிஷம்
உலக்கை
அவன்
கையில்
விழுகிறது.
“டே
மாடா,
மூக்கா,
அமாசி...!
எல்லாம்
வாங்க!...”
பாட்டி
அம்சுவை
உள்ளே
இழுத்து
வந்து
நடுவீட்டுக்
கதவுகள்
இரண்டையும்
தாழிட்டு
விடுகிறாள்.
கிழவர்
திடுக்கிட்டு
எழுந்தாற்போல்
திண்ணையில்
வசை
பொழிகிறார்.
ஈக்கூட்டம்
போல்
வாயிலில்
கூடிவிடுகிறது.
செவத்தையனும்
மூக்கனும்
மாடசாமியும்
கையில்
கதிரரிவாள்,
தடி
சகிதம்
வந்து
எதிர்த்தாக்குதல்
தொடுக்கின்றனர்.
துணியை
உருவிச்
சட்டையைக்
கிழிக்கிறார்கள்.
“ஏண்டா
இப்பிடித்
திமிருபுடிச்சி
மனிச
ரத்தத்துக்குப்
பேயா
அலயுறீங்க?”
“அந்தக்
கெளவன
உதச்சி
எறியுங்கடா!
சாமி
கோயில்
பந்தல்ல
நெருப்பு
வச்சிருக்கானுவல்ல?...”
“பந்தலெறியிதா?
எரியட்டும்!
எங்க
வவுத்தெரிச்சல்
அதுவா
பத்திட்டு
எரிறது!...”
“பாத்திங்களா?
இவனுவதா
வச்சிருக்கானுவ!
எலே
நெருப்புக்
குச்சியக்
கிளிச்சிப்
போடுங்க!
இவனுவளும்
எரியட்டும்!”
செவத்தையனும்
மாடசாமியும்
ரங்கனைப்
பிடித்துக்
குமுக்குகின்றனர்.
உழவோட்டி
தூக்கி
அடித்து
சுமந்த
உரம்
வாய்ந்த
உடல்கள்.
காலிக்கும்பலை
எதிர்க்க
அவர்கள்
அனைவரும்
திரண்டு
ஆற்றுக்கரை
மேடு,
குளப்பக்கம்
என்று
அரண்
நிற்கின்றனர்.
அம்சுவைத்
திண்ணையில்
பதுங்கச்
செய்துவிட்டுக்
கிழவியும்
வெளியே
உலக்கையைக்
கையிலெடுத்துக்கொண்டு
வருகிறாள்.
இரவு
நெடிய
இரவாக
ஊர்ந்து
செல்கிறது.
குஞ்சு
குழந்தைகள்
கிழவர்கள்
யாருமே
உறங்கவில்லை.
மறுநாட்
காலையில்
இருள்
விலகும்போது
கோயிலும்
சுற்றுப்புறங்களும்
முழுமையாக
மலரவில்லை.
பந்தல்
கரிந்து
மூளியும்
மொக்கையுமாகக்
கிடக்கிறது.
உடம்பில்
ஒரு
துண்டு
துணிகூட
இல்லாமல்
குஞ்சிதத்தின்
உடல்
காவாய்க்கரையில்
கிடக்கிறது...
-------------
24
தங்கம்
உருக்கித்
தழல்
குழைத்த
தேனாக
வரும்
கதிரவன்
கண்டு
மகிழும்
அறுவடை
இல்லை.
அவ்வப்போது
வான்
கருமை
காட்டி,
ஆதவனின்
ஆட்சி
அதற்குள்
மலருவதற்கில்லை
என்று
அச்சுறுத்தும்
நாட்களின்
அறுவடை.
யாருக்குத்
துயரமானால்
என்ன?
எங்கு
ரத்தம்
சிந்தினால்
என்ன?
எங்கு
தீக்கருகினால்
என்ன?
உழைப்பைத்
தந்தவர்களுக்குத்
துரோகம்
செய்யாத
அன்னையே
சத்தியம்
என்று
கதிர்கள்
பழுத்துச்
சாய்ந்திருக்கின்றன.
உழைப்பே
எங்கள்
சத்தியம்
என்று
ஒட்டிய
உடலும்
சுருங்கிய
முகமுமாகக்
குப்பன்
சாம்பாரும்,
பொன்னையனும்
மற்றவரும்
குளிர்
இறங்கும்
அந்த
விடியலில்
களத்திலிறங்கி
அரிகளைக்
கொய்து
வைக்கிறார்கள்.
இனி
பெண்கள்
வந்து
அரிக்கற்றைகளை
அடுக்கிக்
கட்டுவார்கள்.
ஆண்களின்
தலையில்
கட்டுக்களைத்
தூக்கிவிட்டு,
நட்டுவைத்த
பயிர்கள்
எங்கள்
கை
மகத்துவம்தான்
என்று
நிறைவெய்துவார்கள்.
களத்தில்
கட்டுக்களை
அடித்த
மணிகளையும்
வைக்கோலையும்
வேறாக்கும்
போது
உடனிருப்பார்கள்.
“இன்னும்
நாலு
நாப்
போனா
களம்
கெடக்காது.
நாயக்கர்
களத்துக்குக்
கொண்டிட்டுப்
போயிடலாம்!”
“வானாம்,
அத்தினி
தூரம்
எதுக்குப்
போவனும்
முதலாளி?
இதா,
காவா
தாண்டி
ரோட்டோரம்
பலவக்
கல்லு
போட்டு
வச்சிருக்கு.
நாலெட்டு,
அடிச்சிரலாம்!”
செவத்தையன்
கூறுகிறான்.
சம்முகத்துக்கு
வேலை
செய்வது
பழக்கம்
விட்டுப்
போய்
விட்டதால்
தானோ
வியர்வை
இப்படி
ஊற்றுகிறது?
உள்ளுற
ஒரு
சூடு
பரவித்
தகிக்கிறது.
மூச்சு
வாங்குகிறது.
சற்றே
நிமிர்ந்து
ஆசுவாசம்
பெறுகிறார்.
“நீங்க
கரையேறிடுங்க.
இத
ஆச்சி,
ஒரு
நிமிட்டு.”
குப்பன்
சாம்பார்
அவரை
விரட்டுகிறான்.
“அடே
பழனி,
கோட்டுப்
பழுதய
இப்பிடி
வீசுடா..?”
தொலைவில்
பெண்கள்
காவாயைக்
கடந்து
வருவது
தெரிகிறது.
சிவப்பும்
பச்சையும்
நீலமுமாகப்
புள்ளிகளாய்
நகர்ந்து
வருகின்றனர்.
எத்தனை
பேர்
இந்த
நான்கு
மா
நிலத்துக்கு
என்று
கணக்கிட்டுப்
பயனில்லை.
இது
பஞ்சத்து
அறுவடை.
ஆட்கள்
அதோ
இதோ
என்று
வந்து
நெருங்குவார்கள்.
அத்தனை
பேரும்
பங்கிட்டுக்
கொள்ளக்
கொடுக்க
வேண்டும்.
சாலையோரத்துக்
கட்டாந்தரையில்,
முதன்
முதலாக
இந்தக்
குறுவைக்
கதிர்களை
அடிக்கப்
போகிறார்கள்.
பொன்னம்மா
கூட்டிப்
பெருக்குகிறாள்.
சாய்வாக
வைத்திருக்கும்
ஆறு
பலகைக்
கற்களிலும்
பனி
ஈரமா
மழைத்
துாற்றல்
ஈரமா
என்று
வேறுபடுத்த
இயலாத
வகையில்
ஈரம்
படிந்திருக்கிறது.
களத்தில்
அறுத்து
வைத்துவிட்டுக்
குப்பன்
சாம்பாரும்
செவத்தையனும்
அமாவாசியும்
தலைத்துண்டை
உதறிக்கொண்டு
விடாயாறப்
போய்விட்டார்கள்.
வானில்
இன்று
வெயில்
கிடையாது
என்பதைப்போல்
மேகம்
கூடியிருக்கிறது. ‘கருமேக
மில்லை’
என்று
சம்முகம்
திடம்
கொள்கிறார்.
மாரியம்மா
தன்
கிழக்குரலைக்
கிளப்பிக்
குலவை
இட்டுக்கொண்டு
வருகிறாள்.
அது
குலவையொலியா,
நெஞ்சு
பிளந்துவரும்
ஒப்பாரியா
என்பது
புரியாமல்
சம்முகத்துக்குச்
சங்கடம்
பிசைகிறது.
மரபுகளிலும்
சடங்குகளிலும்
ஊறிப்போன
பெண்
குலம்.
வாழ்க்கையின்
அலைப்புக்களில்
பாறைகளோடும்,
அத்துவானங்களுடனும்
மோதுண்டாலும்
இன்னமும்
நம்பிக்கையை
விடாத
மூதாட்டி...
சிவந்த
கண்களில்
அவளுக்கு
ஈரம்
பசைக்கிறது.
அவள்
அரிக்கற்களை
ஆக்கையில்
வைத்துப்
பிணிக்கையில்
அவள்
அருகில்
நின்று
சுமட்டைத்
தன்
தலையில்
ஏற்றிக்
கொள்கிறார்.
“மொதலாளி!
நீங்க
போங்க.
நாங்
கொண்டிட்டுப்
போறே...”
என்று
பழனிப்
பயல்
வந்து
மறுக்கிறான்.
இவர்களுக்கெல்லாம்
தங்கள்
இனத்தில்
உழைக்காமல்
மேற்பார்வை
செய்யும்
ஒருவர்
என்ற
பெருமையைக்
கொடுப்பதில்
ஒரு
கெளரவம்!
ஆனால்
அவர்
கட்டைச்
சுமந்துகொண்டு
வரப்பில்
நடக்கிறார்.
முன்பெல்லாம்
இவ்வாறு
ஓடி
நடந்ததுண்டு.
சங்கத்
தலைவர்
என்று
ஆனபின்,
பெயருக்குக்
கதிர்
கொய்வாரே
ஒழிய,
அதிகமாக
உழைப்புக்
கொடுக்க
இறங்குவதில்லை.
இப்போது,
‘உங்களைப்போல்,
உங்களில்
ஒருத்தன்
நான்’
என்று
சொல்லிக்கொண்டு
பாரம்
சுமந்து
வருகிறார்.
அம்சு,
கைதேர்ந்த
விரைவுடன்
அரியை
தலை
கால்
மாற்றிப்
பார்த்து
வைத்துக்
கட்டுகிறாள்.
கல்லின்
பக்கம்
சாம்பாரும்
செவத்தையனும்,
அமாவாசியும்
கட்டுக்களைப்
பிரித்து
மும்மூன்று
அரிகளாக
எடுத்து
மாற்றிக்
கல்லில்
ஓங்கி
அடிக்கின்றனர்,
நெல்மணிகள்
நிலத்தில்
சிதறி
வீழ்கின்றன.
சம்பா
நெலுக்கு
இத்துணை
அவசரமும்
உழைப்புமில்லை.
நன்றாகப்
பருத்துவிட்ட
மணிகளை
வெறுந்தரைத்
தட்டலிலேயே
உதிர்த்துவிடலாம்.
திடீரென்று
வானக்கதிர்
இந்த
நிறைவுக்
காட்சியைப்
பார்க்கும்
ஆவலில்
மேகத்தினிடையே
தலை
நீட்டுகிறது.
அந்த
ஒளியில்,
சாம்பாரின்
தளர்ந்த
மேனி,
சத்தியத்தின்
வடிவாக
மின்னுகிறது.
சம்முகம்
நெஞ்சு
நெகிழக்
கற்றைச்
சுமையை
இறக்கிவிட்டு
நிற்கிறார்.
இந்த
சத்திய
ஒளி
பிறர்
பங்கைத்
திருடுவதாக
இருந்தால்
கிடைக்காது.
இந்தச்
சத்தியம்,
அவன்
இப்போது
குடித்துவிட்டு
வந்திருப்பதால்
மூளியாக
மழுங்கி
விடவில்லை.
அவனையே
பார்த்துக்
கொண்டிருக்கும்
சம்முகத்துக்கு
இப்படி
ஓர்
அழகிய
வடிவம்
தமக்கு
இருக்குமா
என்ற
ஐயம்
தோன்றுகிறது.
இவர்கள்
எப்போதும்
யாருக்கும்
அடிமைகளில்லை.
உயிர்க்குலத்துக்கு
உணவளிக்கும்
இத்தொண்டு
மனிதத்
தொண்டு.
இதுவே
பரிபூரணத்துவத்தின்
விளக்கங்கள்.
மனைவிகள்,
தாயர்,
குமாரிகள்
மானம்
குலைக்கப்பட்டாலும்,
தலை
மகன்கள்
குற்றம்
சாட்டப்பட்டுக்
காவல்
சாவடிகளில்
சிறையிருந்தாலும்,
பொட்டு
பொடிசுகள்
தொண்டை
நனைக்கும்
உயிர்ப்பாலின்றி
அழுது
வாடினாலும்,
முதிய
தாய்
தந்தையர்
பராமரிப்பவரின்றி
முடங்கிச்
சோர்ந்து
நைந்து
கரைந்தாலும்
இந்த
நேரத்தின்
முக்கியத்
துவத்துக்குச்
சமானமில்லை.
குனிந்தும்
நிமிர்ந்தும்
நிமிர்ந்தும்
குனிந்தும்
மாற்றி
மாற்றிக்
களியில்
விளைந்ததைக்
கல்லில்
அடித்து,
மனிதனுக்கும்
மாட்டுக்கும்
என்று
பிரித்துப்
போடுகிறார்கள்
மண்ணின்
மைந்தர்கள்.
இவர்கள்
தங்கள்
குருதியை
மண்மாதாவுக்கு
உழைப்பாக்கி
அவள்
உயிர்ச்
சூட்டை
அமுதமாக்கும்
இரசவாதம்
புரிபவர்கள்.
இது
பச்சை
நெல்...
இது
ஒழுங்காகக்
காய்ந்து
வியாபாரியின்
சாக்கை
நிறைத்துக்
கடனடைய
வேண்டும்.
“என்ன
சம்முவம்?.
அறுப்பு
வச்சிட்டியா?
ரெண்டு
நா
போவட்டும்னியே?”
உடையார்
சைக்கிளில்
வந்து
இறங்குகிறார்.
“ஆமா.
நாலுநாளா
வெயில்
காஞ்சிருக்கு.
நேத்து
புதிர்பாத்தே,
அறுத்துடலான்னு
தோணிச்சி.
வெலதா
என்னமாருக்கும்னு
புரியல...”
உடையார்
உதட்டைப்
பிதுக்குகிறார்.
“ஒண்ணும்
சொகமில்ல.
கட்டுப்படியே
ஆவாது.
அறுவதுக்குங்
கீள
தா
கேக்குறாங்க...”
சம்முகத்துக்கு
நா
எழவில்லை.
இந்தக்
குறுவை
அறுப்பை
எதிர்பார்த்து
எத்தனை
கடன்கள்
வாய்
பிளந்து
நிற்கின்றன!
அன்றாட
உப்புப்
புளி
சாமான்களிலிருந்து,
வாழ்வா
சாவா
என்று
நெருக்கும்
போராட்டங்கள்,
அடிதடிகள்,
வம்பு
வழக்குகள்
ஆகிய
எல்லாச்
செலவுகளுக்கும்
இந்த
ஒரே
சந்தர்ப்பத்தில்
தான்
ஆதாரம்
காண
முடியும்!
“நா.
புதுக்குடி
போறேன்.
காந்தி
ஐயர்
வீட்டில்தான
இருக்கா?”
“ஆமாய்யா...
இந்தப்
போராட்டம்
இப்ப
அவங்க
கிட்டத்தா
முனைப்பா
இருக்கு.
பெண்களுக்குத்தான்
எல்லாப்
படியிலும்
அநியாயங்கள்
நடக்குது.
இதுக்கு
ஒரு
பெரிய
இயக்கம்
செயல்பட
வைக்கணும்.
அதுதான்
எனக்கு
வாழ்க்கையிலேயே
லட்சியம்னு
அது
ஒரே
பிடியா
இருக்கு.
ஐயர்
கூட
இப்ப
இவங்களுக்காக
அந்தக்
காலத்தைப்
போல
அவ்வளவு
ஆக்ரோசமா
நிக்கிறாரு...”
“செய்யட்டும்.
நானும்
அமைச்சர்
வரார்னாங்க,
பாத்து
விசாரணைக்
கோரிக்கை
குடுக்கலான்னு
போறேன்.
வடிவுக்கு
சாமீன்
கிடைச்சிடும்.
வீரபுத்திரனுக்கும்
கிடைக்கும்.
தேவு
விசயந்தா
ஒண்ணும்
செய்ய
முடியாதோன்னு
தோணுது...”
“கூட்டத்துல
சட்டில
பட்டாசை
வச்சு
இவனுவளே
கொளுத்திக்கறானுவ.
இதெல்லாம்
திட்டமிட்டுச்
செஞ்சிருக்கானுவய்யா.
தேவு
வெடிகுண்டு
வச்சிருந்தான்,
தீவிரவாதிங்கற
லிஸ்டில
சேக்கிறாங்கன்னு
வக்கீலையா
அன்னிக்கே
சொன்னாரு...”
“இங்க
இருக்குற
குண்டருகள
வச்சிட்டே
எல்லாக்
காரியத்தையும்
செஞ்சிட்டு
இப்புடிப்
பழியப்
போடுறதும்
இப்ப
நடந்துட்டுத்தானிருக்கு.
அந்தப்
பொம்புளதா
பந்தலுக்கு
நெருப்பு
வச்சான்னும்,
ஒடுறப்ப
தடுக்கி
வுழுந்து
கல்லுல
மண்ட
தட்டிச்
செத்திட்டான்னும்
எவ்வளவு
சாதுரியமாக்
காரியத்தை
முடிச்சி,
ஒரு
விசாரணயில்லாமக்
கொளுத்திட்டானுவ?”
“காந்தி
அதைத்தான்
இப்பப்
புடிச்சிட்டிருக்கு.
குஞ்சிதத்துக்கு
இவங்க
செஞ்ச
அக்கிரமம்
எதோ
தெரிஞ்சிருக்கு.
அவளப்
போலீசுல
புடிச்சிக்
குடுக்கிறாப்புல
குடுத்து,
இவனுவளே
கூட்டியாந்து
பயமுறுத்தி
இருக்கிறாங்க.
மசியல,
தீத்துக்
கட்டியிருக்கிறானுவ.
காலம
நாங்க
ஓடிவந்து
மறிக்கிறதுக்கு
முன்ன,
பொணத்த
எடுத்திட்டாங்களே?
காலம
விடியறச்சே
கொடியான்
நாவுவத்
தேடிட்டுப்
போயிருக்கிறான்.
பொணம்
கெடந்திருக்கு.
பாத்திருக்கிறான்.
துணியில்லாம
கெடந்திச்சி,
பாத்தேன்னுறான்.
இவனுக்குப்
பயம்
புடிச்சி
ஓடியாந்து
வந்து
சொல்லியிருக்கிறான்.
தேவு,
வடிவு
உள்பட
பத்துப்
பேரயில்ல
போலீசுல
புடிச்சி
வச்சிருந்தான்?
நா
இங்க
வாரதுக்குள்ள
விசாரண
முடிச்சி
அவள
எரிச்சிட்டானுவ!”
“அதான்,
எல்லாம்
விவரமா
விசாரண
செய்யணும்.
அன்னக்கி
ராத்திரி
சேரில
வந்து
ஆடுகளைத்
தாக்கியிருக்கிறாங்க.
காந்தியும்
மெட்ராஸில்,
மாதர்
சங்கங்கள்
பக்கம்
இதை
எடுத்துகிடணும்னு
எழுதிப்
போட்டிருக்கு.
புதுக்குடியில
இப்ப
ஐயிருமக
சாவித்திரியும்,
காந்தியும்
ஒரு
இளைஞர்மாதர்
அணியே
சேத்திருக்கிறாங்க.
இந்தமாதிரி
பெண்களுக்கிழைக்கப்படும்
கொடுமைகளை
எதிர்த்துப்
போராட
மேல்
படிப்பு,
கல்யாணம்னு
எதேதோ
நினைச்சேன்.
ஆனா,
அன்னிக்கு
சொந்த
வாழ்க்கையை
விட
நம்
சமுதாய
விடுதலைதான்
முக்கியம்னு
போராட
வந்தோமே,
அதே
ஒரு
வேகம்
அவங்க
கிட்ட
இப்ப
வந்திருக்கு.”
“வரட்டும்.
பட்டி
தொட்டிலேந்து
பட்டணம்
வரயிலும்
இன்னிக்குப்
பொம்பிள
வியாபாரம்
நடந்துட்டுத்தானிருக்கு.
அப்ப.
நீ
நாளக்கி
வரியா?...”
“இந்த
அறுப்பு
இல்லன்னா
நானும்
வருவேன்,
அமைச்சரைப்
பார்க்கும்போது
நானும்
இருக்கணும்தா.
பணத்தட்டு
வேற,
வந்த
வெலக்கு
நெல்ல
விக்கணும்.
ஆனா
நான்
விடுறதில்லன்னு
வச்சிட்டேன்.
வீடு
வாசல்
போனாலும்
போகட்டும்னு
வச்சிட்டேன்...”
“இன்னிக்கு
ஆளுறவங்க,
அரிசனனுக்கு
எல்லாம்
செய்யணும்னு
சொல்லிட்டாத்தான்
கதை
ஓடும்.
அந்தவகையில்
ஒரு
நியாயம்
தோணியிருக்கிறதுதான்
அன்னிக்கும்
இன்னிக்கும்
வித்தியாசம்.
அன்னிக்கு
இந்த
மேச்சாதிக்காரன் ‘கூலின்னாலும்
குடுத்திடுவம்.
இவன்
நமக்குச்
சமமா
நம்ம
தெருவில
நடக்கிறதா,
மானம்
போயிட்டுதே’ன்னு
நெனச்சுத்தான்
ஊரவுட்டுப்
போனான்.
இன்னிக்கு
எந்த
மேச்சாதியானும்
இப்படி
வெளிப்படயாச்
சொல்லமாட்டான்.
இல்லியா?”
“...கோயில்ல
நெருப்பு
வச்சுது
பத்தி...
எதுனாலும்
குறிப்பு
நீங்க
காட்டணுமில்ல,
அவுங்க
குற்றச்சாட்டை
மறுக்கறாப்பல...?”
“அதான்
நீ
வரணும்னு
பாத்தேன்...”
“காந்திகிட்ட
சொல்லிருக்கையா...
அம்சு,
எங்கம்மா
எல்லாருமே
இதுக்கு
முக்கிய
சாட்சிகளா
வருவாங்க.
நெருப்புக்
கொளுத்திப்
போட்டது
நாவுவா
இருக்கணும்.
இல்லேன்னா,
அவுங்களே
கொளுத்திருக்கணும்.
நாவு
அன்னிக்குப்
பீடி
கொளுத்தி
வச்சிட்டிருந்தான்னு
மாரியம்மா
சொல்லி
இருக்கிறா.
நெருப்புக்குச்சி
கிடச்சா
விளக்குமாத்துக்
குச்சிய
ஒவ்வொண்ணா
எடுத்து
எரியவுடுவான்.
உபயோகமத்த
பயல
இப்படிச்
சோறூட்டிக்
காப்பாத்துறாளேன்னு
நா
நினைச்சிப்பேன்.
இத்தன
கலவரத்தில
அந்தப்
பயலுக்கு
ஒரு
கேடு
வரல
பாருங்க!
பெருமா
கோவில்
வாசல்ல
மண்ணள்ளிப்
போட்டுட்டிருந்தான்னு
யாரோ
சொல்லி
எங்கம்மா
போயி
கூட்டியாந்தாங்க.
குஞ்சிதம்
நெருப்பு
வச்சிட்டுத்
தானே
வுளுந்தாங்கறது
பச்சப்
பொய்யி?”
“அப்ப
நான்
வரேன்.”
“வாங்கையா...
கடசீவரய்க்குமில்ல,
நம்பிக்கைய
எப்பவும்
வுடுறதில்ல.
நமக்கு
அடுத்த
தலைமுறையும்
நியாயத்துக்குப்
போராடியே
ஆகணும்னிருக்கு...”
சம்முகம்
கண்ணீரைத்
தேக்கிக்
கொள்ளும்
வகையில்
வானைப்
பார்க்கிறார்.
வானில்
கருமை
அச்சுறுத்தக்
குவிகிறது.
கீழே
விழுந்த
பச்சை
நெல்லைக்
குவித்துச்
சாக்கில்
போட்டுக்
கட்டி
வைக்கிறார்.
பகலுணவுக்குக்கூட
ஓய்வு
கொள்ள
இயலாதபடி
வான்
கருமை
குவிந்து
தூற்றல்
விழுகிறது.
புகையிலையில்
ஊறிய
எச்சிலைத்
துப்புவதற்கும்
கூட
ஓடாமல்
மணிகளை
வேறாக்க,
அரிக்கற்றைகளை
ஓங்கி
ஓங்கி
அடிக்கிறார்கள்.
திருக்கை
மீன்
வாலினால்
செய்த
சாட்டையடியும்,
முரட்டுக்காலணி
உதைகளும்
பட்ட
சாம்பாரின்
மேனி,
தளர்ந்து
குலுங்குகிறது.
அதைப்
பார்க்கையில்,
தலைமகனுக்கும்
அதே
அநுபவங்கள்
தொடருகின்றனவே
என்று
நெஞ்சம்
இறுகுகிறது.
ஆண்டானும்
அடிமையும்
இல்லை
என்று
சட்டப்படி
தீர்ந்துவிட்ட
பின்னரும்
விடிவு
காலம்
வரவில்லை.
நெஞ்சைக்
குறுக
வைக்கும்
இழி
சொற்களும்,
உடல்
வாதையில்
துடிதுடிக்க
இம்சைகளுக்கும்
ஆளாக
இவர்கள்
என்ன
தவறைச்
செய்திருக்கிறார்கள்?...
“மழ
கொட்டும்போல
இருக்கு
முதலாளி.
போயி
வண்டி
கொண்டிட்டு
வாங்க...!”
வியாபாரிகள்
உள்ளுரில்
இருக்கிறார்கள்.
கேள்விப்பட்டு
இந்த
நெல்லை
வாங்க
வருபவர்கள்
யாரும்
இல்லை.
மழை
என்றால்
வியாபாரிகளுக்குக்
கை
மேலாகிவிடும்.
ஆழும்பாழுமாகப்
போகும்போது
இன்னும்
விலையைக்
குறைப்பார்கள்.
வடிவு
இல்லாதது
கை
ஒடிந்தாற்போல்
இருக்கிறது.
இன்னும்
கட்டுக்களைச்
சுமந்து
வரப்போடு
நடந்து,
மடைகளில்
இறங்கிக்
கடந்து,
கொண்டுவந்து
போட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
சம்முகம்
ஒடிச்சென்று
வண்டி
பிடித்து
வருகிறார்.
சேகரித்த
மணிகளை
அள்ளிக்கட்டிய
மூட்டைகளை
வண்டியில்
ஏற்றுகையில்
துாற்றல்
மழையாக
வலுக்கிறது.
“சாம்பாரே,
வண்டில
குந்திட்டு
நீங்க
போங்க
மைத்தத
நாங்க
பாத்துக்கறோம்.
எனக்குச்
சங்கட்டமாயிருக்கு.”
“அட
ஒண்ணில்ல,
இதெல்லாம்
புதுசா?
மழை
இன்னும்
பெரிசா
கொட்டுறதுக்குமுன்ன
அடிச்சிப்
போட்டுடலாம்.”
சம்முகம்
கையைப்
பற்றி
நிறுத்துகிறார்.
“நீங்க
நில்லுங்க.
பழனி
அடிக்கட்டும்...”
முதியவனின்
கண்கள்
கலங்குகின்றன;
புளிய
மரத்தடியில
ஒதுங்கி
நிற்கிறார்.
“இன்னைக்குப்
புதிசா?
மழ
இப்பிடிப்
பயமுறுத்தும்.
பொறவு
செத்த
வுட்டுடிச்சின்னா
அடிச்சிப்
போட்டு
வாரிட்டுப்
போறதுதா.
ஆனா.
இந்த
மனசுல
இப்ப
உஜாரா
எதுமில்ல...
இந்தப்
பத்து
வருசமா,
அந்தப்
பயதா
புதுர்
கொண்டுவருவா.
நாயக்கர்
ஊடோ,
ஐயிரு
பங்கோ,
எதுன்னாலும்
அவந்தா.
நான்
பாக்காத
போலிசா?
இப்ப
உச்ச
வரம்பு
நெல்லபடியா
அமுல்படுத்தணும்னு
போராட்டம்
போகலியா?
லத்தியெடுத்துப்
பொம்புளக
பக்கம்
அடிக்கிறானேன்னு
குறுக்க
பூந்தே,
வெறட்டினானுவ
ஆத்துலியே
வுழுந்தோம்.
ஆனா...
பய
இருக்கறான்.
இதுக்குன்னே
தலையெழுத்திட்டா.
அவன்
கையி
மண்ணுல
பேசுற
கையின்னு
மதிப்பா
இருந்தே,
அவங்
கைய
அடிச்சிக்
கூழாக்கிட்டானுவளே
அதுதா
தாளலப்பா!”
குத்திக்
கொடுத்தாற்போல்
துயரம்
பெருக,
குலுங்கி
அழுகிறான்
சாம்பார்.
“அதெல்லாம்
ஒண்ணில்லிங்க.
பொம்பிள
தலையில
அடி
வுழுந்திடும்னுதா
கையவச்சு
அவனே
வாங்கிட்டி
ருக்கிறான்.
ஆனா,
டாக்டரிட்ட
நான்
கேட்டேன்,
பாத்தேன்,
நல்லாப்பூடும்னு
காரண்டி
குடுத்திருக்காரு,
இல்லேன்னாலும்
ஐயிரு
அண்ணன்
மவ,
ரொம்பக்
கைராசி.
எங்காலு
நடக்க
முடியும்னு
நெனச்சனா?
அவங்க
நமக்குன்னா
எல்லா
ஒதவியும்
செய்வாங்க.
கொண்டு
காட்டி
நல்லபடியாக்கிடலாம்,
நீங்க
ஏன்
வருத்தப்படறீங்க?
செத்த
வூட்டப்போயி
இருங்க.
அதா
முக்காலும்
முடிஞ்சிரிச்சே?”
“அவனுக்கு,
தான்
முன்ன
நின்னு
கூட்டம்
நடத்தணும்,
போராட்டம்
போவணும்னு
ஒரே
புடி.
ராவுல
ஐயனார்
கொளத்துக்குப்
போயி
சொல்லிட்டு
வந்திருக்கிறா!
பஞ்சமியும்
சோலையும்
நாங்க
கெளம்புறப்ப
வாறாங்க.
‘ஏண்டால,
சம்முவ
வாய்க்காரக்
கேக்காம
நீயா
என்னடா
இது’ன்னு
கேட்டேன்.
மொகங்
குடுத்தானா?.
அந்த
வெடப்பய
தேவு,
அவம்
பேச்சக்
கேட்டுக்கிட்டு,
பொம்பிளயள
எறக்கினா
ஒங்க
மக.
அது
என்ன
மாரியாத்தா
ஆவேசம்
வந்தப்பல
ஒரே
புயலால்ல
பேசிச்சி?
இப்ப
என்ன
ஆச்சி!
அவனுவ
அநியாயத்துக்கு
நூறாயிரம்
சாட்சி
கொண்டாருவானுவ.
நாம
எங்க
போவம்
சாட்சிக்கு?”
“அப்படி
எல்லாம்
இல்ல
சாம்பாரே,
நமக்கு
சாட்சி
இருக்கு.
சத்தியம்
எப்பவுமே
அநாதயாயிராது!”
“குந்தக்
குச்சில்லன்னு
இருக்கிறோம்.
எப்பிடிக்
கேசு
நடத்தி
எப்பிடி
மீளப்போறம்?
கண்ட
கனாவெல்லாம்
கதிர்
முத்துறப்ப
பொகையான்
வுழுந்தாப்பல
பாழாயிடிச்சே!”
“சாம்பாரே,
நீங்க
என்னாத்துக்கு
இப்பத்
தனியா
பிரிச்சுப்
பேசுறீங்க?
இது
ஒங்க
மகனோட
ஒரு
தனிப்பட்ட
விவகாரமும்
வழக்குமுமில்ல.
இந்த
உலகம்
முச்சூடும்
உள்ள
சமுதாயப்
பிரச்சினையோட
வழக்கு.
சமுதாயம்
உசிர்வாழ,
ஆதித்
தொழில்
இது.
மண்
ஒரு
தனிப்பட்ட
ஆளுங்களுக்கு
மட்டும்
சொந்தமில்லங்கறது
தீரணும்.
காத்து,
சூரியன்,
சந்திரன்
இதெல்லாமும்
போல
மண்ணும்
தண்ணியும்னு
தீரணும்.
நாம
இதுக்காகப்
போராடுறோம்னு
நினச்சிக்குங்க.
நீங்க
என்னாத்துக்கு
அதைரியப்படணும்?
நாம
செய்யிற
தொழில்
இல்லேன்னா.
எதுவுமே
இல்லே!”
வீட்டருகில்
வண்டி
வந்து
நின்றதும்,
ஓட்டிவந்த
செவத்தையனே
மூட்டைகளை
இறக்கித்
திண்ணையில்
போடுகிறான்.
அம்சுவும்
லட்சுமியும்
கூட்டி
ஒழுங்காக்கி
வைத்திருக்கிறார்கள்.
இதற்குள்
சங்கிலி,
கருப்பன்
எல்லோரும்
வருகிறார்கள்.
டீத்துள்
போட்டு
நீர்
காய்ச்சி
இறக்கி
வெல்லம்
போட்டு
அம்சு
எல்லோருக்கும்
வழங்குகிறாள்.
“சம்முவம்
களத்து
மேட்டுல
இருக்கிறானாடா
சங்கிலி?”
பாட்டிக்கு
மகனைப்
பற்றிக்
கவலை.
“பாழாப்போன
மழ
இன்னும்
ரெண்டவுரு
பொறுத்திருக்காது?
அவுரு
நாயக்கர்
வூட்டுக்குத்
தார்ப்பாயி
வாங்கியாரப்
போயிருக்காரு!”
நாகு
வண்டியைப்
பார்த்ததும்
ஹைஹை
என்று
ஓடி
வருகிறான்.
“போட...ல...
போ!”
மூட்டைகளை
அடுக்கியபின்
எல்லோரும்
அங்கேயே
காத்திருக்கின்றனர்.
இருள்
வருவது
தெரியாமலே
கவிந்திருக்கிறது.
திண்ணையிலிருக்கும்
கிழவர்
சட்டென்று
விழித்துப்
பார்க்கிறார்.
“மழையா
பெய்யிது?”
“ஆமா.
குடிக்கிற
நேரம்
வந்திரிச்சின்னா
எந்திரிப்பே”
பாட்டி
அதட்டுகிறாள்.
அம்சு
மாடத்தில்
விளக்கேற்றிக்கொண்டு
வந்து
வைக்கிறாள்.
“அறுப்புவுட்டு,
மழ
புடிச்சிக்கிச்சே,
பாதி
நெல்லு
வூட்டுக்கு
வரலியே,
எங்க
கெடந்து
அல்லாடுறாங்களோன்னு
தவிக்கிது
மனசு...”
“மள
பெய்யிது.
வாமடல
துணியக்கட்டி
வச்சா
மீனு
வுளும்.
எனக்குதா
கண்ணு
சுத்தமாத்
தெரில.
ஒருக்க
பாரு...”
என்று
ஆரம்பித்துத்
தமக்குள்ளேயே
சிரித்துக்
கொள்ளவும்,
பாட்டி
மீண்டும்
அதட்டுகிறாள்.
“தாத்தா
அந்த
காலத்துலியே
இருக்காரு”
என்று
குந்தி
இருந்து
பீடி
குடிக்கும்
சங்கிலி
சிரிக்கிறான்.
அப்போது,
தன்
பையினால்
தலை
முகத்துக்கு
காப்புச்
செய்துகொண்டு
காந்தி
விரைந்து
வருகிறாள்.
தொடர்ந்து
முழுதாக
நனைந்த
கோலத்தில்
லட்சுமியும்
சம்முவமும்
வந்து
படியேறுகின்றனர்.
“அட...
காந்தி?
நீ
எப்ப
வந்த?...”
“வந்திட்டே
இருக்கிறேன்.
பஸ்ஸ
அன்னாண்டயே
நிறுத்திட்டான்.
அறுப்பு
வுட்டிருக்கீங்களாப்பா
இன்னிக்கி?
நா
நெனச்சிட்டே
வந்தேன்.
நாகபட்டணத்துக்
காப்பால
காற்றழுத்த
மண்டலம்
உருவாகிறதுன்னு
ரேடியோவிலே
நேத்தே
சொன்னான்...”
“ஒடயாரப்
பாத்தியா?...”
“அங்க
வந்திருக்கிறாரா?...
நா
இன்னும்
பார்க்கல
அப்பா.
கால
பஸ்ஸில
போறேன்.
ஒரு
முக்கியமான
சங்கதி,
நம்ம
தங்கசாமி
சொன்னாரு
மட்றாசில,
சங்கம்
கட்சின்னு
இல்லாம,
பலதரப்பட்ட
பொண்ணுகளும்
சேந்து,
பெண்களை
இழிவு
செய்யும்
விளம்பரம்,
பத்திரிகை,
புத்தகம்
இதெல்லாம்
தடுக்கணும்னு
பெரிய
கூட்டம்,
ஊர்வலம்
நடத்தறாங்களாம்.
பெண்களுக்கெதிரா
அடக்குமுறை
அட்டூழியம்
நடப்பதை
எல்லாங்
கண்டிச்சுப்
பேசுவாங்களாம்.
நான்
போயிக்
கலந்துக்கறேன்னிருக்கிறேன்,
சாவித்திரி
எங்கூட
வருது.
புதுக்குடில
இருந்து
இன்னும்
ஒரு
அம்மா
கூட
வராங்க.
என்ன
அக்கிரமம்
அப்பா?
பொண்ணுகளக்
கடத்திட்டுப்
போயி,
அரபு
நாடுகளுக்கு
விக்கற
வேலயே
நடக்குதாம்!
இதுதானா
நம்ம
பெருமையா
சொல்லிட்டிருக்கிற
பாரத
நாட்டுப்
பண்பு,
கலாசாரம்!
நெனச்சா
வயிறெறியிது!
மண்ணத்
தனிப்பட்டவன்
அடிமையா
வச்சிட்டு
அதன்
சாரத்தைக்
கறந்து,
சுயநலம்
பெருக்கிக்கிறான்.
அப்பிடிப்
பெண்ணையும்
அடிமையாக்கி
விக்கிறான்;
இதை
- இந்த
அக்கிரமங்களைக்
காட்டி,
வேசம்
போடுறவங்களக்
கொண்டு
வந்து
நிறுத்தணும்!
இதுக்கு
முடிவு
கொண்டு
வரணும்!”
“நான்
பட்டணம்
போறப்பா
நாளக்கி!”
லட்சுமிக்கு
நெஞ்சு
விம்முகிறது.
அவள்
தலையில்
ஆதரவாகக்
கை
வைத்து, “முதல்ல
ஈரத்
துணிய
மாத்திக்க
காந்தி...
போவலாம்...”
என்று
அழைக்கிறாள்.
சம்முகத்துக்கு
நா
எழவில்லை.
“ஆரு
இருக்கா
களத்து
மேட்டுல?”
குப்பன்
சாம்பாரின்
தளர்ந்த
குரல்.
“ஆரு
இருக்கா...?
ஆரு
இருக்கா...?”
அந்தக்
கேள்வி
சம்முகத்தின்
உள்ளச்சுவரை
மோதி
எதிரொலிக்கிறது.
தார்ப்பாயைப்
போட்டு
மூடிவிட்டு
வந்திருக்கிறார்கள்.
நியாயமாக
உழைக்கிறவன்
பங்கில்
இருக்கவேண்டிய
மானமே
இன்னிக்கின்னு
இப்பிடிக்
கொட்டுது.
நாம
அநியாயம்
கேக்கலங்கிற
சத்தியந்தான்
இப்பக்
காவல்,
அம்சு
இந்தச்
சட்டய
வாங்கி
உள்ள
கொடில
போட்டுட்டுப்
பைய
எடுத்திட்டு
வா;
இவங்கல்லாம்
காத்திருக்காங்க
எந்நேரமா?”
அம்சு
பணப்பையைக்
கொண்டு
வந்து
சம்முகத்திடம்
கொடுக்கிறாள்.
“கண்டு
முதல்
ஒண்ணும்
இப்ப
பாக்குறாப்பல
இல்ல.
வெளவு
நல்லாத்தா
கண்டிருக்கு
எதுக்கும்
இருக்கட்டும்னு
பணம்
கொஞ்சம்
கேட்டு
வாங்கி
வச்சிருக்கிறேன்.
இப்ப
பத்துப்பத்து
ரூபா
தாரேன்.
விடிந்து
கணக்குப்
பாத்துக்கலாம்.”
இதற்காகவே
காத்திருந்தவர்கள்
கள்ளுக்கடைக்குத்தான்
ஓடுவார்கள்!
“சாம்பாரே,
நீங்க
இப்ப
எங்க
வூட்டுக்குப்
போறது?
இங்க
இருங்க?”
காந்தியை
உறுத்துப்
பார்க்கிறான்
சாம்பார்.
“வடிவு
நாளைக்கி
வந்திருவா...”
“கையி
எப்பிடி
இருக்கு?”
“கையெல்லா
நல்லாப்
போயிடும்...
வீரபுத்திரன்
கூட
வந்திடுவா,
கேசுதா
நடத்தணும்...
ஆனா...
தேவு
அவுருக்குத்தா
நா
இப்ப
மட்றாக
போறதுகூட,
அது
முக்கியமான
காரணம்.
நியாயம்னு
உரக்கக்
குரல்
எழுப்பினா
இப்பிடி
ஒரு
ஆபத்துக்
கட்சின்னு
போடுறது
ஒரு
தந்திரமா
வச்சிறாங்க.
இருக்கிற
அக்கிரமத்தை
எல்லாம்
நல்ல
வேசம்
போடுறவந்தான்
செய்யிறான்.
ஏன்னு
கேட்டா,
அவன்
ஆகாதவன்.
தேவுவப்போல
இருக்கிறவங்களுக்கும்
நாம
போராட
வேண்டிருக்கு...”
காந்தியின்
ஆழ்ந்த
குரலும்
மங்கலான
ஒளியும்
அவர்கள்
சமுதாயத்தின்
குரலாகவே
ஒலிப்பது
போன்ற
சிலிர்ப்பைத்
தோற்றுவிக்கிறது
சம்முகத்துக்கு.
தலைத்துணியை
அவிழ்த்துத்
தோளில்
போட்டுக்
கொண்டு
சாம்பார்
திரும்புகிறான்.
“இப்ப
என்னாத்துக்குப்
போவனும்?
மருமவ
சோறாக்கி
வச்சிருக்கா.
இருந்து
பேசிட்டுப்
போவுறது?”
சம்முகம்
அவன்
பின்னே
வந்து
அழைக்கிறார்.
“இருக்கட்டும்பா!
நா
இப்பப்
போற
வூட்டுக்கு
பொம்புள
அப்பவே
வூட்டுக்குப்
போயிட்டா.
சோறாக்கி
எதுனாலும்
கசக்கிக்
கொளம்பும்
வச்சிருப்பா!”
அவன்
படியிறங்கிப்
போகிறான்.
இருட்டிலும்
அந்த
உருவம்
சத்திய
வடிவமாகத்
துல்லியமாகப்
புலனாகிறது.
இருளோடு
அவன்
மறைந்த
பின்னரும்,
உயிர்க்குலம்
வாழும்
உழைப்பைக்
கொடுக்கும்
அந்த
மனிதனின்
பிம்பம்
மிக
அழகாக
மிகப்
பெரியதாக
வளர்ந்து
வளர்ந்து
ஆணென்றும்
பெண்ணென்றும்
இனம்
பிரிக்கமுடியாத
ஓர்
ஆற்றலாக
அவர்
கருத்தை
நிறைக்கிறது.
“அப்பா!
உள்ளாற
வந்து
எதுனாலும்
சாப்பிடுங்க!”
வாயிற்படியில்
படச்சித்திரம்போல்
தோன்றும்
அம்சு
அழைக்கிறாள்.
உடல்
சிலிர்த்து
அவர்
திரும்புகிறார்.
(முற்றும்)
|